Friday, December 2, 2022

வரும் ஆனா வராது ..இருக்கும் ஆனா இருக்காது !!!

பல மாதங்களுக்குப் பின் அவர்கள் அன்று வெளியில் சென்று உணவருத்தினார்கள். கொரோனா கால கடத்தில் ரெஸ்டாரண்டில் அமர்ந்து உண்ணும் வாய்ப்பு இல்லாது இருந்ததால் இன்று ஒரு பிடி பிடிக்க வேண்டும் என்று "Buffet System" உள்ள இடத்தை தெரிவு செய்திருந்தார்கள்.

அவரவர் தங்களுக்கு விருப்பமான பதார்த்தங்களை தட்டு நிறைய நிரப்பிக் கொண்டு தங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த மேஜைக்கு வந்து ரசித்து ருசித்து சாப்பிட்டார்கள். "இதற்கு மேல் முடியாது டா சாமி" என்ற நிலை வந்த பின் கடைசியாக ஒரு டீ குடித்து விருந்தை நிறைவு செய்து விட்டு கிளம்பினார்கள்.

வீட்டிற்கு வந்து "Freshen Up" செய்து கொள்வதற்காக குளியலறைக்குச்  சென்ற கயல் அங்கு குப்பைத்தொட்டியில் போடப்பட்டிருந்த எதையோ கையில் எடுத்தவாறு "எத்தனை தடவை சொன்னாலும் கேக்க மாட்டேங்குறா" என்று தனது மகளை கடிந்து கொண்டவாறு சத்தமாக அவளை அழைத்தாள்.

அவளின் அலறல் பேச்சைக் கேட்ட குடும்பத்தினர் "என்ன..என்ன? "  என்று பதறி  அடித்துக் கொண்டெல்லாம் வரவில்லை. மிக மெதுவாக வந்த மகளிடம் "இந்த Tube-ல இருக்குற பேஸ்டை வைத்து ஒரு வாரம் பல் தேய்க்கலாம். இத நீ தூக்கிப் போட்டுட்டே" என்று ஆரம்பித்து எவ்வாறு சிக்கனமாக இருப்பது முக்கியமாக பொருட்களை வீணடிப்பது எவ்வளவு தவறு என்று அரைத்த மாவையே திரும்ப  அரைத்தாள் கயல்.

கயல் போலத்தான் நம்மில் பலரும்..

தேய்ந்து தேய்த்து துரும்பாக இளைத்த பின்னரும் அந்த சோப்பை தூக்கிப் போட மாட்டோம். புது சோப்பில் ஒட்டி வைக்கலாமே! 

எண்ணை வரும் டப்பாவையோ ..பாலிதீன் கவரையோ தீர்ந்து விட்டது என்று குப்பையில் வீசுவதற்கு முன் அதை குறைந்த பட்சம் அரை மணி நேரமாவது எண்ணை டப்பாவிற்கு மேல் தலை கீழாக கவிழ்த்து வைக்க வேண்டும்.

பாத்திரம் துலக்கும் liquid detergent டப்பாவில் தண்ணி ஊற்றி நாளு நாள் பாத்திரம் கழுவி விடலாம்.

"என்ன விட்ருங்க Please " என்று கெஞ்சும் Tomato Ketchup தலையில் அடி அடி என்று அடித்து அந்த இரண்டு ஸ்பூன் சாஸை வெளியே எடுக்காவிட்டால் நமக்கு தூக்கம் வராது.

இதே போல் ஜாம், ஷாம்பூ டப்பா என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம். நம் கண்ணுக்கு தெரியாமல் அடைந்து கிடைக்கும் அனைத்தும் நமக்கு பொக்கிஷம் தான். 

இதுல என்ன தப்பு ? வேஸ்ட் செய்யக் கூடாது இல்ல? " என்று நீங்கள் கேட்பது புரிகிறது. 

பற்பசை விளம்பரங்களில் காண்பிக்கப்படுவது போல டூத் பிரஷ் நிறைய டூத் பேஸ்ட் வைத்துக் வீணடிக்கும் நம் குழந்தைகளை நாம் கண்டிப்பதில்லை. 

சுகாதாரம் என்ற பெயரில் (முக்கியமாக கொரோனாவிற்குப் பிறகு) மணிக்கொருதரம் சோப்பை உபயோகித்து கைகளை சுத்தம் செய்யும் குழந்தைகள் Sink-ல் கொட்டி வைக்கும் சோப்பை நாம்  கண்டு கொள்வதில்லை 

ஆனால் அதே பொருள் தீரும் சமயத்தில் நமக்கு எங்கிருந்து தான் வருகிறதோ "Selective Amnesia" போல  இந்த சிக்கனத்தின் மீதான அக்கறை?! டூத் பேஸ்ட்டை எப்பிடி அழுத்தி, சுருட்டி வெளியில் எடுப்பது என்று குழந்தைகளுக்கு  கிளாஸ் எடுத்தால் எப்படி?

மேற் சொன்ன அனைத்தும் "Middle Class Mind Set" என்று கூறி ஒதுக்கி விடலாம்  எனினும் நம்மில் பலர் அங்கிருந்து வந்தவர்கள் தானே!!! அந்நியன் விக்ரம் போல பெரும்பாலான சமயங்களில் "ரெமோவாக" குழந்தைகளை வளர்த்து விட்டு ஒரு சில விஷயங்களில் மட்டும் அம்பியாக மாறி அவர்களை குழப்பி நாமும் குழம்புகிறோம்.

மாதக்கடைசியிலும்  மனதைக்  கரைக்கும் வீடியோக்களை பார்த்து மட்டும் வருவதல்ல சிக்கனம் அது மனதில் இருக்க வேண்டும் அப்போது தான் யார் மேற்பார்வையும் இன்றி நம்மால் அதை செயல் படுத்த முடியும்.

ஆப்பிரிக்காவில் பசியால் வாடும் குழந்தைகளுக்காக கவலைப்படும் நீங்கள் ஆத்மார்த்தமாக சிக்கனத்தை கடைபிடியுங்கள் அது போதும்!!!

பின் குறிப்பு : கயல் குடும்பத்தினர் சாப்பிட்ட மேசையை சுத்தம் செய்த நபர் அவர்கள் தட்டில் மீதமிருந்த பதார்த்தங்களை வேறு வழியின்றி குப்பையில் கொட்டிக் கொண்டிருந்தார்!!!


Friday, April 22, 2022

ஆற..அமர -

கடந்த வாரத்தில் எங்கள் வீட்டிற்கு விருந்தாளிகள் வந்து ஒரு நாலு நாள் தங்கிவிட்டுச் சென்றனர். விருந்தோம்பல் நம் கலாசாரம் அல்லவா? அதனால் நன்றாகவே கவனித்துக் கொண்டதில் உடல் அசதி உச்சத்தைத் தொட்டது. நான் ஒன்றும் நளபாக சமையல் எல்லாம் செய்து அசத்தவில்லை. நான் வழக்கமாக சமைக்கும் பதார்த்தங்களோடு ஒன்றிரண்டு Extra Items அவ்வளவு தான். Guest-ம் சமையலில் உதவினார்கள் அதிலும் இரண்டு மூன்று முறை ஆர்டர் செய்து வேறு சாப்பிடோம் இருந்தும் நான் அதிகம் வேலை செய்தது  போன்ற உடல் குடைச்சல்.

காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்ததில் பாத்திரம் தேய்ப்பது பெரும் சுமையாக இருப்பதாகப் பட்டது ஆனால் வேறு வழியில்லை. இங்கு வேலைக்கு ஆள் எல்லாம் கிடைப்பதில்லை. அளவுக்கு மீறிய பாத்திரங்களை புழங்க வேண்டி வருவதால்  Dishwasher எனக்கு பிடிப்பதில்லை. யோசித்து பார்த்ததில் பத்து வருடங்களுக்கு முன் என் உறவுக்கார மாமா ஒருவர் கூறிய அறிவுரை நினைவுக்கு வந்தது. "இப்பிடி மணிக்கணக்கா நின்னுக்கிட்டே வேலை பார்த்தா உடம்பு எனத்துக்காக்கும்"?

நவீன சமையலறையில் நாம் நூறு சதவீதம் அனைத்து வேலைகளையும் அவசர கதியில் நின்று கொண்டே தான் செய்கிறோம். சமையல் கட்டிற்கு நுழைவது வரை என்ன சைமைக்கப் போகிறோம் என்பதை யோசிப்பதே கிடையாது பிறகு எங்கே அதற்கான "Pre-Preparation"ஐ செய்வது. போனை நோண்டிக் கொண்டோ கணினியை பார்த்துக் கொண்டே மணிக்கணக்காக அமர்ந்து விட்டு பிறகு Kitchen-ல் இரண்டு மணி நேரத்திற்கு மேல்  தொடர்ந்து நிற்கிறோம்.

என் அம்மா எல்லாம் என்ன சமைக்கப் போகிறோமோ அதை உரிப்பது, ஆய்வது, கிள்ளுவது என்று  முன் கூட்டியே தயார் செய்து கொள்வார். அருவாமனையில் காய் நறுக்குவதால் ஒரு பாத்திரத்தில் அரிசி களைந்த நீரை வைத்துக் கொண்டு அதில் தான் வெட்டிய காய்கறிகளைப் போடுவார். பிறகு அடுப்பை பற்ற வைத்து வேகமாக சமைத்து விடுவார்.

நாம் என்ன செய்கிறோம்? chopper, cutting board என்று மணிக்கணக்கில் நிற்பதோடு மட்டுமல்லாமல் அடுப்பிற்கும் Sink-கிற்கும் அலை பாய்கிறோம்.Atleast dinning table-ல் அமர்ந்து காய்கறி வெட்டலாமே? நேரத்தோடு நீரையும் வீணாக்குகிறோம்.

நேரம் கிடைக்கும் மாலை வேளைகளில் என் அம்மா கடுகு, பருப்பு என்று தீர்ந்து போன ஐட்டங்களை எல்லாம் Refill செய்து கொள்வார். எப்பப்பாத்தாலும் கிச்சன்ல என்னதான் பன்றியோ? என்று நாங்கள் கடிந்து கொள்வதுண்டு ஆனால் அது எவ்வளவு நல்ல பழக்கம் என்று இப்போதுதான் புரிகிறது.

அடுத்த பெரிய தவறு நாம் நம் குழந்தைகளை வேலை வாங்கி பழக்கப்படுத்துவதில்லை. கணவரிடம் உதவச் சொல்லி சண்டைக்கு நிற்கிறோமே தவிர பிள்ளைகளை சொல்வதில்லை. இம்மாதிரியான இக்கட்டான  சமயங்களில் அது  கை கொடுக்கும் என்பதை உணர்வதில்லை. நின்று கொண்டே இருப்பதால் வயது ஐம்பதை நெருங்கும் முன்னரே ஆர்த்ரிடிஸ் ஆல் அவதிப்படுகிறோம். நமக்கு கோபம், எரிச்சல் என்று சமையல் மீதே ஒரு வெறுப்பு வந்து விடுகிறது. அதை குழந்தைகள் மற்றும் கணவரிடமே காட்டுகிறோம் ஆக உடலுக்கு தேவையான Movements-ஐ கொடுக்கத் தவறினால் உடல் மட்டுமல்ல மன நலமும் பாதிக்கப்படுகிறது.

ஆய கலைகள் அறுபத்தி நாளில் சமையல் கலையும் ஒன்று அதை நடனம் போல் முழு உடலையும் இயக்கிச் செய்யலாமே? Gym-க்கு செல்ல வேண்டிய அவசியமே இராது!!!

எள்ளும் கொள்ளும் வெடிக்க வேண்டியது பாத்திரத்தில் உங்கள் முகத்தில் அல்ல!!! 

Friday, March 4, 2022

திருமணம் என்னும் திருவிழா

"சமீப காலமாக பல ஆண்கள் தங்களுக்கு பெண் கிடைப்பதில்லை என்றும் பெண் வீட்டாரின் கட்டுக்கடங்காத டிமாண்டுகளே இதற்கு காரணம்" என்றும்  சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஆண் பெண் எண்ணிக்கை விகிதாச்சாரம் சமமாக இல்லாததும் இதற்குக் காரணம் என்று ஆய்வறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன.

எனது சொந்தங்களின் வட்டத்திலும் 35, 40 வயதை நெருங்கியும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் சில ஆண்கள் திருமணமாகாமல் இருப்பதைப் பார்க்கிறேன். 

எண்பதுகளில் எல்லாம் குடும்ப பாரத்தை சுமக்கும் தமையன்களும் தமக்கைகளும் தான் தங்களுக்கென்று ஒரு திருமண வாழ்க்கையை தகுந்த காலத்தில் அமைத்துக் கொள்ள முடியாமல் தனியாகவே வாழ்ந்து முடித்தனர் ஆனால் இப்பொது அப்படிப் பட்ட பொறுப்புகள் ஏதும் இல்லாத இளைஞர்கள் சிலருக்கும்  திருமணம் எட்டா கனியாக எட்டி எட்டிப்  போகிறது.

உரிய நேரத்தில் வந்த வரன்களை எல்லாம் தட்டிக் கழித்ததால், Single Parent ஆக இருப்பவர்கள் சரியாக கவனிக்காததால் என்றெல்லாம் காரணம் கூறுகிறார்கள் ஆனால் அனைத்தும் சரியாக இருப்பவர்களுக்கும் எந்த Demand-ம் செய்யாதவர்களுக்கும் கூட  ஏனோ திருமணம் தடை படுகிறது?!

இருபது வருடங்களுக்கு முன் கூட அவரவர் தகுதிக்கேற்ப பெண் கிடைத்துக் கொண்டுதான் இருந்தது ஏன் ஊதாரித்தனமாக சுற்றிக் கொண்டிருந்தவர்களுக்குக் கூட திருமணம் ஆனது ஆனால் இப்பொது என்னவென்றால் மெடிக்கல் Rep ஆக இருந்தால் பெண் கொடுக்க மாட்டார்களாம், ஜவுளிக்கடையில் வேலை பார்த்தால் பிடிக்காதாம். என்ன Logic என்று புரியவில்லை அதனால் இந்த துறையில் இருக்கும் யாருக்குமே திருமணம் ஆகவில்லையா என்ன? அப்படியும் சொல்ல முடியாது.

பெரு நகரங்களில் வசிப்பவர்களில் சிலரும்  மேல் தட்டு வர்கத்தில் சிலரும் திருமணம் என்ற உறவில் எல்லாம் நம்பிக்கை இல்லை என்று Single ஆக இருக்கிறார்கள் அவர்களின் கதையே வேறு. "Living together" என்ற பெயரில் நேரத்திற்கேற்ற துணையை தேடிக் கொள்கின்றனர் ஆனால் திருமணம் என்னும் பந்தத்தில் மதிப்பும் மரியாதையும் வைத்து தனக்கென ஒரு வாழ்க்கைத்துணையைத் தேடிக்  காத்துக் கொண்டிருப்பவர்களின் பரிதாப நிலையை எண்ணித் தான் என் மனம் கவலை கொள்கிறது.

இவர்களில் சிலர் கைம்பெண்களுக்கு வாழ்வளிக்கின்றனர் சிலரோ "அதெல்லாம் சரிப்பட்டு வராது" என்று காத்துக் கிடக்கின்றனர். பல வருடங்களாகத் தேடித் தேடி சலித்த பின் திருமணமே வேண்டாம் என்ற நிலைக்குத் தள்ளப்படும் இவர்கள் பின் திருமணம் நடந்தாலும் சிறு சிறு காரணங்களுக்காக சகிப்புத்தன்மையை இழந்து விவகாரத்தை நாடுகின்றனர். "எட்டாக்கனியாக இருந்த திருமணம் ஏனோ கைகளுக்கு எட்டும் வேளையில் புளிக்கிறது?!"

"திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்" - சிலர் தகுந்த நேரத்தில் தங்களுக்கு கிடைத்த நிலத்தில்  நடவு செய்து, தேவையான அளவு மழை, வெயில் போன்ற சொந்தங்களும் பந்தங்களும் அமையப் பெற்று நல்ல உறவுகளை அதாவது  மகசூலை அறுவடை செய்து மகிழ்வுடன் வாழ்கின்றனர். அவர்கள் வாழ்விலும் எதிர் பாரா வெள்ளங்களும், வறட்சியும் வரத்தான் செய்கின்றன ஆனால் அவற்றை பொறுமையுடன் சாமர்த்தியதையும் கலந்து கையாண்டு இறைவனின் துணையுடன் வாழ்வில் நிம்மதி அடைகின்றனர்.

வேறு சிலரோ தாமதமாக விதைகளை விதைத்தாலும் கால நிலைக் கேற்றபடி சில பல மாற்றங்களை செய்து சுகித்து வாழ்கின்றனர்.

சிலரோ உரிய நேரத்தில் விதைத்தும் நல்ல பலனை அடையாமல் தங்கள் நிலம் தரிசு நிலமாகிப் போனதை எண்ணி கண்ணீர் வடிக்கின்றனர். 

ஆனால் விதைப்பதற்கே நிலம் கிடைக்காமல் கையில் விதையுடன்  காத்துக் கொண்டிருக்கும் இந்த ஆடவர்களின் வினாக்களுக்கு விடைதான் என்ன? 


Thursday, January 13, 2022

பழையன நிலைத்தலும் புதியன குறைத்தலும்

கடந்த வருடம் அமெரிக்காவின் வட கிழக்கு மாகாணங்களை "Ida" புயல் தாக்கியது. மழையுடன் பேய்க் காற்றும் இணைந்து கொள்ள மக்கள் போக்கிடம் இன்றி அவதியுற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். எங்கெல்லாம் வெள்ளம் வருவதற்கு வாய்ப்பேயில்லை என்று அறியப்பட்டு வந்ததோ அங்கெல்லாம் வெள்ளம் புகுந்தது. புயல் காற்றின் தாக்கத்திலிருந்து தப்பிக்க மக்கள் வீட்டின்  அடித்தளத்திற்கு அதாவது Basement-ற்கு  செல்லுமாறு பணிக்கப்பட்டனர் ஆனால் அங்கு வந்த மழை வெள்ளத்தில் நீந்தத் தெரிந்தவர்களும் வெளியே வர வழியின்றி இறந்தனர் என்ற செய்தியை தொலைக்காட்சியில் காணும் போது மனம் மிகவும் கலக்கமடைந்தது.

அமெரிக்காவில் என்று மட்டும் அல்ல உலகெங்கும் மக்கள் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டு உயிரையும் உடமைகளையும் உற்றார் உறவினர்களையும் இழந்த வண்ணம் உள்ளனர். இவிடர்களுக்கெல்லாம் காரணம் காலநிலை மாற்றம் என்று அறிவியலாளர்கள் கூறி வருவது மட்டுமல்லாமல் அதைத் தடுக்க நம் வாழ்வியல் முறைகளில் கொண்டு வரவேண்டிய மாற்றங்களையும் வலியுறுத்தி  வருகின்றனர்.

தொன்னூறுகளிலேயே பூமி வெப்பமடைதல், காற்று மாசுபடுதல் மற்றும் ஓசோனில் ஓட்டை என்றெல்லாம் பாட புத்தகத்திலும் செய்தித்தாள்களிலும் படித்திருக்கிறோம் ஆனால் அதைப்பற்றி அதற்குமேல் யோசித்ததில்லை விளைவு - இன்று கண் முன்னே தெரிகிறது.

ஒரு காலத்தில் வீட்டிற்கு ஒரு மரம் வளர்த்தால் போதும் என்று சொல்லிக்கொண்டிருந்தவர்கள் தற்போது இம்மாற்றங்களை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு வழிமுறைகளை கூறுகின்றனர்.  பின்பற்றவும்  துவங்கி விட்டனர். மேற்கத்திய நாடுகளில் மாமிசதிற்காக வளர்க்கப்படும் உயிரினங்களால் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது என்று ஆய்வறிக்கைகள் சமர்பிக்கப்படுகின்றன ஆதலால் புலால் மறுப்பு மட்டுமல்ல பால் மற்றும் பால் பொருட்களையும் அறவே தவிர்ப்பது  (Veganism) காலநிலை மாற்றத்தை சீராக்கும் என்கின்றனர்.

பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை குறைத்தல், தேவையற்ற வேளைகளில் மின் உபகரணங்களை சார்ஜில் இருந்து விடுவித்தல்,  பொருட்களை உரிய முறையில் மறு சுழற்சி செய்தல் என்று பல்வேறு உபாயங்கள் கூறப்பட்டாலும் யார் காதில் வாங்கிக் கொள்கிறார்கள்?

தினக்கூலியாக வேலை செய்யும் பாமரனுக்கும்  பெப்சி, கோக் குடித்துக் கொண்டு காரில் செல்லும் செல்வந்தர்களுக்கும் இதில் சம அளவு பங்குண்டு. வாகனங்களின் புகையால் எந்த அளவிற்கு சுற்றுச் சூழல் மாசடைகிறதோ அதே அளவிற்கு விறகடுப்பாலும், வீதியில் எரிக்கப்படும் டயராலும் காற்று மாசடைகிறது.

அனைவரும் மிக சுலபமாக பின்பற்ற கூடிய வழிமுறையாக என் கண்களுக்குப்  படுவது/தெரிவது  என்னவென்றால் கூடுமானவரை  நம் தேவைகளை நாமே குறைத்துக் கொள்வது மற்றும் பழைய வாழ்க்கை முறைக்கு திரும்புவது தான். விலை மலிவாகக் கிடைத்தாலும்  முடிந்தவரை online ஆர்டர் செய்வதைத் தவிர்த்து அருகாமையில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்கலாம். இது Carbon Prints-ஐ குறைக்க உதவுமாம். பழைய துணிகளை டேபிள் துடைக்கவும் அழுக்கு துடைக்கவும் உபயோகிக்கலாம் ஒரு முறை துடைத்து எரியும் Tissue பேப்பர்கள் எதற்கு? 

ஸ்விக்கி, Zomoto-வில் வரும் ஆர்டர்கள் பிளாஷ்டிக் பைகளில் தானே வருகின்றன? அது உடல் நலத்திற்கும் கேடு அல்லவா? தூக்கு போனியில் சாம்பார் வாங்கி வந்தவர்கள் தானே நாம்?

கடைகளுக்குச்  செல்லும் போது கையில் ஒரு துணிப்பையை எடுத்துச் செல்வது எந்த விதத்திலும் நமது கௌரவத்தை குறைத்து விடாது.

"பழையன கழிதலும் புதியன புகுதலும்" நன்றே ஆனால் வாரத்திற்கு ஒரு டிரஸ் வாங்கும் கலாச்சாரம் நம்முடையதல்லவே. ஒரு குழந்தைக்கு வாங்கிய பொருட்களை அடுத்த குழந்தைக்கும் உபயோகப்படுத்துவதில் எந்தக் குற்றமும் கிடையாது நீங்கள் Bad Parent ஆக மாட்டீர்கள்.

செருப்பு அறுத்து போனால் தைத்துப் போடலாம் தப்பில்லை. 

"நான் ஒன்னும் குப்பையிலே போடல..மறு சுழற்சி தான் செய்கிறேன்" என்று மார்தட்டிக் கொள்பவர்களே..பெருபாலான பொருட்கள் Recycle செய்யப்படாமல் மலைகளாக குவிந்து கிடக்கின்றன. வல்லரசு நாடுகள் குப்பைகளை கப்பலில் கொண்டு சென்று மூன்றாம் உலக நாடுகளில் குமிக்கின்றன என்று கூறுகிறார்கள் அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. Shakespeare இன்று இருந்திருந்தால் "உலகம் ஒரு நாடக மேடை என்பதற்கு பதிலாக..உலகம் ஒரு குப்பைக் கூடை" என்று எழுதியிருப்பாரோ என்னவோ?

நம் உடல் நலத்தை பேண Organic உணவுகளை நாடும் நாம் வரும் சந்ததியினர் நலனுக்காக சற்றேனும் பொறுப்புடன் சூழலைக் காக்க வேண்டாமா? 

அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் சுயநலமே..யோசிப்போமா???