Friday, October 1, 2021

ஸ்வீட் எடு கொண்டாடு !!

இன்று காலையில்  எழுந்தவுடன் வழக்கம் போல்  போனை இயக்கி வாட்ஸப் குறுந்தகவல்களை புரட்டிக்கொண்டிருந்தேன். ஒரு குழுமத்தில் இன்று உலக சாக்லேட் தினம் என்ற Forward வந்திருந்தது. இந்த இன்டர்நெட் யுகத்தில் தினமும் ஏதாவது சிறப்பு நாள் தானே!!! தினசரி காலண்டர் கூட இதற்கு விதிவிலக்கல்ல அவர்களும் ஏதாவது ஒரு நாளை அச்சடித்து தூள் கிளப்புகிறார்கள்.

இந்த தகவல்கள்  எல்லாம் சரியா? தவறா? என்ற விவாதத்திற்குள்  எல்லாம் நான் செல்ல விரும்பவில்லை. நான் சொல்ல வந்தது என்னனா எப்போ இருந்து நமக்கு Chocolates மீது  இந்த Craze? எனக்குத் தெரிந்து எண்பதுகளில் பிறந்த பலருக்கும் தேன் மிட்டாய், பாக்கு மிட்டாய் போன்ற உள்ளூர் தயாரிப்புகள்  மேல் தான் காதல்.

எப்போது தொலைக்காட்சி முக்கிய மீடியமாக வளர ஆரம்பித்ததோ அப்போது தான் சாக்லேட் மோகமும் எட்டிப்பார்க்கத் துவங்கியது எனலாம். நம் நாட்டின் தட்பவெட்பத்துக்கு ஏற்ற சாக்லேட்டுகள் அதாவது Hard Candies தான்  முதலில் கடைகளில் கிடைக்க ஆரம்பித்தது. சந்து முக்குக் கடைகளில் பாக்கெட்டுகளில் தொங்கிக் கொண்டிருந்த, சிறு தொழிளார்கள் உற்பத்தி செய்த மிட்டாய்களின் இடத்தை பள பள காகிதத்தில்  Wrap செய்யப்பட்ட இந்த சாக்கலேட்டுக்கள் லாவகமாக எடுத்துக் கொண்டன. இவர்களுக்கோ  கண்ணாடி ஜாரில் சிறப்பு இடம் அளிக்கப்பட்டு, கடையின் முன் வரிசையில் அமர்த்தி  வைக்கப்பட்டார்கள்.

அப்பொது கூட புளிப்பு மிட்டாய்களுக்கும் நூலில் கோர்த்து சாப்பிடக் கூடிய சூடம் மிட்டாய்களுக்கும் மதிப்பு குறைந்து விட வில்லை. தொன்னூறுகளில் மெது மெதுவாக வீடுகளில் Fridge வாங்க ஆரம்பித்தார்கள். 5 Star என்ற மில்க் சாக்லேட் அறிமுகம் ஆனது. அனைவரும் அடித்து பிடித்துக் கொண்டு வாங்கி ருசித்தர்கள். பேப்பரை கூட விட்டு வைக்கவில்லை வாயில் போட்டு மென்று துப்பினார்கள் என்றால் இந்த காலத்து குழந்தைகள் நம்ப மாட்டீர்கள். நெடு நாட்களுக்கு இதை அடித்துக் கொள்ள ஆளில்லை.

மிட்டாய்கள் சாக்லேட்களாக பெயர் மாற்றம் அடைய , ஐம்பது பைசாவாக இருந்த விலையும் 5 ரூபாயாக பதவி உயர்வு பெற்றது. மூன்று, நான்கு குழந்தைகளாக இருந்த வீடுகளும் ஒன்று, இரண்டு என குடும்பத்தை சுருக்கிக் கொள்ள, போனால் போகிறது என்று விலையைப் பற்றிக்  கவலைப் படாமல் வியாபாரம் நடந்தது. பிறந்தநாட்களுக்கும் சாக்லேட் குடுக்கலாம் என்ற யோசனையும் அறிமுகமானது. சமயங்களில் வேலை நடக்க குழந்தைகளுக்கு லஞ்சமாகவும் கொடுக்கப்பட்டது  

இதில் இருக்கும் பால் குழந்தைகளுக்கு ஊட்டத்தை அளிக்கிறது என்ற பரப்புரையுடன் அடுத்த சில வருடங்களில்  Dairy Milk சாக்லேட் அறிமுகமானது, இப்பொது விளம்பரங்கள் குழந்தைகளை மட்டுமல்லாது கல்லூரி செல்லும் இளம் பெண்களையும் டார்கெட் செய்யத் தொடங்கி இருந்தது. தொண்ணூறுகளின் இறுதியில் வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகமானதால் பெரும்பாலான சாக்லேட் விளம்பரங்களில் அவர்களே தோன்றினர்.

ஸ்னாக் ஆக இருந்த சாக்லேட் Comfort Food ஆக மாறியது. இக்காலகட்டத்தில் பல்வேறு பொருளாதாரப் படிகளில் இருக்கும் அனைவரையும் திருப்தி செய்யும் விதமாக பல்வேறு சாக்லேட்டுகள் சந்தையை மொய்க்க ஆரம்பித்திருந்தது. நன்றாக இருந்த நம் குழந்தைகளுக்கு பல் சொத்தையும் வர, டூத் பேஸ்ட். டூத் பிரஷ் என்று அந்த வணிகமும் கொடி கட்டிப் பறக்கத்துவங்கியது.

மில்லெனியும் வருடமும் வந்தது. இப்பொது சாக்லேட் என்பது குடும்பமாக ரசித்து ருசிக்கும் ஸ்னாக் ஆக மாறி இருந்தது. வீட்ல விசேஷமா ஸ்வீட் எடு கொண்டாடு என்று லட்டைத் திணித்துக் கொண்டிருந்த தொலைக்காட்சிக் குடும்பங்கள் Chocolate-ஐ பிரித்து வாயில் போட்டுக் கொண்டன. இப்பொது சாக்லேட் பல்வேறு விதங்களில் வெளிவர ஆரம்பித்திருந்தது. காதலர்களின் கண் கண்ட தெய்வம், கை கொடுக்கும் தெய்வம் எல்லாம் சாக்லேட் தான்.

 Stress, Tiredness, Sadness, Frustration எதுவாக இருந்தாலும் ஒரு  சாக்லேட் சாப்பிட்டால் Mood மாறும், Relieve கிடைக்கும்  என்று இளைஞர்கள் நம்ப வைக்கப்பட்டனர். தினமும் ஒரு சாக்லேட் சாப்பிடும் யுவதிகளை நான் கண்டிருக்கிறேன். இப்பழக்கம் ஒருவகையான Addiction ஆக மாறியது எனலாம். முதலில் வெளிநாடு சென்றவர்கள் சாக்லேட் வாங்கி வருவது பெருமையாக பார்க்கப்பட்டது பின்  இன்டர்நேஷனல் சாக்லேட் எல்லாம் எங்கும் கிடைக்கத் துவங்கியதிலிருந்து அவர்களுக்கும் மவுசு குறைய ஆரம்பித்தது.

மருத்துவ ரீதியாக பல்வேறு பயன்களை சாக்லேட் அதாவது அதிலிருக்கும்  கோகோ அளிக்கும் என்று ஆய்வறிக்கைகள் வெளிவரத் துவங்கியிருந்த போது அதிலிருக்கும் சர்க்கரை காரணமாக உடல் பருமனும் குழந்தைகளிடத்தில் அதிகரிக்கத் துவங்கியிருந்தது. 

தற்போதைய கால கட்டத்தில் "கடலை மிட்டாய், கமர் கட்டு சாப்பிடுங்கள்..நம்முடைய ஊர்களில் தயாரிக்கப்படும் வெல்லம் கலந்த இனிப்புகளை சாப்பிடுங்கள் அது தான் உடல் நலத்திற்கு உகந்தது"  என்று விளம்பரப்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

எது எப்பிடியோ "அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தானே!!!"

Thursday, September 9, 2021

ஆனந்த தாண்டவம்

முதன் முதலாக பரதநாட்டிய அரங்கேற்றத்தை நேரில் காணும் வாய்ப்பு!!!நிகழ்ச்சியைக் குறித்து அமைப்பினர் (Host) கூறிய விளக்கங்கள், அரங்கேற்ற ஏற்பாடுகள்  மற்றும் கண்ணைக் கவரும் அழைப்பிதழ்கள் போன்றவை எங்கள் எதிர்பார்ப்பை உச்சத்திற்கு இட்டுச் சென்றன என்றாலும் மூன்று மணிநேரம் அமர்ந்து பார்க்கும் வகையில் "Engaging" மற்றும் "Entertaining" ஆக இருக்குமா? என்ற சந்தேகமும் இல்லாமல் இல்லை.

என்னுடைய நம்பிக்கையின்மைக்குக் காரணம் பரதத்தைக் குறித்து எனக்கு இருந்த குறுகிய அறிதல் தான். நான் என்றில்லை நம்மில் பலருக்கும்  "Classical Dance" என்றாலே புரியாத பாஷையில் ஒலிக்கும் பக்திப்  பாடல்களுக்கு நடனமாடும் தூர்தர்ஷன் "நாட்டியாஞ்சலி" நிகழ்ச்சிகளும் பள்ளி ஆண்டு விழாவில் ஆடப்படும் பரத நாட்டிய திரைப்படப் பாடல்களும் தான் நினைவுக்கு வரும். திரைப்படங்களில் காட்டியதால் தான் ஓரளவிற்காவது பரதத்தைப் பற்றிய அறிமுகம் நமக்குக் கிடைத்தது என்று கூறினாலும் மிகையாகாது!!!

இவ்வாறான எண்ணத்துடன் அரங்கிற்குள் நுழைந்த எனக்கு வரவேற்புரை, ஆசிரியர் அறிமுகம் என்று  நிகழ்ச்சிகள் துவங்கி சில மணித்துளிகள் சாதாரணமாகத் தான் இருந்தது. முழு முதற் கடவுள் விநாயகருக்கான நடனம் என்று முன்னுரை வழங்கிய பின் மேடையில் ஒளி மாற்றங்களுடன் சகோதரிகளான சரயுவும் சிந்துவும் தோன்ற ஒரு வித உணர்வு மாற்றம் அரக்கெங்கும் பரவியது எனலாம்.

பரதத்தைப் பற்றிய Technical விஷயங்களெல்லாம் நம் பாமர அறிவிற்கு அப்பாற்பட்டது எனினும் அவ்விருவரின் பாவம் (Bhavam) அங்கிருந்த அனைவரிலும் ஒருவித கிளர்ச்சியை உண்டாக்கியது என்பது மறுக்க முடியாத உண்மை.

ஐயப்பனைப் பற்றிய கதையை ஆசிரியை விளக்க இவ்விருவரும் நிமிடத்திற்கு நிமிடம் என முகத்தில் உணர்ச்சிகளை மாற்றி   நவரசத்தையும்  ஆடலுடன் கலந்து  Enact செய்த விதம் புல்லரிக்கச் செய்தது.

ஒருவர் சிவனாக மாற மற்றொருவர் சக்தியாக மாறுகிறார், குறும்பு செய்யும் கண்ணன் அடுத்த பாடலில் "மாலை மணிவண்ணா" என்று ஆண்டாளாக அவதரிக்க, யசோதை திருமாலாகி தெய்வீக சிரிப்பில் காண்போரை கவர்ந்திழுக்கிறார்.

இவ்விருவரிடம் தோன்றிய முக பாவனைகள் இவர்களின் ஆசிரியை முகத்திலும் மின்னல் வேகத்தில்  தோன்றித் தோன்றி மாறியதையும் நான் கவனிக்கத் தவறவில்லை.

இவ்வாறு மெய் மறந்த நிலையில் இருந்த  நம்மை ஒரு சிறு இடைவேளை என்று தட்டி எழுப்பினர்.

இப்பொது மனதில் இருந்த சந்தேகம் முற்றிலும் அகன்றிருக்க Second Half-யை பார்க்க மனம் பரபரத்தது. குடுத்த சிற்றுண்டியை  அரக்க பரக்க முடித்துவிட்டு அரங்கிற்குள் முழு ஆர்வத்துடன் நுழைந்தோம்.

ஜதிஸ்வரம், சப்தம், வர்ணம், தாண்டவம்  என்று அனைத்தையும் ஆடலில் கொண்டுவந்து திரிபுர சுந்தரியாகவும், ஆடல் கடவுள் நடராஜராகவும் மேடையெங்கும் பரவி, நாங்கள் இருவர்..இல்லை..இல்லை  இருவரும்  ஒருவர் என்று மாயம் காட்டிப் பின்னிப் பிணைந்து   இரட்டைச் சகோதரிகள்  ஆடிய நடனத்தைக் காண இரண்டு ஜோடிக்  கண்கள் இருந்திருக்க வேண்டும்!!! 

அவ்வப்போது  நண்பர்கள் கூட்டம் கைதட்டி ஆர்பரித்தும் ஆரவார சப்தங்கள் எழுப்பியும் நடனக் கலைஞர்களின் உற்சாகம் குறையாத வகையில் ஊக்கம் கொடுத்தனர். 

பார்வையாளர்கள் பலரின் மனதில் அவர்களின் இளமைக்கால நடன அனுபவங்கள் நிழலாடிக் கொண்டிருக்கையில், நம் குழந்தையும் இவ்வாறு நடனமாடினால் எவ்வாறு இருந்திருக்கும் என்ற கற்பனையும் கண்டிப்பாக இணைந்திருக்கும். என் கண்களுக்கோ சிந்துவும் சரயுவும் பத்மினி, ஷோபனா, பானுப்பிரியாவாக உருமாறி இருந்தனர். 

பல இளம் உள்ளங்களில் தானும் இந்த  ஆடல் கலையை கற்க வேண்டும் என்ற உந்துதலையும் (Inspiration) இவ்விருவர் விதைத்து இருப்பார்கள்  என்பதையும் இங்கு குறிப்பிட்டாக  வேண்டும்.  

இவர்களின் இக்கலைத்திறனை வளர்த்தெடுத்தது மட்டுமல்லாமல் பலரின் முன்னிலையில் அரங்கேற்றியது வரை அவர்களுக்கு உறுதுணையாக திகழ்ந்த பெற்றோரின் உரையுடன், நண்பர்கள், உற்றார்கள், உறவினர்கள் என்று பலரின் வாழ்த்துச் செய்திகளும் காணொளி வடிவில் திரையிட்டுக் காட்டப்பட்டது நம்மை நிகழ்காலத்திற்கு அழைத்து வர உதவியது. 

தங்கள்  குருவின் திருக்கரங்களால் நிறைவுப்  பட்டத்தை வாங்கிய சகோதரிகள் தங்களின் இப்பயணத்தில் உடன் வந்த நபர்களுக்கு நன்றி சொல்ல மைக்கை கையிலெடுக்க  குறும்பும், குதூகலமும், இளமைத் துள்ளலும்  கலந்த செயற்கை அற்ற அவர்களின்  பேச்சு அரங்கத்தினரை சிரிப்பில் ஆழ்த்தியது. இதுவரை மேடையில் ஆடியவர்களுக்கும் இவர்களுக்கும் தொடர்பே இல்லையோ என்று எண்ணம் எழுந்த  அதே வேளையில் பரதத்தில் எந்த அளவிற்கு ஈடுபாடும், கடின உழைப்பும், கவனமும் இருந்திருந்தால் இது சாத்தியமாகியிருக்கும் என்றும் வியக்கத் தோன்றியது!!!  

இறுதியாக மங்கள நடனத்திற்கு முன் மேள வாத்தியங்களை மைய இசையாகக்  கொண்டு வெளிவந்த சினிமாப்  பாடல்கள் மற்றும் தங்கள்  தாய்மொழிப் பாடலுக்கு அவர்கள் ஆடிய நடனம் பார்வையாளர்களை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்து சீர்படுத்தியது.

மூன்றரை மணி நேரம் சென்றதே தெரியவில்லை என பார்வையாளர்கள் பேசிக் கொள்வதை அரங்கத்தின் வெளியே கேட்க முடிந்தது இது இரட்டைச் சகோதரிகளுக்கு கிடைத்த வெற்றி அன்றி வேறல்ல.

இவ்வேளையில் இவர்களுக்கு சிந்து, சரயு என்று பெயர்  சூட்டிய இவர்களின் பெற்றோரை பாராட்டியே தீர வேண்டும். நதி போல் நளினமாக மேடை எங்கும் பரவி  நாட்டியமாடிய சகோதரிகளின் நடனச் சுழலில் சிக்காதவர்கள் அரங்கத்தில் இருந்தாரா என்பது சந்தேகமே!!!

இவர்களின் (நதிகளின்) இப்பயணம் மேலும் தொடர்ந்து கலைக்  கடலில் சங்கமிக்க  வாழ்த்துக்கள்!!!

"ஆடல் கலையே தெய்வம் தந்தது" என்பதுதான் எத்தனை உண்மை.


 

Monday, August 2, 2021

அலைகள்

"சீனா-ல கொரோனா என்ற பேர்ல வைரஸ் பரவுதாம்? மூச்சுக் காத்துலயே தொத்துற இந்த வைரஸ் வந்தா மூச்சு விட முடியாம கஷ்டப்படுவாங்களாம்..அப்புறம்  கொத்து கொத்தா மனுஷங்க  சாகுறாங்களாம்.. அதனால அங்கயெல்லாம் மக்கள வீட்டுக்குள்ளேயே அடைச்சு வச்சு சோறு தண்ணி குடுக்குறாங்களாம்..இங்கயும் எப்பிடியும் வந்துருமாம்" 

என்ன மேல இருக்குற விஷயங்களை படிச்சா எங்கயோ கேட்ட மாதிரி இருக்கா? ஆமாங்க..2020 பிப்ரவரி வாக்குல இந்த செய்திகளை எல்லாம் கேக்கும் போது, பார்க்கும் போது  ஏதோ சந்திரமுகி படத்துல பேய்க்கு பயந்து வடிவேலு பேசுற வசனங்களைப் போல நான்  லேசா எடுத்துகிட்டேன் ஆனா Constantine படத்தை போல  இந்த கொரோனா பயமுறுத்தும்ன்னு இந்த ஒன்னரை வருஷத்துல நல்லாவே புரிஞ்சிக்கிட்டேன்.

உலகமே நம் உள்ளங்கையில் என்று உவகையோடு  இருந்த நம்மை இந்த கொரோனா தனது கைக்குள் அடக்கி.. 5ஜி இன்டர்நெட்டை விட வேகமாக தேசமெங்கும்  பரவி, நம்மை House Arrest செய்தது. அகதிகளைப் போல நம்மை  ஒரே இடத்தில பூட்டி விட்டு, பாஸ்போர்ட், விசா இல்லாமல்  உலகம் முழுவதும் சுற்றி வருகிறது இந்த பாழாய் போன கொரோனா.  

இந்த கொரோனவால் பல்வேறு நல்ல விஷயங்களும், இதெல்லாம் சாத்தியமே இல்லை என்று நாம் நினைத்த நிகழ்வுகளும் அரங்கேறியது மறுக்க முடியாத உண்மை  உதாரணமாக நமது வரவேற்பறைக்கு வந்த வகுப்பறை!!! வேலை வேலை என்று Workaholics ஆக இருந்தவர்களுக்கு கூட கட்டாய விடுமுறை, குடும்பத்தாருடன் செலவழிக்க அதிக நேரம். மனதிற்கு பிடித்த பல விஷயங்களை செய்வதற்கும் நாமே அறியாமல் நம்மில் உறங்கிக் கொண்டிருக்கும் திறன்களை வெளிக்கொண்டு வருவதற்கும்  கிடைத்த கால அவகாசம். பல வருடங்களாக தொடர்பிலே இல்லாத பலருடன் இந்த கொரோனா கால கட்டத்தில் தொலைபேசி வழியாக பேசிய நண்பர்களை  நான் அறிவேன்.

நானும் என்னுடைய பங்கிற்கு 2020 ஏப்ரல், மே வாக்கில்  ஒன்று விட்ட சித்தப்பா, அத்தை என்று அனைவரிடமும் தொலை பேசினேன்  "அமெரிக்காவிலே தான் கொரோனா வேகமா பரவி நெறைய பேர் சாகுறாங்களாம்..பத்திரமா இருங்க..எப்பிடி இந்த அளவுக்கு விட்டாங்க" என்று கை கொட்டி சிரிக்காத குறையாக எனக்கு அவர்கள் Counter கொடுக்க, அவர்களையும்  பத்திரமாக இருக்கச் சொல்லி எச்சரித்தேன்.

கொரோனா வந்து அவரவர் வீட்டிலேயே முடங்க பலர் தங்கள் சொந்த ஊரைப் பார்த்து செல்ல ஆரம்பித்தனர் அதன் பலனாக 20 வருடங்களுக்கு மேல் தனியாக வாழ்ந்த பல பெற்றோர் தங்கள் குடும்பத்தோடு வாழும் வரத்தைப் பெற்றனர். Senior citizens-ம் இப்பொது கேபிளை துண்டித்து விட்டு Netflix, Prime-ல் படம் பார்க்கின்றனர். 

 பல வருடங்களாகப் பேசிக் கொள்ளாத உறவுகளும் பகையை மறந்து  ஒருவரை ஒருவர் குசலம் விசாரித்துக் கொண்டதை நான் கண்கூடாகக் காணப் பெற்றேன். பல குடும்பப் பிரச்சனைகளும் கடந்த ஒன்றரை வருடங்களாக Freeze ஆகி நிற்கின்றன. "திருமணம்" படத்தில் சேரன் கூறியதைப் போல ஆடம்பரம் இல்லாத திருமணங்கள் நடைபெற்றன. வீட்டிலேயே திருமணம் என்றால் கொ.முன்  யாராவது நம்பி இருப்பார்களா? "தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் கடவுள்" என்பதை உணர்த்தும் விதமாக கோவில்களும் மூடப்பட்டது வரலாற்று நிகழ்வு என்று தான் சொல்ல வேண்டும்!

நாமும் பல வருடங்களாக இன்டர்நெட், WhatsApp, Zoom எல்லாம் உபயோகித்து கொண்டுதான் இருக்கிறோம் ஆனால் அதில் பிறந்தநாள் கொண்டாடவில்லையே ஏன்? வீட்டு விசேஷங்களை வெளிநாடு வாழ் உறவுகளுக்காக  அதில் நேரலையாக ஒளிபரப்ப தோன்றவில்லையே? 

காவல் துறை, மருத்துவத் துறை - இவர்களின் மேல் மக்களுக்கு என்றுமே நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை ஆனால் இந்த கோவிட் கால கட்டத்தில் First Responders என்ற பெயரில் தங்கள் உயிரை பணயம் வைத்து மக்களுக்கு உதவிய இவர்கள் அல்லவா True Heroes (Avengers?)

இந்த கொரோனா காலத்தில் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்தவர்களுக்காக, மருத்துவ வசதிக்காக, எதிர்பாரா விபத்துகளில் சிக்கியவர்களுக்காக, கல்வி கட்டணம் செலுத்துவதற்காக  என்று நாம் மனிதாபிமான அடிப்படையில் ஒன்று சேர்ந்து உதவி "அன்பே சிவம்" என்று நிரூபித்ததும் நாம் என்று பெருமை பட்டுக் கொள்வோம் 

இவ்வாறு Pandemic Period-ல் தொலைந்த உறவுகள்  எல்லாம் அருகில் வர நம்மில் பலர் நெருங்கிய உறவுகளை இழக்க நேரிட்டது என்பதையும் கூறித்தான் ஆக வேண்டும். Lockdown, Quarantine, Social-Distancing..அப்பப்பா கொடுமை நம்மளால முடியாது என்று நாம் சகஜ நிலைக்கு திரும்ப நினைக்கும்  நேரத்தில் எல்லாம் நம் காதில் விழும் அவல செய்திகளைக் கேட்டு தன்னுடைய ஓட்டில் தலையை இழுத்துக் கொள்ளும் ஆமையைப் போலத் தான் ஒடுங்கி  வாழ வேண்டி இருக்கிறது.

ஒன்றாவது அலை, இரண்டாவது அலை, சிற்றலை, பேரலை என்றவர்கள் தடுப்பு ஊசி வந்தால் கொரோனோவை ஒழித்து விடலாம் என்று ஒன்றுக்கு இரண்டு ஊசியை குத்தினார்கள்.. இதோ  இப்போது மூன்றாவது அலைக்குத் தயாராகி விட்டார்கள். தன்னுடைய ஒற்றை சொடுக்கில் உலகத்தை அழிக்கும் Thanos ஐ  விட கொடூரமாக மக்களை துன்புறுத்தி மடிய வைக்கும்  இந்த கொரோனாவோ எனக்கு "End Card" ஏ இல்லை என்று சிரித்துக் கொண்டிருக்கிறதே!!!    

கொரோனா பரவலுக்கு நாம் "அரசு இயந்திரம், நிலையை உணர்ந்து செயல்படாத மக்கள், அவசர கதியில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி, வைரஸின் தீவிரம்" என்று பல காரணிகளை சுட்டிக் காட்டலாம் ஆனால் நாம் அனைவருமே பொறுமை காக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது. அதே நேரத்தில் இந்த Pandemic காலத்தில் நாம் கண்டு செய்த பல  நல் முயற்சிகளை தொடர்ந்து முன் எடுத்துச் செல்வதும் அவசியமாகிறது. மனிதர்களை அழித்த கொரோனா மனித நேயத்தை வளர்த்தெடுத்ததா?

கொரோனாவை முழுமையாக ஒழித்துக் கட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை. End Game is Approaching... 

Tuesday, May 18, 2021

The Night Owl

ஆங்கில வாசிப்பில் ஆர்வமுள்ளவர்களுக்காகவும் ஒரு மாற்று முயற்சியாகவும் ஓர் இரவல் பதிவு.

 நண்பர் விஜய் ஈஸ்வரியின் கவிதை போன்ற குறுங்கதையை உங்களுக்காக இங்கு பதிவிடுகிறேன். ரசிப்பீர்கள் என நம்புகிறேன்.

                                                                  The Night Owl

As their paths Continued to diverge he was left only with fading memories of their precious little time together as friends and occasional dreams.

She had moved on years ago.

The dreams were not regular but very vivid when they do come to him.

Most of the times she was as agonizing to him in the dreams as she was in reality.

But on very few occasions she was as beautiful and as loving a partner as he hoped that she would one day be. Albeit only in the dreams of his reality.

On such rare occasions, the dream would end too quickly just as their relationship did before flowering into love. He would wake up in the middle of the night wanting nothing more than to get back into the dream and be with her for a little longer. To only realize that he can't.

He would lay awake in the darkness listening to soft cooing and snoring of his beautiful children.

Written By - Vijay Er.


Thursday, February 25, 2021

பராக் ..பராக்

வருடாந்திர பரிசோதனைக்காக நேற்று மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். கொரோனா காலமாதலால் கூட்டமே இல்லை. வழக்கமான கேள்விகளுக்கு பிறகு நீங்கள் உங்கள் அழைப்பு வரும் வரை காத்திருக்கலாம் என்று கூறிவிட இடைவெளி விட்டு போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தேன். எனக்கு முன் ஒரே ஒரு பெண்மணி காத்துக் கொண்டிருந்தார். சுற்றும் முற்றும் பார்த்தேன். கையில் வைத்து புரட்ட வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களும் அகற்றப்பட்டிருந்தது. தொலைக்காட்சியில் பழைய வீட்டை புதுப்பித்து எவ்வாறு அதிக விலைக்கு விற்பது என்பதைப் பற்றிய நிகழ்ச்சி மௌன மொழியில் ஓடிக் கொண்டிருந்தது. புதுப்பித்த தங்கள் வீட்டைப் பார்த்து ஓர் தம்பதியினர் ஆனந்த கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தனர். வேறு வழியில்லாமல் எனக்கு பின் வந்த இருவரைப் போல கைபேசியை நோண்ட ஆரம்பித்தேன். அதில் ஒருவருக்கு அலுவலக மீட்டிங் போல மிக கவனமாகக் ஹெடிபோனில் கேட்டுக் கொண்டிருந்தார்.

பொதுவாகவே எனக்கு மருத்துவரைப் பார்ப்பது மருத்துவமனை விசிட் என்றாலே அலர்ஜி தான். என்னுடைய தந்தை மருத்துவமனை அலுவலக ஊழியராக இருந்ததால் காய்ச்சல், தலைவலி மாத்திரைகளும், தைலங்களும், களிம்புகளும் வீட்டிலேயே இருக்கும் சில சமயம் Antibiotics கூட நாங்களாகவே அப்பாவின் வழிகாட்டுதலின் பேரில் சாப்பிடுவதும் உண்டு. (பிற்காலத்தில் என் அண்ணன் கூட என் அப்பாவை போலி மருத்துவர் என்று கேலி செய்ததுண்டு)  ஆதலால் மழைக்கு கூட ஆஸ்பத்திரி பக்கம் ஒதுங்குவது இல்லை.

நான் தான் இப்பிடி என்றால் எனக்கு மணாளனாக வாய்த்தவர் எனக்கும் ஒரு படிக்கு மேலே!!! மாத்திரை கூட சாப்பிட மாட்டார். ரெண்டு நாள்ல தானா சரியாயிடும் என்று இருப்பவர் ஆகவே No Hospital. இருந்தும் ஒரு சில விஷயங்களுக்கு மருத்துவரைப் பார்த்துத்தானே ஆக வேண்டும். 

திருமணமான சில மாதங்களிலேயே..இத்தேசத்திற்கு வந்த புதிதில்  டாக்டரைப் பார்க்க வேண்டிய சூழல் உருவானது. ஊரில் என்றால் இந்த மாதிரியான விஷயங்களுக்கு அம்மாவை அழைத்துக் கொண்டுதான் போவோம் ஆனால் இந்த அமெரிக்க வாசத்தில் நமக்கு ஒரே சொந்தம் தானே!!!

Appointment எல்லாம் வாங்கிக் கொண்டு அங்கு சென்று அமர்ந்தால் அங்கு மையான அமைதி. கிணற்றுக்குள்ளிருந்து வருவது போல மெல்லிய பாடல் எதிலோ ஒலித்துக்  கொண்டிருந்தது . ஏற்கனவே குமட்டிக் கொண்டிருந்த எனக்கு மயக்கம் வருவது போல் இருந்தது. இதுல என்ன இருக்குன்னு நீங்க நினைக்கிறது புரியுது.. அமெரிக்க ஆஸ்பத்திரி எப்பிடி இருக்கும்னு எனக்கு தெரியாது இல்லையா ? நான் நம்ம ஊரு தெருமுனை லேடி டாக்டர் கிளினிக்கை மனதில் வடித்துக் கொண்டு வந்திருந்தேன்.

அம்மாவோடு வரும் இளம்பெண்கள், போர்வையால் முக்காடு போட்டுக் கொண்டு வரும் தாதாக்கள், அழகாக பொட்டு வைத்துக் கொண்டு தனக்கு தடுப்பு ஊசி குத்தப் போகிறார்கள் என்று தெரியாமல் எச்சில் வழியச் சிரித்துக் கொண்டிருக்கும் பாப்பாக்கள், எனக்கு ஊசி வேணாம் என்று அழுது ஆர்ப்பாட்டம் போட்டு அப்பாவிடம் கொட்டு வாங்க ரெடியாக இருக்கும் சிறுவர்கள், "எவ்வளவு நேரமா உக்காந்திருக்கீங்க? டாக்டர் வந்துட்டாரா?" என்று விசாரிக்கும் பெண்மணிகள், "அவசரப்படாதீங்க..பேரைக் கொடுத்துட்டு உக்காருங்க" என்று சிடு சிடுக்கும் மருத்துவ சிப்பந்திகள் என்று  பார்த்துப் பழகிய எனக்கு முற்றமைதியும் முண்டி அடிக்கும் மக்கள் கூட்டமும் இல்லாத அமெரிக்க மருத்துவமனைகள் ஏமாற்றமே.   

இங்க என்னைப் பத்தி உங்களுக்கு சொல்லியே ஆகணும் ..  எனக்கு வேடிக்கை பாக்குறதுன்னா ரொம்பப் பிடிக்கும். ரெண்டாவது மூனாவது படிக்கும் போது மரத்தடி கிளாசில் வேடிக்கைப் பார்த்து அடிக்கடி திட்டு வாங்கியதுண்டு. எப்ப பாத்தாலும் பராக்கு என்று டீச்சர் என் கொழு கொழு கன்னத்தைப் பிடித்து கிள்ளுவதும் காதைப் பிடித்து திருகுவதும் வழக்கம். சில சமயங்களில் ரோட்டில் சினிமா போஸ்டர் பார்த்துக் கொண்டே நடந்து முன் பின் தெரியாதவர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதும் உண்டு. பராக்கு பார்த்துக் கொண்டு சைக்கிள் சக்கரத்தில் கால் விட்ட Record எல்லாம் எனக்கு உண்டு. இவ்வளவு ஏங்க..ஹோட்டலுக்கு சாப்பிட போனாலே நாலு பேரு தட்டுல என்ன இருக்குன்னு பாத்துட்டு ஆர்டர் கொடுக்குற மக்கள் தானே நம்மளெல்லாம்.. வேடிக்கை பாக்குறது எனக்கு ரத்தத்திலே ஊறி போச்சு.. விமானதுல கூட முன்னாடி, எதுக்க இருக்குறவன்லாம் என்ன படம் பாக்குறாங்கன்னு பாத்துட்டு Movie choose பண்ற Category நானெல்லாம் !!!

அப்ப இங்க எப்பிடி தான் காலம் தள்றீங்கன்னு நீங்க கேக்குறது புரியுது? என்ன பண்றது வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். இங்கும்  கிடைக்கிற Magazine-யை புரட்டிகிட்டே வர்ற போறவங்க, Receptionist -ன்னு ஒன்பது மாசமும் பாத்துகிட்டும், ஆபீசுக்கு நேரமாகுது இன்னும் கூப்பிட மாட்டேங்குறாங்கன்னு பக்கத்தில் உட்கார்ந்து புலம்பும் கணவரிடம் உடனே பாக்காதீங்க.. Casual-ஆ பாருங்கன்னு  காட்டிக் கொண்டும்   தான் இருந்தேன். வயிற்றை தள்ளிக் கொண்டு வந்தவர்களெல்லாம் கார் சீட்டில் பச்சை குழந்தையோடு வருவதைப் பார்ப்பது பரவசமாகத் தான் இருக்கும். மற்றவர்களை உறுத்தாத வகையில் மேலோட்டமாக வேடிக்கை பார்ப்பது நமது பிரச்சனையை சில மணி  நேரமாவது  மறகடிக்கச் செய்து மனதை லேசாக்கும்  என்பது உண்மை தானே!!

தொழில் நுட்பம் வளர்ந்து விட்ட இந்த காலத்திலே ஆமை தன் ஓட்டில் ஒடுங்கிக் கொள்வது போல  வந்த உடனேயே அனைவரும்  மொபைலில் முழ்கி விடுகிறார்கள் குழந்தைகள் உட்பட. யாரும் யாரையும் முகத்தை தூக்கிக் கூட பார்ப்பது இல்லை அதனால் தான் என்னவோ கொரோனா வந்து மாஸ்க் உடன் வந்தாலும் யாருக்கும் எந்த வித்தியாசமும் தெரிவதில்லை. 

நேற்று கூட மொபைலை பார்த்தவாறே எனக்கு பிறகு வருபவர்கள் கூறும் பிறந்த வருடத்தைக் கேட்டு கொண்டே   "அடடே நம்மள விட சின்ன பொண்ணா இருக்காளே, நம்ம அம்மா வயசு இருக்கே இவங்களுக்கு" என்று டைம் பாஸ் செய்து கொண்டிருந்தேன். வழக்கத்திற்கு மாறாக வெகு சீக்கிரமே என் பெயர் அழைக்கப்பட்டு விட்டது (என் பெயர் தானா? ஏதோ அவர்களுக்கு தெரிந்த உச்சரிப்பில் கூப்பிடுகிறார்கள் என்ன செய்வது !!) 

டாக்டரை பார்த்துட்டு வந்து உங்ககிட்ட பேசறேன் அதுவரைக்கும் Observe Do Not Stare 😊


Sunday, September 13, 2020

Cool Dude

நம்மில் சிலருக்கு அம்மா வழி தாத்தா பாட்டிகளின் பேரிலும் சிலருக்கு அப்பா வழி தாத்தா பாட்டிகளின் மேலும் அதிக பிரியம், அபிமானம் இருப்பதுண்டு ஆனால் எங்களுக்கோ இரு இடத்திலும் ராஜ உபச்சாரம் என்பதாலும் அவர்களோடு நேரம் செலவிட சரிசமமான  வாய்ப்பு அமைந்ததாலும்    இருசாராருக்குமே எங்கள் மனதில் முதலிடம் இருந்தது அதிலும் முக்கியமாக எங்கள் அம்மா வழி தாத்தா. எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்கள் அவரை பார்த்து வந்திருக்கிறேன் எனினும் அவர் அந்த காலத்திலிருந்தே ஒரே மாதிரியாகத் தானே இருக்கிறார்?! என்ற எண்ணம் என்னுள் எழுவதுண்டு!!!

ஒன்றாம் வகுப்பு படிக்கும் பொழுது பள்ளியிலிருந்து அழைத்துச் செல்ல அவ்வப்போது வருவார். சராசரியான உயரமும் ஒல்லியான உடல் வாகும் கொண்டிருப்பார். சுண்டினால் சிவக்கும் சிவப்பு நிறம். இரண்டு கை விரல்களிலும் நீட்டமாக நகம் வளர்த்திருப்பார். வழுக்கைத் தலை. அதிகம் பேசமாட்டார். திருநீறு அணிந்திருப்பார். இரு கைகளிலும் பச்சை குத்தியிருப்பார். வெள்ளை வேஷ்டி, அரைக்கை  சட்டை.

தனது ஐம்பதுகளிலேயே சில  பற்களை இழந்திருந்தார் அதனால் மிக மெதுவாகவே சாப்பிடுவார். பொறியலில்  இருக்கும் கடுகு, பருப்பு போன்றவற்றை ஓரத்தில் ஒதுக்கி ஒதுக்கி சாப்பிட்டு முடிகையில் தட்டும் கைகளும் உலர்ந்திருக்கும். அதைப்பார்த்து காப்பி அடித்து என் தங்கை  திட்டு வாங்கியது வேறு கதை!!! வெற்றிலை போடும் பழக்கம் உண்டு என்பதால் அவரிடம் அவ்வப்போது பாக்கு வாங்கி சாப்பிட்டதும் இடிப்பானிலிருந்து நன்கு அரைத்த வெற்றிலை பாக்கு கலவையை சுவைத்ததும் உண்டு. அவர் முகச் சவரம் செய்து முடித்ததும் எதோ பனிக்கட்டி போல் இருக்கும் வெள்ளைக் கல்லை கன்னத்தில் தேய்த்துக் கொள்வார் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு வாயில் ஈ போவது தெரியாமல் அமர்ந்திருப்போம்!!!

கணக்கராக அவர் வேலை பார்த்த மில் ஒரேயடியாக இழுத்து மூடிய பின் அவர் முழு நேர வேலைக்கு எங்கும் சென்றதாக என் நினைவில் இல்லை. மில் வேலை பறி போகப் போகிறது என்று தெரிந்தும் ராஜினாமா செய்யாமல் (செய்பவர்களுக்கு பணம் கொடுத்தார்களாம்) கடைசி வரை அங்கேயே இருந்ததைப் பற்றி அடிக்கடி பாட்டி திட்டிக் கொண்டிருப்பார். எதைப் பற்றியும் அதிகம் அலட்டிக் கொள்ள  மாட்டார். இப்போது இவ்வாறு இருப்பவர்களை "Cool Dude " என்கிறோம்  ஆனால் அப்போது?!

வீட்டிற்கு ஒரே பையன் என்பதால் மிகச் செல்லமாக வளர்ந்தவர் என்று அம்மா சொன்னதுண்டு. தோட்டம், வயல் என்று இருந்த சொத்துக்களை கோர்ட்டில் தன் தங்கைகளிடம் இழந்தவர் கடைசியாகத்  தன் பெயரில் இருந்த வீட்டையும்  விற்று  சித்திகளின் திருமணத்தை முடித்தார்.

அந்த கால ஆங்கில மீடியத்தில் ஆறாம் வகுப்பு வரை படித்திருந்தார் அதனால் சரளமாகவே ஆங்கிலம் வாசிப்பார். தமிழ் பத்திரிக்கைகளும் அம்புலிமாமா கதை புத்தகங்களும் அவர் வாய் விட்டு வாசிப்பது எங்களுக்கு சிரிப்பாக இருக்கும். பாடுவது போல் படிப்பார். கணக்கில் கில்லாடி. அவ்வப்போது எங்களிடம் ஐம்பது காசு கொடுத்து அவருடைய  பேனாவுக்கு மை ஊற்றிக் கொண்டு வருமாறு கடைக்கு  அனுப்புவார். மீதி காசு கொடுக்கும் போது கணக்கு சரியாக இல்லாவிட்டால் "மண்டூ  மண்டூ  " என்று திட்டி...ஒரு Filler மை-யின் அளவு என்ன?!  எத்தனை  "Ounce " மை பேனா கொள்ளும் என்று எங்களை ஒரு வழி செய்து விடுவார்.

இந்த கால தாத்தாக்களைப் போல எங்களுக்கு தின்பண்டம், விளையாட்டுப்  பொருட்கள் எல்லாம் வாங்கிக் கொடுத்ததில்லை ஆனால் பள்ளி விட்டு வரும் பொழுது பாட்டி வீட்டில் இல்லாத பட்சத்தில் இனிப்பு தித்திக்க டபுள் ஸ்ட்ராங்கில்  ஒரு டீ போட்டுக் கொடுப்பார் பாருங்கள் இப்போது நினைத்தாலும் நாக்கில் இனிக்கிறது. சில நேரம் காலை வேளையில் ராகிப் புட்டு வாங்கி வருவார் அதிலும் எக்ஸ்ட்ரா சர்க்கரைச் சேர்த்தே கொடுப்பார்.

அஜீரணக் கோளாறு இருந்ததால் பெரிதாக ஏப்பம் விடுவார். மருத்துவமனை அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த எங்கள் அப்பாவிடம் மாத்திரை கொண்டு வரச் சொல்லி சாப்பிடுவார். சில நேரங்களில் ரஸ்க்  மட்டுமே அவருடைய ஆகாரம். எங்கும் நடந்தே செல்வார். அவர் மருத்துவமனை சென்று நான் பார்த்ததில்லை. எங்களோடு சேர்ந்து கேபிள் டிவியில் போடப்படும் "ஜுராசிக் பார்க் " போன்ற படங்களை காதில் கை வைத்து வசனங்களை கூர்ந்து  கேட்டு ரசிப்பார்.

நான் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கையில் பாட்டி இறந்து விட்டார். வீட்டிற்குள் வழுக்கி விழுந்தபடியால் தாத்தாவால்  walker வைத்துக் கொண்டு மட்டுமே நடக்க முடியும் என்றானதால் சென்னையில் இருந்த மாமா வீட்டில் சென்று தங்கி விட்டார். எட்டு வருடத்திற்குப் பின் மாமா வீட்டிற்கு கல்லூரி விஷயமாகச் சென்றபோது பார்த்தேன். சற்று மெலிந்திருந்தாலும் அதே போலவே இருப்பதாக எனக்குத் தோன்றியது. நான் யார் என்று அவருக்குத் தெரியவில்லை. மறதி நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மற்றபடி எந்த உடல் உபாதையும் இல்லை. தொலைக்காட்சி, தினப் பத்திரிகை என்று நிகழ்காலத்தோடு தொடர்பில் இருந்தார் எனினும் அவரால்  மிகப் பழைய விஷயங்களை மட்டுமே  நினைவு கூற முடிந்தது. அவருடைய குழந்தைகளையே அவரால் சரியாகக் கணக்கில் கொண்டுவர இயலவில்லை.

அப்போதும் அவர் அதைப் பற்றி பெரிதாக  அலட்டிக் கொள்ளவில்லை...பதட்டம் இல்லை. நடப்பது நடக்கட்டும் என்ற தனது பாணியையே பின்பற்றிக் கொண்டு இருந்தார். பெரும்பாலான நேரங்களில் பிரட், பால் மட்டுமே சாப்பிடுவதாகச் சொன்னார்கள்.

இரண்டு வருடத்திற்குப் பின் என்னுடைய நிச்சயதார்த்தத்திற்கு வந்தவர் சிறிது நாட்கள் எங்கள் வீட்டில் தங்கினார். எங்கள் அப்பாவை ஒருமையில் அழைப்பதும், என் தம்பியிடம் மிட்டாய் கொடு என்று ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை கேட்பதும் இரண்டு ரூபாயைக் காட்டி அரையணா என்று கூறுவதும் என்று காமெடி செய்து கொண்டிருந்தார். மருந்து இல்லை மாத்திரை இல்லை மருத்துவர்களின் தேவையும் அவருக்கு இருக்கவில்லை. கண் பார்வை மங்கவில்லை.

தன்னுடைய கடைசிக் காலத்தில் கூட யாருக்கும் எந்தவித உபத்திரவமும் கொடுக்கவில்லை. எங்கள் சித்தி வீட்டில் இருந்த அவர் தன்னுடைய 80+ வயதில் அதிகாலையில் இவ்வுலகை விட்டு மறைந்தார். என்னுடைய பிரசவத்திற்காக அமெரிக்கா  வந்திருந்த என் அம்மாவால் கூட செல்ல முடியவில்லை. வயசாயிருச்சு இல்ல என்று அவர் தன்னைத் தேற்றிக் கொண்டதைப் பார்க்க வருத்தமாக இருந்தது. 

தாத்தா...பொக்கை வாய் சிரிப்புடன்  எங்கள் நினைவுகளில் இன்றும்  இனித்துக் கொண்டுதான் இருக்கிறார்... 

Wednesday, July 15, 2020

உபசரிப்பு

எண்பது தொண்ணூறுகளில் பிறந்த பலருக்கும் தாத்தா பாட்டி வீடு என்பது விடுமுறைகளில் மட்டும் வந்து  செல்லும் இடமாக இருந்ததில்லை மாறாக வார இறுதிகளில் ஏன் எங்களைப் போன்றவர்களுக்கு தினமும் புழங்கும் இடமாகவும்  இருந்து வந்துள்ளது. அம்மா வழியில் எங்களுக்கு இரண்டு பாட்டி வீடு இருந்தது என்றே சொல்லலாம் என்ன?! குழப்பமாக இருக்கிறதா?! எங்களுடைய பெரியம்மா (அம்மாவின் அக்கா ) வீட்டைத்தான் அவ்வாறு குறிப்பிட்டேன். என்னுடைய பெரியம்மா அவரின் தாய் மாமாவையே திருமணம் செய்ததால் எங்களுடைய பாட்டி தன்னுடைய தம்பி வீடுதானே என்ற உரிமையில் அங்கு அடிக்கடி செல்வதும் தங்குவதும் உண்டு. அதே உரிமையை தன்னுடைய பிற மகள்களுக்கும் பேரக்குழந்தைகளுக்கும் விட்டுச் சென்றாள் என் பாட்டி.

நாங்கள் புறநகர் பகுதியில் குடியிருந்ததால் பள்ளி முடிந்ததும் பாட்டி வீடு அல்லது பெரியம்மா வீட்டிற்கு சென்று விடுவோம் சில நேரம் அங்கிருந்தே பள்ளிக்கு செல்வோம். எங்களுடைய மற்ற கசின்களும் இரண்டு மூன்று சந்து தள்ளி குடியிருந்ததால் அவர்களுடன் ஒன்று கூடி  விளையாடுவதற்கு ஏற்ற இடமாக அமைந்தது பெரியம்மா வீடு.

எங்களுடைய பெரியப்பா "தி ராயல் அச்சகம்" என்ற பெயர் கொண்ட அச்சகத்தில் மிக இள வயதில் இருந்து பணியாற்றத் துவங்கி அவரின் தந்தைக்குப் பின் அதே பெயரில் அதை வெற்றிகரமாக  நடத்தி வந்தார். கீழே அச்சகம் மேலே வீடு. அதிகம் பேசாதவர். நாங்கள் வாசலில் நுழையும் போது தன்னுடைய இருக்கையில் இருந்து தலையைத் தூக்கிப் பார்த்து உள்ளே செல்லலாம் என்பது போல் லேசாகத் தலை அசைப்பார் அவ்வளவுதான் அவருடைய "Communication". "சாப்பாடு வேளைகளில்", "ஏதாவது பெரியம்மாவிடம் சொல்லவேண்டும்", "குதிக்க வேண்டாம்" என்று எங்களைக் கண்டிக்க" என்று  மட்டுமே மேலே வருவார். பணியாளர்களிடம் பேசும் போதும் அச்சகத்தில் நாங்கள் ஓடி விளையாடினால் சிறிது கடிந்து கொள்ளும்போதும்  என வெகு சில தருணங்களில் மட்டும் தான்  நாங்கள் அவரின் குரலைக் கேட்டிருக்கிறோம்.

அவராக எங்களிடம் பேச மாட்டாரே தவிர நாங்கள் அவரிடம் பேசுவோம். "வயிறு வலிக்கிறது என்றால் அவரிடம் தண்ணீரில் கலந்து குடிக்கும் "Eno" மருந்து கேட்க,  எழுதுவதற்கு பேப்பர் கேட்டு, எங்கள் நோட்டு புத்தகங்களை Binding செய்யச் சொல்லி" என்று நாங்கள் சரளமாகப் பேசுவோம்.  

நாங்கள் என்று மட்டுமல்ல...யார் எப்பொழுது எந்த வேளையில் வந்தாலும் சாப்பிடலாம். தங்கலாம். எங்களுக்கு தினமும் தின்பண்டம் வாங்குவதற்கு "Pocket Money" கொடுப்பார். பத்து பதினைந்து பேர் வரிசையாக நிற்போம். சில்லறை ரெடியாக வைத்திருப்பார். 10 பைசாவில் தொடங்கிய Allowance 25 பைசா வரை உயர்ந்தது பின்னர் நாங்கள் வளர்ந்துவிட்டோம். பணியாளர்களுக்கு வாங்கும் பஜ்ஜி, போண்டா எல்லாம்  எங்களுக்கும் வரும். கேட்காமலேயே!!! ஒரு பட்டாளத்துடன்  நைட் ஷோ சினிமாவிற்கும் சென்றிருக்கிறோம் அவருடன்.

ஒன்றாவது வகுப்பில் தொடங்கி கல்லாரி முடியும் வரை நாங்கள் அங்கு சென்று கொண்டு தான் இருந்தோம். அச்சகம் நன்றாக இயங்கிக் கொண்டிருந்த நாட்களிலும் சரி தொழில் நுட்ப வளர்ச்சியால் தளரத் துவங்கிய காலத்திலும் சரி எங்களுக்கென்னவோ வரவேற்பு, உபசரிப்பு  ஒரே மாதிரியாகத்தான் இருந்து வந்துள்ளது. ஒரு கணத்திலும் எங்களை அழையா விருந்தாளியாக அவர் நினைத்ததில்லை.

தொழில் சிறிது சிறிதாக நலியத் துவங்கியதும் பொருளாதார ரீதியான பாதிப்பு அவரைத் தாக்க, அதையும் தைரியத்துடனேயே எதிர் கொண்டார். 
" பணத்தை தனக்கென்று சேர்த்து வைக்காம கஷ்டபற்றாரே, பசங்க கல்யாணத்துக்கு நிறைய செலவு செய்துட்டார் ...பொழைக்காத தெரியாத மனுஷர்" போன்ற பேச்சுக்களையெல்லாம் அவர் சட்டை செய்ததில்லை. தனது அச்சு இயந்திரங்களை ஒன்றொன்றாக விற்ற பின் சிறிதும் கவுரவம் பார்க்காமல் தொழில்நுட்ப உதவியுடன் இயங்கும் ஓர் அச்சகத்தில் வேலைக்கு சேர்ந்தார். "கரிசனத்துடன் வாழ்ந்த அவருக்கு கணக்கு செய்து வாழ தெரியவில்லை தான்" கலிகாலத்தில் இதை விட  வேறு பெரிய தவறு இருக்கிறதா என்ன?!

நாங்கள் அனைவரும் வளர்ந்து Life-ல் செட்டில் ஆன  பிறகு அவரை ஓய்வு எடுத்துக் கொள்ளச் சொல்லி எவ்வளவோ சொல்லியும் " சும்மா என்னால இருக்க முடியாது" என்று மறுத்து விட்டார். 18 வயதிலிருந்து 80 சொச்சம் வயதுவரை ஓயாது உழைத்த அவர் கொரோனவால் இரண்டு மாதத்திற்கு மேல் வீட்டில் முடக்கப்பட்டார். கட்டாய ஒய்வை நிரந்தர ஓய்வாக மாற்றிக் கொண்டுவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும் (யாரும் எதிர் பாரா வண்ணம் மாரடைப்பால்  இறைவனடி சேர்ந்தார்). தொழிலாளியாக ஆரம்பித்த அவர் வாழ்க்கையை தொழிலாளியாகவே முடித்தார். 

அவர் வீட்டில் உண்டு, உறங்கி வாழ்ந்த நாங்கள்.... மூச்சுக்கு முன்னூறு தடவை "பெரியம்மா வீடு...பெரியம்மா வீடு" என்று கூறி வந்த எங்கள் மனது   முதல் முறையாக பெரியப்பா வீடு என்று நினைக்கத் தோன்றுகிறது. பெரியப்பா அனுமதியின்றி எங்கு வரும் நாங்கள் கொண்டாடும் பெரியம்மா வீடு?! அன்பை வெளிப்படுத்தத் தான் எத்தனை வழிகள்!!! அவர் தேர்ந்தெடுத்த வழி "உபசரிப்பு".

அவருக்கு நம் உதவி  தேவை என்று உணர்ந்த சமயங்களில் எல்லாம் அவர் கூப்பிடாமலேயே (இதுவரை அவராக  எதுவும் கேட்டது கிடையாது) அங்கு சென்று பல வழிகளிலும் உதவிய நாங்கள் இனியும் இணைந்து நிற்போம். பல்வேறு தேசங்களில்  வாழும் பதினைந்திற்கும் மேற்பட்ட எங்கள் 
"Cousin"-களை இணைக்கும் ஒரே புள்ளி "பெரியப்பா வீடு".

அவர் வாழ்வில் சேர்த்து வைத்த சொத்து  என்ன என்று புரிந்து கொள்ள சிலரால் மட்டுமே முடியும்!!! அதில் ஒருவராக நீங்கள் இருப்பீரென்றால் மகிழ்ச்சி!!!