Wednesday, September 5, 2018

குரு பிரம்மா...

"மாதா பிதா குரு தெய்வம் " - வரிசையில் மூன்றாவதாக வந்தாலும் வாழ்க்கையில் முதலாவதாக நம்மை நிறுத்த அயராது உழைப்பவர்கள் ஆசிரியர்களே!!! "எங்க சொல் பேச்சு கேக்கலைன்னாலும் பரவாயில்ல ...உங்க டீச்சர் பேச்ச கேளு...அப்பத்தான் உருப்படுவ" என்று பெற்றோர்களாலேயே  பெரு மதிப்புடன் பார்க்கப்படுபவர்கள் ஆசான்கள். கணக்கு டீச்சர், தமிழ் டீச்சர் என்று அவர்கள் கற்பிக்கும் பாடத்தை வைத்து அவர்கள் அறியப்பட்டாலும் மாணவர்களின் Psychology-யை ஓர் கண்ணசைவை வைத்தும் Physiology-யை அவர்கள் உடலசைவைக் கொண்டும்   மிகத் துல்லியமாக எடை போடுவதில் மருத்துவர்களையே மிஞ்சி விடுவார்கள். நடமாடும் "Lie Detector "-கள் என்று அவர்களுக்கு பட்டமே வழங்கலாம்.

என் பள்ளிப்பருவம் முழுவதும் கிறித்தவ பள்ளிகளில் என்பதால் மதிப்பெண்களை விட அதிக மதிப்பு நன்னடத்தைக்குதான் கிடைக்கும் . நான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் பொழுது இருந்த தலைமை ஆசிரியை தினமும் அசெம்பிளி வைப்பார். குறைந்தது அரைமணி நேரமாவது நல்லொழுக்கங்களைப்  பற்றி பேசுவார். நல்ல மாணவர்களை  உருவாக்குவது மட்டும் எங்கள் வேலை அல்ல நல்ல குடிமகன்களாக உங்களை வடிவமைப்பதும் (Molding)   எங்கள் பொறுப்பே என்று கூறுவார்.

முதல் நாள் பள்ளியில் இருந்து வந்ததும் அம்மா எங்களிடம் கேட்கும் முதல்  கேள்வி "வயசான டீச்சரா?!" என்பதாகத்தான் இருக்கும் ஏனென்றால் அவர்களுக்கு அனுபவம் அதிகம் ஆதலால் நம்மை வழிக்கு கொண்டுவருவதில் கில்லாடிகளாக இருப்பர். என் அதிர்ஷ்டம் எனக்கு பெரும்பாலும் புது ஆசிரியர்களே கிடைப்பார்கள். ஒரு வருடம் கண்டிப்பான ஆசிரியர் வந்து விட்டார். என் அம்மாவிற்கோ மகிழ்ச்சி ஆனால் நான் தான் லக்கி ஆயிற்றே...ஒரு மாத விடுப்பில் சென்றவர் வரவே இல்லை. நல்லா "டேக்கா" கொடுத்தே பள்ளிப் படிப்பை முடித்து விட்டேன். என் தங்கைக்கோ என்னளவிற்கு அதிர்ஷ்டம் கிடையாது. வருஷா வருஷம் அடிச்சு தொவைக்குற டீச்சர் தான். இப்பொழுது கேட்டாலும் திருக்குறளையும், நாடுகளையும்  தலைநகரங்களையும் மிகத் தெளிவாகக் கூறுவாள். எப்பிடி நியாபகம் இருக்கு?! என்று கேட்டால் "எனக்கு வந்த டீச்சர் அப்பிடி" என்று கூறுவாள். அக்காலத்தில் பெற்றோர்களின் தலையீடு பள்ளிகளில் இருந்ததே இல்லை. வருடத்தில் ஒரு முறை ஆசிரியர்களை சந்திப்பதே அதிசயம் தான்.

பெண் ஆசிரியைகளை விட ஆண் ஆசிரியர்கள் மிகவும் நகைச்சுவையாக பேசுபவர்கள் என்றும் உலக விஷயங்களையும் நாட்டு நடப்புகளையும் மாணவர்களிடம் விவாதிப்பார்கள் என்றும் என் சகோதரர்கள் சொல்லக் கேட்டதுண்டு. நர்சரிப் பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளியில் ஆறாவது சேர்ந்த என் அண்ணன் பள்ளியை விட்டு வந்ததும்  அவர் சார் சொன்னார் என்று பல காமெடிகளைக் கூறுவான். சே...நமக்கும் சார் வந்தா சூப்பரா இருக்கும் என்று நானும் என் தங்கையும் புலம்புவோம். என்ன செய்வது நாங்கள் படித்ததோ பெண்கள் பள்ளி!!!

எனது மேல்நிலை வகுப்பில் வந்த உயிரியியல் ஆசிரியையை மறக்கவே முடியாது. " துளசி வாசம் மாறுனாலும் மாறும் ஆனா இந்த தவசி வாக்கு மாற மாட்டான்" என்று விஜயகாந்த் கூறுவது போல புயலோ, மழையோ, வெள்ளமோ,பள்ளி ஆண்டு விழாவோ எதுவாக இருந்தாலும் வகுப்பிற்குள் நுழைந்தவுடன் முன்தினம் நடத்திய பாடத்திலிருந்து கேள்வி கேட்டே தீருவார். தெரியவில்லை என்றால் சிறிது நேரம் நிற்க வைத்து விட்டு "Daily Lesson படிக்காம என்ன பண்ற " என்கிற டயலாக்கை மட்டும்  தவறாமல் சொல்லி விட்டு உட்கார வைத்து விடுவார். 

எனது பத்தாவது வகுப்பு ஆசிரியை என்னைப் பற்றிய மிகச் சரியான உளவியல் அறிக்கையை (நினைச்சா படிக்கலாம்  முதல் அஞ்சு ரேங்க்குல வரலாம்...ஆனா நெனைக்குறதே இல்ல...சோம்பேறி) என்  அம்மாவிடம் கூறி அவரை ஆச்சரியப்படுத்தினார். இன்றளவும் " அந்த டீச்சர் உன்ன பத்தி ரொம்ப கரெக்டா சொன்னாங்க" என்று நினைவு  கூறுவார் என் அம்மா. 

எனது கல்லூரியில் எனக்கு அமைந்த அனைத்து பேராசிரியைகளும் எனக்கு கிடைத்த நண்பர்களே. முக நூலின் உதவியால் எங்களைக் கண்டு இன்றளவும் பெருமிதம் கொள்பவர்களும் அவர்கள் தான். ஆசிரியர் என்னும் ஒற்றைச் சொல்லில் அடங்கியிருக்கும் பொறுப்புக்களோ ஏராளம். பெற்றோர், மருத்துவர், காவலர், நீதிபதி முக்கியமாக நம்மை செம்மைப்படுத்தி உருவம் கொடுக்கும் குயவர் என Multi- tasking செய்ய ஆசிரியர்களைத் தவிர  வேறு யாராலும் இயலுமா?!  

கல்வி வியாபாரம் ஆகி விட்ட நிகழ் காலத்தில் எங்கு அதிக சம்பளமோ அங்கு வேலை என மாறுவதால் மாணவர்களைப் பற்றிய புரிதல் ஆசிரியர்களுக்கு இல்லை என்றும்  ஆசிரியர்களுடன் நெருங்கிப்  பழகும் அரிய  வாய்ப்பு  மாணவர்களுக்கும் கிடைப்பதில்லை  என்றும் பலர் கூறுகின்றனர். ஆனால்  பலரும் மதிக்கும் ஆசிரியப் பணியை அதன் மகத்துவம் உணர்ந்து செய்பவர்கள்  இன்றளவும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதில் ஐயம் ஏதுமில்லை!!!