Thursday, April 25, 2019

நிழலும் நிஜமும்

நான் அமெரிக்காவிற்கு வந்து இரண்டு நாட்களே ஆகியிருந்தது அப்போது. அவ்விரு  நாட்களும் வீட்டிற்கு வேண்டிய பொருட்களை வாங்க கடைகளுக்குச்  செல்வது அது இது என்று ஓடிவிட்டது. முதல் முறையாக தனியாக வெளிநாட்டில் (வீட்டில் தான் !!!) இருக்க வேண்டும். "என்ன 
சமாளிச்சுருவல்ல?! " என் அன்புக் கணவர்  கவலையோடு கேட்டார். "இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல " என்பது போல் பார்த்த என்னிடம் " நிறைய DVD இருக்கு...laptop-ல போட்டுப்   பாரு...மத்தியானம் தூங்கிடாத...ஜெட்லாக் லேசுல போகாது " என்று எச்சரித்து விட்டுச்  சென்றார். 

இந்தியாவிலிருந்து அப்போது தான் வந்திருந்ததால், பழக்க தோஷத்தில் அதிகாலையில் எழுந்து அனைத்து சமையல் வேலைகளையும்  முடித்து, Lunch-ம் கட்டிக் கொடுத்தாகிவிட்டது. மாலை ஐந்து மணி வரை என்ன செய்வது?! இப்போது இருப்பது போல் பதிமூன்று  வருடங்களுக்கு முன் அதி வேக Internet இல்லை...இருந்து தான் என்ன செய்ய?! No Whats app, you tube !!! வீட்டிற்கு பேசலாம் என்றால் "காலிங் கார்ட் " வாங்க வேண்டும் அதுவும் மணிக்கணக்கில் எல்லாம் பேச முடியாது. வேறு வழியில்லாமல் ஒரு DVD-யை மடிக்கணினியில் சுழல விட்டேன். ஒரு அரைமணி நேரத்திற்கு மேல் என்னால் பார்க்கவே முடியவில்லை. பல கதாப்பாத்திரங்கள் மாறி மாறி பேசிக்கொண்டே இருந்தன. விறு விறுப்பாக எதுவும் இல்லை. பாதி புரியவில்லை என்பது வேறு விஷயம். (என்னுடைய ஆங்கில ஞானம் அந்த அளவிற்கு இருந்தது. Accent அதுக்கு மேல்.)

அந்த கால கட்டத்தில் நான் பார்த்த ஆங்கிலப் படங்கள் எல்லாம் தமிழில் dub செய்யப்பட்டு K-TV மற்றும் விஜய் டிவியில் போடப்படும் (அதிரடித்திருவிழா)  படங்கள் தான் இல்லையென்றால் லோக்கல் கேபிள் டிவியில் வரும் பழைய பேய்ப் படங்கள். எனக்குத் தெரிந்த பெரும்பலான ஆங்கிலப்படங்களில் குறைந்த கதாபாத்திரங்களே வரும். பாஷை புரியலைன்னாலும் படம் புரியும் அளவிற்கு விறுவிறுப்பாக இருக்கும் எல்லாரும் ஓடிக்கிட்டே இருப்பாங்க...ஒன்னு பேய் துரத்தும் இல்லன்னா டைனோசர், பாம்பு, shark-ன்னு மிருகங்கள் துரத்தும் அதுவும் இல்லையா Time Bomb- யை பையில வச்சுக்கிட்டு நின்னா வெடிச்சுரும்னு ஓடுவாங்க இதுக்கெல்லாம் மேல உலகம் அழியப் போகுதுன்னு ஓடுவாங்க...மற்றொரு வகை நம்பவே முடியாத மாய மந்திரப்படங்கள் மற்றும் Animation Movies. இதுக்கு வடிவேலு வசனம் பேசும் ஜாக்கி ஜான் படங்களே பரவாயில்லை என்று தோன்றும்.

"ஹாலிவுட் படம்னு சொல்றாங்க...ஒரே ட்ரெஸ்ஸ தான் படம்பூரா போட்டுட்டு சுத்துறாங்க"..."உலகமே அழிஞ்சதுக்கப்புறம் இவன் மட்டும் பொழச்சு என்ன செய்யப்போறான்?!..." அதான் கண்ணை தொறந்து பார்த்தா பேய் தெரியுதுல்ல?! இழுத்து போர்த்திட்டு தூங்க வேண்டியது தானே?!" என்றெல்லாம் எகத்தாளமாய் கலாய்த்த எனக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என்று என்னையே நொந்து கொண்டு கணிணினியை ஆஃப் செய்து விட்டேன்.

யாரோ என்னை பிடித்து உலுக்குவது போல கனவு. கண் திறந்ததும் தான் தெரிந்தது கனவில்லை...நிஜம் என்று. "என்னா நல்லா தூங்கிட்டியா?!" என்று எதிரில் நின்றிருந்தார் என்னை மணமுடித்த மணாளன். நடு ராத்திரியில் முழித்துக்கொண்டது போல கண் எரிந்தது. ஜெட்லாக் effect நன்கு புரிந்தது. "இதுக்குதான் படம் பாருன்னு சொன்னேன்" என்றவரிடம் "அதை பாத்தனாலதான் இப்பிடி" என்று சொல்ல என் History  தெரியதனால் அவருக்கு நான் சொல்வது புரியவில்லை.

அடுத்து வந்த நாட்களில் எனக்குப்  பல வகையான (Genre) ஆங்கிலப் படங்களை அறிமுகப்படுத்தினார் என்னைக்  கைப்பிடித்த  கணவர். வெளியே செல்ல  கார் இல்லை என்பதாலும் வீட்டில் கேபிள் வாங்கி விட்டதாலும்    சினிமா பார்ப்பதே முழு நேர வேலையாக மாறிவிட்டது. Local Library-ல் கிடைக்கும் DVD-களையும் நாங்கள் விட்டு வைக்கவில்லை.   "Closed Caption " என்று ஒரு "Option " இருப்பது பெரும் வசதியாக இருந்தது எனக்கு. சிறிது நாட்களிலேயே ஆங்கிலப் படங்களைப் பற்றிய எனது அபிப்பிராயம் தலைகீழாக மாறியது. "எமோஷனல், ட்ராமா, செண்டிமெண்ட், காமெடி  " என்று நம் தாய் மொழியில் இருக்கும் அனைத்தும் ஆங்கிலப்படங்களில் இருந்தது இதைத்தவிர "Terminal ", "Cast Away ", "The Beautiful Mind ", "Matrix " போன்ற வித்தியாசமான திரைப்படங்கள் என்னை வியக்க வைத்தன.

மேலும்  வரலாற்றுப் படங்கள்  நான் வாழ வந்திருக்கும் அந்நிய நாட்டின் வரலாற்றையும் எனக்குச் சொல்லிக் கொடுத்து உதவின. புகழ் பெற்ற நபர்களின் வாழ்க்கையைக் காட்டும் Biographical  படங்களும் தரமிக்கவையாக இருந்தன. பொதுவாக நடிகர்கள்  அளவோடும்   எதார்த்தமாகவும்  நடிப்பதாகத் தோன்றியது அதற்குக்  காரணம் இந்தியரல்லாதவர் நடிப்பதாலும் நம் நிஜ வாழ்க்கையோடு ஒப்பிடாமல் திரைப்படமாக மட்டுமே அதை நான் பார்த்ததாலும் இருக்கலாம். 

 "Rom.Com" என்று சொல்லக்கூடிய நகைச்சுவைக் கலந்த காதல் படங்கள் எனது "Favorite " ஆக மாறியது. Caption இல்லாமலேயே படங்கள் புரிய ஆரம்பித்தன. அடுத்து வந்த வருடங்களில் மகள், மகன் என்று குழந்தைகளின் வரவால் திரைப்படங்களைப் பார்ப்பது குறைந்திருந்தாலும் கிடைக்கும் வாய்ப்புக்களை நாங்களிருவரும் தவறவிட்டதில்லை.

என் கணவர் முன்பிருந்தே சூப்பர் ஹீரோப் படங்களைப் விரும்பிப்  பார்ப்பவர் தான் என்றாலும் "Star Wars", "Harry Potter", "Avengers " "X -Men" போன்ற Franchise படங்களின் வலையில் நான் சிக்கிக் கொண்டதோ    சமீபத்தில் தான். எத்தனை முறை  பார்த்தாலும் நினைவில் நிற்காத திரைக்கதையும் வித்தியாசமான கதாப்பாத்திரங்களும்   நம்மை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும். இம்மாதிரியான திரைப்படங்களின் கதையை ஒற்றை வரியில் கூறிவிடலாமென்றாலும்  " Scene by Scene" சுவாரஸ்யங்களை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பின்றி ரசிக்கலாம். குழந்தைகளோடு அமர்ந்து பார்க்க உகந்ததாக  இருப்பதால் Netflix துணையோடு   இப்போதெல்லாம் எங்கள் வீட்டில் இப்படங்கள் தான் அதிகமாக ஓடுகின்றன.

தகவல் தொடர்புத் துறையின் அசூர வளர்ச்சியால் உலகமே நம் கைக்குள் அடங்கிவிட்ட நிலையில் இன்று வெளிநாடுகளுக்கு வரும் இளம் மனைவியர் பலர் எவ்வித வேறுபாடும், இன்னல்களும்  இன்றி வாழ்வதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தாலும் அவர்கள் "மெகா சீரியல் "  மற்றும் "ரியாலிட்டி ஷோக்கள்"-ல் மூழ்கிக்  கொண்டிருப்பதைப் பார்க்க ஏமாற்றமாகவே இருக்கிறது. ஆங்கிலப் படங்களையும் Sitcom-களையும்  பொழுதுபோக்கிற்காக மட்டுமன்றி அவர்களில் மொழி, வாழ்க்கைமுறை, கலாசாரங்களை அறிந்து கொள்ளும் ஊடகமாகவும் (Medium) பார்க்கலாமே !!! 

பின் குறிப்பு : Avengers - End Game ஏப்ரல் 26, 2019-ம் நாள் உலகெங்கும் திரையிடப்படுகிறது. 

Thursday, February 14, 2019

காதலுடன்...

அன்று முதல் முறையாக நந்தினியை பெண்பார்க்க வந்திருந்தனர். மாப்பிள்ளை கதிர் சிரித்த முகத்துடன்  சரளமாகப்  பேசினார். நந்தினியும் கேட்கப்படும் கேள்விகளுக்கு எதார்த்தமான பதிலைக் கூறிக்கொண்டும் மாற்று கேள்விகளை உறவினர்கள் கேட்க... அதை கவனித்துக்கொண்டும் இருந்தாள். அவ்வப்போது இருவரின் கண்களும் ஒன்றை ஒன்று தொட்டுச் சென்றன.

"என்ன பையனை பிடிச்சிருக்கா?!" என்ற கேள்வி மாப்பிள்ளை வீட்டார் கிளம்பிய சில மணித்துளிகளில் நந்தினியிடம் கேட்கப்பட..."ம்ம்ம்...முதல்ல அவங்க என்ன சொல்றாங்கன்னு பார்க்கலாம்" என்று பொத்தாம் பொதுவாய் கூறி வைத்தாள்  நந்தினி. " மாப்பிளை நல்லா பேசினாரு...நம்ம நந்தினியை அவருக்கு  கட்டாயமா பிடிச்சிருக்கும்" என்று உறவினர்கள் நந்தினியின் அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தனர்.

அடுத்த நாளே நந்தினியின் அலுவலகத்திற்கு அழைப்பு வந்தது. "மாப்பிளை வீட்ல இருந்து ஓகேன்னு சொல்லிட்டாங்க...உனக்கு போன் பண்ணி மாப்பிளை பேசுவார்னு சொன்னாங்க...பாத்து பேசும்மா" என்று நந்தினியின் அப்பா தன் படபடப்பை மறைத்துக் கொண்டு தகவல் தெரிவித்தார். அடுத்த ஒருமணி நேரத்தில் கதிர் நந்தினியை போனில் அழைத்தான். "ம்...சொல்லுங்க" என்று யாரோ ஒருவரிடம் பேசுவதுபோல் பேசிய நந்தினியிடம் "என்ன உங்களுக்கு பிடிச்சிருக்கு தானே?!" என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு கதிர் கேட்க " இல்லன்னா இந்நேரம் உங்க கூட பேசிட்டிருப்பேனா?!" என்று கேசுவலாக இருப்பது போல் பேசி தன் பதட்டத்தை மறைத்துக்கொண்டாள் நந்தினி.

 "உன்கிட்ட செல் போன் இல்லையா?!" என்று கேட்ட கதிருக்கு  "நீங்க வாங்கி குடுத்தாதான் உண்டு " என்ற பதில் வந்தது . இரண்டொருநாளில் புது நம்பருடன் செல் போன் கொடுக்கும் சாக்கில் தன் நண்பருடன்  வீட்டிற்கு வந்த கதிர் சிரிப்பை அடக்க பெரு முயற்சி செய்தான். தன் முகத்தில் எந்த வித உணர்ச்சியையும் காட்டாத நந்தினி  "செல் போன் குடுக்கதான வந்திங்க...குடுங்க என்று வாங்கிக்கொண்டு உள்ளே சென்று மறைந்தாள்.

அடுத்த ஒரு வாரத்தில் திருமண தேதி குறிக்கப்பட்டது. இரண்டே சந்திப்பிற்கு பின்  கதிரும் அலுவல் விஷயமாக அமெரிக்காவிற்கு செல்ல நேர்ந்தது. "டெய்லி போன் பண்ணுவேன்" என்று கூறிச் சென்ற கதிரிடமிருந்து தினமும் தவறாமல் அழைப்பு வந்தது. அவனுக்கு காலை இவளுக்கு இரவு என்று "Time Zone " வேறு சோதித்தது... இருந்தும் கதிர் பேசத்தவறவில்லை. நந்தினி பட்டும் படாமலும் ...தொட்டும் தொடாமலும்...இதுதான் நான் என்னும் பாணியிலேயே பேசி வந்தாள். "ஏன் இப்பிடி பேசுற?!" என்ற கேட்ட கதிரிடம் "நாம எப்பிடி இருப்போமோ அதுமாதிரியே மொத இருந்து இருந்துறணும்...கல்யாணத்துக்கப்புறம் நீங்க ஏமாறக்கூடாதுல்ல" என்று பதிலளித்தாள். கதிர் எதையும் சீரியசாக என்னும் மனநிலையில் அப்போது இல்லை. பேசும் பாதிநேரம் சிரித்தே அவளை சமாளிதான்.

இவ்வாறாக இருவரின்  பொழுதுகளும்  நகர்ந்தன. தோழியிடம் பேசுவது போல் நந்தினி கதிரிடம் பேச... காதலியிடம் பேசுவதைப் போல் பேச முயன்று கொண்டிருந்தான் கதிர். அவ்வப்போது கருத்து வேறுபாடுகளும் மனஸ்தாபங்களும் எட்டிப் பார்த்துச்  சென்றன. யார் முதலில் பேசுவது/சமாதானப்படுத்துவது?! என்ற கேள்விக்கே இடமில்லை. கதிர் அமெரிக்காவில் இருந்ததால் அவன்தான் அழைத்ததாக வேண்டும் என்ற நிலைமை இருந்தது. ஆதலால் ஈகோ பிரச்சனை தலைதூக்காமல் இருந்தது. இருவரின் நிறைகுறைகளை ஓரளவிற்கு  அறிந்து கொண்டனர்.

ஆறு மாதங்கள் கடந்தோடியது. திருமணத்திற்கு நான்கே நாட்கள் இருக்கும் பட்சத்தில் இந்தியா வந்து சேர்ந்தான் கதிர். திருமண வேலைகள், உறவினர்கள், நண்பர்கள் , ஜெட்லேக், கைப்பேசி இன்மை  போன்ற  சூழலில் சிக்கித் சிதறுண்டான். வழக்கம் போல் நந்தினியிடம் பேச நேரம் கிடைக்கவில்லை. இரண்டு நாட்கள் பொறுமையாக இருந்த நந்தினி...கதிருக்கு போன் செய்தாள். "என்ன பேசவே மாட்ரீங்க?! நேத்து  எவ்வளவு நேரம்  வெயிட் பண்ணிட்டிருந்தேன் தெரியுமா?!" என்று கோபத்தோடு கேட்க அடுத்த முனையில் கதிரின் மனம் மகிழ்ச்சியில் மலர்ந்தது. அவனை அறியாமலேயே முகம் சிரிப்பில் மூழ்கியது.தன் மேல் இருக்கும்  காதலை முதல் முறையாக  நந்தினி வெளிப்படுத்துகிறாள். அதுவும் ஊடல் மூலமாக என்று துள்ளிக்குதித்தான்  "நான் திட்றேன்...நீங்க சிரிக்குறீங்களா?! என்ற நந்தினியிடம் " அப்பிடியில்ல நந்தினி..." என்று சமாதான பேச்சு வார்தையைத் தொடங்கினான் கதிர். வசதியாக நாற்காலியில் அமர்ந்து Landline போனை எடுத்து மடியில் வைத்துக்கொண்டே...

 எந்த பெண்ணும் தன்னுடைய பொறுப்பு, பொறுமை, வயது அனைத்தையும் மறந்து தன் காதலரிடமும் கணவரிடமும்  அடம் பிடிக்கும் குழந்தையா கவே  மாற விரும்புவாள்... காதலுடன் ...எத்துனை வருடங்கள் கடந்தாலும்....

பதிமூன்று வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகும் கதிர் நந்தினியின் உரையாடல்களில் இருக்கும் காதல் எள்ளளவும் குறையவில்லை. கதிர் இன்றும் சிரிப்பை அடக்க முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறான்!!!


Friday, January 18, 2019

கோலங்கள்...கோலங்கள்...

வாசலில் பேராசிரியர் வரும் அரவம்  கேட்டதும் அதுவரை  வகுப்பறையை நிறைத்திருந்த பேச்சொலி காற்றில் கரைந்தது. சிலர் பாட   புத்தங்களை விரிப்பதும், சிலர் விரித்திருந்த நோட்டு புத்தங்கங்களை பெஞ்சுக்கடியில் வைத்து  அமுக்குவதும், பேனா பென்சில் இத்யாதிகள் கீழே சிதறி  உருளுவதும் என   சூழலில்  பரபரப்பு தொற்றிக்கொண்டது. அனைவரின் கண்களும் நிலையின்றி  அலைபாய்ந்து கொண்டிருக்க... சிலர் குசு குசுவென்று பேசுவது சுவர்களில் பட்டு எதிரொலித்து பேரோசை எழுப்பியது .

"Good Morning Mam " என ஒரு சேர எழுந்த கோஷத்தை தன் சிறு கை அசைவால் சாந்தப்படுத்திய ஆசிரியை  ஏதோ முக்கியமான அலுவலில் இருந்து பாதியில் எழுந்து வந்தவர் போல தென்பட்டார். கையில் பல கோப்புக்கள் இருந்தன. தான் பத்து நிமிடங்கள் தாமதமாக வந்ததை மறைக்கும் விதமாக "என்ன எல்லாரும் படிச்சுட்டு வந்திருக்கீங்களா?!" என்று அனைவரையும் பார்த்து கேட்டவர்  "இன்னைக்கு டெஸ்ட் சொல்லியிருந்தேனா?!" என முதல் பெஞ்சில் அமர்ந்திருந்த நிதிலா மற்றும் அவளின் தோழிகளை வினவினாள். "No Mam " என்ற பதிலில் திருப்தி அடையாதவராக "எப்ப டெஸ்ட் வச்சாலும் ரெடியா இருக்கனும் " என்று குரலை கடுமையாக்கிக் கொண்டவர்  "நேத்து எடுத்த டாபிக்கை படிங்க" என்று கட்டளையிட்டு விட்டு தனது கோப்புக்களைத்  திறந்து  எழுதத் துவங்கினாள்.

அனைவரின் உடலில் இருந்த இறுக்கம் தளர்ந்து விழிகளில் நிம்மதி பரவியது. சிலர் படிக்க, சிலர் நடிக்க என அடுத்து வந்த 20 நிமிடங்கள் நகர்ந்தது. தனக்கு பின்னால் இருந்த தோழியை நோக்கி "எனக்கு குடுக்குதியா?! " என்று முணுமுணுத்த கிறிஸ்டியின் தொடையை அமுக்கிய நிதிலா அமைதி என கண்களாலே சைகை செய்தாள். பாடவேளை முடிந்ததை அறிவிக்கும் விதமாக மணி ஒலித்தது. "லீவு முடிஞ்சு வரும் போது டெஸ்ட் உண்டு " என்று அறிவித்து விட்டு  அவர்களின் நன்றியைக்  காதில் வாங்காதவராகக்  கிளம்பினார் பேராசிரியை.

அடுத்த நிமிடமே தொடங்கிய  சலசலப்பு வழக்கத்தை விட  சற்று  அதிகமாகவே  இருந்தது அதற்குக் காரணம் வரும் வாரத்தில் கிடைக்கவிருக்கும் தொடர் விடுப்பு. நோட்டுப்புத்தகங்களும் பேப்பர்களும் அங்கும் இங்குமாக இடம் பெயர்ந்தன. கலர் பென்சில்களும் , Crayons-களும் கை மாறின. விடுதி வாசியான கிறிஸ்டியிடம் "அவங்க பொங்கலுக்கு போடறதுக்கு கோலம் வரையுறாங்க...நீயும் ஏண்டி ?!" என்ற நிதிலாவிடம் "எங்க சந்துல எல்லாரும் போடுவோம்ல?! என்று கிண்டலாக  பதிலுரைத்தாள் கிறிஸ்டி.

எல்லோரும் ஏதோ விண்வெளிக்கு செல்ல ஆயத்தம் ஆவதைப் போல் பதற்றமும் சந்தோஷமும் கலந்த முகத்துடன்.."சூப்பரா இருக்குல்ல?! இந்த கலர் கோலமாவு கிடைக்குமா?! என்ற வினாக்களோடு  கோலங்களை "Copy " செய்து கொண்டிருந்தனர் வண்ணங்களோடு. அடுத்து வந்த வகுப்புகளில் கோலத்தினால் உள்ளிழுக்கப்பட்ட சிலர் வகுப்பில்   கவனம் செலுத்தாமல்    கோல நோட்டோடு அகப்பட்டுக் கொண்டனர் ஆனால் ஆசிரியைகளோ  கல்லாரி விழாக்களில் இவர்களின் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்  என்பதைப் போல வசை மழை பொழியாமல் விட்டு விட்டனர்.

அன்று மாலை வழக்கம் போல  தன் தங்கையிடம் நிதிலா கல்லூரியில் நடந்த கூத்துக்களையும் களேபரங்களையும் விவரித்துக் கொண்டிருக்க... அவர்களின் கடைசித் தம்பி "நம்மளும் பெரிய கோலம் போட்டு கலர் பொடி போடுவோம்" என்று குதூகலித்தவனிடம் "போடா...அதெல்லாம் சரிப்பட்டு வராது " என்று அடக்கிவிட்டனர்.

நிதிலாவின் வீடு இருப்பது புறநகர் பகுதியில். வாசலில் பெரிய இடம் இருந்தாலும் பெரிய கோலம் எல்லாம் போடுவதில்லை அதற்குக் காரணம் வீட்டிற்கு எதிரே இருந்த பேருந்து நிறுத்தம். இவர்களின் வாசலில் நிழல் இருப்பதால் பெரும்பாலோனோர் அங்கு வந்து நிற்பது வாடிக்கை ஆகிவிட்டது. கொஞ்சம் பெரிய கோலம் போட்டாலும் நொடிப்பொழுதில் அழிந்து விடும். அதிக நேரம் அங்கு செலவிடுவதையும் அவர்களின் பெற்றோர்கள்   அனுமதிப்பதில்லை. விடியும் முன் போட்டு விடலாம் என்றால் கொசுத்தொல்லை வேறு அதனால் இதிலெல்லாம் நிதிலாவிற்கு ஆசை இருந்தும்  ஆர்வம் அற்றுப் போனது.   

மறுநாள் கல்லாரியில் நண்பர்களின் உதவியுடன் நிதிலாவும் ஒரு கோலத்தை "Copy " செய்து முடிக்கவும் கிறிஷ்டி முறைக்கவும் சரியாக இருந்தது. அவளிடம் தம்பிக்காக என்று சாக்கு சொல்லி தன்னை கோலத்தின் பிடியில் சிக்காதவளாகக் காட்டிக் கொண்டாள். அன்று மாலை  கோலத்தைப்  பார்த்த அவள் தம்பி உற்சாகமடைந்தான். "கலர் காம்பினேஷன் எல்லாம் நான் பாத்துக்கிறேன்" என்று பொறுப்பேற்று தானே  பக்கத்துக்  கடையில் சென்று வாங்கி வருவதாக வாக்களித்தான். 

பொங்கல் திருநாளும்  வந்தது. நிதிலா கோலம் போட  அவள் தங்கையும் தம்பியும் கலர் பொடி தூவ... கோலம் போடும் வேலை "தரமான சம்பவமாக " நடந்தேறியது. இதென்ன அதிசயம்?! என்பது போல் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தவர்கள் பார்த்தனர். சிலர் மிதிக்காமல் ஓரத்தில் நின்றனர். சித்தப்பா அவ்வப்போது வந்து அவர்களை நோட்டம் விட்டுச் சென்றார். "போட்டாச்சுடா" என்று சகோதரிகள் உள்ளே சென்று விட சில மணி நேரம் கோலத்திடமே நின்று அதைப் பாதுகாத்தான் தம்பி. அன்று இரவு "அடுத்து தீவாளிக்கு இதை விட பெரிய கோலம் போடணும்...டவுன்ல இருந்து கலர் பொடி வாங்கனும் " என்று கூறியவனிடம்  "சரிடா பாத்துக்கலாம் " என்று அவனின் கோலக் கனவிற்கு  முற்றுப்புள்ளி வைத்தாள் நிதிலா 

நகர மயமாக்கலில்  நாம் மறந்து விட்ட... இழந்து விட்ட  அனுபவங்கள் பல அவற்றில்   ஒன்று  "வாசல் தெளித்து கோலம் போடுவது". அதிகாலையில் தூய காற்றை சுவாசித்து  குனிந்து நிமிர்ந்து இதை விட வேறு என்ன உடற்பயிற்சி   இருக்க முடியும்...மனதிற்கும் உடலுக்கும்?!  நம் முன்னோர்கள் குனிந்து கொண்டே கோலம் போட்டனர்...நாமோ  குதிங்காலில் அமர்ந்து  கோலம் போட்டோம் ஆனால் இன்றைய தலைமுறையினராலோ  அவ்வாறு அமரக்கூட முடியவில்லை. வாய்ப்பும் இல்லை.

இன்றும் சில இடங்களில் இப்பழக்கம் தொடர்ந்தாலும் பல குழந்தைகள் காணொளியில் மூலமே கோலத்தை அறிகிறார்களே அன்றி அனுபவிப்பதில்லை. வெளிநாட்டில் வசிப்பவர்களோ தங்கள் செல்லும் ஒரு மாதத்தில் தங்கள் குழந்தைகள் அனைத்தையும் அனுபவிக்கவேண்டும் என்ற ஆவலில் "இதைப் பண்ணு ...அதைப் பண்ணு என்று  தங்கள் குழந்தைகளை  "Over Load " செய்து "Tired " ஆக்கி விடுகிறார்கள்.   

வாழ்கைக்குத் தேவையான முக்கியப் பாடங்களான பொறுமை, நிதானம்  மற்றும் திட்டமிடலை கோலம் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. அவ்வாறு திட்டமிட்டு போடப்படும் கோலத்தில்  ஏதேனும் தவறு நேர்ந்தால் சோர்ந்து விடவோ, முழுவதையும் அழித்து விடவோ தேவையில்லை. சிறு சிறு மாற்றங்களினால் புதுக் கோலத்தை உருவாக்கி விடலாம் கூடுதல் அழகுடன்!!! உங்கள் கோலம் உங்கள் கையில். அது நேர்க்கோலமா ?! வளைவுக்கோலமா?! வண்ணங்களுடனா?!  என்பதை நீங்களே   தெரிவு செய்து கொள்ளலாம் ...வாழ்க்கையையும் தான் !!!  

Monday, November 19, 2018

ஒரு கதை சொல்லட்டா ?!

கதை சொல்வது ஒரு சிலருக்கே கை வந்த கலையாக இருப்பினும் கதை கேட்பது யாருக்குத்தான் பிடிக்காது?! நாம் திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பதும் இதனால் தானே?! கதை உண்மையாகவும் இருக்கலாம் கற்பனையாகவும் இருக்கலாம். நமக்குத் தெரிந்தவர்கள் பற்றியும் இருக்கலாம் தெரியாதவர்கள் பற்றியும் இருக்கலாம். அனைத்து விதமான உணர்ச்சிகளை  உள்ளடக்கியதாகவும்  இருக்கலாம் அல்லது ஒரு சில உணர்ச்சிகள்மட்டும்  மேலோங்கியதாகவும் இருக்கலாம். ஆக மொத்தத்தில் கதை  சுவாரசியமாக இருக்க வேண்டும்.

நான் கதை கேட்டதை விட சொன்னதுதான் அதிகம் என்றே நினைக்கிறேன். சிறுவயதில் பெரியம்மாவிடம் சில கதைகள் கேட்டதுண்டு. என்னை கதை சொல்லியாக ஆக்கியத்தில் முக்கியப்பங்கு "கேபிள் டிவி"-க்கு உண்டு. 
90-களின் தொடக்கத்தில் ஒரு சிலரே கேபிள் கனெக்ஷன் வைத்திருந்தார்கள். அவர்கள் கொடுக்கும் அலப்பறைகளுக்கு அளவே கிடையாது. சனி ஞாயிறுகளில் அவர்கள் பார்த்த நிகழ்ச்சிகளை திங்கட்கிழமை மதிய உணவு இடைவெளியில்  ஒன்று விடாமல் கூறுவார்கள். அடுத்த ஒரு சில ஆண்டுகளில் மெகா தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டதும் கதை சொல்லிகளுக்கு கிராக்கி அதிகமாகியது.

எங்கள் வீட்டில் கேபிள் கனெக்ஷன் இல்லாதிருந்தாலும் மாடி வீட்டு அக்கா வீட்டில் பார்த்த நிகழ்ச்சிகளை நானும் சொல்லத் துவங்கினேன். நான் சொன்னது பள்ளிக்கூடத்தில் அல்ல வீட்டில். கவுண்டமணி காமெடிகளை என் அப்பாவிடம் மிக விரிவாக துணி துவைத்துக்கொண்டே கூறுவேன் அவரும் விழுந்து விழுந்து சிரிப்பார். புரிந்ததோ இல்லையே?! இப்போது நினைத்தால் எனக்கே சிரிப்பாக இருக்கிறது!!! என்னிடம்  யாரும் சிக்காத பட்சத்தில் என் கதைக்கு பலி கடா ஆவது என் தங்கைதான். பிடிக்குதோ இல்லையோ அவள் கேட்டே ஆகவேண்டும். 

எங்களின் கதை சொல்லும் பசிக்கு  தீனி போடும் விதமாக பள்ளிகளிலும்  வருடத்திற்கு ஒருமுறை  கட்டணம் வசூலித்து திரைப்படங்கள் திரையிடப்பட்டு  வந்தன. பழைய படமே என்றாலும் முண்டியடித்துக் கொண்டு பார்ப்பது வழக்கம்...அப்புறம் கதை சொல்லணுமில்ல!!! 

மேல்வகுப்பில் படிக்கும் பொழுதும் சீரியல் கதை சொல்லிகளுக்கு மவுசு இருந்தது ஆனால் எனக்கு அதில் அதிக ஆர்வம் இருந்ததில்லை. அக்காலகட்டத்தில் முழு நீள திரைப்படங்களை விரிவாக சொல்லுவதில் "Expert " ஆக உருமாறி இருந்தேன். புதுப்  படமோ பழைய படமோ...வித்தியாசம் இல்லை. ஒரு பீரியட் கிடைத்தாலும் போதும் நீங்கள் ஒரு படம் பார்த்துவிடலாம்...என்னிடம் கதை கேட்கத்  தயாராக இருந்தால்!!! டீச்சர் லீவு என்றால் இரண்டு மூன்று படங்கள் ஓடும் வகுப்பறையில்.

சொந்தம்... பந்தம் என்று அனைவருக்கும் கதை சொல்லிய அனுபவம் எனக்கு உண்டு. அவர்களும் பதிலுக்கு அவர்களை மிகவும் கவர்ந்த... முக்கியமாக புதிய திரைப்படங்களை எனக்குக் கூறுவார் அதையும் நான் பலருக்கு கொண்டு சேர்ப்பேன். இந்த கதை சொல்லும் பழக்கம் என்னிடம் இருந்து என் தங்கைக்கும் ஒட்டிக் கொண்டிருந்தது.  அவ்வப்போது அவளும் எனக்கு ஒரு சில திரைப்படங்களை கதையாக சொல்வாள். இப்பொழுது கூட அப்படங்களை பார்க்க நேர்ந்தால் என் தங்கையை நினைத்துக் கொள்வேன்...பேசும் பொழுது "நீ கதை சொன்ன படம் இன்னைக்கு டீவியில போட்ருந்தாங்க" என்று கூறுவேன்.   

கல்லூரியில் ஹாஸ்டல் வாசிகள் கதை கேட்க மிக ஆவலாக இருப்பர். நான் கேபிள் டீவி பார்ப்பது அறவே குறைந்திருந்த சமயம் அது ஆகையால் புதுப் படங்களை திரையரங்குகளில் பார்க்க நேர்ந்தால் மட்டுமே கதை சொல்லும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. என்னிடம் கதை கேட் பிறகு  நீங்கள் அப்படத்தை பார்க்க நேர்ந்தால் என்னை நினைக்காமல் இருக்க முடியாது. சீன் பை சீன்...Frame by  frame அப்படியே இருக்கும். அதை என்னிடம் வந்து சொன்னவர்களும் ,"எப்பிடிடீ இப்பிடி சொல்ற?! " என்று சிலாகித்தவர்களும் உண்டு. 

இக்கதை சொல்லும் பழக்கத்தால் பள்ளி கல்லூரிகளில் நடந்த சம்பவங்களை வீட்டில் விரிவாக அனைவரிடமும் சொல்லும் பழக்கம் எனக்கு ஏற்பட்டது. அதுவும் சுவாரசியமாக ஏதாவது நடந்து விட்டால் போதும்...புத்தகத்தை  தங்கள் மடிகளில் விரித்து வைத்துக்கொண்டு என்னிடம் கதை கேட்டுக் கொண்டிருப்பர். ஆ... வென்று கதை கேட்டு விட்டு...  நான் நேரத்தை விரையமாக்கி விட்டதாக என் கடைசித் தம்பி திட்டித் தீர்ப்பான். அவர்களும் பள்ளிக்கதைகளை கூறுவதுண்டு.

இன்றளவும் கதை சொல்லும் பழக்கம் என்னை விட்டு விலகவில்லை. சினிமா மட்டுமன்றி நான் பார்த்த...கேட்ட...படித்த...அனுபவித்த  பலதரப்பட்ட விஷயங்களை விரிவாக என் கணவர், பெற்றோர், குழந்தைகள் மற்றும் நண்பர்களிடம் சொல்லிக்கொண்டு தான் இருக்கிறேன். என் படிக்கும் (எழுதும்) ஆர்வத்தையும்... பிறர் சொல்வதை  செவி கொடுத்து கேட்கும் பொறுமையையும்   இக்கதை சொல்லும் பழக்கம் தான்   அளிக்கிறது   என்று   நினைக்கிறேன். நான் சொல்வதைக்  கேட்கும்    செவிகள்  கிடைத்ததை எனது  பாக்கியமாகக் கருதுகிறேன். கதை சொல்லிகளாக உருவெடுத்து வரும் என் குழந்தைகளை பெருமையுடன் பார்க்கிறேன். 

இன்றைய இயந்திர உலகில் மனம் விட்டுப்  பேசுவதும் பிறர் பேசுவதைக் (அவர்களை மதிப்பிடாமல் ...Without Judging) கேட்பதுமே  பல பிரச்சனைகளை சுலபமாகத் தீர்த்து விடும் என்பதை  தீர்க்கமாக நம்புகிறேன்.

பின் குறிப்பு : என்னிடம் கதை கேட்கும் கொடுமையிலிருந்து   என் தங்கைக்கு  நிரந்தர விடுதலை இன்றும்   கிட்டவில்லை.

Wednesday, September 5, 2018

குரு பிரம்மா...

"மாதா பிதா குரு தெய்வம் " - வரிசையில் மூன்றாவதாக வந்தாலும் வாழ்க்கையில் முதலாவதாக நம்மை நிறுத்த அயராது உழைப்பவர்கள் ஆசிரியர்களே!!! "எங்க சொல் பேச்சு கேக்கலைன்னாலும் பரவாயில்ல ...உங்க டீச்சர் பேச்ச கேளு...அப்பத்தான் உருப்படுவ" என்று பெற்றோர்களாலேயே  பெரு மதிப்புடன் பார்க்கப்படுபவர்கள் ஆசான்கள். கணக்கு டீச்சர், தமிழ் டீச்சர் என்று அவர்கள் கற்பிக்கும் பாடத்தை வைத்து அவர்கள் அறியப்பட்டாலும் மாணவர்களின் Psychology-யை ஓர் கண்ணசைவை வைத்தும் Physiology-யை அவர்கள் உடலசைவைக் கொண்டும்   மிகத் துல்லியமாக எடை போடுவதில் மருத்துவர்களையே மிஞ்சி விடுவார்கள். நடமாடும் "Lie Detector "-கள் என்று அவர்களுக்கு பட்டமே வழங்கலாம்.

என் பள்ளிப்பருவம் முழுவதும் கிறித்தவ பள்ளிகளில் என்பதால் மதிப்பெண்களை விட அதிக மதிப்பு நன்னடத்தைக்குதான் கிடைக்கும் . நான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் பொழுது இருந்த தலைமை ஆசிரியை தினமும் அசெம்பிளி வைப்பார். குறைந்தது அரைமணி நேரமாவது நல்லொழுக்கங்களைப்  பற்றி பேசுவார். நல்ல மாணவர்களை  உருவாக்குவது மட்டும் எங்கள் வேலை அல்ல நல்ல குடிமகன்களாக உங்களை வடிவமைப்பதும் (Molding)   எங்கள் பொறுப்பே என்று கூறுவார்.

முதல் நாள் பள்ளியில் இருந்து வந்ததும் அம்மா எங்களிடம் கேட்கும் முதல்  கேள்வி "வயசான டீச்சரா?!" என்பதாகத்தான் இருக்கும் ஏனென்றால் அவர்களுக்கு அனுபவம் அதிகம் ஆதலால் நம்மை வழிக்கு கொண்டுவருவதில் கில்லாடிகளாக இருப்பர். என் அதிர்ஷ்டம் எனக்கு பெரும்பாலும் புது ஆசிரியர்களே கிடைப்பார்கள். ஒரு வருடம் கண்டிப்பான ஆசிரியர் வந்து விட்டார். என் அம்மாவிற்கோ மகிழ்ச்சி ஆனால் நான் தான் லக்கி ஆயிற்றே...ஒரு மாத விடுப்பில் சென்றவர் வரவே இல்லை. நல்லா "டேக்கா" கொடுத்தே பள்ளிப் படிப்பை முடித்து விட்டேன். என் தங்கைக்கோ என்னளவிற்கு அதிர்ஷ்டம் கிடையாது. வருஷா வருஷம் அடிச்சு தொவைக்குற டீச்சர் தான். இப்பொழுது கேட்டாலும் திருக்குறளையும், நாடுகளையும்  தலைநகரங்களையும் மிகத் தெளிவாகக் கூறுவாள். எப்பிடி நியாபகம் இருக்கு?! என்று கேட்டால் "எனக்கு வந்த டீச்சர் அப்பிடி" என்று கூறுவாள். அக்காலத்தில் பெற்றோர்களின் தலையீடு பள்ளிகளில் இருந்ததே இல்லை. வருடத்தில் ஒரு முறை ஆசிரியர்களை சந்திப்பதே அதிசயம் தான்.

பெண் ஆசிரியைகளை விட ஆண் ஆசிரியர்கள் மிகவும் நகைச்சுவையாக பேசுபவர்கள் என்றும் உலக விஷயங்களையும் நாட்டு நடப்புகளையும் மாணவர்களிடம் விவாதிப்பார்கள் என்றும் என் சகோதரர்கள் சொல்லக் கேட்டதுண்டு. நர்சரிப் பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளியில் ஆறாவது சேர்ந்த என் அண்ணன் பள்ளியை விட்டு வந்ததும்  அவர் சார் சொன்னார் என்று பல காமெடிகளைக் கூறுவான். சே...நமக்கும் சார் வந்தா சூப்பரா இருக்கும் என்று நானும் என் தங்கையும் புலம்புவோம். என்ன செய்வது நாங்கள் படித்ததோ பெண்கள் பள்ளி!!!

எனது மேல்நிலை வகுப்பில் வந்த உயிரியியல் ஆசிரியையை மறக்கவே முடியாது. " துளசி வாசம் மாறுனாலும் மாறும் ஆனா இந்த தவசி வாக்கு மாற மாட்டான்" என்று விஜயகாந்த் கூறுவது போல புயலோ, மழையோ, வெள்ளமோ,பள்ளி ஆண்டு விழாவோ எதுவாக இருந்தாலும் வகுப்பிற்குள் நுழைந்தவுடன் முன்தினம் நடத்திய பாடத்திலிருந்து கேள்வி கேட்டே தீருவார். தெரியவில்லை என்றால் சிறிது நேரம் நிற்க வைத்து விட்டு "Daily Lesson படிக்காம என்ன பண்ற " என்கிற டயலாக்கை மட்டும்  தவறாமல் சொல்லி விட்டு உட்கார வைத்து விடுவார். 

எனது பத்தாவது வகுப்பு ஆசிரியை என்னைப் பற்றிய மிகச் சரியான உளவியல் அறிக்கையை (நினைச்சா படிக்கலாம்  முதல் அஞ்சு ரேங்க்குல வரலாம்...ஆனா நெனைக்குறதே இல்ல...சோம்பேறி) என்  அம்மாவிடம் கூறி அவரை ஆச்சரியப்படுத்தினார். இன்றளவும் " அந்த டீச்சர் உன்ன பத்தி ரொம்ப கரெக்டா சொன்னாங்க" என்று நினைவு  கூறுவார் என் அம்மா. 

எனது கல்லூரியில் எனக்கு அமைந்த அனைத்து பேராசிரியைகளும் எனக்கு கிடைத்த நண்பர்களே. முக நூலின் உதவியால் எங்களைக் கண்டு இன்றளவும் பெருமிதம் கொள்பவர்களும் அவர்கள் தான். ஆசிரியர் என்னும் ஒற்றைச் சொல்லில் அடங்கியிருக்கும் பொறுப்புக்களோ ஏராளம். பெற்றோர், மருத்துவர், காவலர், நீதிபதி முக்கியமாக நம்மை செம்மைப்படுத்தி உருவம் கொடுக்கும் குயவர் என Multi- tasking செய்ய ஆசிரியர்களைத் தவிர  வேறு யாராலும் இயலுமா?!  

கல்வி வியாபாரம் ஆகி விட்ட நிகழ் காலத்தில் எங்கு அதிக சம்பளமோ அங்கு வேலை என மாறுவதால் மாணவர்களைப் பற்றிய புரிதல் ஆசிரியர்களுக்கு இல்லை என்றும்  ஆசிரியர்களுடன் நெருங்கிப்  பழகும் அரிய  வாய்ப்பு  மாணவர்களுக்கும் கிடைப்பதில்லை  என்றும் பலர் கூறுகின்றனர். ஆனால்  பலரும் மதிக்கும் ஆசிரியப் பணியை அதன் மகத்துவம் உணர்ந்து செய்பவர்கள்  இன்றளவும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதில் ஐயம் ஏதுமில்லை!!!


Wednesday, April 18, 2018

அம்மா எங்க ?!

தெருவில் இறங்கி ஓடிய குணா, மூச்சிரைக்க தெரு முக்கிலேயே நின்று விட்டான். சாலையின் இரு புறத்தையும் மாறி மாறி பார்த்தவன் ...தூரத்தில் வருபவர்களை காண்பதற்கு வசதியாக  குதிகாலில் நின்று சிறிது நேரம் நோக்கினான். தெரு முனையில் இருக்கும் டீக்கடையில் ஓரிருவர் தேநீர் அருந்தியபடியும் , ஒரு சிலர்  மாலை நாளிதழை மும்முரமாக படித்துக் கொண்டும், விவாதிக்கொண்டும் இருந்தனர். குணாவை சில நிமிடம் பார்த்த டீக்கடைக்காரர் எதுவும் கேட்காமல் தன் வேலையில் கவனமானார் . கடந்த ஒரு மணிநேரத்தில் ஐந்தாவது முறையாக குணா சாலையை சோதிப்பதற்கு தெரு முனைக்கு வந்திருந்தான். 

தளர்ந்த நடையும் வாடிய முகமுமாக திரும்பிய குணா சோர்வுடன் வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டான் . அதிகம் போக்குவரத்து இல்லாத அந்த தெருவில் மாலை நேரமென்பதால் மக்கள் நடமாட்டம் சற்று அதிகமாகவே இருந்தது . இஸ்திரி வண்டிக்காரர் இஸ்திரிப் பெட்டியிலிருந்த கரியை தண்ணீர் ஊற்றி அனைத்துக்கொண்டிருந்தார். "போளியல், கொழுக்கட்டை வாங்குறீங்களா ?!" என்ற இரண்டு தூக்கு வாளியை வைத்துக்கொண்டு வாசலில் நின்று கொண்டிருந்தவளுக்கு   "வேணாங்கா " என்ற குரல் மட்டும்  குணா வீட்டிலிருந்து வர  அவள் அடுத்த வீட்டிற்கு நகர்ந்தாள். நான்கைந்து குடித்தனங்கள் வாழும் காம்பௌண்ட் வீட்டிலிருந்து வெளிவந்த நடுத்தர வயது மதிக்கத்தக்க பெண்மணி  " என்னடா குணா வாசல்லயே ரொம்ப நேரமா உக்காந்துருக்க ?!" என்று கேட்டுக்கொண்டே அவனின் பதிலைக் கேட்க நேரமில்லாதவளாய் தெருவில் இறங்கி மறைந்தாள்.

குணாவின் வயதை ஒத்த  சிறுவர்களும், சிறுமியர்களும் குதூகலமாக தங்களுக்குள் பேசி சிரித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் குணாவை ஓரக் கண்ணால் நோக்கிக் கொண்டிருந்த பத்து வயது சிறுவனிடம் " அம்மா ஏண்ணே இன்னும் வரலே?!" என்று குரல் கர கரக்க கேட்டான்  குணா. "அம்மாதான் கார்பொரேஷன் ஆபீஸ் போற வேலை இருக்குன்னு காலையிலேயே சொன்னாங்கள்ல... வந்துருவாங்க டா " என்று பல முறை சொல்லிச்சலித்த அதே பதிலைக் கூறினான் அவனின் அண்ணனான  குரு. அம்மா இல்லாததால் (வீட்டுப்பாடம் எழுதாமல்) தெருவில் விளையாட அதிக நேரம் கிடைத்ததை எண்ணி சற்று அகமகிழ்வோடு காணப்பட்டான்.

மிகச் சமீபத்தில்  இவ்வூருக்கு  குடி பெயர்ந்திருந்த குணாவின் குடும்பம்  உடல் நலக் குறைவினால்  எதிர்பாரா விதமாக தந்தையை இழந்திருந்தது.  பாட்டியின் வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்தனர் பின்  குணாவின் அம்மா தனக்கு  விதவைகள் இட ஒதுக்கீட்டில் மதிய உணவு மேற்பார்வையாளராக அரசாங்க  வேலை கிடைக்க தன் இரு மகன்களுடன் இந்த ஒண்டு குடித்தன வீட்டிற்கு  குடி பெயர்ந்தாள். அப்பாவை இழந்த சோகத்திலிருந்து வெளிவரவே குணாவிற்கு ஆறு மாதங்கள் பிடித்தது. "அப்பா எப்பம்மா திரும்பி வருவாங்க?! நம்ம ஊருக்கே திரும்பி போயிரலாம்மா" என்று அடிக்கடி அழுது காய்ச்சல் தலைவலி என்று வரவழைத்துக் கொள்வான். அவன் அண்ணன் குருவோ   நண்பர்கள் , உறவினர்களின் குழந்தைகள் என நல்ல "Company " கிடைக்க சில நாட்களில்  தந்தையின்  இழப்பை மறந்து சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டான் ஆனால் குணா அழுகும் போது அவனுக்கும் அழுகை வரும். அம்மாவோடு சேர்ந்து இருவரும் அழுது கொண்டே தூங்கிப்போவது வழக்கம்.

மின்மினி பூச்சியாய் கண் சிமிட்டிய தெரு விளக்குகள் சில நொடிகளில் பிரகாசம் கொண்டது. "டேய் குணா ...குரு... தண்ணி வந்து ரொம்ப நேரமாச்சு...நீங்க பிடிக்கலையா ?!" என்ற குரல்  உள்ளிருந்து ஒலிக்க  கடைசி முறையாக தெருமுனை வரை சென்று திரும்பியிருந்த குணா அழத்தொடங்கினான். " ஏண்டா அழற ...இப்ப வந்திருவாங்கடா...உள்ள போ" என்று அதட்டும் விதமாக பேசிய  குரு அடுத்த நிமிடமே  "பக்கத்து தெருவுல கட்சி மீட்டிங் ...இன்னும் கொஞ்ச நேரத்துல ரஜினி பாட்டு போடுவாங்க ...வர்றியா போய்ப்  பாக்கலாம்" என்று சமாதானப் படுத்தும் விதமாக பேசினான். சகோதரர்கள் இருவரும் சிறிது நேரம் அங்கு சென்று வந்தனர்.
 " இன்னும்  அம்மா வரலேண்ணே...வந்துருவாங்கள்ல ?!" என்ற தம்பியை பார்த்த குருவிற்கும் அடி வயிற்றில் பயம் பரவத்தொடங்கியது." மணி ஏழாச்சு...இன்னும் அம்மா வரலையா ?! மூணு மணிக்கே வந்துருவாளே ?! ரெண்டு பேரும் சாப்பிட்டீங்களா ?! என்று அக்கறையோடு விசாரித்த  பக்கத்து வீட்டு பாட்டியை பார்த்த குருவிற்கும் அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

வீட்டின் கதவைச்  சாத்திவிட்டு இருவரும் இரண்டு  தெரு தள்ளி இருக்கும் பாட்டி வீட்டிற்கு ஓடினர். அங்கிருந்த அவர்களின் பெரியம்மா பையன் " என்னடா இந்நேரத்துக்கு வந்துருக்கீங்க ?! அம்மா வரல ?!" என்றதும் இருவரும் அழத்தொடங்கினர். " டேய்... டேய் உங்கம்மா கார்புரேசன் ஆபிசுக்கு போயிருப்பா டா ...மாசா மாசம்  போறதுதானே " என்று சமாதானம் செய்தான் . சற்று நேரத்தில் இருவரும் மீண்டும்  தெருமுனைக்கே  வந்து காத்து நின்றனர். தூரத்தில் ஓட்டமும் நடையுமாக வரும் அம்மாவை குணாதான் முதலில் பார்த்தான். " அண்ணே ...அம்மா " என்றதும் இருவரும் அம்மாவை நோக்கி ஓட்டம் பிடித்தனர். " ராஜா " என்று இருவரையும் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்ட அம்மா " பஸ்ஸே கெடைக்கலப்பா ... கார்பொரேஷன் ஆபிஸ்ல இருந்து நடந்து வந்தேனா ..நேரமாயிருச்சு " என்று கூறிக்கொண்டே கூடையிலிருந்து ஒரு பொட்டலத்தை எடுத்து நீட்டினாள். அம்மாவைக் கண்ட மகிழ்ச்சியோடு தின்பண்டம் கிடைத்த இன்பமும் சேர்ந்து கொள்ள இரட்டிப்புத் துள்ளலுடன் ... அம்மாவிற்கு இரு புறமும் இரு சேனைக்காவலர்கள் போல வீட்டை நோக்கி வீர நடையிட்டு    சென்று கொண்டிருந்தனர்   குணாவும் குருவும்!!!
             

Friday, January 26, 2018

நாய்கள் ஜாக்கிரதை

கதவைத் திறந்தவளின் கண்களில் ஒரு சிறு அதிர்ச்சி . அடுத்த சில நொடிக்  கணங்களில்   பயம் அந்த  அதிர்ச்சியை வெல்ல ... தன்னை அறியாமலேயே   வாய் வரை வந்த "வீல்" என்று அலறலை... உதடுகளால் பூட்டி உள்நிறுத்தினாள் நிகிலா. எதுவும் நடவாதது போல் சத்தமில்லாமல் கதவை சாத்தி விட்டு உள்ளறையை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தாள்.

" நேரம் காலை 6:40...மாநிலச் செய்திகள் வாசிப்பது ..." என்று செய்தியாளர் தன்னை அறிமுகம் செய்து  கொண்டிருந்தார்  வானொலியில். அம்மா சமையல் வேலையில் மும்முரமாக இருந்தாள். தங்கை, தம்பி என மூவர் தங்கள் பாட புத்தகங்களை புரட்டிக் கொண்டும், முன்னும் பின்னும் அசைந்து எதையோ மனப்பாடம் செய்து கொண்டும் இருந்தனர். முகவாயைத் தடவிக்கொண்டு செய்தியைக் கேட்பதற்கு தன்னை தயார் நிலையில் வைத்திருந்தார் அப்பா.

படபடப்புடன்  வந்து நின்ற நிகிலாவை, "என்னாச்சு?! " என்ற வினாவோடு அனைவரும்  ஒரு  சேர  நோக்கினர். " வாசல்ல ரெண்டு நாய்க்குட்டி நிக்குது " என்றவளை, " தொரத்தி விட்டுட்டு வாசல் தெளிக்க வேண்டியதுதான " எனும்  தோரணையில் பார்த்த அப்பா, " இவங்களுக்கு வேற வேலையே இல்ல...என்னமோ கோவில்ல நேந்துக்கிட்டு ஆடு, சேவலை விட்ற மாதிரி மாசமான நாயி, பூனைன்னு இந்த ரோட்டோர பிள்ளையார்கிட்ட விட்டுட்டு போயிற்றானுங்க ..அது நேரா நம்ம வீட்டு வாசல்ல வந்து  நிக்குது " என்று பெருமூச்சோடு தோளில் துண்டைப் போட்டுக் கொண்டு வாசலை நோக்கி நடந்தார்.

நிகிலாவிற்கு... ஏன் அவர்கள் வீட்டில் எல்லாருக்குமே செல்லப் பிராணிகளைக் கண்டால் ஒரு வித பயம். அதனாலேயே வீட்டிற்கு வரும் நாய்களில்  ஒன்றைக்  கூட வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம்  வந்ததில்லை. பூனையை வளர்க்கலாம் என்று ஒரு சில முறை முயன்றனர் ஆனால் அது  பீரோ, அலமாரிக்கு அடியில் என்று அசிங்கம் செய்ய...முயற்சியைக்  கைவிட்டு விட்டனர்.  ஒரு வழியாக நாயை விரட்டிவிட்டு வந்த அப்பா "பாவம் சின்ன குட்டி...இங்க தான் கோவில்ல  நிக்குது " என்றார். " ஏய் நீ போயி கோலம் போட்ருடி" என்று தங்கையை அனுப்பி வைத்தாள் நிகிலா.

புறநகர் பகுதியில் வசிக்கும்  நிகிலாவின்  வீட்டிற்கு  இரு மருங்கிலும் வேறு  வீடுகள் கிடையாது. அரிசி, பருப்பு ஆலைகளே இருந்தன. வீட்டை விட்டு இறங்கியதும் ரோடு ...அடுத்து  பஸ் ஸ்டாப். வீட்டை ஒட்டி பின்புறமும்...சாலையைக் கடந்து முன்புறமும் கால்வாய் ஓடிக் கொண்டு...இல்லை...இல்லை நின்று கொண்டிருக்கும். அதனால் அழையா விருந்தாளிகளாக பாம்பு, தவளை, பூரான் என்று அனைத்து ஜந்துக்களும் அவர்கள் வீட்டு பாத்ரூம், புழக்கடைக்கு வருகை தரும். " அலெர்ட்டா இரு ஆறுமுகம்" என்று வடிவேலு சொல்வது போல படு கவனமாக  இருக்க வேண்டும். நகர வாசிகள் வந்தால் " இது என்ன வீடா ?! Zoo -வா ?! ஜுராசிக் பார்க் படத்துல வர்ற மாதிரி இருக்கு  " என்று கேலி பேசுவதும் உண்டு. 

மாலை கல்லூரி முடிந்து... பேருந்தை விட்டு வீட்டு வாசலில் இறங்கிய நிகிலா அங்கும் இங்குமாக பார்வையை சுழல விட்டாள். "அப்பாடா" என்ற நிம்மதி பெரு மூச்சோடு  வீட்டிற்குள் நுழைந்தாள். " என்னம்மா...நாய்க்குட்டி போயிருச்சா?! என்று  புத்தகப் பையை ஓரத்தில் வைத்தவாறே வினவினாள். "ம்ம்ம் ...ஒரு ஒன்பது மணிக்கு பாத்தேன்...பிள்ளையார் கோவில்ல வச்சிருந்த பாலை குடிச்சிட்டு ..வெயில்ல படுத்துக்கிட்டுருந்துச்சு, பஸ் ஸ்டாப்ல நிக்குற பசங்கதூக்கி  வெளையாடிகிட்டு இருந்தானுவ  ...பதினோரு மணிக்கு போயி பாக்குறேன் காணோம்...யாராச்சும் ரைஸ்மில்லு ஆளுங்க   எடுத்துகிட்டு  போயிருப்பாங்க... " என்றவாறு தேநீரை நிகிலாவிடம் கொடுத்தாள் அம்மா.

சில சமயம் வரும் நாய்க்குட்டிகள் நிகிலா வீட்டை விட்டு போவேனா என்று அடம் பிடிக்கும். அன்று முழுவதும் வாசல் கேட்டை மூடி வைத்தாலும் அங்கேயே இருக்கும். ஒவ்வொரு முறை கதவைத் திறக்கும் போதும் உள் புக முயலும். அவ்வாறான சமயங்களில் உதவிக்கரம் நீட்டுவது நிகிலாவின் தம்பி...அவர்களின் "சூப்பர் ஹீரோ"(அவனுக்கும் உள்ளூர நடுக்கம் தான்). அவன் கையாளும் யுக்தி இதுதான். நாய்க்குட்டியை துணிப்பையில் வைத்து...பையை வயர் கூடையில் வைத்து...கூடையை சைக்கிளில் வைத்துக்  கொண்டு அவன் பயணம் தொடங்கும். பத்து பதினைந்து நிமிடத்திற்கு பின்...போக்குவரத்து இல்லாத தெருவில் பையை வைத்து விட்டு...கண் இமைக்கும் நேரத்தில் சைக்கிளில் திருப்பிவிட வேண்டும் இல்லையேல் நாய்க்குட்டி பின் தொடரும்...மற்ற வாகனங்களில் சிக்கிக் கொள்ளும். ஒரு சில முறை பையை நான்கைந்து முறை சுழற்றி வைத்துவிட்டு வருவான். " வெளிய வந்த உடனே நாய்க்கு தல சுத்தும்...அடையாளம் தெரியாது " என்பான். " ஒரு வீட்டுக்கு பின்னாடி ஒளிஞ்சு பாத்துட்டு வந்தேன் எங்க போகுதுன்னு...நல்ல வேளை ஒரு சந்துக்குள்ள போயிருச்சு" என்பான். அதைக் கேட்கும் போது பாவமாக இருக்கும். என்ன செய்வது...அங்கு வரும் நாயையெல்லாம் வளர்த்தால் வீட்டில் மனிதர்களை விட நாய் தான் அதிகம் இருக்கும்.

நிகிலா பள்ளியில் படிக்கும் பொழுது அவர்கள் பெரியம்மா வீட்டில் ஒரு நாய் இருந்தது. மிகவும் வயதானது. அதிகம் குலைக்காது. சிறிது நாட்களில் அது நோய்வாய் பட்டு இறக்க...ஒரு நாய்க்குட்டியை வாங்கி வந்தனர். அது எப்பொழுது பார்த்தாலும் குதித்துக்கொண்டும், குலைத்துக் கொண்டும் இருக்கும். சில சமயம் கயிற்றை அறுத்துக்கொண்டு வீட்டை வலம் வரும். துணிகளை கடித்துக் குதறும். நிகிலாவும் அவளின் சித்தி குழந்தைகளும் மூலைக்கு ஒரு புறமாக சிதறி ஓடுவதும், கட்டிலில் மேல் ஏறிக்கொள்வதுமாக வீடு அல்லோல கல்லோலப்படும். சில சமயம் அதிகாலையில் இவை நடக்கும். நிகிலா போர்வையை தலையோடு  இழுத்து போர்த்தி ஒடுங்கிக் கொள்வாள். அனைவரின் மீதும் நாய் தாவி ஓடும். சமாளிக்க முடியாமல் அதையும் எங்கோ விட்டு விட்டனர். அதன் பிறகு நிகிலாவிற்கு நாயுடன் எந்த வித நேரடித்தொடர்பும் கிடையாது. ஒரு முறை அவள் அப்பாவை தெரு நாய் ஒன்று கடித்து விட்டது அன்றிலிருந்து நாயின் மேலான அவளின் பயம் மேலும்  பண் மடங்கு பெருகியது. தெரு நாய்களின் அட்டகாசங்களை பத்திரிகையில் படிக்கும் பொழுது பயத்தில் தலை சுத்தும் அவளுக்கு.

 திருமணமாகி வெளிநாட்டில் வசிக்கும் நிகிலாவிற்கு நாயுடனான உறவு (பயம் ) இன்றளவும்  தொடர்கிறது. கழுத்தில் "லீஷ்" உடன் மிக பாதுகாப்பாக செல்லும் நாய் கூட நிகிலாவைப் பார்த்தல் குறைக்கும், துள்ளும். சில சமயம் காலை சுற்றி வற முயலும்..இவள் ஒதுங்கிக் கொள்வதைப் பார்ப்பவர்கள் "எதுவும் செய்யாது...குழந்தை போல...PET செய்யலாம் " என்று கூறுவர் ஆனால் நிகிலாவோ " No Thanks ...எனக்கு பயம் " என்று கூறி விடுவாள். ஒரு வேளை நம் கண்ணில் தெரியும் பயம் அதற்கு தெரியுமோ...என்னவோ?! என்று நினைத்துக் கொள்வாள். 

ஒரு முறை அவளின் இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு Play Ground-ற்குச்  சென்று கொண்டிருந்தாள். எதிர்பாரா விதமாக  பிடியிலிருந்து விடுபட்ட நாய் நிகிலாவை நோக்கிப்  பாய்ந்தது. ஆஆஆ ... என்ற அலறலோடு விலக, நாய் அவளின்  மூன்று வயது மகன் மேல் ஏறி அவன் தலையை நனைத்து விட்டது. பதறி ஓடி வந்த  நாயின் காப்பாளரைப் பார்த்து " Please take Him...How Could You Let it go ?! '- என்று கோபத்தில்  கிட்டத்தட்ட அழுதே விட்டாள். அதிலிருந்து  அவளின் குழந்தைகளும்  நாயைக் கண்டால் நாலு காத தூரம் ஓடுகிறார்கள். " நாய்கிட்ட இருக்கிற பயத்துல இருந்து வெளியில வரணுங்க...நாய் வளர்க்கலாமா ?! " என்று கணவரிடம் கேட்டால்  அவர்  " எனக்கு Interest இல்ல " என்று தப்பி  ஓடுகிறார். எப்போதுதான் நிகிலாவிற்கு பயம் தெளியுமோ ?! காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

பின் குறிப்பு : சமீபத்தில் திருமணம் நடந்த நிகிலாவின் சூப்பர் ஹீரோ தம்பியை அவனின்   மாமனார் வீட்டில் (மைத்துனனுக்கு  பதிலாக)  வரவேற்றது யார் தெரியுமா ?!  அவர்களின் செல்ல நாய் ஜாக்கி!!! ( தம்பியின் Mind Voice ...அவனா நீ!!! )