Wednesday, July 15, 2020

உபசரிப்பு

எண்பது தொண்ணூறுகளில் பிறந்த பலருக்கும் தாத்தா பாட்டி வீடு என்பது விடுமுறைகளில் மட்டும் வந்து  செல்லும் இடமாக இருந்ததில்லை மாறாக வார இறுதிகளில் ஏன் எங்களைப் போன்றவர்களுக்கு தினமும் புழங்கும் இடமாகவும்  இருந்து வந்துள்ளது. அம்மா வழியில் எங்களுக்கு இரண்டு பாட்டி வீடு இருந்தது என்றே சொல்லலாம் என்ன?! குழப்பமாக இருக்கிறதா?! எங்களுடைய பெரியம்மா (அம்மாவின் அக்கா ) வீட்டைத்தான் அவ்வாறு குறிப்பிட்டேன். என்னுடைய பெரியம்மா அவரின் தாய் மாமாவையே திருமணம் செய்ததால் எங்களுடைய பாட்டி தன்னுடைய தம்பி வீடுதானே என்ற உரிமையில் அங்கு அடிக்கடி செல்வதும் தங்குவதும் உண்டு. அதே உரிமையை தன்னுடைய பிற மகள்களுக்கும் பேரக்குழந்தைகளுக்கும் விட்டுச் சென்றாள் என் பாட்டி.

நாங்கள் புறநகர் பகுதியில் குடியிருந்ததால் பள்ளி முடிந்ததும் பாட்டி வீடு அல்லது பெரியம்மா வீட்டிற்கு சென்று விடுவோம் சில நேரம் அங்கிருந்தே பள்ளிக்கு செல்வோம். எங்களுடைய மற்ற கசின்களும் இரண்டு மூன்று சந்து தள்ளி குடியிருந்ததால் அவர்களுடன் ஒன்று கூடி  விளையாடுவதற்கு ஏற்ற இடமாக அமைந்தது பெரியம்மா வீடு.

எங்களுடைய பெரியப்பா "தி ராயல் அச்சகம்" என்ற பெயர் கொண்ட அச்சகத்தில் மிக இள வயதில் இருந்து பணியாற்றத் துவங்கி அவரின் தந்தைக்குப் பின் அதே பெயரில் அதை வெற்றிகரமாக  நடத்தி வந்தார். கீழே அச்சகம் மேலே வீடு. அதிகம் பேசாதவர். நாங்கள் வாசலில் நுழையும் போது தன்னுடைய இருக்கையில் இருந்து தலையைத் தூக்கிப் பார்த்து உள்ளே செல்லலாம் என்பது போல் லேசாகத் தலை அசைப்பார் அவ்வளவுதான் அவருடைய "Communication". "சாப்பாடு வேளைகளில்", "ஏதாவது பெரியம்மாவிடம் சொல்லவேண்டும்", "குதிக்க வேண்டாம்" என்று எங்களைக் கண்டிக்க" என்று  மட்டுமே மேலே வருவார். பணியாளர்களிடம் பேசும் போதும் அச்சகத்தில் நாங்கள் ஓடி விளையாடினால் சிறிது கடிந்து கொள்ளும்போதும்  என வெகு சில தருணங்களில் மட்டும் தான்  நாங்கள் அவரின் குரலைக் கேட்டிருக்கிறோம்.

அவராக எங்களிடம் பேச மாட்டாரே தவிர நாங்கள் அவரிடம் பேசுவோம். "வயிறு வலிக்கிறது என்றால் அவரிடம் தண்ணீரில் கலந்து குடிக்கும் "Eno" மருந்து கேட்க,  எழுதுவதற்கு பேப்பர் கேட்டு, எங்கள் நோட்டு புத்தகங்களை Binding செய்யச் சொல்லி" என்று நாங்கள் சரளமாகப் பேசுவோம்.  

நாங்கள் என்று மட்டுமல்ல...யார் எப்பொழுது எந்த வேளையில் வந்தாலும் சாப்பிடலாம். தங்கலாம். எங்களுக்கு தினமும் தின்பண்டம் வாங்குவதற்கு "Pocket Money" கொடுப்பார். பத்து பதினைந்து பேர் வரிசையாக நிற்போம். சில்லறை ரெடியாக வைத்திருப்பார். 10 பைசாவில் தொடங்கிய Allowance 25 பைசா வரை உயர்ந்தது பின்னர் நாங்கள் வளர்ந்துவிட்டோம். பணியாளர்களுக்கு வாங்கும் பஜ்ஜி, போண்டா எல்லாம்  எங்களுக்கும் வரும். கேட்காமலேயே!!! ஒரு பட்டாளத்துடன்  நைட் ஷோ சினிமாவிற்கும் சென்றிருக்கிறோம் அவருடன்.

ஒன்றாவது வகுப்பில் தொடங்கி கல்லாரி முடியும் வரை நாங்கள் அங்கு சென்று கொண்டு தான் இருந்தோம். அச்சகம் நன்றாக இயங்கிக் கொண்டிருந்த நாட்களிலும் சரி தொழில் நுட்ப வளர்ச்சியால் தளரத் துவங்கிய காலத்திலும் சரி எங்களுக்கென்னவோ வரவேற்பு, உபசரிப்பு  ஒரே மாதிரியாகத்தான் இருந்து வந்துள்ளது. ஒரு கணத்திலும் எங்களை அழையா விருந்தாளியாக அவர் நினைத்ததில்லை.

தொழில் சிறிது சிறிதாக நலியத் துவங்கியதும் பொருளாதார ரீதியான பாதிப்பு அவரைத் தாக்க, அதையும் தைரியத்துடனேயே எதிர் கொண்டார். 
" பணத்தை தனக்கென்று சேர்த்து வைக்காம கஷ்டபற்றாரே, பசங்க கல்யாணத்துக்கு நிறைய செலவு செய்துட்டார் ...பொழைக்காத தெரியாத மனுஷர்" போன்ற பேச்சுக்களையெல்லாம் அவர் சட்டை செய்ததில்லை. தனது அச்சு இயந்திரங்களை ஒன்றொன்றாக விற்ற பின் சிறிதும் கவுரவம் பார்க்காமல் தொழில்நுட்ப உதவியுடன் இயங்கும் ஓர் அச்சகத்தில் வேலைக்கு சேர்ந்தார். "கரிசனத்துடன் வாழ்ந்த அவருக்கு கணக்கு செய்து வாழ தெரியவில்லை தான்" கலிகாலத்தில் இதை விட  வேறு பெரிய தவறு இருக்கிறதா என்ன?!

நாங்கள் அனைவரும் வளர்ந்து Life-ல் செட்டில் ஆன  பிறகு அவரை ஓய்வு எடுத்துக் கொள்ளச் சொல்லி எவ்வளவோ சொல்லியும் " சும்மா என்னால இருக்க முடியாது" என்று மறுத்து விட்டார். 18 வயதிலிருந்து 80 சொச்சம் வயதுவரை ஓயாது உழைத்த அவர் கொரோனவால் இரண்டு மாதத்திற்கு மேல் வீட்டில் முடக்கப்பட்டார். கட்டாய ஒய்வை நிரந்தர ஓய்வாக மாற்றிக் கொண்டுவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும் (யாரும் எதிர் பாரா வண்ணம் மாரடைப்பால்  இறைவனடி சேர்ந்தார்). தொழிலாளியாக ஆரம்பித்த அவர் வாழ்க்கையை தொழிலாளியாகவே முடித்தார். 

அவர் வீட்டில் உண்டு, உறங்கி வாழ்ந்த நாங்கள்.... மூச்சுக்கு முன்னூறு தடவை "பெரியம்மா வீடு...பெரியம்மா வீடு" என்று கூறி வந்த எங்கள் மனது   முதல் முறையாக பெரியப்பா வீடு என்று நினைக்கத் தோன்றுகிறது. பெரியப்பா அனுமதியின்றி எங்கு வரும் நாங்கள் கொண்டாடும் பெரியம்மா வீடு?! அன்பை வெளிப்படுத்தத் தான் எத்தனை வழிகள்!!! அவர் தேர்ந்தெடுத்த வழி "உபசரிப்பு".

அவருக்கு நம் உதவி  தேவை என்று உணர்ந்த சமயங்களில் எல்லாம் அவர் கூப்பிடாமலேயே (இதுவரை அவராக  எதுவும் கேட்டது கிடையாது) அங்கு சென்று பல வழிகளிலும் உதவிய நாங்கள் இனியும் இணைந்து நிற்போம். பல்வேறு தேசங்களில்  வாழும் பதினைந்திற்கும் மேற்பட்ட எங்கள் 
"Cousin"-களை இணைக்கும் ஒரே புள்ளி "பெரியப்பா வீடு".

அவர் வாழ்வில் சேர்த்து வைத்த சொத்து  என்ன என்று புரிந்து கொள்ள சிலரால் மட்டுமே முடியும்!!! அதில் ஒருவராக நீங்கள் இருப்பீரென்றால் மகிழ்ச்சி!!!


Sunday, May 10, 2020

மூன்றாம் உலகம்

ஒரு கையில் டம்ளரும் மறு கையில் இருந்த பாத்திரத்தில்  சுடச் சுட ஆவி பறக்கும் தேனீருமாக சமயலறையில் இருந்து வெளி வந்த சீதாம்மா கையிலிருந்தவற்றை ஹாலில் இருந்த கட்டிலில் வைத்துவிட்டு  "ராம கிருஷ்ணா " என்று சொல்லிக்கொண்டே சற்று சிரமப்பட்டு   தரையில் அமர்ந்து காலை நீட்டிக்கொண்டார். ஏதோ கருப்பு வெள்ளை படம் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்தது . தேனீரை அருந்தியவாரு கட்டிலிலிருந்த ரிமோட்டை கையிலெடுக்க  சேனல்  தமிழாக்க ஆன்மீகத் தொடருக்கு மாறியது. மாலை வியாபாரிகளின் குரல் தெருவில் ஒலிக்கத் தொடங்கி இருந்தது.

நிமிடத்திற்கு ஒரு தரம் கடிகாரத்தை பார்த்துக் கொண்டிருந்த சீதாம்மா கைப்பேசி அலற ஆரம்பித்தவுடன் திருப்தியான முகத்துடன் டீவியை "Mute "ல் போட்டு விட்டு "ராஜா " என்று சிரித்த முகத்துடன் பேச ஆரம்பித்தார். வெளிநாட்டில் இருக்கும் அவரின் மகன் காலை தேநீரை அருந்தியவாறு தினமும் போன் செய்வது வழக்கம். "நாளைக்கு உனக்கு பிறந்த நாளுப்பா " என்று கூறியவரிடம் "காலையில உனக்கு கால் செஞ்சிறேன் " என்று மகன் கூற வழக்கமான குசல விசாரிப்புகளுக்குப் பின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

சீதாம்மாவை பொறுத்தவரை பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது மிக முக்கியம். தனது முப்பத்தி ஐந்தாவது வயதில் கணவனை இழந்து இரு மகன்களுடன் தனியாக நின்றவளுக்கு புகுந்த இடத்தில் அவ்வளவு ஆதரவு இல்லை. பிறந்த இடத்திலும் ஒரு சில மாதங்களுக்கு மேல் இருக்க இயலாத சூழலில்...அலைந்து திரிந்து  அதிஷ்டவசமாக விதவைகள் கோட்டாவில் சத்துணவு மேற்பார்வையாளராக   அரசு வேலை கிடைக்க ஒரு ஒண்டு குடித்தன வீட்டிற்கு குடிபெயர்ந்தார். தனது இரு மகன்களும் வேலைக்கு சென்று நல்ல நிலைக்கு வரும் வரை  பாதுகாப்பு கருதி காம்பவுண்ட் வீட்டிலேயே வாழ்ந்தார். எவர் ஆதரவையும் அவர் நாடவில்லை.

அந்த காலகட்டத்தில் எல்லாம் பிறந்த நாள் கொண்டாடுவது என்பது பணம் படைத்தவர்கள் செய்வது என்ற எண்ணம் பரவலாக இருந்தது எனினும் சீதாம்மா தனது மகன்களின் பிறந்த நாளிற்கு புது உடுப்பு வாங்கி கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அத்தோடு நில்லாமல் அன்று முழுவதும் அவர்களுக்கு பிடித்த உணவு, பலகாரம் என்று அசத்துவார். குக்கரில் கேக் செய்து பக்கத்து குடித்தனக்காரர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்துவார்.

தனது மருமகளிடம் "அவங்க அப்பா இருக்கும் போது கூட இதெல்லாம் எதுக்குன்னு கேப்பாரு...ஆனா நான் தான் வருஷா வருஷம் பிறந்தநாளை "Grand "ஆ பண்ணுவேன். காலையில எழுந்ததுமே காம்பௌண்ட்காரங்க எல்லாரும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லுவாங்க....எப்பிடி எல்லாருக்கும் தெரிஞ்சுதுன்னு இவன் ஆச்சரியமா பாப்பான். நான் தான்   காலையில கோலம்போடும்போதே வாசல்ல "happy Birthday "ன்னு இவன் பேரை  எழுதிருவேன்ல" என்று உற்சாகமாகக்  கூறுவாள்.

"அவ்வளவு சின்ன வீட்ல அவன் பிரெண்ட்ஸ் ஆறு ஏழு பேர் வந்து உக்காந்திருப்பாங்க....எல்லாரும் வெஜிடேபிள் பிரியாணி சாப்பிடுவாங்க ....நைட்டு சாம்பார் சட்னியோட முறு முறு தோசைன்னு அன்னைக்கு தான் எங்க வீட்ல தீபாவளி மாதிரி இருக்கும். அப்ப எல்லாம் வசதி குறைவாவும் சந்தோசம் அதிகமாவும் இருந்துச்சு " என்று மருமகளிடம் அங்கலாய்ப்பாள் சீதாம்மா.

ஓயாமல் ஒலித்த அலைபேசியின் மூலம் நிகழ்காலம்அழைக்க, அவசர அவசரமாக வந்து அதை  அமைதிப்படுத்திய சீதாம்மா ராஜா  "Happy Birthday-ப்பா" என்று உற்சாகக் குரலில்  கூறினாள். தொலைபேசி பேரனின் கைகளுக்கு மாறியது. "உங்க அப்பாக்கு என்ன கிப்ட் கொடுத்தே? " என்று கேட்க "நான் கார்ட் செஞ்சு குடுத்தேன்....சாய்ங்காலம் கேக் வாங்குவோம் " என்று கூறியவனிடம் தான் ஒருகாலத்தில் எப்படியெல்லாம் பிறந்தநாளை கொண்டாடினோம் என்று கூற  அவன் மலங்க மலங்க விழித்து விட்டு "நீங்க எங்கப்பாவுக்கு என்ன கிப்ட் வாங்கி குடுப்பீங்க?! பார்ட்டி எங்க வைப்பீங்க?! " என்று கேட்டான்.

அவனிடம் இருந்து தொலைபேசியை வாங்கிய மருமகள் நடைமுறையில் பிறந்தநாள் எவ்வாறெல்லாம் கொண்டாடப்படுகிறது என்பதைக் கூற "ஆமா ஆமா நீங்க போட்டோ அனுப்புறீங்களே பாத்துருக்கேன் " என்று கூறினாள். தனது மகனிடமும் "நாம ஊருக்கு போயிருக்கும் போது அப்பா அவங்க பழைய வீடுன்னு கூட்டிட்டு போனாரே அதைப் பத்தி தான் பாட்டி சொல்றாங்க " என்று விளக்கினாள்.

பாட்டி கூறுவதை பேரனும்....பேரன் கூறுவதை பாட்டியும் கற்பனை செய்து கொள்ள அவர்களுக்கு இடையே ஓர் மூன்றாம் உலகம் உருவாகி இருந்தது. அது எதிர்பார்ப்பில்லாத அன்பினால்  மட்டுமே நிறைந்தது. நேரில் சந்தித்து கொள்ளும் போது அந்நியோன்யத்தை ஏற்படுத்திக் கொடுப்பது.

இன்றைய கால கட்டத்தில் நம்மில் பலரும் வெவ்வேறு உலகத்தில் ஓடிக் கொண்டிருக்க "உங்களுக்குப் புரியாது " என்று இறந்த காலத்தை இளைய தலைமுறையிடமும் நிகழ் காலத்தை முதிய தலைமுறையிடமும் விளக்கத் தவறினோமேயானால், அவர்களுக்கிடையே பாலமாக செயல்படாமல் இருந்தோமேயானால் அவர்களின்  மூன்றாம் உலகம் உருவாகமலேயே போய்விடும்!!!

Thursday, April 2, 2020

பல தலைக் கொள்ளி எறும்பு

அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய என் கணவர் கொரோனா வைரஸால் அமெரிக்காவில் முதல் இறப்பு ஏற்பட்டு விட்டது என்று பரபரப்பாக டீவியை கிளிக்கியவர் இன்னும் முடித்த பாடில்லை மூன்று வாரம் முடிந்து விட்டது. "இது ரொம்ப மோசமாகப் போகும் போல....இப்பிடியே போனா பங்குச் சந்தை சரிவு ஏற்பட்டு பொருளாதார சீர்குலைவு ஏற்படுவது உறுதி " என்று முதல் வாரத்தில் அங்கலாய்த்த அவரை "என்னோமோ நாலஞ்சு கம்பெனி வச்சுருக்கிற மாதிரி பொலம்புறீங்களே?!" என்று கலாய்த்து கடுப்பேற்றினேன்.

அவருடைய நண்பர்களிடம் இதைப்பற்றி புலம்பி முடித்த அவர் அடுத்த இரண்டு நாட்களில் தனது கவலையை மளிகை  மற்றும் வீட்டிற்குத் தேவையான பொருட்கள்  வாங்குவதில் திருப்பினார். கடைகளிலிருந்து பொருட்களை கண்ணா பின்னாவென்று அள்ளிச் செல்பவர்களை கடுமையாக விமர்ச்சித்தாலும் "ஏய் இன்னும் ரெண்டு அரிசி மூட்டை வாங்கிட்டு வந்துறவா?!" என்று என்னைக் குழப்பினார். நடுநடுவே சமூக வலைத்தளங்களில் வலம் வரும் செய்திகளை அலசி ஆராய்ந்து பொய் செய்தி பரப்புவர்களையும் Social Distancing பின்பற்றாதவர்களையும்  திட்டித் தீர்த்தார்.

கொரோனா எங்கள் பகுதியிலும் பிரவேசிக்க பள்ளிகளை இழுத்து மூடிவிட்டார்கள். அலறி அடித்துக் கொண்டு அலுவலகத்திற்குச் சென்று லேப்டாப் ஒன்றை வாங்கிக் கொண்டு வந்தவர் "எப்போ புட்டுக்குமோ?! என்று இருந்த வீட்டுக் கணினியை சரி செய்து நிம்மதி அடைந்தார். இத்தோடு வெளியில் செல்வதையும் நாங்கள் முழுவதுமாக நிறுத்தி விட்டோம்.

இப்போது காய்கறிகள் வாங்கி வந்து  பத்து நாட்கள் ஆகி விட்டது. "இன்னும் எத்தனை நாளுக்கு வெங்காயம் வரும்?! எத்தனை நாளுக்கு தக்காளி வரும்?!" என்ற கணக்கெடுப்பில் இறங்கியவர் நண்பர்கள், அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் என பலரிடம் கலந்தாலோசித்து ஆன்லைனில் ஆர்டர் செய்து பெருமூச்சு விட்டார். வீட்டிற்கு வந்த பொருட்களை கிருமி நாசினியைக் கொண்டு துடைத்து கிருமிகள் இருக்காதே என்று பயந்து பயந்து எடுத்து வைப்பதற்குள் அப்பப்பா !!!

இப்போது கொரோனா மிக வேகமாகப் பரவி உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் வேகமாகப் பரவ "இப்பிடியே போனா ரொம்பக் கஷ்டம்" என்று கண்களை உருட்டியவர் ஊரிலிருந்த அம்மாவை எங்கும் வெளியே செல்லாதே என்று எச்சரித்தார். Gym மூடிவிட்டதால் உடலுழைப்பே இல்லாமலாகிவிட்டது என்று பெருமூச்செறிந்தவர் வீட்டிலேயே யோகா செய்தாலும் சாப்பாட்டின் அளவைக் குறைத்துக் கொண்டார். "எதுக்கு இப்பிடி பண்றீங்க?!" என்ற என்னிடம் "அரிசி ஒருவாரம் அதிகமா வரும் இல்லையா?! " என்று கடுப்பேத்தினார்.

இப்போது வீட்டில் அடைப்பட்டு இருபது நாட்கள் கடந்து விட்ட நிலையில் அதிரடி தள்ளுபடி அளித்த "Streaming Service"-களை வாங்கியவர் அதைப் பார்த்து டென்ஷனை குறைத்துக் கொண்டாரா என்றால் இல்லை மாறாக YouTube-ல் வீட்டிலேயே எப்பிடி சுவையான பரோட்டா செய்வது?! பிரியாணி செய்வது?! போன்ற விடீயோக்களை பார்த்து விட்டு "பக்கத்தில இருக்கிற ரெஸ்டாரண்ட் டெலிவரி பண்றங்களாம்....20% தள்ளுபடி வேறு, Local Business- ஐ சப்போர்ட் பண்ணணுமில்ல?! " என்று பகல் கனவு காண்கிறார். இப்பொழுதெல்லாம் வெளியில் வாக்கிங் செல்பவர்களை சன்னல் வழியாகப் பார்த்து  நாங்கள் இருவருமாகச் சேர்ந்துபொறாமையில் பொரிந்து தள்ளுகிறோம்.

நோய்த் தோற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ,பொருளாதாரச் சரிவு, உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ?! என்ற கவலை, வீட்டிலிருந்த படியே வேலை செய்வதால் குறித்த நேரத்தில் வேலையிலிருந்து வெளிவர இயலாமை, வீட்டுச் சிறையில் அடைபட்டிருப்பது போன்ற உணர்வு, சமுக வலைத்தளங்களின் தாக்கம் முக்கியமாக கடையில் வாங்கி சாப்பிட முடியவில்லை என்கிற ஏக்கம் (?!)  அனைத்தும் சேர்ந்து அழுத்த இரவில் ஆழ்ந்த உறக்கம் வருவதே  அரிதானது .

இப்போதே போதும் போதும் என்று தோன்ற ...தொலைக்காட்சிகளிலோ  அடுத்து வரும் மூன்று வாரங்களில் நிலைமை இன்னும் மோசமாகும் என்று கூறுவதைக் கேட்ட அவர் "அப்ப இவ்வளவு நாள் வெளிய போயிருக்கலாமா?!....நாமதான் தேவையில்லாம வீட்டிலேயே அடைஞ்சு இருந்துட்டோமா?!" என்று வடிவேலு மாடுலேஷனில் வசனம் பேசவில்லை என்றாலும் அதைத்தான் நினைத்துக் கொண்டு இருக்கிறார் என்பது உறுதி.  "அப்பவே சொன்னேன் இன்னும் ரெண்டு Rice Bag வாங்கிட்டு வரேன்னு... கேட்டியா?!  என்று என்னைக் கடிந்து கொண்டவர் இப்பொது  எந்தெந்த கடைகளில் டோர் டெலிவரி செய்கிறார்கள் என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்.

பாரபட்சம் இல்லாமல் அனைவரையும் "நல்லா வச்சு செய்யுது" இந்த கொரோனா!!!

Monday, February 3, 2020

அப்பாவின் கோபம்

விசாலமான அந்த அறையிலிருந்த கடிகாரம் ஆறேகாலைத் தாண்டி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. சட்னி அரைப்பதற்காக  வெங்காயம் நறுக்கிக் கொண்டிருந்த அம்மா " லைட்ட போட்டுட்டு கதவு, சன்னலை சாத்தி வைங்க...கொசு வந்து அடைஞ்சுரும் " என்று பொதுவாகச் சொன்னாள். அதே அறையின் இடது மூலையில் படித்துக் கொண்டும் வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டும் இருந்த நான்கு உருப்பிடிக்களில் ஒருவன் அம்மா இட்ட வேலையை நிறைவேற்ற, நிரஞ்சனாவும் நிவேதாவும் தங்கள் புத்தகங்களில் ஆழ்ந்து வாசித்துக் கொண்டிருந்தனர். சோர்ந்த முகத்துடன் அமர்ந்திருந்த நிவின்  "அப்பா இன்னும் கோவமாத்தான் இருப்பாரா?! காலையில மாதிரி இப்போ சட்னியை கீழ தள்ளி விட்டுட்டார்னா என்ன செய்றது?!" என்று கவலையுடன் கேட்டான். அப்பிடியெல்லாம் செய்ய மாட்டார் என்று நிரஞ்சனா சமாதானம் கூறிக்கொண்டிருக்க "காலையில சாம்பார் ரசம் எல்லாம் இருந்துச்சு அதையெல்லாம் விட்டுட்டு தயிரைத்  தான தள்ளி விட்டார்...இல்லனா சாதத்துல ஊத்திக்க எதுவும் இருக்காதுல்ல?! அப்பிடியிருக்கும் போது எப்பிடி சட்னியை தள்ளி விடுவாரு?!" என்று நிவேதா கூறிய பதிலில் நிவின்  சற்று முகம் மலர்ந்தான்.

என்ன?! மேலே சொன்னதை எல்லாம்  வச்சிட்டு அவர்களின் அப்பா ஒரு "கொடுமைக்காரன்" என்றும் "பாலச்சந்தர் படத்துல வர்ற "Sadist " மாதிரி போல" என்றும் "அலுவகமே கதி என்று இருப்பவர்" என்றெல்லாம் உங்கள் கற்பனைக் குதிரையை அவிழ்த்து விடாதீர்கள். கடிவாளம் போட்டு கட்டி வைத்துவிட்டு மேலே வாசியுங்கள்.

ஐந்து குழந்தைகள் இருக்கும் இந்த வீட்டில் அம்மாவுக்கு வீட்டு வேலைகள் அனைத்திலும் ஒத்தாசையாக இருப்பவர் தான் அப்பா. குழந்தைகளை வாடா போடா என்று கூட கூப்பிடாதவர். நிரஞ்சனா தான் பார்த்த படங்களில் வரும் காமெடிகளை கூற அதை ரசிப்பவர். நிவேதாவுடம் புதிதாக வெளியாயிருக்கும் திரைப்பட பாடல்களைப் பற்றி விவாதிப்பவர். அவர்களின் சித்தி, மாமா பிள்ளைகள் எல்லாம் "உங்க அப்பா மாதிரி எங்களுக்கும் ஒரு ஜாலியான அப்பா இருந்திருந்தா சூப்பரா இருக்கும் " என்று பொறாமைப் படக்கூடிய இடத்தில் இருப்பவர். ஆனால் சில மாதங்களுக்கு ஒருமுறை உப்புச் சப்பில்லாத உப்புமா விஷயத்தில் அம்மாவிடம் கோபித்துக் கொண்டு மலை ஏறி விடுவார். அப்புறம் ஒரு மூன்று தினத்திற்கு "இவரா அவரு ?!" என்ற ரேஞ்சில் இருப்பர். வேதாளம் தானாக முருங்கை மரம் விட்டு இறங்கும் வரை காத்திருக்க வேண்டியதுதான். வேறு வழி?!

வழக்கம் போல் இன்று காலையிலும் கோபம் வந்து அம்மாவைக் கடிந்து கொண்டார். தன்னுடைய ஆத்திரத்தை தயிரிடம் காட்டி விட்டு அலுவலகம் சென்றவர் திரும்பி வரும் நேரம் நெருங்க நெருங்க அவ்வீட்டின் "கடைக்குட்டி சிங்கம்" நிவினிற்கு கவலை ஏறிக்கொண்டு இருந்தது. "அம்மாகிட்ட கோபம்னா ஏன் எல்லாரையும் திட்டுறாரு" என்று தன்னுடைய சந்தேகங்களை சகோதரிகளிடம் கேட்டுக்கொண்டிருக்க அவர்களோ "இதெல்லாம் சகஜம் "என்பதுபோல அவரவர்  வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். 

யாரிடமும் எதுவும் பேசாமலும் ஓரிரு வார்த்தைகளில் கட்டளைகளை பிறப்பித்தும் இரவு உணவை முடித்த அப்பா வழக்கத்திற்கு மாறாக  எந்த உதவியும் செய்யாமல் (Strike!!!) முன் அறை தொலைக்காட்சியில்  செய்திகள் பார்க்கச் சென்று விட்டார். பாத்திரங்களை சகோதரிகள் கழுவ, அம்மா வீட்டைப் பெருக்கினாள். முதல் தம்பி சாப்பிட்ட இடத்தைத் துடைக்க, சட்டினி தப்பிய சந்தோஷத்தில் ஒரு ஓரமாக கண்கள் செருக தூங்கத் தொடங்கி விட்டிருந்தான் நிவின். தான் இந்த வீட்டிலேயே இல்லாதது போல இருந்தான் டியூஷனிலிருந்து திரும்பி வந்த அண்ணன். 

அடுத்த நாளும் நிலவரம் அதே போல் தொடர்ந்தது. தன்னுடைய "கெத்தை " Maintain செய்ய அப்பா சற்று கடினமாக முயற்சித்துக் கொண்டிருந்தார். கோபம் குறைந்தமையால் முகம் சாந்தம் கொள்ளத்துவங்கியிருந்தது. எல்லா சேனல்களிலும் சொன்ன செய்தியையே சொல்லிக்கொண்டிருக்க வேறு வழியில்லாமல் பார்த்துக்கொண்டிருந்தவர்  யாரும் அருகில் இல்லாதது கண்டு காமெடி சேனலுக்கு மாறிய அப்பா சிரிப்பை அடக்க படாத பாடு படவேண்டி இருந்தது. அப்பாவின் கோபம் குறைந்தது தெரிந்தாலும் குழந்தைகள் அடக்கியே வாசித்தனர்.

இருபது வருடங்களுக்கு முன் யாரும் எதையும் வெளிப்படையாக  விவாதிப்பதோ, பெரிதாக Scene போடுவதோ  இல்லை ஆதலால் அப்பாவின் கோபத்தைப் பற்றி யாரும் அம்மாவிடம் கேட்கவில்லை கடைக்குட்டியைத் தவிர!!!. அம்மாவும் எதுவும் நடவாததுபோல் இருந்தாள். சகோதரிகள் தங்கள் தந்தையின் இம்மறுபக்கத்தை சித்தி மாமா பெண்களிடம் கூற  யாரும் அவர்களை நம்புவதற்கு தயாராக இல்லை.

மூன்றாம் நாள் வேதாளம் மெதுவாக தரை  இறங்கிவரத் தொடங்கி இருந்தது. அப்பாவாலும் அதற்குமேல் தனிமையில் இருக்க முடியவில்லை. நிலைமையை நன்கு உணர்ந்திருந்த சகோதரிகள் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த அப்பாவிடம் "போதும் பா...எதுக்கு இவ்வளவு கஷ்டப்படறீங்க?! நல்லா தான் சிரிங்களேன்" என்று கூற "அப்பப்ப நான் யாருன்னு காட்டலன்னா உங்களுக்கெல்லாம் பயம் விட்டுப் போயிருமே " என்று பொய்யாகக்  கடிந்து கொண்டவர்  வீட்டைத் துடைப்பதற்கு கைலியை தூக்கிக் கட்டிக்கொண்டிருந்தார்.

நிவினின் முகம் முழுவதும் மலர்ந்தது...

பின்குறிப்பு : இக்கதையில் குறிப்பிட்ட அனைத்து மகன்களும் இப்போது அப்பாவாகிவிட்டனர், அவர்களில் எத்தனை மேல் தங்கள்  தந்தையின் வழித்தடத்தை பின்பற்றி மலை ஏறுகிறார்களோ?! காலம் மாறிப்போச்சுங்க என்கிறீர்களா?! அதுவும் சரிதான்.

Saturday, May 11, 2019

பெரியம்மா

அலறிய அலாரத்தை அமைதிப்படுத்திய கதிர் அலைபேசியினுள் நுழைந்தான். வழக்கம்போல் வந்திருந்த மானாவாரியான மின்னஞ்சல்களை படுத்தவாறே ஆர்வமின்றி அலசி  முடித்தவன் குறுந்தகவல்களுக்குத் தாவினான். தம்பியிடமிருந்து வந்திருந்த தகவலைப் பார்த்த மறு  நொடி மயிர்கூச்செரிய எழுந்தமர்ந்தவனின் மனதை    இனம் புரியாத எடை அழுத்த...    ஆயிரம் மடங்கு கனத்த இதயத்துடன் கட்டிலை விட்டிறங்கினான்.

காலைக்கடன்களை முடித்துக்கொண்டு வந்தவன் புரண்டுகொண்டிருந்த மனைவி மித்ராவை "ஹே...Mommy" என்று குரல்கொடுத்தெழுப்பினான். அவள் குளியலறைப் பக்கம் செல்ல கதிர் சமயலறைக்கு வந்தான். கொதித்துக் கொண்டிருந்த தேநீரை வடிகட்டியவாறு Landline-ல் இருந்து அம்மாவை அழைத்தான். மறுமுனையில்  ராஜா என்றழைத்த அம்மா " திலோம்மா போயிட்டாப்பா" என்றாள் குரல் தழுதழுக்க. "ம்ம்ம்...தம்பி மெசேஜ் பண்ணியிருந்தான்" என்று பதிலளித்த கதிர் லேப்டாப் டேபிளிலில் அமர்ந்தவாறு  "எப்போ?! எப்பிடி?! யாரு காரியத்துக்கு போறாங்க?!" போன்ற சம்பிரதாய கேள்விகளை கேட்டவன்  தன் சோகத்தை வெளியிட விரும்பாதவனாய் இணைப்பைத் துண்டித்து விட்டு... தம்பியை அழைத்து சில நொடிகள் பேசினான்.

தொலைபேசி உரையாடல்களை கேட்டவாறு  சமையலறையில்  குழந்தைகளுக்கு லஞ்ச் பேக் செய்து கொண்டிருந்த மித்ராவிடம் " பெரியம்மா காலமாயிட்டாங்க" என்றான். "ம்ம்..தெரிஞ்சிருச்சு" என்றவளிடம் "அவங்க தங்கியிருந்த முதியோர் இல்லத்துலயே கடைசி காரியத்தை பண்ணப்போறாங்களாம்...அரக்க பரக்க போனாலும் முகத்த பாக்கமுடியாதுன்றனால தம்பி போகல...சித்தி போனா அவங்ககூட அம்மா போகலாம்னு நினைச்சுருக்காங்க ஆனா அவங்களுக்கும் உடம்புக்கு முடியாததால போகல" என்றவன் வேறெதுவும் பேசாமல் குளிக்கக் கிளம்பினான்.

சென்ற வருடம் விடுமுறைக்கு சென்ற போது குடும்பத்துடன் தனது பெரியம்மாவை பார்த்துவிட்டு வந்திருந்தான் கதிர். குடும்ப சூழல் காரணமாக திருமணம் செய்து கொள்ளாத பெரியம்மா ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவள். சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தவள் முதுமை காரணமாக கடந்த ஐந்து வருடங்களாக ஒரே இடத்தில் அமர்ந்துவிட்டாள். பல்வேறு உடல் உபாதைகளால் அலைக்கழிக்கப்படவளை அவள் தங்கியிருந்த இல்லத்தில் சென்று பார்த்த மறுகணம் அவனை அறியாமலேயே கதிரின் கண்கள் குளமாகின. 

தனது ஏழாவது வயதிலேயே தந்தையை பறி கொடுத்த கதிர் சில வருடங்கள் பாட்டி வீட்டில் தங்க நேர்ந்தது. அப்போதெல்லாம் பெரியம்மாவின் வருமானத்தில் தான் குடும்பமே ஓடியது எனலாம். பின் கதிரின் அம்மாவிற்கு வேலை கிடைத்து தனியாக வந்திருந்தாலும் பெரியம்மாவின் உதவி அவ்வப்போது கிடைத்துக்கொண்டுதான் இருந்தது. விடுமுறை சமயங்களில் கதிர் பக்கத்துக்கு ஊரில் வேலை பார்த்துக்  கொண்டிருந்த பெரியம்மா வீட்டில் சென்று தங்கியதுண்டு. அவளை அம்மா என்றுதான் அழைப்பான்.  அமெரிக்காவில் வேலை பார்த்த கதிர்  திருமணத்திற்குப் பிறகு பெரியம்மாவை  சில மாதங்கள் தன்னோடு அழைத்து வந்திருக்கிறான். அனைத்து இடங்களையும் சுற்றிக்காட்டி அகமகிழ்ந்திருக்கிறான். 

ஆறுவருடங்களில் உருத்தெரியாமல் மாறிவிட்டிருந்த பெரியம்மாவை முதியோர் இல்லத்தில் பார்த்தவனால் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. "ஒண்ணுமில்லப்பா...நான் நல்லா இருக்கேன்..வயசாயிருச்சுல்ல சாப்பாடு கம்மியாயிருச்சு அதான் இளச்சிட்டேன்" என்றவளின் சுருங்கிய  கைகளை தன் கைகளில் வைத்துக்கொண்டவன் " நடக்க முடியிறதில்லயா?!" என்று அருகிலிருந்த சக்கர நாற்காலியை பார்த்தவாறு கேட்டான் கதிர். அவர்கள் பேசட்டும் என்று  குழந்தைகளை வெளியில் வைத்து வேடிக்கை காட்டிக்கொண்டிருந்த மித்ரா  உள்ளே வர குடும்பமாக பெரியம்மாவிடம் ஆசி வாங்கிக் கொண்டனர்.   இல்லத்து பணியாளர்களின் கைகைகளில் பணத்தைத் திணித்தவன் " நீங்க செய்யுற உதவிக்கு எவ்வளவு குடுத்தாலும் தகும்...எங்க அம்மாவை நல்லா பாத்துக்குங்க" என்று உளம் உருக விடைபெற்றுக்கொண்டான். 

குளித்து முடித்து அலுவலக உடையில் வந்தவன் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த தனது  பதினோரு வயது மகளிடம் விஷயத்தைக் கூற...அவள்  "Ohh ...that is sad " என்ற சுருக்கமான  பதிலை அளித்தாள். "சே...என்ன வாழ்கை...இருக்குற வரைக்கும் கூட  வச்சு பாத்துக்க  முடியல...இறந்ததுக்கப்புறமும் போயி பாக்கமுடியல" எங்களுக்காக எங்க பெரிம்மா எவ்வளவோ பண்ணியிருக்காங்க" என்று அங்கலாய்த்தவனிடம் "அதனால தானே ஊருக்கு போகும் போது பாத்துட்டு வந்தோம்...வெளிநாட்ல  இருக்குறனால இப்பிடி Feel பண்றீங்க " என்று சொல்ல நினைத்த மித்ரா எதுவும் கூறாமல் கதிரை பார்த்துக்கொண்டு நின்றாள். அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு புலம்பியவன் Breakfast சாப்பிடாமலேயே கிளம்பிவிட்டான்.

குழந்தைகளை பள்ளிப் பேருந்தில் ஏற்றிவிட்டு வந்த மித்ராவிற்கு அவளின் பெரியம்மா ஞாபகம் வந்தது. கதிரின் பெரியம்மாவிற்கு நேரெதிரான வாழ்க்கை வாழ்ந்தவள்...வாழ்ந்துகொண்டிருப்பவள். மித்ரா மட்டுமல்ல அவளின் கசின்களில் (Cousins) பாதிபேர் பெரியம்மா வீட்டில் வளர்த்தவர்களே. இருபது வருடங்களுக்கு முன் பெரியம்மா வீடு  ஜே ..ஜே என்று இருக்கும். கோபமோ சலிப்போ அன்றி  எப்போது சென்றாலும்  சாப்பிடு என்று அன்போடு உபசரிப்பாள் பெரியம்மா. மொட்டைமாடியில் விளையாடுவதற்கு இடம், செப்புப் பாத்திரம் என்று பெரியம்மா வீட்டில் சுதந்திரத்திற்கு அளவே கிடையாது. தனது குழந்தைகள் வளர்ந்து வாலிபத்தை எட்டிவிட்ட போதிலும் தனது உடன்பிறந்தோரின் குழந்தைகளால் அன்றாடம் சூழப்பட்டவளாக இருந்தவள் பெரியம்மா. மித்ரா கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயத்திலும் அடிக்கடி பெரியம்மா வீட்டிற்கு செல்வதுண்டு. வயதிற்கும் காலத்திற்கும் ஏற்ற தக்க ஆலோசனைகளை  வழங்குவதில் அவருக்கு நிகர் அவரே. திருமணத்திற்கு பிறகும் ஊருக்குச் செல்லும் ஒவ்வொரு சமயமும் பெரியம்மாவை பார்க்காமல் வருவதில்லை.

கதிரின் பெரியம்மா பெயர் திலோத்தமா. மித்ராவின் பெரியம்மா பெயர் மேனகா. என்ன ஒரு  ஒற்றுமை?! என்று நினைத்தவளின் முகத்தில் அவளை அறியாமலேயே புன்னகை குடிகொள்ள பெரியம்மாவிடம் பேச தொலைபேசியின்  எண்களை வேகமாக அழுத்தினாள் மித்ரா.

மாலை அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய கதிரின் முகத்தில் சோகம் வெகுவாகக் குறைந்திருந்தது. "மித்ரா...எங்க பக்கத்து வீட்டு பொண்ணு...என் தங்கச்சின்னு சொல்லுவேனே...அவளுக்கு பெண் குழந்தை பொறந்திருக்காம்" என்று கூறியவனிடம் "Ohh ...good " என்று பதிலளித்த மித்ரா "வாழ்கை ஒரு வட்டம் என்பது சரிதானோ?! " என்று நினைத்துக்கொண்டாள்.

பின்குறிப்பு : தாயாகும் வாய்ப்பை இழந்து, உலகத்தின் பார்வையில் அன்னையாக அறியப்படாது இருந்தாலும்,     தாயுள்ளத்தோடு வாழ்ந்துகொண்டிருக்கும் அனைத்து  அன்பு நெஞ்சங்களுக்குச்     சமர்ப்பணம்.


Thursday, April 25, 2019

நிழலும் நிஜமும்

நான் அமெரிக்காவிற்கு வந்து இரண்டு நாட்களே ஆகியிருந்தது அப்போது. அவ்விரு  நாட்களும் வீட்டிற்கு வேண்டிய பொருட்களை வாங்க கடைகளுக்குச்  செல்வது அது இது என்று ஓடிவிட்டது. முதல் முறையாக தனியாக வெளிநாட்டில் (வீட்டில் தான் !!!) இருக்க வேண்டும். "என்ன 
சமாளிச்சுருவல்ல?! " என் அன்புக் கணவர்  கவலையோடு கேட்டார். "இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல " என்பது போல் பார்த்த என்னிடம் " நிறைய DVD இருக்கு...laptop-ல போட்டுப்   பாரு...மத்தியானம் தூங்கிடாத...ஜெட்லாக் லேசுல போகாது " என்று எச்சரித்து விட்டுச்  சென்றார். 

இந்தியாவிலிருந்து அப்போது தான் வந்திருந்ததால், பழக்க தோஷத்தில் அதிகாலையில் எழுந்து அனைத்து சமையல் வேலைகளையும்  முடித்து, Lunch-ம் கட்டிக் கொடுத்தாகிவிட்டது. மாலை ஐந்து மணி வரை என்ன செய்வது?! இப்போது இருப்பது போல் பதிமூன்று  வருடங்களுக்கு முன் அதி வேக Internet இல்லை...இருந்து தான் என்ன செய்ய?! No Whats app, you tube !!! வீட்டிற்கு பேசலாம் என்றால் "காலிங் கார்ட் " வாங்க வேண்டும் அதுவும் மணிக்கணக்கில் எல்லாம் பேச முடியாது. வேறு வழியில்லாமல் ஒரு DVD-யை மடிக்கணினியில் சுழல விட்டேன். ஒரு அரைமணி நேரத்திற்கு மேல் என்னால் பார்க்கவே முடியவில்லை. பல கதாப்பாத்திரங்கள் மாறி மாறி பேசிக்கொண்டே இருந்தன. விறு விறுப்பாக எதுவும் இல்லை. பாதி புரியவில்லை என்பது வேறு விஷயம். (என்னுடைய ஆங்கில ஞானம் அந்த அளவிற்கு இருந்தது. Accent அதுக்கு மேல்.)

அந்த கால கட்டத்தில் நான் பார்த்த ஆங்கிலப் படங்கள் எல்லாம் தமிழில் dub செய்யப்பட்டு K-TV மற்றும் விஜய் டிவியில் போடப்படும் (அதிரடித்திருவிழா)  படங்கள் தான் இல்லையென்றால் லோக்கல் கேபிள் டிவியில் வரும் பழைய பேய்ப் படங்கள். எனக்குத் தெரிந்த பெரும்பலான ஆங்கிலப்படங்களில் குறைந்த கதாபாத்திரங்களே வரும். பாஷை புரியலைன்னாலும் படம் புரியும் அளவிற்கு விறுவிறுப்பாக இருக்கும் எல்லாரும் ஓடிக்கிட்டே இருப்பாங்க...ஒன்னு பேய் துரத்தும் இல்லன்னா டைனோசர், பாம்பு, shark-ன்னு மிருகங்கள் துரத்தும் அதுவும் இல்லையா Time Bomb- யை பையில வச்சுக்கிட்டு நின்னா வெடிச்சுரும்னு ஓடுவாங்க இதுக்கெல்லாம் மேல உலகம் அழியப் போகுதுன்னு ஓடுவாங்க...மற்றொரு வகை நம்பவே முடியாத மாய மந்திரப்படங்கள் மற்றும் Animation Movies. இதுக்கு வடிவேலு வசனம் பேசும் ஜாக்கி ஜான் படங்களே பரவாயில்லை என்று தோன்றும்.

"ஹாலிவுட் படம்னு சொல்றாங்க...ஒரே ட்ரெஸ்ஸ தான் படம்பூரா போட்டுட்டு சுத்துறாங்க"..."உலகமே அழிஞ்சதுக்கப்புறம் இவன் மட்டும் பொழச்சு என்ன செய்யப்போறான்?!..." அதான் கண்ணை தொறந்து பார்த்தா பேய் தெரியுதுல்ல?! இழுத்து போர்த்திட்டு தூங்க வேண்டியது தானே?!" என்றெல்லாம் எகத்தாளமாய் கலாய்த்த எனக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என்று என்னையே நொந்து கொண்டு கணிணினியை ஆஃப் செய்து விட்டேன்.

யாரோ என்னை பிடித்து உலுக்குவது போல கனவு. கண் திறந்ததும் தான் தெரிந்தது கனவில்லை...நிஜம் என்று. "என்னா நல்லா தூங்கிட்டியா?!" என்று எதிரில் நின்றிருந்தார் என்னை மணமுடித்த மணாளன். நடு ராத்திரியில் முழித்துக்கொண்டது போல கண் எரிந்தது. ஜெட்லாக் effect நன்கு புரிந்தது. "இதுக்குதான் படம் பாருன்னு சொன்னேன்" என்றவரிடம் "அதை பாத்தனாலதான் இப்பிடி" என்று சொல்ல என் History  தெரியதனால் அவருக்கு நான் சொல்வது புரியவில்லை.

அடுத்து வந்த நாட்களில் எனக்குப்  பல வகையான (Genre) ஆங்கிலப் படங்களை அறிமுகப்படுத்தினார் என்னைக்  கைப்பிடித்த  கணவர். வெளியே செல்ல  கார் இல்லை என்பதாலும் வீட்டில் கேபிள் வாங்கி விட்டதாலும்    சினிமா பார்ப்பதே முழு நேர வேலையாக மாறிவிட்டது. Local Library-ல் கிடைக்கும் DVD-களையும் நாங்கள் விட்டு வைக்கவில்லை.   "Closed Caption " என்று ஒரு "Option " இருப்பது பெரும் வசதியாக இருந்தது எனக்கு. சிறிது நாட்களிலேயே ஆங்கிலப் படங்களைப் பற்றிய எனது அபிப்பிராயம் தலைகீழாக மாறியது. "எமோஷனல், ட்ராமா, செண்டிமெண்ட், காமெடி  " என்று நம் தாய் மொழியில் இருக்கும் அனைத்தும் ஆங்கிலப்படங்களில் இருந்தது இதைத்தவிர "Terminal ", "Cast Away ", "The Beautiful Mind ", "Matrix " போன்ற வித்தியாசமான திரைப்படங்கள் என்னை வியக்க வைத்தன.

மேலும்  வரலாற்றுப் படங்கள்  நான் வாழ வந்திருக்கும் அந்நிய நாட்டின் வரலாற்றையும் எனக்குச் சொல்லிக் கொடுத்து உதவின. புகழ் பெற்ற நபர்களின் வாழ்க்கையைக் காட்டும் Biographical  படங்களும் தரமிக்கவையாக இருந்தன. பொதுவாக நடிகர்கள்  அளவோடும்   எதார்த்தமாகவும்  நடிப்பதாகத் தோன்றியது அதற்குக்  காரணம் இந்தியரல்லாதவர் நடிப்பதாலும் நம் நிஜ வாழ்க்கையோடு ஒப்பிடாமல் திரைப்படமாக மட்டுமே அதை நான் பார்த்ததாலும் இருக்கலாம். 

 "Rom.Com" என்று சொல்லக்கூடிய நகைச்சுவைக் கலந்த காதல் படங்கள் எனது "Favorite " ஆக மாறியது. Caption இல்லாமலேயே படங்கள் புரிய ஆரம்பித்தன. அடுத்து வந்த வருடங்களில் மகள், மகன் என்று குழந்தைகளின் வரவால் திரைப்படங்களைப் பார்ப்பது குறைந்திருந்தாலும் கிடைக்கும் வாய்ப்புக்களை நாங்களிருவரும் தவறவிட்டதில்லை.

என் கணவர் முன்பிருந்தே சூப்பர் ஹீரோப் படங்களைப் விரும்பிப்  பார்ப்பவர் தான் என்றாலும் "Star Wars", "Harry Potter", "Avengers " "X -Men" போன்ற Franchise படங்களின் வலையில் நான் சிக்கிக் கொண்டதோ    சமீபத்தில் தான். எத்தனை முறை  பார்த்தாலும் நினைவில் நிற்காத திரைக்கதையும் வித்தியாசமான கதாப்பாத்திரங்களும்   நம்மை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும். இம்மாதிரியான திரைப்படங்களின் கதையை ஒற்றை வரியில் கூறிவிடலாமென்றாலும்  " Scene by Scene" சுவாரஸ்யங்களை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பின்றி ரசிக்கலாம். குழந்தைகளோடு அமர்ந்து பார்க்க உகந்ததாக  இருப்பதால் Netflix துணையோடு   இப்போதெல்லாம் எங்கள் வீட்டில் இப்படங்கள் தான் அதிகமாக ஓடுகின்றன.

தகவல் தொடர்புத் துறையின் அசூர வளர்ச்சியால் உலகமே நம் கைக்குள் அடங்கிவிட்ட நிலையில் இன்று வெளிநாடுகளுக்கு வரும் இளம் மனைவியர் பலர் எவ்வித வேறுபாடும், இன்னல்களும்  இன்றி வாழ்வதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தாலும் அவர்கள் "மெகா சீரியல் "  மற்றும் "ரியாலிட்டி ஷோக்கள்"-ல் மூழ்கிக்  கொண்டிருப்பதைப் பார்க்க ஏமாற்றமாகவே இருக்கிறது. ஆங்கிலப் படங்களையும் Sitcom-களையும்  பொழுதுபோக்கிற்காக மட்டுமன்றி அவர்களில் மொழி, வாழ்க்கைமுறை, கலாசாரங்களை அறிந்து கொள்ளும் ஊடகமாகவும் (Medium) பார்க்கலாமே !!! 

பின் குறிப்பு : Avengers - End Game ஏப்ரல் 26, 2019-ம் நாள் உலகெங்கும் திரையிடப்படுகிறது. 

Thursday, February 14, 2019

காதலுடன்...

அன்று முதல் முறையாக நந்தினியை பெண்பார்க்க வந்திருந்தனர். மாப்பிள்ளை கதிர் சிரித்த முகத்துடன்  சரளமாகப்  பேசினார். நந்தினியும் கேட்கப்படும் கேள்விகளுக்கு எதார்த்தமான பதிலைக் கூறிக்கொண்டும் மாற்று கேள்விகளை உறவினர்கள் கேட்க... அதை கவனித்துக்கொண்டும் இருந்தாள். அவ்வப்போது இருவரின் கண்களும் ஒன்றை ஒன்று தொட்டுச் சென்றன.

"என்ன பையனை பிடிச்சிருக்கா?!" என்ற கேள்வி மாப்பிள்ளை வீட்டார் கிளம்பிய சில மணித்துளிகளில் நந்தினியிடம் கேட்கப்பட..."ம்ம்ம்...முதல்ல அவங்க என்ன சொல்றாங்கன்னு பார்க்கலாம்" என்று பொத்தாம் பொதுவாய் கூறி வைத்தாள்  நந்தினி. " மாப்பிளை நல்லா பேசினாரு...நம்ம நந்தினியை அவருக்கு  கட்டாயமா பிடிச்சிருக்கும்" என்று உறவினர்கள் நந்தினியின் அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தனர்.

அடுத்த நாளே நந்தினியின் அலுவலகத்திற்கு அழைப்பு வந்தது. "மாப்பிளை வீட்ல இருந்து ஓகேன்னு சொல்லிட்டாங்க...உனக்கு போன் பண்ணி மாப்பிளை பேசுவார்னு சொன்னாங்க...பாத்து பேசும்மா" என்று நந்தினியின் அப்பா தன் படபடப்பை மறைத்துக் கொண்டு தகவல் தெரிவித்தார். அடுத்த ஒருமணி நேரத்தில் கதிர் நந்தினியை போனில் அழைத்தான். "ம்...சொல்லுங்க" என்று யாரோ ஒருவரிடம் பேசுவதுபோல் பேசிய நந்தினியிடம் "என்ன உங்களுக்கு பிடிச்சிருக்கு தானே?!" என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு கதிர் கேட்க " இல்லன்னா இந்நேரம் உங்க கூட பேசிட்டிருப்பேனா?!" என்று கேசுவலாக இருப்பது போல் பேசி தன் பதட்டத்தை மறைத்துக்கொண்டாள் நந்தினி.

 "உன்கிட்ட செல் போன் இல்லையா?!" என்று கேட்ட கதிருக்கு  "நீங்க வாங்கி குடுத்தாதான் உண்டு " என்ற பதில் வந்தது . இரண்டொருநாளில் புது நம்பருடன் செல் போன் கொடுக்கும் சாக்கில் தன் நண்பருடன்  வீட்டிற்கு வந்த கதிர் சிரிப்பை அடக்க பெரு முயற்சி செய்தான். தன் முகத்தில் எந்த வித உணர்ச்சியையும் காட்டாத நந்தினி  "செல் போன் குடுக்கதான வந்திங்க...குடுங்க என்று வாங்கிக்கொண்டு உள்ளே சென்று மறைந்தாள்.

அடுத்த ஒரு வாரத்தில் திருமண தேதி குறிக்கப்பட்டது. இரண்டே சந்திப்பிற்கு பின்  கதிரும் அலுவல் விஷயமாக அமெரிக்காவிற்கு செல்ல நேர்ந்தது. "டெய்லி போன் பண்ணுவேன்" என்று கூறிச் சென்ற கதிரிடமிருந்து தினமும் தவறாமல் அழைப்பு வந்தது. அவனுக்கு காலை இவளுக்கு இரவு என்று "Time Zone " வேறு சோதித்தது... இருந்தும் கதிர் பேசத்தவறவில்லை. நந்தினி பட்டும் படாமலும் ...தொட்டும் தொடாமலும்...இதுதான் நான் என்னும் பாணியிலேயே பேசி வந்தாள். "ஏன் இப்பிடி பேசுற?!" என்ற கேட்ட கதிரிடம் "நாம எப்பிடி இருப்போமோ அதுமாதிரியே மொத இருந்து இருந்துறணும்...கல்யாணத்துக்கப்புறம் நீங்க ஏமாறக்கூடாதுல்ல" என்று பதிலளித்தாள். கதிர் எதையும் சீரியசாக என்னும் மனநிலையில் அப்போது இல்லை. பேசும் பாதிநேரம் சிரித்தே அவளை சமாளிதான்.

இவ்வாறாக இருவரின்  பொழுதுகளும்  நகர்ந்தன. தோழியிடம் பேசுவது போல் நந்தினி கதிரிடம் பேச... காதலியிடம் பேசுவதைப் போல் பேச முயன்று கொண்டிருந்தான் கதிர். அவ்வப்போது கருத்து வேறுபாடுகளும் மனஸ்தாபங்களும் எட்டிப் பார்த்துச்  சென்றன. யார் முதலில் பேசுவது/சமாதானப்படுத்துவது?! என்ற கேள்விக்கே இடமில்லை. கதிர் அமெரிக்காவில் இருந்ததால் அவன்தான் அழைத்ததாக வேண்டும் என்ற நிலைமை இருந்தது. ஆதலால் ஈகோ பிரச்சனை தலைதூக்காமல் இருந்தது. இருவரின் நிறைகுறைகளை ஓரளவிற்கு  அறிந்து கொண்டனர்.

ஆறு மாதங்கள் கடந்தோடியது. திருமணத்திற்கு நான்கே நாட்கள் இருக்கும் பட்சத்தில் இந்தியா வந்து சேர்ந்தான் கதிர். திருமண வேலைகள், உறவினர்கள், நண்பர்கள் , ஜெட்லேக், கைப்பேசி இன்மை  போன்ற  சூழலில் சிக்கித் சிதறுண்டான். வழக்கம் போல் நந்தினியிடம் பேச நேரம் கிடைக்கவில்லை. இரண்டு நாட்கள் பொறுமையாக இருந்த நந்தினி...கதிருக்கு போன் செய்தாள். "என்ன பேசவே மாட்ரீங்க?! நேத்து  எவ்வளவு நேரம்  வெயிட் பண்ணிட்டிருந்தேன் தெரியுமா?!" என்று கோபத்தோடு கேட்க அடுத்த முனையில் கதிரின் மனம் மகிழ்ச்சியில் மலர்ந்தது. அவனை அறியாமலேயே முகம் சிரிப்பில் மூழ்கியது.தன் மேல் இருக்கும்  காதலை முதல் முறையாக  நந்தினி வெளிப்படுத்துகிறாள். அதுவும் ஊடல் மூலமாக என்று துள்ளிக்குதித்தான்  "நான் திட்றேன்...நீங்க சிரிக்குறீங்களா?! என்ற நந்தினியிடம் " அப்பிடியில்ல நந்தினி..." என்று சமாதான பேச்சு வார்தையைத் தொடங்கினான் கதிர். வசதியாக நாற்காலியில் அமர்ந்து Landline போனை எடுத்து மடியில் வைத்துக்கொண்டே...

 எந்த பெண்ணும் தன்னுடைய பொறுப்பு, பொறுமை, வயது அனைத்தையும் மறந்து தன் காதலரிடமும் கணவரிடமும்  அடம் பிடிக்கும் குழந்தையா கவே  மாற விரும்புவாள்... காதலுடன் ...எத்துனை வருடங்கள் கடந்தாலும்....

பதிமூன்று வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகும் கதிர் நந்தினியின் உரையாடல்களில் இருக்கும் காதல் எள்ளளவும் குறையவில்லை. கதிர் இன்றும் சிரிப்பை அடக்க முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறான்!!!