Monday, November 19, 2018

ஒரு கதை சொல்லட்டா ?!

கதை சொல்வது ஒரு சிலருக்கே கை வந்த கலையாக இருப்பினும் கதை கேட்பது யாருக்குத்தான் பிடிக்காது?! நாம் திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பதும் இதனால் தானே?! கதை உண்மையாகவும் இருக்கலாம் கற்பனையாகவும் இருக்கலாம். நமக்குத் தெரிந்தவர்கள் பற்றியும் இருக்கலாம் தெரியாதவர்கள் பற்றியும் இருக்கலாம். அனைத்து விதமான உணர்ச்சிகளை  உள்ளடக்கியதாகவும்  இருக்கலாம் அல்லது ஒரு சில உணர்ச்சிகள்மட்டும்  மேலோங்கியதாகவும் இருக்கலாம். ஆக மொத்தத்தில் கதை  சுவாரசியமாக இருக்க வேண்டும்.

நான் கதை கேட்டதை விட சொன்னதுதான் அதிகம் என்றே நினைக்கிறேன். சிறுவயதில் பெரியம்மாவிடம் சில கதைகள் கேட்டதுண்டு. என்னை கதை சொல்லியாக ஆக்கியத்தில் முக்கியப்பங்கு "கேபிள் டிவி"-க்கு உண்டு. 
90-களின் தொடக்கத்தில் ஒரு சிலரே கேபிள் கனெக்ஷன் வைத்திருந்தார்கள். அவர்கள் கொடுக்கும் அலப்பறைகளுக்கு அளவே கிடையாது. சனி ஞாயிறுகளில் அவர்கள் பார்த்த நிகழ்ச்சிகளை திங்கட்கிழமை மதிய உணவு இடைவெளியில்  ஒன்று விடாமல் கூறுவார்கள். அடுத்த ஒரு சில ஆண்டுகளில் மெகா தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டதும் கதை சொல்லிகளுக்கு கிராக்கி அதிகமாகியது.

எங்கள் வீட்டில் கேபிள் கனெக்ஷன் இல்லாதிருந்தாலும் மாடி வீட்டு அக்கா வீட்டில் பார்த்த நிகழ்ச்சிகளை நானும் சொல்லத் துவங்கினேன். நான் சொன்னது பள்ளிக்கூடத்தில் அல்ல வீட்டில். கவுண்டமணி காமெடிகளை என் அப்பாவிடம் மிக விரிவாக துணி துவைத்துக்கொண்டே கூறுவேன் அவரும் விழுந்து விழுந்து சிரிப்பார். புரிந்ததோ இல்லையே?! இப்போது நினைத்தால் எனக்கே சிரிப்பாக இருக்கிறது!!! என்னிடம்  யாரும் சிக்காத பட்சத்தில் என் கதைக்கு பலி கடா ஆவது என் தங்கைதான். பிடிக்குதோ இல்லையோ அவள் கேட்டே ஆகவேண்டும். 

எங்களின் கதை சொல்லும் பசிக்கு  தீனி போடும் விதமாக பள்ளிகளிலும்  வருடத்திற்கு ஒருமுறை  கட்டணம் வசூலித்து திரைப்படங்கள் திரையிடப்பட்டு  வந்தன. பழைய படமே என்றாலும் முண்டியடித்துக் கொண்டு பார்ப்பது வழக்கம்...அப்புறம் கதை சொல்லணுமில்ல!!! 

மேல்வகுப்பில் படிக்கும் பொழுதும் சீரியல் கதை சொல்லிகளுக்கு மவுசு இருந்தது ஆனால் எனக்கு அதில் அதிக ஆர்வம் இருந்ததில்லை. அக்காலகட்டத்தில் முழு நீள திரைப்படங்களை விரிவாக சொல்லுவதில் "Expert " ஆக உருமாறி இருந்தேன். புதுப்  படமோ பழைய படமோ...வித்தியாசம் இல்லை. ஒரு பீரியட் கிடைத்தாலும் போதும் நீங்கள் ஒரு படம் பார்த்துவிடலாம்...என்னிடம் கதை கேட்கத்  தயாராக இருந்தால்!!! டீச்சர் லீவு என்றால் இரண்டு மூன்று படங்கள் ஓடும் வகுப்பறையில்.

சொந்தம்... பந்தம் என்று அனைவருக்கும் கதை சொல்லிய அனுபவம் எனக்கு உண்டு. அவர்களும் பதிலுக்கு அவர்களை மிகவும் கவர்ந்த... முக்கியமாக புதிய திரைப்படங்களை எனக்குக் கூறுவார் அதையும் நான் பலருக்கு கொண்டு சேர்ப்பேன். இந்த கதை சொல்லும் பழக்கம் என்னிடம் இருந்து என் தங்கைக்கும் ஒட்டிக் கொண்டிருந்தது.  அவ்வப்போது அவளும் எனக்கு ஒரு சில திரைப்படங்களை கதையாக சொல்வாள். இப்பொழுது கூட அப்படங்களை பார்க்க நேர்ந்தால் என் தங்கையை நினைத்துக் கொள்வேன்...பேசும் பொழுது "நீ கதை சொன்ன படம் இன்னைக்கு டீவியில போட்ருந்தாங்க" என்று கூறுவேன்.   

கல்லூரியில் ஹாஸ்டல் வாசிகள் கதை கேட்க மிக ஆவலாக இருப்பர். நான் கேபிள் டீவி பார்ப்பது அறவே குறைந்திருந்த சமயம் அது ஆகையால் புதுப் படங்களை திரையரங்குகளில் பார்க்க நேர்ந்தால் மட்டுமே கதை சொல்லும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. என்னிடம் கதை கேட் பிறகு  நீங்கள் அப்படத்தை பார்க்க நேர்ந்தால் என்னை நினைக்காமல் இருக்க முடியாது. சீன் பை சீன்...Frame by  frame அப்படியே இருக்கும். அதை என்னிடம் வந்து சொன்னவர்களும் ,"எப்பிடிடீ இப்பிடி சொல்ற?! " என்று சிலாகித்தவர்களும் உண்டு. 

இக்கதை சொல்லும் பழக்கத்தால் பள்ளி கல்லூரிகளில் நடந்த சம்பவங்களை வீட்டில் விரிவாக அனைவரிடமும் சொல்லும் பழக்கம் எனக்கு ஏற்பட்டது. அதுவும் சுவாரசியமாக ஏதாவது நடந்து விட்டால் போதும்...புத்தகத்தை  தங்கள் மடிகளில் விரித்து வைத்துக்கொண்டு என்னிடம் கதை கேட்டுக் கொண்டிருப்பர். ஆ... வென்று கதை கேட்டு விட்டு...  நான் நேரத்தை விரையமாக்கி விட்டதாக என் கடைசித் தம்பி திட்டித் தீர்ப்பான். அவர்களும் பள்ளிக்கதைகளை கூறுவதுண்டு.

இன்றளவும் கதை சொல்லும் பழக்கம் என்னை விட்டு விலகவில்லை. சினிமா மட்டுமன்றி நான் பார்த்த...கேட்ட...படித்த...அனுபவித்த  பலதரப்பட்ட விஷயங்களை விரிவாக என் கணவர், பெற்றோர், குழந்தைகள் மற்றும் நண்பர்களிடம் சொல்லிக்கொண்டு தான் இருக்கிறேன். என் படிக்கும் (எழுதும்) ஆர்வத்தையும்... பிறர் சொல்வதை  செவி கொடுத்து கேட்கும் பொறுமையையும்   இக்கதை சொல்லும் பழக்கம் தான்   அளிக்கிறது   என்று   நினைக்கிறேன். நான் சொல்வதைக்  கேட்கும்    செவிகள்  கிடைத்ததை எனது  பாக்கியமாகக் கருதுகிறேன். கதை சொல்லிகளாக உருவெடுத்து வரும் என் குழந்தைகளை பெருமையுடன் பார்க்கிறேன். 

இன்றைய இயந்திர உலகில் மனம் விட்டுப்  பேசுவதும் பிறர் பேசுவதைக் (அவர்களை மதிப்பிடாமல் ...Without Judging) கேட்பதுமே  பல பிரச்சனைகளை சுலபமாகத் தீர்த்து விடும் என்பதை  தீர்க்கமாக நம்புகிறேன்.

பின் குறிப்பு : என்னிடம் கதை கேட்கும் கொடுமையிலிருந்து   என் தங்கைக்கு  நிரந்தர விடுதலை இன்றும்   கிட்டவில்லை.

Wednesday, September 5, 2018

குரு பிரம்மா...

"மாதா பிதா குரு தெய்வம் " - வரிசையில் மூன்றாவதாக வந்தாலும் வாழ்க்கையில் முதலாவதாக நம்மை நிறுத்த அயராது உழைப்பவர்கள் ஆசிரியர்களே!!! "எங்க சொல் பேச்சு கேக்கலைன்னாலும் பரவாயில்ல ...உங்க டீச்சர் பேச்ச கேளு...அப்பத்தான் உருப்படுவ" என்று பெற்றோர்களாலேயே  பெரு மதிப்புடன் பார்க்கப்படுபவர்கள் ஆசான்கள். கணக்கு டீச்சர், தமிழ் டீச்சர் என்று அவர்கள் கற்பிக்கும் பாடத்தை வைத்து அவர்கள் அறியப்பட்டாலும் மாணவர்களின் Psychology-யை ஓர் கண்ணசைவை வைத்தும் Physiology-யை அவர்கள் உடலசைவைக் கொண்டும்   மிகத் துல்லியமாக எடை போடுவதில் மருத்துவர்களையே மிஞ்சி விடுவார்கள். நடமாடும் "Lie Detector "-கள் என்று அவர்களுக்கு பட்டமே வழங்கலாம்.

என் பள்ளிப்பருவம் முழுவதும் கிறித்தவ பள்ளிகளில் என்பதால் மதிப்பெண்களை விட அதிக மதிப்பு நன்னடத்தைக்குதான் கிடைக்கும் . நான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் பொழுது இருந்த தலைமை ஆசிரியை தினமும் அசெம்பிளி வைப்பார். குறைந்தது அரைமணி நேரமாவது நல்லொழுக்கங்களைப்  பற்றி பேசுவார். நல்ல மாணவர்களை  உருவாக்குவது மட்டும் எங்கள் வேலை அல்ல நல்ல குடிமகன்களாக உங்களை வடிவமைப்பதும் (Molding)   எங்கள் பொறுப்பே என்று கூறுவார்.

முதல் நாள் பள்ளியில் இருந்து வந்ததும் அம்மா எங்களிடம் கேட்கும் முதல்  கேள்வி "வயசான டீச்சரா?!" என்பதாகத்தான் இருக்கும் ஏனென்றால் அவர்களுக்கு அனுபவம் அதிகம் ஆதலால் நம்மை வழிக்கு கொண்டுவருவதில் கில்லாடிகளாக இருப்பர். என் அதிர்ஷ்டம் எனக்கு பெரும்பாலும் புது ஆசிரியர்களே கிடைப்பார்கள். ஒரு வருடம் கண்டிப்பான ஆசிரியர் வந்து விட்டார். என் அம்மாவிற்கோ மகிழ்ச்சி ஆனால் நான் தான் லக்கி ஆயிற்றே...ஒரு மாத விடுப்பில் சென்றவர் வரவே இல்லை. நல்லா "டேக்கா" கொடுத்தே பள்ளிப் படிப்பை முடித்து விட்டேன். என் தங்கைக்கோ என்னளவிற்கு அதிர்ஷ்டம் கிடையாது. வருஷா வருஷம் அடிச்சு தொவைக்குற டீச்சர் தான். இப்பொழுது கேட்டாலும் திருக்குறளையும், நாடுகளையும்  தலைநகரங்களையும் மிகத் தெளிவாகக் கூறுவாள். எப்பிடி நியாபகம் இருக்கு?! என்று கேட்டால் "எனக்கு வந்த டீச்சர் அப்பிடி" என்று கூறுவாள். அக்காலத்தில் பெற்றோர்களின் தலையீடு பள்ளிகளில் இருந்ததே இல்லை. வருடத்தில் ஒரு முறை ஆசிரியர்களை சந்திப்பதே அதிசயம் தான்.

பெண் ஆசிரியைகளை விட ஆண் ஆசிரியர்கள் மிகவும் நகைச்சுவையாக பேசுபவர்கள் என்றும் உலக விஷயங்களையும் நாட்டு நடப்புகளையும் மாணவர்களிடம் விவாதிப்பார்கள் என்றும் என் சகோதரர்கள் சொல்லக் கேட்டதுண்டு. நர்சரிப் பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளியில் ஆறாவது சேர்ந்த என் அண்ணன் பள்ளியை விட்டு வந்ததும்  அவர் சார் சொன்னார் என்று பல காமெடிகளைக் கூறுவான். சே...நமக்கும் சார் வந்தா சூப்பரா இருக்கும் என்று நானும் என் தங்கையும் புலம்புவோம். என்ன செய்வது நாங்கள் படித்ததோ பெண்கள் பள்ளி!!!

எனது மேல்நிலை வகுப்பில் வந்த உயிரியியல் ஆசிரியையை மறக்கவே முடியாது. " துளசி வாசம் மாறுனாலும் மாறும் ஆனா இந்த தவசி வாக்கு மாற மாட்டான்" என்று விஜயகாந்த் கூறுவது போல புயலோ, மழையோ, வெள்ளமோ,பள்ளி ஆண்டு விழாவோ எதுவாக இருந்தாலும் வகுப்பிற்குள் நுழைந்தவுடன் முன்தினம் நடத்திய பாடத்திலிருந்து கேள்வி கேட்டே தீருவார். தெரியவில்லை என்றால் சிறிது நேரம் நிற்க வைத்து விட்டு "Daily Lesson படிக்காம என்ன பண்ற " என்கிற டயலாக்கை மட்டும்  தவறாமல் சொல்லி விட்டு உட்கார வைத்து விடுவார். 

எனது பத்தாவது வகுப்பு ஆசிரியை என்னைப் பற்றிய மிகச் சரியான உளவியல் அறிக்கையை (நினைச்சா படிக்கலாம்  முதல் அஞ்சு ரேங்க்குல வரலாம்...ஆனா நெனைக்குறதே இல்ல...சோம்பேறி) என்  அம்மாவிடம் கூறி அவரை ஆச்சரியப்படுத்தினார். இன்றளவும் " அந்த டீச்சர் உன்ன பத்தி ரொம்ப கரெக்டா சொன்னாங்க" என்று நினைவு  கூறுவார் என் அம்மா. 

எனது கல்லூரியில் எனக்கு அமைந்த அனைத்து பேராசிரியைகளும் எனக்கு கிடைத்த நண்பர்களே. முக நூலின் உதவியால் எங்களைக் கண்டு இன்றளவும் பெருமிதம் கொள்பவர்களும் அவர்கள் தான். ஆசிரியர் என்னும் ஒற்றைச் சொல்லில் அடங்கியிருக்கும் பொறுப்புக்களோ ஏராளம். பெற்றோர், மருத்துவர், காவலர், நீதிபதி முக்கியமாக நம்மை செம்மைப்படுத்தி உருவம் கொடுக்கும் குயவர் என Multi- tasking செய்ய ஆசிரியர்களைத் தவிர  வேறு யாராலும் இயலுமா?!  

கல்வி வியாபாரம் ஆகி விட்ட நிகழ் காலத்தில் எங்கு அதிக சம்பளமோ அங்கு வேலை என மாறுவதால் மாணவர்களைப் பற்றிய புரிதல் ஆசிரியர்களுக்கு இல்லை என்றும்  ஆசிரியர்களுடன் நெருங்கிப்  பழகும் அரிய  வாய்ப்பு  மாணவர்களுக்கும் கிடைப்பதில்லை  என்றும் பலர் கூறுகின்றனர். ஆனால்  பலரும் மதிக்கும் ஆசிரியப் பணியை அதன் மகத்துவம் உணர்ந்து செய்பவர்கள்  இன்றளவும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதில் ஐயம் ஏதுமில்லை!!!


Wednesday, April 18, 2018

அம்மா எங்க ?!

தெருவில் இறங்கி ஓடிய குணா, மூச்சிரைக்க தெரு முக்கிலேயே நின்று விட்டான். சாலையின் இரு புறத்தையும் மாறி மாறி பார்த்தவன் ...தூரத்தில் வருபவர்களை காண்பதற்கு வசதியாக  குதிகாலில் நின்று சிறிது நேரம் நோக்கினான். தெரு முனையில் இருக்கும் டீக்கடையில் ஓரிருவர் தேநீர் அருந்தியபடியும் , ஒரு சிலர்  மாலை நாளிதழை மும்முரமாக படித்துக் கொண்டும், விவாதிக்கொண்டும் இருந்தனர். குணாவை சில நிமிடம் பார்த்த டீக்கடைக்காரர் எதுவும் கேட்காமல் தன் வேலையில் கவனமானார் . கடந்த ஒரு மணிநேரத்தில் ஐந்தாவது முறையாக குணா சாலையை சோதிப்பதற்கு தெரு முனைக்கு வந்திருந்தான். 

தளர்ந்த நடையும் வாடிய முகமுமாக திரும்பிய குணா சோர்வுடன் வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டான் . அதிகம் போக்குவரத்து இல்லாத அந்த தெருவில் மாலை நேரமென்பதால் மக்கள் நடமாட்டம் சற்று அதிகமாகவே இருந்தது . இஸ்திரி வண்டிக்காரர் இஸ்திரிப் பெட்டியிலிருந்த கரியை தண்ணீர் ஊற்றி அனைத்துக்கொண்டிருந்தார். "போளியல், கொழுக்கட்டை வாங்குறீங்களா ?!" என்ற இரண்டு தூக்கு வாளியை வைத்துக்கொண்டு வாசலில் நின்று கொண்டிருந்தவளுக்கு   "வேணாங்கா " என்ற குரல் மட்டும்  குணா வீட்டிலிருந்து வர  அவள் அடுத்த வீட்டிற்கு நகர்ந்தாள். நான்கைந்து குடித்தனங்கள் வாழும் காம்பௌண்ட் வீட்டிலிருந்து வெளிவந்த நடுத்தர வயது மதிக்கத்தக்க பெண்மணி  " என்னடா குணா வாசல்லயே ரொம்ப நேரமா உக்காந்துருக்க ?!" என்று கேட்டுக்கொண்டே அவனின் பதிலைக் கேட்க நேரமில்லாதவளாய் தெருவில் இறங்கி மறைந்தாள்.

குணாவின் வயதை ஒத்த  சிறுவர்களும், சிறுமியர்களும் குதூகலமாக தங்களுக்குள் பேசி சிரித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் குணாவை ஓரக் கண்ணால் நோக்கிக் கொண்டிருந்த பத்து வயது சிறுவனிடம் " அம்மா ஏண்ணே இன்னும் வரலே?!" என்று குரல் கர கரக்க கேட்டான்  குணா. "அம்மாதான் கார்பொரேஷன் ஆபீஸ் போற வேலை இருக்குன்னு காலையிலேயே சொன்னாங்கள்ல... வந்துருவாங்க டா " என்று பல முறை சொல்லிச்சலித்த அதே பதிலைக் கூறினான் அவனின் அண்ணனான  குரு. அம்மா இல்லாததால் (வீட்டுப்பாடம் எழுதாமல்) தெருவில் விளையாட அதிக நேரம் கிடைத்ததை எண்ணி சற்று அகமகிழ்வோடு காணப்பட்டான்.

மிகச் சமீபத்தில்  இவ்வூருக்கு  குடி பெயர்ந்திருந்த குணாவின் குடும்பம்  உடல் நலக் குறைவினால்  எதிர்பாரா விதமாக தந்தையை இழந்திருந்தது.  பாட்டியின் வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்தனர் பின்  குணாவின் அம்மா தனக்கு  விதவைகள் இட ஒதுக்கீட்டில் மதிய உணவு மேற்பார்வையாளராக அரசாங்க  வேலை கிடைக்க தன் இரு மகன்களுடன் இந்த ஒண்டு குடித்தன வீட்டிற்கு  குடி பெயர்ந்தாள். அப்பாவை இழந்த சோகத்திலிருந்து வெளிவரவே குணாவிற்கு ஆறு மாதங்கள் பிடித்தது. "அப்பா எப்பம்மா திரும்பி வருவாங்க?! நம்ம ஊருக்கே திரும்பி போயிரலாம்மா" என்று அடிக்கடி அழுது காய்ச்சல் தலைவலி என்று வரவழைத்துக் கொள்வான். அவன் அண்ணன் குருவோ   நண்பர்கள் , உறவினர்களின் குழந்தைகள் என நல்ல "Company " கிடைக்க சில நாட்களில்  தந்தையின்  இழப்பை மறந்து சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டான் ஆனால் குணா அழுகும் போது அவனுக்கும் அழுகை வரும். அம்மாவோடு சேர்ந்து இருவரும் அழுது கொண்டே தூங்கிப்போவது வழக்கம்.

மின்மினி பூச்சியாய் கண் சிமிட்டிய தெரு விளக்குகள் சில நொடிகளில் பிரகாசம் கொண்டது. "டேய் குணா ...குரு... தண்ணி வந்து ரொம்ப நேரமாச்சு...நீங்க பிடிக்கலையா ?!" என்ற குரல்  உள்ளிருந்து ஒலிக்க  கடைசி முறையாக தெருமுனை வரை சென்று திரும்பியிருந்த குணா அழத்தொடங்கினான். " ஏண்டா அழற ...இப்ப வந்திருவாங்கடா...உள்ள போ" என்று அதட்டும் விதமாக பேசிய  குரு அடுத்த நிமிடமே  "பக்கத்து தெருவுல கட்சி மீட்டிங் ...இன்னும் கொஞ்ச நேரத்துல ரஜினி பாட்டு போடுவாங்க ...வர்றியா போய்ப்  பாக்கலாம்" என்று சமாதானப் படுத்தும் விதமாக பேசினான். சகோதரர்கள் இருவரும் சிறிது நேரம் அங்கு சென்று வந்தனர்.
 " இன்னும்  அம்மா வரலேண்ணே...வந்துருவாங்கள்ல ?!" என்ற தம்பியை பார்த்த குருவிற்கும் அடி வயிற்றில் பயம் பரவத்தொடங்கியது." மணி ஏழாச்சு...இன்னும் அம்மா வரலையா ?! மூணு மணிக்கே வந்துருவாளே ?! ரெண்டு பேரும் சாப்பிட்டீங்களா ?! என்று அக்கறையோடு விசாரித்த  பக்கத்து வீட்டு பாட்டியை பார்த்த குருவிற்கும் அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

வீட்டின் கதவைச்  சாத்திவிட்டு இருவரும் இரண்டு  தெரு தள்ளி இருக்கும் பாட்டி வீட்டிற்கு ஓடினர். அங்கிருந்த அவர்களின் பெரியம்மா பையன் " என்னடா இந்நேரத்துக்கு வந்துருக்கீங்க ?! அம்மா வரல ?!" என்றதும் இருவரும் அழத்தொடங்கினர். " டேய்... டேய் உங்கம்மா கார்புரேசன் ஆபிசுக்கு போயிருப்பா டா ...மாசா மாசம்  போறதுதானே " என்று சமாதானம் செய்தான் . சற்று நேரத்தில் இருவரும் மீண்டும்  தெருமுனைக்கே  வந்து காத்து நின்றனர். தூரத்தில் ஓட்டமும் நடையுமாக வரும் அம்மாவை குணாதான் முதலில் பார்த்தான். " அண்ணே ...அம்மா " என்றதும் இருவரும் அம்மாவை நோக்கி ஓட்டம் பிடித்தனர். " ராஜா " என்று இருவரையும் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்ட அம்மா " பஸ்ஸே கெடைக்கலப்பா ... கார்பொரேஷன் ஆபிஸ்ல இருந்து நடந்து வந்தேனா ..நேரமாயிருச்சு " என்று கூறிக்கொண்டே கூடையிலிருந்து ஒரு பொட்டலத்தை எடுத்து நீட்டினாள். அம்மாவைக் கண்ட மகிழ்ச்சியோடு தின்பண்டம் கிடைத்த இன்பமும் சேர்ந்து கொள்ள இரட்டிப்புத் துள்ளலுடன் ... அம்மாவிற்கு இரு புறமும் இரு சேனைக்காவலர்கள் போல வீட்டை நோக்கி வீர நடையிட்டு    சென்று கொண்டிருந்தனர்   குணாவும் குருவும்!!!
             

Friday, January 26, 2018

நாய்கள் ஜாக்கிரதை

கதவைத் திறந்தவளின் கண்களில் ஒரு சிறு அதிர்ச்சி . அடுத்த சில நொடிக்  கணங்களில்   பயம் அந்த  அதிர்ச்சியை வெல்ல ... தன்னை அறியாமலேயே   வாய் வரை வந்த "வீல்" என்று அலறலை... உதடுகளால் பூட்டி உள்நிறுத்தினாள் நிகிலா. எதுவும் நடவாதது போல் சத்தமில்லாமல் கதவை சாத்தி விட்டு உள்ளறையை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தாள்.

" நேரம் காலை 6:40...மாநிலச் செய்திகள் வாசிப்பது ..." என்று செய்தியாளர் தன்னை அறிமுகம் செய்து  கொண்டிருந்தார்  வானொலியில். அம்மா சமையல் வேலையில் மும்முரமாக இருந்தாள். தங்கை, தம்பி என மூவர் தங்கள் பாட புத்தகங்களை புரட்டிக் கொண்டும், முன்னும் பின்னும் அசைந்து எதையோ மனப்பாடம் செய்து கொண்டும் இருந்தனர். முகவாயைத் தடவிக்கொண்டு செய்தியைக் கேட்பதற்கு தன்னை தயார் நிலையில் வைத்திருந்தார் அப்பா.

படபடப்புடன்  வந்து நின்ற நிகிலாவை, "என்னாச்சு?! " என்ற வினாவோடு அனைவரும்  ஒரு  சேர  நோக்கினர். " வாசல்ல ரெண்டு நாய்க்குட்டி நிக்குது " என்றவளை, " தொரத்தி விட்டுட்டு வாசல் தெளிக்க வேண்டியதுதான " எனும்  தோரணையில் பார்த்த அப்பா, " இவங்களுக்கு வேற வேலையே இல்ல...என்னமோ கோவில்ல நேந்துக்கிட்டு ஆடு, சேவலை விட்ற மாதிரி மாசமான நாயி, பூனைன்னு இந்த ரோட்டோர பிள்ளையார்கிட்ட விட்டுட்டு போயிற்றானுங்க ..அது நேரா நம்ம வீட்டு வாசல்ல வந்து  நிக்குது " என்று பெருமூச்சோடு தோளில் துண்டைப் போட்டுக் கொண்டு வாசலை நோக்கி நடந்தார்.

நிகிலாவிற்கு... ஏன் அவர்கள் வீட்டில் எல்லாருக்குமே செல்லப் பிராணிகளைக் கண்டால் ஒரு வித பயம். அதனாலேயே வீட்டிற்கு வரும் நாய்களில்  ஒன்றைக்  கூட வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம்  வந்ததில்லை. பூனையை வளர்க்கலாம் என்று ஒரு சில முறை முயன்றனர் ஆனால் அது  பீரோ, அலமாரிக்கு அடியில் என்று அசிங்கம் செய்ய...முயற்சியைக்  கைவிட்டு விட்டனர்.  ஒரு வழியாக நாயை விரட்டிவிட்டு வந்த அப்பா "பாவம் சின்ன குட்டி...இங்க தான் கோவில்ல  நிக்குது " என்றார். " ஏய் நீ போயி கோலம் போட்ருடி" என்று தங்கையை அனுப்பி வைத்தாள் நிகிலா.

புறநகர் பகுதியில் வசிக்கும்  நிகிலாவின்  வீட்டிற்கு  இரு மருங்கிலும் வேறு  வீடுகள் கிடையாது. அரிசி, பருப்பு ஆலைகளே இருந்தன. வீட்டை விட்டு இறங்கியதும் ரோடு ...அடுத்து  பஸ் ஸ்டாப். வீட்டை ஒட்டி பின்புறமும்...சாலையைக் கடந்து முன்புறமும் கால்வாய் ஓடிக் கொண்டு...இல்லை...இல்லை நின்று கொண்டிருக்கும். அதனால் அழையா விருந்தாளிகளாக பாம்பு, தவளை, பூரான் என்று அனைத்து ஜந்துக்களும் அவர்கள் வீட்டு பாத்ரூம், புழக்கடைக்கு வருகை தரும். " அலெர்ட்டா இரு ஆறுமுகம்" என்று வடிவேலு சொல்வது போல படு கவனமாக  இருக்க வேண்டும். நகர வாசிகள் வந்தால் " இது என்ன வீடா ?! Zoo -வா ?! ஜுராசிக் பார்க் படத்துல வர்ற மாதிரி இருக்கு  " என்று கேலி பேசுவதும் உண்டு. 

மாலை கல்லூரி முடிந்து... பேருந்தை விட்டு வீட்டு வாசலில் இறங்கிய நிகிலா அங்கும் இங்குமாக பார்வையை சுழல விட்டாள். "அப்பாடா" என்ற நிம்மதி பெரு மூச்சோடு  வீட்டிற்குள் நுழைந்தாள். " என்னம்மா...நாய்க்குட்டி போயிருச்சா?! என்று  புத்தகப் பையை ஓரத்தில் வைத்தவாறே வினவினாள். "ம்ம்ம் ...ஒரு ஒன்பது மணிக்கு பாத்தேன்...பிள்ளையார் கோவில்ல வச்சிருந்த பாலை குடிச்சிட்டு ..வெயில்ல படுத்துக்கிட்டுருந்துச்சு, பஸ் ஸ்டாப்ல நிக்குற பசங்கதூக்கி  வெளையாடிகிட்டு இருந்தானுவ  ...பதினோரு மணிக்கு போயி பாக்குறேன் காணோம்...யாராச்சும் ரைஸ்மில்லு ஆளுங்க   எடுத்துகிட்டு  போயிருப்பாங்க... " என்றவாறு தேநீரை நிகிலாவிடம் கொடுத்தாள் அம்மா.

சில சமயம் வரும் நாய்க்குட்டிகள் நிகிலா வீட்டை விட்டு போவேனா என்று அடம் பிடிக்கும். அன்று முழுவதும் வாசல் கேட்டை மூடி வைத்தாலும் அங்கேயே இருக்கும். ஒவ்வொரு முறை கதவைத் திறக்கும் போதும் உள் புக முயலும். அவ்வாறான சமயங்களில் உதவிக்கரம் நீட்டுவது நிகிலாவின் தம்பி...அவர்களின் "சூப்பர் ஹீரோ"(அவனுக்கும் உள்ளூர நடுக்கம் தான்). அவன் கையாளும் யுக்தி இதுதான். நாய்க்குட்டியை துணிப்பையில் வைத்து...பையை வயர் கூடையில் வைத்து...கூடையை சைக்கிளில் வைத்துக்  கொண்டு அவன் பயணம் தொடங்கும். பத்து பதினைந்து நிமிடத்திற்கு பின்...போக்குவரத்து இல்லாத தெருவில் பையை வைத்து விட்டு...கண் இமைக்கும் நேரத்தில் சைக்கிளில் திருப்பிவிட வேண்டும் இல்லையேல் நாய்க்குட்டி பின் தொடரும்...மற்ற வாகனங்களில் சிக்கிக் கொள்ளும். ஒரு சில முறை பையை நான்கைந்து முறை சுழற்றி வைத்துவிட்டு வருவான். " வெளிய வந்த உடனே நாய்க்கு தல சுத்தும்...அடையாளம் தெரியாது " என்பான். " ஒரு வீட்டுக்கு பின்னாடி ஒளிஞ்சு பாத்துட்டு வந்தேன் எங்க போகுதுன்னு...நல்ல வேளை ஒரு சந்துக்குள்ள போயிருச்சு" என்பான். அதைக் கேட்கும் போது பாவமாக இருக்கும். என்ன செய்வது...அங்கு வரும் நாயையெல்லாம் வளர்த்தால் வீட்டில் மனிதர்களை விட நாய் தான் அதிகம் இருக்கும்.

நிகிலா பள்ளியில் படிக்கும் பொழுது அவர்கள் பெரியம்மா வீட்டில் ஒரு நாய் இருந்தது. மிகவும் வயதானது. அதிகம் குலைக்காது. சிறிது நாட்களில் அது நோய்வாய் பட்டு இறக்க...ஒரு நாய்க்குட்டியை வாங்கி வந்தனர். அது எப்பொழுது பார்த்தாலும் குதித்துக்கொண்டும், குலைத்துக் கொண்டும் இருக்கும். சில சமயம் கயிற்றை அறுத்துக்கொண்டு வீட்டை வலம் வரும். துணிகளை கடித்துக் குதறும். நிகிலாவும் அவளின் சித்தி குழந்தைகளும் மூலைக்கு ஒரு புறமாக சிதறி ஓடுவதும், கட்டிலில் மேல் ஏறிக்கொள்வதுமாக வீடு அல்லோல கல்லோலப்படும். சில சமயம் அதிகாலையில் இவை நடக்கும். நிகிலா போர்வையை தலையோடு  இழுத்து போர்த்தி ஒடுங்கிக் கொள்வாள். அனைவரின் மீதும் நாய் தாவி ஓடும். சமாளிக்க முடியாமல் அதையும் எங்கோ விட்டு விட்டனர். அதன் பிறகு நிகிலாவிற்கு நாயுடன் எந்த வித நேரடித்தொடர்பும் கிடையாது. ஒரு முறை அவள் அப்பாவை தெரு நாய் ஒன்று கடித்து விட்டது அன்றிலிருந்து நாயின் மேலான அவளின் பயம் மேலும்  பண் மடங்கு பெருகியது. தெரு நாய்களின் அட்டகாசங்களை பத்திரிகையில் படிக்கும் பொழுது பயத்தில் தலை சுத்தும் அவளுக்கு.

 திருமணமாகி வெளிநாட்டில் வசிக்கும் நிகிலாவிற்கு நாயுடனான உறவு (பயம் ) இன்றளவும்  தொடர்கிறது. கழுத்தில் "லீஷ்" உடன் மிக பாதுகாப்பாக செல்லும் நாய் கூட நிகிலாவைப் பார்த்தல் குறைக்கும், துள்ளும். சில சமயம் காலை சுற்றி வற முயலும்..இவள் ஒதுங்கிக் கொள்வதைப் பார்ப்பவர்கள் "எதுவும் செய்யாது...குழந்தை போல...PET செய்யலாம் " என்று கூறுவர் ஆனால் நிகிலாவோ " No Thanks ...எனக்கு பயம் " என்று கூறி விடுவாள். ஒரு வேளை நம் கண்ணில் தெரியும் பயம் அதற்கு தெரியுமோ...என்னவோ?! என்று நினைத்துக் கொள்வாள். 

ஒரு முறை அவளின் இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு Play Ground-ற்குச்  சென்று கொண்டிருந்தாள். எதிர்பாரா விதமாக  பிடியிலிருந்து விடுபட்ட நாய் நிகிலாவை நோக்கிப்  பாய்ந்தது. ஆஆஆ ... என்ற அலறலோடு விலக, நாய் அவளின்  மூன்று வயது மகன் மேல் ஏறி அவன் தலையை நனைத்து விட்டது. பதறி ஓடி வந்த  நாயின் காப்பாளரைப் பார்த்து " Please take Him...How Could You Let it go ?! '- என்று கோபத்தில்  கிட்டத்தட்ட அழுதே விட்டாள். அதிலிருந்து  அவளின் குழந்தைகளும்  நாயைக் கண்டால் நாலு காத தூரம் ஓடுகிறார்கள். " நாய்கிட்ட இருக்கிற பயத்துல இருந்து வெளியில வரணுங்க...நாய் வளர்க்கலாமா ?! " என்று கணவரிடம் கேட்டால்  அவர்  " எனக்கு Interest இல்ல " என்று தப்பி  ஓடுகிறார். எப்போதுதான் நிகிலாவிற்கு பயம் தெளியுமோ ?! காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

பின் குறிப்பு : சமீபத்தில் திருமணம் நடந்த நிகிலாவின் சூப்பர் ஹீரோ தம்பியை அவனின்   மாமனார் வீட்டில் (மைத்துனனுக்கு  பதிலாக)  வரவேற்றது யார் தெரியுமா ?!  அவர்களின் செல்ல நாய் ஜாக்கி!!! ( தம்பியின் Mind Voice ...அவனா நீ!!! )