Wednesday, February 15, 2017

காத(ல்)லுடன் பரிசு

புதுமணத் தம்பதியரான நிவேதாவும் நிதினும் ஷாப்பிங், ஹனிமூன், உறவினர்கள் வீட்டில் விருந்து என்று நேரம் போவதே தெரியாமல் சுழன்று  கொண்டிருந்தார்கள். அவர்கள் மனமோ  காதல் வானில் சிறகடித்துப்  பறந்து கொண்டிருந்தது. அவர்களின் குதூகலத்திற்கு மேலும் வண்ணம் சேர்க்கும் விதமாக நிவேதாவின் பிறந்தநாள் எட்டிப் பார்த்தது.

"ரெண்டு நாள்ல உன் பர்த்டே வருது...என்ன பண்ணலாம்?!", என்று காதல் ததும்பும் குரலில் நிவேதாவை நோக்கிக் கேட்டான் நிதின்.

" கல்யாணத்துக்கு வாங்கின ட்ரெஸ்ஸே  நெறைய இருக்கு...கோவிலுக்கு போகலாம்", வேறென்ன?! என்றாள். " இந்த பர்த்டே கொண்டாடுற பழக்கம் எல்லாம் எங்களுக்கு கிடையாது...அதுவுமில்லாம Surprise Gift குடுக்கிறது, நடு ராத்திரி எழுப்பி விஷ் பண்றதுன்னு இந்த சினிமாட்டிக் விஷயங்களெல்லாம் எனக்கு கொஞ்சமும் பிடிக்காது. இப்ப இருந்தே ஒரே மாதிரி இருந்துட்டா நமக்கும் பின்னாடி பிரச்னை இல்ல பாருங்க?!", என்ற நீண்ட நெடிய விளக்கத்துடன் தன் உரையை முடித்துக்கொண்டாள்.

"அப்பிடியா?! ",என்று கூறி குறும்புன்னகையோடு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் நிதின்.

பேசிய பேச்செல்லாம் ஒரு புறம் இருக்க...அடுத்து வந்த நாட்களில்  நிதினிடம் இருந்து  தனக்கு எந்த மாதிரி பரிசு வரும் என்ற எதிர்பார்ப்பிலேயே நேரத்தைக் கடத்தினாள். ஆனால் நிதினோ அதை பற்றி எதுவும் சிந்தித்தது போல தெரியவில்லை. "மனைவி சொல்லே மந்திரம்", என்று இருந்து விடுவானோ?! என்று திகைத்தாள் நிவேதா.

"என்னங்க...இந்த ட்ரெஸ்-ஸ பாருங்க...எனக்கு ரொம்ப பிடிச்ச கலர்", என்று விளம்பரங்களில் சுட்டிக்  காட்டினாள். பத்திரிக்கைகளில் இருக்கும் பல வண்ண ஆடைகளை அவன் முன் வியந்து பார்த்து தன் ஆசையை அவனுக்கு மறைமுகமாக விளக்கினாள். நிதினோ எதையும் கண்டு கொள்ளவில்லை.

எதிர் பார்த்த அந்நாளும்  வந்தது. வழக்கம் போல் படுத்து, உறங்குவது போல நடித்த நிவேதா " கண்டிப்பா 12 மணிக்கு எழுப்புவான்", என்று மனதிற்குள் மத்தளம் வாசித்துக் கொண்டாள். நிதினோ படுத்து குறட்டை விடத் தொடங்கி இருந்தான். அவளை அறியாமலேயே  உறங்கிப் போன நிவேதா சில நிமிடங்களிலேயே நிதினின் குரல் கேட்டு அரக்க பரக்க விழித்துக் கொண்டாள்.

கையில் ஜிலு ஜிலுவென்று கண்ணைப் பறிக்கும் காகிதத்தில் சுற்றப்பட்டிருந்த ஒரு பரிசோடு நிவேதாவை புன்னகையுடன் நோக்கிக் கொண்டு அமர்ந்திருந்தான் நிதின். "நான் தான் வேணான்னு சொன்னேன் இல்ல" என்று பொங்கி வந்த புன்னகையை மறைத்து போலிக் கோபம் காட்டினாள் நிவேதா. " என்னனு பாரு", என்று நிதின் கூற...பரிசுப் பொருளில் அளவை வைத்தே டிரஸ் இல்லை என்று யூகித்த நிவேதா," நகையாக இருக்குமோ?! என்று நினைத்தபடி பரிசைப் பிரித்தாள். ஆயிரம் வாட்ஸ் பல்பாக ஜொலித்துக் கொண்டிருந்த அவள் முகம் பியூஸ் போன ட்யூப் லைட்டானது. அப்போதும் தனது மில்லியன் டாலர் புன்னகையை மாற்றாமல் "என்ன நல்லாருக்கா..செம்ம surprise இல்ல?!", என்றான்  நிதின். 

தேன் நிலவின் போது கிளிக்கிய  நிவேதாவின் புகைப் படத்தை மிக அழகாக பிரேம் செய்து பரிசாகக் கொடுத்திருந்தான் நிதின். விலை மதிப்பில்லாத பரிசை கொடுத்து விட்ட பெருமிதத்தில் மிதந்து கொண்டிருந்தான். " நீங்க கொஞ்ச நாளா  போட்டோகிராஃபி கிறுக்கு பிடிச்சு அலையிறீங்கன்னு தெரியும் ...அதுக்கு இப்பிடியா?!", என்று ஏமாற்றத்தை வெளிப்படுத்தினாள்.

" ஏன் இதுக்கென்ன...நீ எவ்வளவு அழகா இருக்க இந்த போட்டோல தெரியுமா?! என்று கூற, அவன் பைத்தியம் போட்டோகிராஃபி மேல் மட்டும் அல்ல என்பதை உணர்ந்தவளாக வெட்கத்தில் சிவந்தாள். ஹாப்பி பர்த்டே என்று கூறிய நிதினின் மேல் தன்னை அறியாமலேயே இரண்டாம் முறையாக காதலில் விழுந்தாள் நிவேதா!!!

தங்களது மண வாழ்க்கையின் பதினோராவது வருடத்தில் காலடி எடுத்து வைத்திருக்கும் நிவேதாவும் நிதினும் இன்றும் மனதில் அதே அளவு காதலுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் புது மணத்  தம்பதிகளைப் போல!!!

பின் குறிப்பு : அந்த போட்டோ தான் முதலும் கடைசியுமாக நிவேதாவிற்கு நிதின் கொடுத்த "கிஃப்ட் ".

         

     


Thursday, February 9, 2017

டிக்...டாங்...டிக்

அனைவரும் காரில் அமர்ந்து பெல்ட்டுகளை கிளிக்கிக் கொண்டோம்.

மகனின் பெல்டை சரிசெய்து விட்டு வந்து, " போலாமா?!" என்ற கேள்வியுடன் காரை ஸ்டார்ட் செய்த என் கணவரின் முகம் கடிகாரத்தைப் பார்த்ததும்  மாறியது(கோபமாக?! ).

அலறிய ரேடியோவை அமைதிப்படுத்திவிட்டு தனது அமைதியைக்  கலைத்தார். "அஞ்சு மணிக்கு கூப்பிட்டா...வீட்ல இருந்து அஞ்சரைக்கு கெளம்புறது...நேரத்துக்கு போகனும்ன்ற நெனப்பு இருந்தா தான?!", என்று ஆரம்பித்தார். " ஏன்... வீட்ல இருந்து கெளம்புறப்ப லேட்டாயிருச்சுன்னு தெரியலையா?! கார்ல வந்து உக்காந்ததுமே ஞானோதயம் வந்துருமே?! வீட்ல ஒண்ணுக்கு நாலு கடிகாரம் இருக்கு. இதென்ன பரீட்சையா?! கரெக்ட் டயத்துக்கு போறதுக்கு...இப்பயே யாரும் வந்துருக்க மாட்டாங்க?! என்ற என்னிடம்...மேலும் வாதாட விருப்பமில்லை என்பதை "ஆமா" என்ற சொல்லில் வெளிப்படுத்தி விட்டு ரேடியோயாவை ஆன் செய்தார்.

இந்த விவாதம் எங்களுக்குள் அடிக்கடி...ஏன் எப்போதுமே நடப்பது தான். அதனால் நாங்கள் முடிக்கட்டும் என்று பொறுமை காத்த குழந்தைகள், " சேஞ் த சாங் டாடி...நாட் திஸ்" என்று கட்டளை பிறப்பிக்கத் தொடங்கினர்.

முற்காலத்தில் சூரியன் இருக்கும் இடத்தையும், திசையையும் கொண்டு நேரத்தைக் கணித்தனர். பின்பு தொழிற்சாலைகளின் சங்கு சத்தத்தைக்  கொண்டும், புகை வண்டி வரும் நேரத்தைக் கொண்டும் தங்களைத் தயார் செய்து கொண்டனர். அதற்குப்  பிந்தைய காலத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், தொடர்களையும் கொண்டு தங்களை விரைவு படுத்திக் கொண்டனர் ஆனால் இப்போதோ நொடிக்கு ஒருமுறை மொபைலை நோக்கும் நம்மிடம், " மணி என்னாச்சு?" என்றால் தெரிவதில்லை. 

பொதுவாகவே எனக்கு இல்லையில்லை எங்கள் குடும்பத்திற்கே  அடிக்கடி கடிகாரம் பார்க்கும் பழக்கம் உண்டு. என் தம்பி ஐந்து வயதிலேயே கடிகாரம் பார்க்கக் கற்றுக் கொண்டான். நர்சரி பள்ளியில் கடிகாரத்தையே  பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று டீச்சர் சுவர்கடிகாரத்தை கழற்றி வைத்து விட்டார்...மேசைக் கடிகாரத்தை தன் பக்கம் திருப்பி வைத்துக் கொண்டார். மதிய வேளை நெருங்க நெருங்க மணி பார்ப்பது அதிகரித்து கொண்டிருப்பதால்...மதிய உணவிற்கு வீட்டிற்கு செல்லும் வழக்கத்தை குறைத்துக் கொள்ள அறிவுறுத்தினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!!!  

"காலம் கண் போன்றது...நேரம் பொன் போன்றது", என்றெல்லாம் கூறிக் கொள்ளும் நாம் அந்த நேரத்தைக் காட்டும் கடிகாரத்தை மறந்து கொண்டல்லவா இருக்கிறோம். " நான் ரொம்ப பிஸி...கடிகாரம்  பார்க்க நேரம் இல்லை', என்று சிலரும், 'சும்மா உக்காந்திருக்குற நான் மணி பாத்து என்ன செய்யப் போறேன்?!", என்று சிலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். சில பல சமயங்களில் நமக்கு சாதகமாக நேரத்தை மாற்றிச்  சொல்லி பழகிக் கொள்கிறோம். நாம் டைம் சொல்வதை வைத்தே நம் மன நிலையை யூகித்து விடலாம்  உதாரணமாக 10:30 என்று காட்டிக் கொண்டிருக்கும் கடிகாரத்தைப் பார்த்து இப்போதான் மணி பத்தாச்சு என்று கூறுவதும், மணி பதினொன்னாகப் போகுது என்று அவசரத்தில்  பதறுவதும் நாம் பல முறை அனுபவத்தில் பார்த்திருப்போம்.

அமெரிக்கவிற்கு வந்த புதிதில் எங்கள் வீட்டில் சுவர்க்கடிகாரமே இல்லை. முதல் ஒரு வாரத்தில் கைப்பேசியில்  மணி பார்ப்பது எனக்கு மிகவும் கடினமாகப் பட்டது. அடுத்த வாரத்தில் கேபிள் கனெக்க்ஷன்  என்ற பெயரில் ஒரு பாக்ஸை வைத்து விட்டு சென்றான் அன்றிலிருந்து என் வாழ்வில் வசந்த காலம் பிறந்தது என்று தான் சொல்ல வேண்டும். நடு இரவில் கண்விழித்தாலும் பார்ப்பதற்கு    மிகவும் வசதியாக  பச்சை கலரில் நேரம் ஒளிர்ந்து கொண்டிருக்கும். அன்றிலிருந்து கடிகாரம் பார்க்கும் பழக்கம் பன் மடங்கு பெருகியது என்றுதான் சொல்ல வேண்டும். ஒவ்வோர் நொடியையும், நிமிடத்தையும் அச்சு பிசகாமல் காட்டி என்னை தனக்கு அடிமை ஆக்கியது. இப்போது எங்கள் வீட்டில் அறைக்கு ஒன்றாக தனது ஆதிக்கத்தை செலுத்திக் கொண்டிருக்கிறது. என் கணவர் கூட கடிகாரம் 11:11 என்று காட்டும் பொழுது, " ஏய்...ஒனக்கு பிடிச்ச டைம் வந்துருச்சு", என்று கேலி செய்வதுண்டு. இப்போது என் பெண். 20 நிமிடம் படி என்றால் அதில் பத்து நிமிடம் கடிகாரத்தை பார்த்தே வீணடித்து விடுவாள்...எப்போது 20 நிமிடம் ஆகிறது என்று கணக்கு பார்க்கிறாளாம்.  

நமக்கு பிடித்த சினிமாக்களில் எப்போது கடிகாரத்தைக் காட்டுவார்கள் என்று கவனித்தீர்கள் என்றால் உங்களுக்கே புரிந்துவிடும் ஆமாம் இக்கட்டான நேரங்களில் மட்டும் தான். முன்பெல்லாம் டைம் பாம் வெடிக்கும் சமயத்தில் ஆனால் இப்போதெல்லாம் "Time Machine"-ல் ட்ராவல் செய்யும் சமயங்களில் தான்  கடிகாரம், காலெண்டர் என்று மிகவும் விரிவாகவே  காண்பிக்கிறார்கள். சில சமயம் பேய் வரும் நேரங்களிலும் கடிகாரம் பன்னிரெண்டு தடவை அடிப்பதுண்டு!!! நாமும் "Time Sensitive " ஆன விஷயங்களில் கடிகாரத்தைப் பார்க்கத் தவறுவதில்லை என்றே தோன்றுகிறது.

"காலத்தே பயிர் செய்...நேரத்தே அறுவடை செய்", என்று பழமொழியுடன் அறிவுரை கூறுவதற்காகவோ, கடிகாரத்தை நோக்கினால் காரியம் கைகூடும் என்பதற்காகவோ இதையெல்லாம் எழுதவில்லை. டிஜிட்டல் மயமான உலகில் குழந்தைகளுக்கு சுவர்க்கடிகாரத்தில் நேரம் பார்ப்பது குதிரைக்கு கொம்பாக தோன்றுகிறது. புராதான கட்டிடங்களில் இருந்த பெரிய பெரிய கடிகாரங்கள் எவ்வாறு ஓடாமல் நிற்கின்றதோ அதே போல் இன்னும் சில வருடங்களில் முட் கடிகாரங்கள் அருங்காட்சியகங்களை நோக்கி ஓடப் போகின்றன.

எப்போதும் நிற்காமல் துறு துறுவென ஓடும் குழந்தைப் போல நொடி முள், சீரான வேகத்தில் குடும்பத்திற்காக உழைக்கும் அப்பாவைப் போல நிமிட முள், அடிக்கடி நகராமல்  ஒரே இடத்தில் அதிக நேரம் நின்றாலும், தன்னைச் சுற்றி சுழலும் அனைத்திற்கும் அர்த்தம் சேர்க்கும் அம்மாவைப் போன்ற   மணி (பெரிய) முள் என்று நம் குடுபத்தை நினைவில் நிறுத்தும் முட்  கடிகாரத்தை நம் குடும்பத்தில் ஒருவராக இணைத்துக்கொள்ள மறந்துராதீங்க...இன்னும் நேரம் இருக்கு!!!      

"