Monday, January 11, 2016

சுடாத தோசை!?!?

 மிச்சம் மீதியை பிரிட்ஜில் வைத்து விட்டு பாத்திரங்களைக்  கழுவும் தனது வழக்கமான மாலை வேலைகளில் மும்முரமாக இருந்தாள் நிவேதா. 

" what is for Dinner?", என்று வினவினாள் அவளது எட்டு வயது மகள்.

தெரியலடா?!?! அப்பாவைக் கேட்கணும் என்றாள் நிவேதா. "இந்த காலத்தில் அப்பாவைக் கேட்டுவிட்டு சமைக்கும் அம்மாவா?!?!" என்று அவசரப்பட்டு ஆச்சர்யப்பட்டு விடாதீர்கள் தொடருங்கள் உங்கள் வாசிப்பை...

நிலேஷ்  வந்ததும் வராததுமாக, " what is  for Dinner Daddy  ?" என்று துளைத்தெடுத்தனர் மகனும் மகளும். "தெரியலடா ...அம்மாவைத்தான் கேட்கணும்" என்றதும் முகம் மலர்ந்தனர் வாண்டுகள். "இதில் என்ன சந்தோசம்?!? என்று குழப்பமா? 
நீங்கள் அந்த வீட்டு உறுப்பினராக இருந்திருந்தால் வெள்ளிக் கிழமைகளில் நடக்கும்  இத்தகைய உரையாடல் எதில்,எங்கு  முடியும் என்று நன்கு உணர்ந்திருப்பீர்கள். மகிழ்ச்சிக்கான காரணமும் புரிந்திருக்கும்.

கிச்சனில் நுழைந்தவாறு நிவேதாவை நோக்கி " எங்கயாவது வெளிய போகனுமா"? என்றான் நிலேஷ்.  "இந்த வாரத்துல ரெண்டு birthday party இருக்கு, கிப்ட் வாங்கப்  போகணும்" என்றாள். " அப்ப Dinner?" என்றவனிடம், "மாவு தீந்துருச்சு, சட்னி இருக்கு கோதுமை தோசை ஊத்தலாம்" என்ற பதிலை எதிர் பார்த்தவனாய் "சரி வா கிளம்பு" என்றான். குழந்தைகளிடம் மாலுக்கு போயிட்டு வீட்டுக்கு வந்து தான் "Dinner" என்று கிளம்பினர்.

அன்று "ரெஸ்டாரண்ட்-ல் " இரவு உணவை முடித்துவிட்டு வீடு திரும்பினர். மால்-ல லேட்டாயிருச்சு, இவங்க ரெண்டு பேரும் படுத்தினதாலதான்  என்று வெளியில் சாப்பிட்டதற்கு  பல  காரணங்களைக்  கூறிக்கொண்டாலும்" கோதுமை தோசை " என்றதுமே வெளியில் தான் "டின்னெர் " என்று நிலேஷ் முடிவு செய்திருந்ததையும்  அதை எதிர்பார்த்து தான் நிவேதாவும் அந்த "Choice"-யை கூறினாள் என்பதையும்  நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால்   இவர்களின் எண்ண ஓட்டங்களை மிகத்  தெளிவாக புரிந்து கொண்டனர்  குழந்தைகள்  இதுவே அவர்களின்  குதுாகலத்திற்கு காரணம்!!!

பின்பு வந்த வாரங்களில் வாங்கிய பொருட்களை ரிட்டன் செய்வது, வீக்லி ஷாப்பிங்  செல்வது என்று வெளியில் சாப்பிடுவது என்பது  வாடிக்கையாகி விட்டது. இடையிடையே பிறந்த நாள் விழா, "Pot Luck Lunch  " போன்றவையும்  அழையா விருந்தாளியாக வர " Out Side Food " தவிர்க்க முடியாததானது.

 சில நேரங்களில் "Chinese, Japanese, Mediterranean " ட்ரை பண்ணலாமா?!?! என்றும் புது "Indian Restaurant" ஓபன் பண்ணியிருக்காங்களாம் ஆபீஸ்ல பேசிகிட்டாங்க என்றும் தொட்டுத் தொடரும் தொடர் கதையாக மாறியது. சில சமயங்களில் எங்கு சாப்பிடுவது என்று தெரியாமல் கண்டதை தின்று இதுக்கு உன்  உப்புமாவே தேவல என்று   புலம்புவதும், "நீ சொன்னதாலதான்" என்று அவனும் " இனிமே இந்த மாதிரி ஹோட்டலுக்கெல்லாம் உங்க பிரண்ட்ஸ் கூட போய்க்கோங்க" என்று நிவேதாவும் கூற சண்டை வருவதெல்லாம் சகஜமானது.

கல்யாணமான புதிதில் கூட இப்படித்தான். ஒரு ஐடம் ஆர்டர் செய்ய இவ்வளவு நேரமா? என்று நிலேஷ் முறைக்க, ஹோட்டல்காரனே சும்மா இருக்கான் உங்களுக்கு என்ன? என்று நிவேதா மல்லுக்கட்ட சாப்பிடாமல் எழுந்து வந்த கதையெல்லாம் உண்டு!!! அதற்கு பிறகு இனிமே " Buffet " தான் என்று முடிவு செய்தாகிவிட்டது. என்ன சாப்பிடுகிறோம்?!?! எவ்வளவு சாப்பிடுகிறோம் என்ற கணக்கு வழக்கின்றி கட்டுவது பழக்கமானது.

 ஓர் நாள் திடீர் ஞானோதயம் வந்தவனாய், " நிவே நம்ம வெளிய சாப்பிற்றத குறைச்சுக்கனும்" என்றான் நிலேஷ். ஒரு மாதத்திற்கு வீட்டு சாப்பாடுதான் என்று முடிவானது. குழந்தைகள் அடம் பிடித்தனர் " Boring " என்று அழுதனர். " நாங்களெல்லாம் உங்க வயசிலே Hotel- ல சாப்பிடதே இல்ல தெரியுமா? வெளியிலே போயிட்டு எவ்வளவு லேட்டானாலும் வீட்டுக்கு வந்துதான் சாப்பிடுவோம். சினிமாவுக்கு கூட வீட்ல இருந்து " Snacks " எடுத்துட்டு போய்டுவோம்"  என்று அவர்கள் கற்பனை கூட  செய்து பார்க்க முடியாத விஷயங்களை அறிவுரைகளாக  முன்வைத்தாள் நிவேதா. " நான் வேலைக்கு போய் சம்பாதிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் தான் வெளிய சாப்ட ஆரம்பிச்சேன் அதுக்கு முன்னாடியெல்லாம் எப்போதாவது எங்கம்மா ஓட்டல் தோசை வாங்கிக் கொடுப்பாங்க அதுவும் பார்சல் தான் என்றான் நிலேஷ் அவன் பங்கிற்கு.

ஒரு வாரம் சென்றது. " வீட்லயே Pizza செய்யலாமே? " என்ற நிலேஷ்  அவனே சமைத்தான். பின்பு ஒருநாள் பிரண்ட்ஸ் வீட்டில் டின்னெர் என்றும், அவர்களை " Invite " செய்யனுமில்ல?!  என்றும்   வீட்டில் பஜ்ஜி, பூரி சமைத்து ஒரு கை பார்த்தனர். இரண்டு வாரங்கள் உருண்டோடியது. நிலேஷ் "கலிக்ஸ்ஸோடு" வெளியே சாப்பிட்டு கொண்டுதான் இருந்தான். நிவேதாவிற்குத் தான்    அலுப்பும் அசதியும் மெதுவாக எட்டிப்பார்க்கத் தொடங்கியது. நான் சான்விட்ச் செய்யறேனே?! என்ற நிலேஷ்  சீஸ், மையோநெஸ் என்று மிகவும் "ஹெல்தியான?! " உணவுகளை உள்ளே தள்ளினர். இதுக்கு ரெஸ்ட்டாரெண்ட்- யே பரவாயில்லே என்ற நிவேதாவிடம் பிள்ளைங்களுக்கு பிடிச்சிருக்கில்லே ? என்று சமாதானம் கூறினான்.

இப்படியே ஓர் மாதம் உருண்டோடியது. "என்ன.. இன்னக்கி சாயங்காலம் வெளிய சாப்பிடலாமா? ஒரு "Coupon " இருக்கு  என்ற நிலேஷை நோக்கி நிவேதா  ஒர்  புன்னகை வீச, "வேதாளம்" மீண்டும் முருங்கை மரம் ஏறியது......

ஹோட்டல்​ல சாப்பிடுவது பெரிய கொலைக்குத்தம் மாதிரி பேசுறீங்களே?!?! என்று நினைக்கிறீர்களோ?!?! பொருளாதார சிக்கல்கள் இல்லாத பல சில  குடும்பங்களில் வெளியில் சாப்பிடுவது என்பது  ஒரு கலாசாரமாகவே மாறி வருகிறது.  உடல் உழைப்பே இல்லாத இந்த வாழ்கை முறையில் இது குற்றம் மட்டும் இல்லை நமக்கு நாமே வெட்டிக் கொள்ளும் குழி.

என்ன... நிலேஷ், நிவேதா தம்பதியினர் தங்கள் கொள்கையில்?! தீவிரமாக இறங்கினார்களா? அந்த "கோதுமை தோசை"-யை ஒரு தடைவையாவது சாப்பிட்டர்களா?!? இல்லையா ? தெரிந்து கொள்ள ஆசையா? எனக்கும்தான்!!!