Tuesday, August 26, 2025

Playdate WITH பிள்ளையார்!

தமிழகத்தில் முக்கியமாக மதுரை மாநகர தெருக்களில் இரண்டைக் கூட சாலையோர கோவிலில் சஞ்சாரம்  செய்யும் கணேசனின்  கண்காணிப்பின்றி உங்களால் முழுமையாகக் கடக்க முடியாது.

அரசமரம் இருக்கும் இடத்தில் எல்லாம் அவனை அமரச் செய்தார்கள் நம் முன்னோர்கள் ஆனால் நாமோ மரத்தை வெட்டிச் சாய்த்து, கணநாதனை மொட்டை வெயிலில் விட்டுவிட்டு அவனை குளிர்விக்க அருகம்புல்லை தலையில் வைத்துவிடுவதோடு மட்டுமல்லமல்  அப்பாதையை கடக்கும் போதெல்லாம் (அவசர அவசரமாக) தலையில் கொட்டிக் கொண்டு நாம் செய்த, செய்யும் பாவங்களுக்கெல்லாம் பிராயச்சித்தம் தேடுகிறோம்! 

1970-களின் தொடக்கத்தில் ஊருக்கு ஒதுக்குபுறமாக இருக்கும் தென்னந்தோப்பை தன் மகளுக்காக வாங்கினர் என் தந்தை வழி பாட்டியின் பெற்றோர்.

அரை டஜன் குழந்தைகளுடன் நெசவுத் தொழில் செய்து அவதிப்படும் மகளுக்கு அவ்விடத்தில் ஓர் ஒட்டு வீடு ஒன்றை விஸ்தாரமாகக் கட்டிக் கொடுத்தால் அனைவரும் தங்குவதற்கும் கைத்தறி அமைப்பதற்கும் வசதியாக இருக்கும் என்று நினைத்தார் பெரியவர்.

அவ்வாறே வீடும் கட்டப்பட்டது ஆனால் அத்தோப்பிற்கு நடுவே ஓர் சிறிய திட்டில் தன் தந்தையுடன் அமர்ந்திருந்தார் பிள்ளையார். அவரை அப்படியே விட்டுவிட்டு தென்னைமரங்கள் சூழ அமைந்திருக்கும் ஒற்றை வீட்டில் வாழ  ஆரம்பித்தனர் அக்குடும்பத்தினர்.

என்னுடைய பாட்டிக்கு கடவுள் பக்தியெல்லாம் கிடையாது. செய்யும் தொழிலே தெய்வம் என்ற கொள்கையை கடை பிடித்தவர் அவர்! தினமும் ஒரு குடம் நீரை கணபதி  மேல் ஊற்றி நீராட்டும் என் தாத்தாவிடம் " சேலை நெய்தால் தான் வயிற்றுக்கு கஞ்சி..நேரைத்தை வீணடிக்க வேண்டாம்" என்று கடிந்து கொள்வார் என்று என் பெற்றோர் கூற கேட்டிருக்கிறேன்.

அரசாங்கப் பணியில் இருந்த என் தந்தை அங்கே இங்கே என மாற்றலாகி கடைசியாக எனக்கு 4-5 வயது இருக்கும் போது எங்களின் சொந்த ஊரான மதுரைக்கே வந்து சேர்ந்தார் நாங்களும் அந்த பூர்வீக வீட்டிலேயே வாழத் தொடங்கினோம்.

80-களின் கால கட்டமான இவ்வேளையில் வீட்டைச் சுற்றி இருந்த  தென்னை மரங்களின் எண்ணிக்கை சற்று  குறைய ஆரம்பித்து 4 அறைகள் கொண்ட Line வீடு முளைத்திருந்தது. அங்கு சில குடும்பங்களை வாடகைக்கு அமர்த்தி இருந்தார் என் பாட்டி. அவர்களில் சிலர் பக்திமான்களாக இருக்கப்போய் பிள்ளையார் பிழைத்துக் கொண்டார்.

எங்கள் வீட்டிற்கு எதிர் புறம் காலனி உருவாகி மக்கள் கூட்டம் கணிசமாக உயர்ந்திருந்தாலும் எங்கள் வீடு அன்றும் ரோட்டிற்கு மேல் "ஒற்றை வீடு" என்ற அடையாளத்துடனே விளங்கியது.

திருமணமான புதிதில் எல்லாம் குதிரை வண்டியில் தான் தன் தாய் வீட்டிலிருந்து அங்கு வந்து போய்க் கொண்டிருந்ததாகவும் ஓரிரண்டு பேருந்துகள் மட்டுமே அந்த ரூட் (Route)-ல் இருந்ததாகவும் என் அம்மா நினைவு கூறுவார்.

ஆனால் இப்போது (90 காலகட்டம்) குறைந்தது 30 நிமிடத்திற்கு ஒரு முறையாவது அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. எங்கள் வீட்டு வாசல் தான் Bus Stop அதனால் பிள்ளையாருக்கு மவுசு சற்று கூடி விட்டிருந்தது. பேருந்து வரும் வரை காத்திருப்பவர்கள், பேருந்தில் இருந்து இறங்கியவர்கள் பய பக்தியுடன்(?!) கன்னத்தில் போட்டுக் கொண்டனர்.

தென்னை மற்றும் வேப்ப மர நிழலில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் கஜமுகனுக்கு ஊதுபத்தி சூடம் ஆரத்தி எல்லாம் கிடையாது. காலை 7 மணிக்கு பால்காரர் கால் டம்ளர் பாலை அபிசேகம் என்ற பேரில் தலையில் கவிழ்த்து விட்டு சென்று விடுவார். ரோட்டில் திரியும் பிராணிகளுக்கெல்லாம் Breakfast கிடைத்த மகிழ்ச்சி. 8 மணி வாக்கில் ஈ எறும்பு மொய்க்கும் பிள்ளையாரை  குளிப்பாட்டுவார் காம்பவுண்டு வீட்டில் இருக்கும் ஓர் நபர். 

ஓர் அகல் விளக்கும் இருக்கும். அவ்வழியே செல்லும் பூக்காரி சிறிது கதம்பத்தை தலையின் மேல் வைக்க என்று எடுப்பார் கைப்பிள்ளை போல் இருந்த அவருக்கு விநாயகர் சதுர்த்தி நாளில் மட்டுமே கொழுக்கட்டை பிரசாதம் படைத்து வழிபடப்படுவார். பின்னாளில் சிவன் ராத்திரி அன்று பொங்கல் வைக்கும் வைபவம் தொடங்கி தொடர்ந்தது.

வெயில் மண்டையை பிளக்கும் மதிய வேளையில் கல் பிள்ளையாரின் குளுமையை நாடி அதன் அருகில் நாய் குடும்பம் குழந்தை குட்டியுடன் தஞ்சமடையும்.  இது போதாதென்று தங்கள் வீட்டு நாய்க்கு பிறந்த குட்டியை எல்லாம் மஞ்சள் பையில் வைத்து பிள்ளையார் அருகில் வைத்து விட்டு சென்று விடுவார்கள்!

எங்களுக்கு 7-8 வயதிருக்கும். கோடை விடுமுறை நாட்களில் மிகவும் போரடித்தால் வாளி நிறைய Water தேங்காய் நார் என்று ஐந்து கரத்தானுக்கு "Spa Day" தான். "போதும் போதும் வாங்க..பிள்ளையார் பளிங்கு சிலையா மாறப்போறாரு" என்று எங்கள் பாட்டி கூப்பிடும் வரை விடமாட்டோம்.

ஊரிலிருந்து வரும் எங்கள் அத்தை குழந்தைகளுடன் கோவிலைச் சுற்றி ஓடிப் பிடித்து விளையாடுவது, கண்ணாமூச்சி விளையாட்டு, சாமிக்கு முன் சத்தியம் வாங்குவது, நாங்கள் சமைத்த களி மண் சாப்பாட்டை படைப்பது, சுற்றி இருக்கும் இலை தழை பூக்களை மாலையாகக்  கட்டிப் போடுவது    என்று எங்களின் சேட்டைகளுக்கெல்லாம் ஒரே சாட்சியாக இருந்தவர் இன்றுவரை நாங்கள் அவரிடம் பகிர்ந்து கொண்ட ரகசியங்களை பத்திரமாக கட்டிக் காத்துக் கொண்டிருக்கிறார்.

தொன்னூறுகளில் மரத்தடி பிள்ளையார் எல்லாம் பால் குடிக்க எங்கள் பிள்ளையாரிடமும் மக்கள் தூக்குபோனியில் பாலுடன் நின்றனர்.

2000-த்தின் துவக்கத்தில் தெருவை ஆக்கிரமிக்கும் சிறு கோவில்கள் பல இடிக்கப்பட்டன ஆனால் எங்கள் பிள்ளையார் தப்பினார் அதன் பின் எங்கள் வீட்டிற்கு வெளியே இருக்கும் சாலை தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட ஆபத்து வந்தது எங்கள் வீட்டிற்கும் பிள்ளையாருக்கும் ஆனால் Just Miss-ல் இரண்டும் எஸ்கேப் ஆனது.

நாங்கள் கல்லூரி படிப்பை முடிக்கும் வரையில் அதே வீட்டில் தான் இருந்தோம். வாடகைக்காரர்கள் எல்லாம் அப்போது இல்லை. மினி பஸ் அராஜகம் அதிகரிக்க பிள்ளையார் தூசியில் மூழ்கி இருந்தார். சிறிது தொலைவில் இருந்து ஒரு அக்கா காலையில்  வந்து கோவிலை சுத்தம் செய்து விளக்கேற்றி வைத்து விட்டு செல்வார்.

நாங்கள் எப்போதாவது தான் கும்பிடுவோம் எங்கள் தோழனாகவே இருந்தவனை தெய்வமாக பார்க்கத் தோன்றவில்லையா என்னவோ?!

எங்கள் குடும்பத்தில் யாருக்கும் இப்போது அது வசிப்பிடமாக இல்லை. எங்கள் சித்தப்பா மட்டுமே தொழில் நிமித்தம் அவ்வீட்டை பாதுகாத்து வருகிறார். கடந்த 5-6 வருடங்களாக  மாத சதுர்த்தி மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறதாம்.

ஷேர் ஆட்டோ, டவுன் பஸ், டாக்ஸி, டெம்போ வேன் என்று மக்கள் பயணிக்கும் வாகனங்கள் மாறி இருக்கிறதே ஒழிய அந்த ஸ்டாப்பில் இறங்கும் மக்கள் அவருக்கு Attendance போடுவது மாறவில்லை.

கிட்டத்தட்ட 50 வருடங்களுக்குப் பின் இந்த 2025-ம் ஆண்டில் அப்பகுதி மக்கள் எல்லாம் ஒன்றிணைந்து கோவிலை புனர் அமைத்திருக்கின்றனர். 

"Make Over" செய்யப்பட்டு ஜம்மென்றிருக்கும்  ஆனைமுகத்தினன் எங்களுள் புதைந்து கிடந்த பற்பல நினைவுகளை பசுமையாக்கிவிட்டு அதே இடத்தில்  அமர்ந்திருக்கிறார்!