Tuesday, November 8, 2016

நிறம் மாறாத மனிதர்கள்

மித்ரனும், நிதிலாவும் அன்று சனிக்கிழமை என்பதையே மறந்தவர்களாக, தங்களைத் தயார்படுத்திக் கொள்வதில்  பரபரப்பாக காணப்பட்டனர்.

" அவளை குளிக்க அனுப்பிட்டேன்,  இவன குளிப்பாட்டிட்டு...அப்பிடியே நீங்களும் குளிச்சிட்டு வந்துருங்க", என்று மகனை கணவரிடம் அனுப்பிவிட்டு சமயலறையில் தன்னை அழைக்கும் குக்கருக்கு பதில் சொல்லப் போனாள் நிதிலா. 

முன்தினம் அலுவலகம் முடித்து திரும்பிய மித்ரன், " Down Town -ல ரேஸ் கார்ஸ் exhibit  வச்சுருக்காங்க, இந்த வாரத்தோட முடியுது. நாளைக்கு போயிட்டு வந்துரலாம் என்றதும் "யேய்" என்று மகன் ஆர்பரித்தான். "வேற என்ன இருக்கும்?"! என்று வினவிய  நிதிலாவிடம், " நிறைய ஸ்டால்ஸ் போட்ருப்பாங்க...என்றான். அப்ப "free stuff "  கொடுப்பாங்கன்னு சொல்லுங்க என்று சமாதானமடைந்தாள். " It will be boring " என்ற மகளிடம், " ஏய் உன் பிரெண்ட்டும் வர்றா " என்றதும் அவளும் குதூகலமடைந்தாள்.

கூட்டம் வர்றதுக்கு முன்னாடி போயிரணும் அதனால காலையில சீக்கிரமா கெளம்பனும். சொல்லிக்கிற மாதிரி சாப்பிட ஒன்னும் கெடைக்காது,  Breakfast heavy -யா சாப்பிட்டு போனாதான் ஒரு ரெண்டு மணி வரைக்கும் தாங்கும் என்று கூரிய கணவனை நோக்கி உச்சு கொட்டிவிட்டு நகர்ந்தாள் நிதிலா. அதி காலையில் எழவேண்டுமே... அதுவும் விடுமுறை நாளில்   என்ற எண்ணம்... எவ்வாறு மனதிலிருக்கும் ஆர்வத்தையெல்லாம் ஒரு நொடியில் நீர்த்துவிடுகிறது என்பதை நினைத்து வியந்தாள்.

அனைவரும் குளித்து, காலை உணவாக பொங்கல் சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடிக்கும் மகளிடம், " இது சாப்டா தாண்டா பசிக்காது, tired- ஆகாம நடக்க முடியும்  என்று சமாதானம் பேசியும், கேட்காத போது முதுகில் ரெண்டு அப்பு அப்பியும்  உண்ண வைத்து புறப்படுவதற்குள் பத்து மணி ஆகிவிட்டது. சீக்கிரம் கெளம்பணும்னா எங்க?! என்று தனது வழக்கமான புலம்பலுடன் காரைக் கிளப்பினான் மித்ரன். 

காலை வெயிலில் " Down Town " பளிச்சென்று இருந்தது. சாலையின் இரு மருங்கிலும் வித விதமான கடைகள் போடப்பட்டு இருந்தன. மக்கள் கூட்டமும் கணிசமாக அலை மோதியபடி இருந்தது. அங்கங்கே நிறுத்தி வைக்கப் பட்டிருந்த ரேஸ் கார்களோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள நீண்ட வரிசையில் மக்கள் காத்து நின்றனர். "அதனால தான் சீக்கிரம் வரணும்னு சொல்றது" என்று முணுமுணுத்த கணவனை காதில் வாங்காதவளாய் மகனுடன் வரிசையில் சேர்ந்து கொண்டாள். அடுத்த ஒரு மணி நேரத்தில் வெயில் மண்டையைப்  பிளந்தது. நா வறண்டது. கூட்ட நெரிசலில் ஊர்ந்தபடியே சென்றனர். எதற்காவது உபயோகித்து கொள்ளலாம் என்று  சில பல ஸ்டால்களில் இருந்து பெற்றுக் கொண்ட  இலவசங்களும் கையை நிறைத்து கனத்தது. எங்காவது உட்கார்ந்தால் போதும் என்று தோன்றியது.  

அருகிலிருந்த ஸ்டாலில் அவனுக்கு பிடித்த "Cookie"  சாம்பிள் கொடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் மகன் அடம் பிடிக்கத் தொடங்கினான். கூட்டமும் அதிகமில்லாததால், " நான் போய் வாங்கிட்டு வர்றேன்" என்று நிதிலா சாலையைக் கடந்து சென்றாள். அங்கு நின்றிருந்தவரின் பின்னால் இருக்கும் காலி இடத்தில் நின்று சாம்பிளைப் பெற்றுக்கொண்டு திரும்பும் போதுதான் தனக்குப் பின்னாலிருக்கும் பெண்மணியைக் கவனித்தாள். அப்போதுதான் தான் வரிசையின் இடையில் நுழைந்து விட்டதை உணர்ந்தவளாக," Sorry I didn't See you " என்றாள். அதற்கு அந்தப் பெண்மணி " of course you did not " என்று கூற, யாரோ தன்னை கன்னத்தில் அறைந்ததைப் போல் அவமானத்தில் குறுக்கிப் போனாள். அந்த பிஸ்கெட்-ஐ அப்படியே குப்பையில் எறிந்து விடவேண்டும் என்று தோன்றிய எண்ணத்தை மகனின் முகத்தைப் பார்த்துக் கைவிட்டாள்.

" என்ன ஆச்சு?! என்று கேட்ட கணவனிடம், " ஒன்றுமில்லை " என்று தன்னை சகஜ நிலைக்கு மாற்றிக் கொள்ள முயன்று தோற்றாள். இந்த அயல் நாட்டிற்கு வந்ததில் இருந்து மிகவும் கனிவாகப் பேசும் மக்களை மட்டுமே கண்டிருந்த நிதிலாவிற்கு இது ஒரு பேரதிர்ச்சி ஆக இருந்தது. ஒரு வழியாக அன்றைய பொழுது முடிவிற்கு வர,  களைத்த உடல்களை சுமந்து கொண்டு வீடு திரும்பினர். நிதிலாவின் மனமோ ஆயிரம் மடங்கு அதிகமாகக் கனத்து அவளை அவமானத்தில் இருந்து வெளிவர விடாமல் ஆழத்தில் அழுத்தியது.

இரவு படுக்கைக்கு முன் தன் உள்ளக்கிடக்கையை கணவனிடம் கொட்டிவிட்டாள். மித்ரனோ மிகச் சாதாரணமாக," நம்ம ஆளுங்க இப்பிடித்தான பன்றாங்க " என்று கூற ," என்ன சொல்றீங்க ?!" என்று தன்னுள் அடக்கி வைத்திருந்த கோபத்தை அவன் மேல் பாய்ச்சினாள். இந்த ஊருக்கு வந்ததிலிருந்து சத்தமா பேசாத, வெளியிடத்துல கண்ண கசக்காத , குழந்தையை அடிக்க கூடாது- ன்னு எல்லா ரூல்ஸ்சையம் follow பண்ணிக்கிட்டு தானே இருக்கோம். நான் கூட " இது தான் தனி மனித சுதந்திரமா -ன்னு ?! எத்தனை தடவை கேட்ருக்கேன் என்று வினவிய மனைவியிடம் " அதெல்லாம் பண்ணலேன்னா போலீஸ் காரன் புடிப்பான்ற பயத்துல தான பண்றோம் " என்று கூறிவிட்டு மேற்கொண்டு விவாதத்திற்கு தான் வரவில்லை என்பது போல திருப்பிப் படுத்து குறட்டை விட ஆரம்பித்தான்.

நிதிலாவின் மனம் அவன் வாதத்தை ஏற்க மறுத்தது...சற்று நேர சிந்தனைக்குப் பின் தன்னை அறியாமலேயே உறங்கிப் போனாள். அடுத்து வந்த நாட்களில் தன் அகத்தையும், புறத்தையும் கூர்மையாக்கிக் கொண்டாள். மகன், மகளின் பள்ளிகளில், அவர்கள் செல்லும் பலதரப்பட்ட வகுப்புகள் மற்றும் கடை கண்ணிகளிலும் நம் நாட்டவரின் நடத்தையை கவனித்து மித்ரனின் கணிப்பு தவறு என்று நிரூபித்து, அவன் எவ்வாறு அயல் நாட்டவருக்கு ஆதரவாகப் பேசலாம் என்றும் சண்டையிட வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டாள்.

கண்காணிப்பின் முடிவில் இரண்டு வகையான மனிதர்களை இனம் கண்டு வியந்தாள். ஒரு சாரார் விதிகளை கடுமையாகப் பின்பற்றுபவர்களாக இருந்தனர். சாலையைக் கடக்கும் போது, தங்களுக்காக நிற்கும் கார்களை மனதில் கொண்டு ஓட்டமும் நடையுமாக குழந்தைகளை இழுத்துக்கொண்டு செல்வதைக் கண்டாள் ஆனால் மறு சாராரின் நடவடிக்கைகள்   அவளின்  எதிர்பார்ப்பில் மிகப் பலமான இடியை இறங்கியது. தராசு அவர்கள் பக்கம் சரிவதைக் கண்டு கலங்கினாள். கணவன் கூறியது சரியே என்று தோன்றும் அளவிற்கு அவள் கண்ட காட்சிகள் இருந்தன.

அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும் என்ற இடத்திலும் தன் நாட்டினர் பேசிக்கொண்டு இருப்பதையும், அதை கவனிக்கும் பலரையும் அவர்கள் ஒரு பொருட்டாக நினைப்பதில்லை என்பதையும் கவனித்தாள். உள்ளிருந்து வெளியே செல்வதற்காக திறக்கப்பட்ட கதவை மாறி மாறி ஒருவர் பிடித்து நிற்க, எதுவுமே அறியாதது போல வெளியிலிருந்து உள்ளே நுழைவதையும், அதற்காக சிறு வருத்தமோ, நன்றியோ தெரிவிக்காமல் செல்லும் மக்களைக் கண்டு அதிர்ச்சி அடைந்தாள். " Free Sample " கொடுக்கும் இடங்களில் ஒருவர் நுழைந்து தன் ஒட்டு மொத்த குடும்பத்திற்காக அள்ளிக்கொண்டு கொண்டு செல்வதும் அன்றாடக் காட்சியாக இருந்தது.

நம் நாட்டில் நாம் வளர்ந்த விதம் அப்படி என்று நிதிலா தன்னை சமாதானம் செய்து கொள்ள முயன்றாள். " நின்னு கிட்டே இருந்தா...இப்பிடியே இருக்க வேண்யதுதான் " என்று கூறிக் கூறியே நம்மை பழக்கப் படுத்திவிட்டார்கள் ஆனால் இங்கு நிலைமை வேறல்லவா?! என்று நினைத்தவள் இங்கு பள்ளிகளில் அதனால் தான் " Wait For your turn " என்று சிறு வயதிலேயே சொல்லிக் கொடுக்கிறார்களோ?! என்று வியந்தாள். நம்மில் ஒரு சிலர் செய்யும் தவறுக்கு அனைவரும் அல்லவா பலி கடா ஆக்கப்படுகிறார்கள். தவறுகளை சுட்டிக் காட்டுபவர்களை தேச துரோகிகளாகப் பார்க்கும் இவர்கள் நம் நாட்டிற்கு செல்லும் போது மட்டும், " சே...சே..என்ன இது சந்தைக்கடை மாதிரி...ஒரு Discipline இருக்கா?! என்று சட்டம் பேசுகிறார்களே?!   என்று நகைத்துக் கொண்டாள்.

வெளி நாட்டிற்கு வரும் நாம்  சில மாதங்களிலேயே  வாழ்க்கை முறை மற்றும் குழந்தை வளர்ப்பு முறைகளை அந்தந்த இடத்திற்கு தகுந்தாற்போல மாற்றிக் கொள்கிறோமே ஆனால் விதிகள் (இங்கீதங்கள்) மட்டும் நமக்கு ஏன் வேப்பங்காயாய் கசக்கிறது?!  இத்தனை நாள் இதையெல்லாம் தான் ஏன் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை, கவனிக்கவில்லை என்று தன்னையே வினவிக்கொண்டவள்...குட்டையில் ஊறி மட்டைகளில் தானும் ஒரு மட்டையாக இருந்ததை எண்ணி வெட்கினாள்.

தன்னைத் திட்டிய அந்த பெண்மணியை இப்போது  நினைத்துப் பார்த்தாள் நிதிலா. அவள் மேல் கோபமோ, வெறுப்போ எழவில்லை அவள் செய்தது சரியே என்ற எண்ணம் எழுவதை அவளால் தடுக்க இயலவில்லை. "நீங்க சொன்னது சரிதாங்க" என்று மித்ரனிடம் கூற வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள். சுழலுக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்பவர்களை பச்சோந்தி என்று இழித்தும் பழித்தும் பேசுகிறோம் ஆனால் நல்ல பழக்கங்களைக் கற்றுக் கொள்ளவதில், பின்பற்றுவதில் பச்சோந்தி ஆவதில் தவறொன்றும் இல்லையே!!!