Friday, April 22, 2022

ஆற..அமர -

கடந்த வாரத்தில் எங்கள் வீட்டிற்கு விருந்தாளிகள் வந்து ஒரு நாலு நாள் தங்கிவிட்டுச் சென்றனர். விருந்தோம்பல் நம் கலாசாரம் அல்லவா? அதனால் நன்றாகவே கவனித்துக் கொண்டதில் உடல் அசதி உச்சத்தைத் தொட்டது. நான் ஒன்றும் நளபாக சமையல் எல்லாம் செய்து அசத்தவில்லை. நான் வழக்கமாக சமைக்கும் பதார்த்தங்களோடு ஒன்றிரண்டு Extra Items அவ்வளவு தான். Guest-ம் சமையலில் உதவினார்கள் அதிலும் இரண்டு மூன்று முறை ஆர்டர் செய்து வேறு சாப்பிடோம் இருந்தும் நான் அதிகம் வேலை செய்தது  போன்ற உடல் குடைச்சல்.

காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்ததில் பாத்திரம் தேய்ப்பது பெரும் சுமையாக இருப்பதாகப் பட்டது ஆனால் வேறு வழியில்லை. இங்கு வேலைக்கு ஆள் எல்லாம் கிடைப்பதில்லை. அளவுக்கு மீறிய பாத்திரங்களை புழங்க வேண்டி வருவதால்  Dishwasher எனக்கு பிடிப்பதில்லை. யோசித்து பார்த்ததில் பத்து வருடங்களுக்கு முன் என் உறவுக்கார மாமா ஒருவர் கூறிய அறிவுரை நினைவுக்கு வந்தது. "இப்பிடி மணிக்கணக்கா நின்னுக்கிட்டே வேலை பார்த்தா உடம்பு எனத்துக்காக்கும்"?

நவீன சமையலறையில் நாம் நூறு சதவீதம் அனைத்து வேலைகளையும் அவசர கதியில் நின்று கொண்டே தான் செய்கிறோம். சமையல் கட்டிற்கு நுழைவது வரை என்ன சைமைக்கப் போகிறோம் என்பதை யோசிப்பதே கிடையாது பிறகு எங்கே அதற்கான "Pre-Preparation"ஐ செய்வது. போனை நோண்டிக் கொண்டோ கணினியை பார்த்துக் கொண்டே மணிக்கணக்காக அமர்ந்து விட்டு பிறகு Kitchen-ல் இரண்டு மணி நேரத்திற்கு மேல்  தொடர்ந்து நிற்கிறோம்.

என் அம்மா எல்லாம் என்ன சமைக்கப் போகிறோமோ அதை உரிப்பது, ஆய்வது, கிள்ளுவது என்று  முன் கூட்டியே தயார் செய்து கொள்வார். அருவாமனையில் காய் நறுக்குவதால் ஒரு பாத்திரத்தில் அரிசி களைந்த நீரை வைத்துக் கொண்டு அதில் தான் வெட்டிய காய்கறிகளைப் போடுவார். பிறகு அடுப்பை பற்ற வைத்து வேகமாக சமைத்து விடுவார்.

நாம் என்ன செய்கிறோம்? chopper, cutting board என்று மணிக்கணக்கில் நிற்பதோடு மட்டுமல்லாமல் அடுப்பிற்கும் Sink-கிற்கும் அலை பாய்கிறோம்.Atleast dinning table-ல் அமர்ந்து காய்கறி வெட்டலாமே? நேரத்தோடு நீரையும் வீணாக்குகிறோம்.

நேரம் கிடைக்கும் மாலை வேளைகளில் என் அம்மா கடுகு, பருப்பு என்று தீர்ந்து போன ஐட்டங்களை எல்லாம் Refill செய்து கொள்வார். எப்பப்பாத்தாலும் கிச்சன்ல என்னதான் பன்றியோ? என்று நாங்கள் கடிந்து கொள்வதுண்டு ஆனால் அது எவ்வளவு நல்ல பழக்கம் என்று இப்போதுதான் புரிகிறது.

அடுத்த பெரிய தவறு நாம் நம் குழந்தைகளை வேலை வாங்கி பழக்கப்படுத்துவதில்லை. கணவரிடம் உதவச் சொல்லி சண்டைக்கு நிற்கிறோமே தவிர பிள்ளைகளை சொல்வதில்லை. இம்மாதிரியான இக்கட்டான  சமயங்களில் அது  கை கொடுக்கும் என்பதை உணர்வதில்லை. நின்று கொண்டே இருப்பதால் வயது ஐம்பதை நெருங்கும் முன்னரே ஆர்த்ரிடிஸ் ஆல் அவதிப்படுகிறோம். நமக்கு கோபம், எரிச்சல் என்று சமையல் மீதே ஒரு வெறுப்பு வந்து விடுகிறது. அதை குழந்தைகள் மற்றும் கணவரிடமே காட்டுகிறோம் ஆக உடலுக்கு தேவையான Movements-ஐ கொடுக்கத் தவறினால் உடல் மட்டுமல்ல மன நலமும் பாதிக்கப்படுகிறது.

ஆய கலைகள் அறுபத்தி நாளில் சமையல் கலையும் ஒன்று அதை நடனம் போல் முழு உடலையும் இயக்கிச் செய்யலாமே? Gym-க்கு செல்ல வேண்டிய அவசியமே இராது!!!

எள்ளும் கொள்ளும் வெடிக்க வேண்டியது பாத்திரத்தில் உங்கள் முகத்தில் அல்ல!!! 

Friday, March 4, 2022

திருமணம் என்னும் திருவிழா

"சமீப காலமாக பல ஆண்கள் தங்களுக்கு பெண் கிடைப்பதில்லை என்றும் பெண் வீட்டாரின் கட்டுக்கடங்காத டிமாண்டுகளே இதற்கு காரணம்" என்றும்  சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஆண் பெண் எண்ணிக்கை விகிதாச்சாரம் சமமாக இல்லாததும் இதற்குக் காரணம் என்று ஆய்வறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன.

எனது சொந்தங்களின் வட்டத்திலும் 35, 40 வயதை நெருங்கியும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் சில ஆண்கள் திருமணமாகாமல் இருப்பதைப் பார்க்கிறேன். 

எண்பதுகளில் எல்லாம் குடும்ப பாரத்தை சுமக்கும் தமையன்களும் தமக்கைகளும் தான் தங்களுக்கென்று ஒரு திருமண வாழ்க்கையை தகுந்த காலத்தில் அமைத்துக் கொள்ள முடியாமல் தனியாகவே வாழ்ந்து முடித்தனர் ஆனால் இப்பொது அப்படிப் பட்ட பொறுப்புகள் ஏதும் இல்லாத இளைஞர்கள் சிலருக்கும்  திருமணம் எட்டா கனியாக எட்டி எட்டிப்  போகிறது.

உரிய நேரத்தில் வந்த வரன்களை எல்லாம் தட்டிக் கழித்ததால், Single Parent ஆக இருப்பவர்கள் சரியாக கவனிக்காததால் என்றெல்லாம் காரணம் கூறுகிறார்கள் ஆனால் அனைத்தும் சரியாக இருப்பவர்களுக்கும் எந்த Demand-ம் செய்யாதவர்களுக்கும் கூட  ஏனோ திருமணம் தடை படுகிறது?!

இருபது வருடங்களுக்கு முன் கூட அவரவர் தகுதிக்கேற்ப பெண் கிடைத்துக் கொண்டுதான் இருந்தது ஏன் ஊதாரித்தனமாக சுற்றிக் கொண்டிருந்தவர்களுக்குக் கூட திருமணம் ஆனது ஆனால் இப்பொது என்னவென்றால் மெடிக்கல் Rep ஆக இருந்தால் பெண் கொடுக்க மாட்டார்களாம், ஜவுளிக்கடையில் வேலை பார்த்தால் பிடிக்காதாம். என்ன Logic என்று புரியவில்லை அதனால் இந்த துறையில் இருக்கும் யாருக்குமே திருமணம் ஆகவில்லையா என்ன? அப்படியும் சொல்ல முடியாது.

பெரு நகரங்களில் வசிப்பவர்களில் சிலரும்  மேல் தட்டு வர்கத்தில் சிலரும் திருமணம் என்ற உறவில் எல்லாம் நம்பிக்கை இல்லை என்று Single ஆக இருக்கிறார்கள் அவர்களின் கதையே வேறு. "Living together" என்ற பெயரில் நேரத்திற்கேற்ற துணையை தேடிக் கொள்கின்றனர் ஆனால் திருமணம் என்னும் பந்தத்தில் மதிப்பும் மரியாதையும் வைத்து தனக்கென ஒரு வாழ்க்கைத்துணையைத் தேடிக்  காத்துக் கொண்டிருப்பவர்களின் பரிதாப நிலையை எண்ணித் தான் என் மனம் கவலை கொள்கிறது.

இவர்களில் சிலர் கைம்பெண்களுக்கு வாழ்வளிக்கின்றனர் சிலரோ "அதெல்லாம் சரிப்பட்டு வராது" என்று காத்துக் கிடக்கின்றனர். பல வருடங்களாகத் தேடித் தேடி சலித்த பின் திருமணமே வேண்டாம் என்ற நிலைக்குத் தள்ளப்படும் இவர்கள் பின் திருமணம் நடந்தாலும் சிறு சிறு காரணங்களுக்காக சகிப்புத்தன்மையை இழந்து விவகாரத்தை நாடுகின்றனர். "எட்டாக்கனியாக இருந்த திருமணம் ஏனோ கைகளுக்கு எட்டும் வேளையில் புளிக்கிறது?!"

"திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்" - சிலர் தகுந்த நேரத்தில் தங்களுக்கு கிடைத்த நிலத்தில்  நடவு செய்து, தேவையான அளவு மழை, வெயில் போன்ற சொந்தங்களும் பந்தங்களும் அமையப் பெற்று நல்ல உறவுகளை அதாவது  மகசூலை அறுவடை செய்து மகிழ்வுடன் வாழ்கின்றனர். அவர்கள் வாழ்விலும் எதிர் பாரா வெள்ளங்களும், வறட்சியும் வரத்தான் செய்கின்றன ஆனால் அவற்றை பொறுமையுடன் சாமர்த்தியதையும் கலந்து கையாண்டு இறைவனின் துணையுடன் வாழ்வில் நிம்மதி அடைகின்றனர்.

வேறு சிலரோ தாமதமாக விதைகளை விதைத்தாலும் கால நிலைக் கேற்றபடி சில பல மாற்றங்களை செய்து சுகித்து வாழ்கின்றனர்.

சிலரோ உரிய நேரத்தில் விதைத்தும் நல்ல பலனை அடையாமல் தங்கள் நிலம் தரிசு நிலமாகிப் போனதை எண்ணி கண்ணீர் வடிக்கின்றனர். 

ஆனால் விதைப்பதற்கே நிலம் கிடைக்காமல் கையில் விதையுடன்  காத்துக் கொண்டிருக்கும் இந்த ஆடவர்களின் வினாக்களுக்கு விடைதான் என்ன? 


Thursday, January 13, 2022

பழையன நிலைத்தலும் புதியன குறைத்தலும்

கடந்த வருடம் அமெரிக்காவின் வட கிழக்கு மாகாணங்களை "Ida" புயல் தாக்கியது. மழையுடன் பேய்க் காற்றும் இணைந்து கொள்ள மக்கள் போக்கிடம் இன்றி அவதியுற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். எங்கெல்லாம் வெள்ளம் வருவதற்கு வாய்ப்பேயில்லை என்று அறியப்பட்டு வந்ததோ அங்கெல்லாம் வெள்ளம் புகுந்தது. புயல் காற்றின் தாக்கத்திலிருந்து தப்பிக்க மக்கள் வீட்டின்  அடித்தளத்திற்கு அதாவது Basement-ற்கு  செல்லுமாறு பணிக்கப்பட்டனர் ஆனால் அங்கு வந்த மழை வெள்ளத்தில் நீந்தத் தெரிந்தவர்களும் வெளியே வர வழியின்றி இறந்தனர் என்ற செய்தியை தொலைக்காட்சியில் காணும் போது மனம் மிகவும் கலக்கமடைந்தது.

அமெரிக்காவில் என்று மட்டும் அல்ல உலகெங்கும் மக்கள் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டு உயிரையும் உடமைகளையும் உற்றார் உறவினர்களையும் இழந்த வண்ணம் உள்ளனர். இவிடர்களுக்கெல்லாம் காரணம் காலநிலை மாற்றம் என்று அறிவியலாளர்கள் கூறி வருவது மட்டுமல்லாமல் அதைத் தடுக்க நம் வாழ்வியல் முறைகளில் கொண்டு வரவேண்டிய மாற்றங்களையும் வலியுறுத்தி  வருகின்றனர்.

தொன்னூறுகளிலேயே பூமி வெப்பமடைதல், காற்று மாசுபடுதல் மற்றும் ஓசோனில் ஓட்டை என்றெல்லாம் பாட புத்தகத்திலும் செய்தித்தாள்களிலும் படித்திருக்கிறோம் ஆனால் அதைப்பற்றி அதற்குமேல் யோசித்ததில்லை விளைவு - இன்று கண் முன்னே தெரிகிறது.

ஒரு காலத்தில் வீட்டிற்கு ஒரு மரம் வளர்த்தால் போதும் என்று சொல்லிக்கொண்டிருந்தவர்கள் தற்போது இம்மாற்றங்களை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு வழிமுறைகளை கூறுகின்றனர்.  பின்பற்றவும்  துவங்கி விட்டனர். மேற்கத்திய நாடுகளில் மாமிசதிற்காக வளர்க்கப்படும் உயிரினங்களால் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது என்று ஆய்வறிக்கைகள் சமர்பிக்கப்படுகின்றன ஆதலால் புலால் மறுப்பு மட்டுமல்ல பால் மற்றும் பால் பொருட்களையும் அறவே தவிர்ப்பது  (Veganism) காலநிலை மாற்றத்தை சீராக்கும் என்கின்றனர்.

பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை குறைத்தல், தேவையற்ற வேளைகளில் மின் உபகரணங்களை சார்ஜில் இருந்து விடுவித்தல்,  பொருட்களை உரிய முறையில் மறு சுழற்சி செய்தல் என்று பல்வேறு உபாயங்கள் கூறப்பட்டாலும் யார் காதில் வாங்கிக் கொள்கிறார்கள்?

தினக்கூலியாக வேலை செய்யும் பாமரனுக்கும்  பெப்சி, கோக் குடித்துக் கொண்டு காரில் செல்லும் செல்வந்தர்களுக்கும் இதில் சம அளவு பங்குண்டு. வாகனங்களின் புகையால் எந்த அளவிற்கு சுற்றுச் சூழல் மாசடைகிறதோ அதே அளவிற்கு விறகடுப்பாலும், வீதியில் எரிக்கப்படும் டயராலும் காற்று மாசடைகிறது.

அனைவரும் மிக சுலபமாக பின்பற்ற கூடிய வழிமுறையாக என் கண்களுக்குப்  படுவது/தெரிவது  என்னவென்றால் கூடுமானவரை  நம் தேவைகளை நாமே குறைத்துக் கொள்வது மற்றும் பழைய வாழ்க்கை முறைக்கு திரும்புவது தான். விலை மலிவாகக் கிடைத்தாலும்  முடிந்தவரை online ஆர்டர் செய்வதைத் தவிர்த்து அருகாமையில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்கலாம். இது Carbon Prints-ஐ குறைக்க உதவுமாம். பழைய துணிகளை டேபிள் துடைக்கவும் அழுக்கு துடைக்கவும் உபயோகிக்கலாம் ஒரு முறை துடைத்து எரியும் Tissue பேப்பர்கள் எதற்கு? 

ஸ்விக்கி, Zomoto-வில் வரும் ஆர்டர்கள் பிளாஷ்டிக் பைகளில் தானே வருகின்றன? அது உடல் நலத்திற்கும் கேடு அல்லவா? தூக்கு போனியில் சாம்பார் வாங்கி வந்தவர்கள் தானே நாம்?

கடைகளுக்குச்  செல்லும் போது கையில் ஒரு துணிப்பையை எடுத்துச் செல்வது எந்த விதத்திலும் நமது கௌரவத்தை குறைத்து விடாது.

"பழையன கழிதலும் புதியன புகுதலும்" நன்றே ஆனால் வாரத்திற்கு ஒரு டிரஸ் வாங்கும் கலாச்சாரம் நம்முடையதல்லவே. ஒரு குழந்தைக்கு வாங்கிய பொருட்களை அடுத்த குழந்தைக்கும் உபயோகப்படுத்துவதில் எந்தக் குற்றமும் கிடையாது நீங்கள் Bad Parent ஆக மாட்டீர்கள்.

செருப்பு அறுத்து போனால் தைத்துப் போடலாம் தப்பில்லை. 

"நான் ஒன்னும் குப்பையிலே போடல..மறு சுழற்சி தான் செய்கிறேன்" என்று மார்தட்டிக் கொள்பவர்களே..பெருபாலான பொருட்கள் Recycle செய்யப்படாமல் மலைகளாக குவிந்து கிடக்கின்றன. வல்லரசு நாடுகள் குப்பைகளை கப்பலில் கொண்டு சென்று மூன்றாம் உலக நாடுகளில் குமிக்கின்றன என்று கூறுகிறார்கள் அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. Shakespeare இன்று இருந்திருந்தால் "உலகம் ஒரு நாடக மேடை என்பதற்கு பதிலாக..உலகம் ஒரு குப்பைக் கூடை" என்று எழுதியிருப்பாரோ என்னவோ?

நம் உடல் நலத்தை பேண Organic உணவுகளை நாடும் நாம் வரும் சந்ததியினர் நலனுக்காக சற்றேனும் பொறுப்புடன் சூழலைக் காக்க வேண்டாமா? 

அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் சுயநலமே..யோசிப்போமா??? 


Monday, December 6, 2021

காட்டுக்குள் மழை

"Amazon"-ன்னு சொன்னா உங்களுக்கு என்ன ஞாபகம் வருதுன்னு ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி கேட்ருந்தா என்ன பதில் சொல்லியிருப்பீங்க?

நீங்க Geography-ல் ஆர்வம் உள்ளவராகவோ அல்லது ஆங்கிலப்  படங்களை விரும்பி பார்ப்பவராகவோ  இருந்தால்   சட்டுன்னு அது ஒரு "Rain Forest" தென் அமெரிக்காவிலே இருக்குன்னு சொல்லுவீங்க இல்லையா நீங்க ஒரு விஜய் டிவி Viewer-ஆ இருந்தாலும் இதை தெரிஞ்சி வச்சுருப்பீங்க  பின்ன வழுக்கை தலையிலும் முடி வளர வைக்கனுமான  அங்க இருக்குற மூலிகையாலதான முடியும்.

ஆனா இப்ப இந்த 2021-ல முளைச்சு மூணு இலை விடாத சுண்டைக்கா பசங்கள்ல இருந்து அனுபவசாலி தாத்தா வரைக்கும் அமேசான் என்ற பேரைக் கேட்டாலே என்ன ஆர்டர் செய்யப் போறீங்கன்னு கேக்குறாங்க!!!

அமெரிக்காவின் முதல் ஐந்து தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின்  பட்டியலில் இடம் பெற்றிருக்கும் அமேசான் தொன்னூறுகளின் தொடக்கத்தில் துவங்கப் பெற்றிருந்தாலும், Amazon Prime Day என்ற Super Sale மூலம் அவர்கள் பிரபலமாயிருந்தாலும்  கடந்த பத்து வருடங்களாக அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறார்கள். அமேசானில் எதுவும் கிடைக்கும், எங்கும் கிடைக்கும்  என்ற நிலை இன்று உலகம் முழுதும் பரவி வருவது உண்மை. நமது பொருட்களை டெலிவரி செய்து விட்டு வாசலோடு சென்று கொண்டிருந்த அமேசான் - "Streaming Service"-ஐ ஆரம்பித்து  நமது வரவேற்பறையிலும்  வந்து அமர்ந்து விட்டது. 

இதுவரை அமேசான் சங்கத்தில் இணையாதவர்கள் கூட 2018-ல் "உங்கள் பொருட்கள் இரண்டே நாட்களில் வீடு வந்து சேரும் அதோடு எங்கள் தளத்தில் இருக்கும் திரைப்படங்களையும் நீங்கள்  இலவசமாக பார்த்துக் கொள்ளலாம்" என்ற சலுகையைக் கண்டு மெம்பெர் ஆனார்கள் முக்கியமாக இந்தியப் படங்கள் வருவதால் நம்மைப் போன்றவர்களுக்கும் இந்த dealing பிடித்திருந்தது. இப்பொது Amazon Prime என்று பெயர் பொறித்த வேன்களைப் பார்க்காமல் பொழுது கழிவதில்லை.

இதெல்லாம் வேண்டாம்  என்று உறுதியாக  இருந்த எங்களைப் போன்றவர்களையும் கொரோனா அமேசானில் கொண்டு கோர்த்து விட்டு குத்தாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வருடம் மட்டும் கிட்டத்தட்ட 25 ஆர்டர்களை அமேசானில் செய்திருக்கிறோம்..பெரிய பெரிய பொருட்கள் எல்லாம் கிடையாது Mask, Sanitizers-ல் இருந்து ஆரம்பித்து  உடைகள், பள்ளி கல்லூரிகளுக்குத்  தேவையான பொருட்கள், பார்ட்டி Decorations, புத்தகங்கள் Kindle வடிவில் என்று - அனாவசியமாக எதையும் வாங்கியதாகத் தெரியவில்லை.

டிவி, லேப்டாப் போன்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கடைகளில் வாங்குகிறோம் ஆனால் அதற்குத் தேவையான ஒயர், சார்ஜர் என்று இதர பொருட்களை அமேசானில் தேடுகிறோம். கொடுக்கும் விலைக்கேற்ற தரத்தில் பொருட்கள் இருப்பதால் பெரிதாக ஏமாற்றம் ஒன்றும் இருப்பதில்லை. 

குழந்தை பிறந்ததிலிருந்து குடு குடு தாத்தா/பாட்டி ஆகும் வரை வாழ்கைக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் ஒரே சொடுக்கில் அமேசானில் கிடைப்பதால் வெளிநாடுகளில் வசிப்பவர்களில் பெரும்பாலோனோர் இந்நிறுவனத்தின் Gift கார்டுகளையே விழாக்களுக்கும் சுப நிகழ்ச்சிகளுக்கும் பரிசாகக் கொடுக்கின்றனர் அதனால் மெம்பெர் அல்லாதவர்களும் அங்கே ஷாப்பிங் செய்கின்றனர்.

சமீப காலமாக சுற்றுச் சூழல் பாதிப்பில் அமேசான் நிறுவனத்திற்கு அதிக பங்கு இருப்பதாக பலர் சுட்டிக் காட்டுவதால் அவற்றை குறைக்கும் முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டிருப்பதாகக் கூறுகின்றனர். இது ஒருபுறமிருக்க அமேசான் போன்ற நிறுவனங்களால் சிறு/குறு தொழில்கள் நசுக்கப்பட்டு இருந்த இடம் தெரியாமல் போய் விடுகின்றன என்ற பொருமலும் சமுதாயத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளது. அது சரி வீட்டிலிருந்த படியே பொருட்களை கையில் பெற்றுக் கொண்டிருக்கும்  நமக்கு "கார்பன் ப்ரிண்ட்ஸ்" பற்றியும் கார்ப்பரேட் கொள்கைகள் பற்றி  எல்லாம்  என்ன அக்கறை?!

அமேசான் காடுகளில் மழை குறைந்து விட்டது ஆனால் அமேசான் நிறுவனத்திலோ பண  மழை கனமாகக் கொட்டிக் கொண்டிருக்கிறது. பேசப்படும் அமைப்பாக வளர்ந்து விட்ட எந்த நிறுவனமும் "Giving Back to the Society" என்ற பெயரில் ஏதேனும் நல்ல காரியங்களை செய்தாக வேண்டுமே? அமேசான் அதற்கு விதி விலக்கா என்ன? தங்களிடம்  வேலை பார்க்கும் பணியாளர்களை படிக்க வைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் மனித நேய செயல்களிலும் அமேசான் ஈடுபட்டு வருவதாக விளப்பரப் படங்கள் காட்டுகின்றன. 

அதோடு அமேசான் Originals என்ற பெயரில் திரைப்படங்களையும் தொலைக்காட்சித் தொடர்களையும் தயாரிப்பதால் புது முகங்கள் பலருக்கும் வாய்ப்பு கிடைப்பதாகக் கூறுகிறார்கள்.

எது எப்படியோ காற்று புக முடியாத இடத்தில் கூட அமேசான் நிறுவனம் நுழைந்து  விட்டது. அப்பிடியே உங்க Order History-யையும் ஒரு தரம் பாத்துருங்க அப்புறம் Shock ஆகப் போறீங்க 😇


Friday, November 19, 2021

தானமும்..தர்மமும்

ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பது போல எந்த ஒரு விஷயத்தையோ, மனிதர்களையோ  எடுத்துக் கொண்டு ஆராய்ந்தால்  அதற்கும்/அவர்களுக்கும் இரண்டு பக்கங்கள் இருக்கவே செய்கின்றன. அவை சிலருக்கு நல்லவையாகவும்/நல்லவர்களாகவும் சிலருக்கு கெட்டவையாகவும்/கெட்டவர்களாகவும் தெரிகின்றன உதாரணமாக சமூக வலைத்தளங்களையே எடுத்துக் கொள்வோமே? அங்க நல்லதும் நடக்குது..மத்ததும் இருக்குது. 

சமீப காலங்களில் சமூக வலைத்தளங்கள் மூலமாக பலருக்கும் மருத்துவ/கல்வி உதவிகள் கோரி Go Fund Me போன்ற பக்கங்கள் வந்த வண்ணம் உள்ளன. நாங்களும் முடிந்த அளவு கல்லூரியில் படித்த நண்பர்களுக்கு, அவர்களின் உறவினர்களுக்கு என்று அதன் மூலம்  உதவிக் கொண்டுதான் இருக்கிறோம்.

நம்மில் பலருக்கும் இந்த மாதிரி பக்கங்களைப் பார்த்ததும் உதவ வேண்டும் என்று தான் தோன்றுகிறது ஆனால் நாம் எல்லோருக்குமா உதவுகிறோம்? நாம் தான் படித்தவர்கள் ஆயிற்றே இப்பிடியெல்லாம் தெரியாதவர்களுக்கு உதவி ஏமாந்துட்டோம்னா? என்ற கவலை/பயம் எப்பயுமே நமக்குள்ளே ஓடிகிட்டே இருக்கு அதனால என்ன பண்றோம் தெரிஞ்சவங்களா? உண்மையிலே உதவி தேவைப்படுதா? என்று பார்த்து பணம் அனுப்புகிறோம்.

இன்னும் சில பேர் நெருங்கிய உறவுகளுக்கு கல்வி/மருத்துவம்/திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு தொடர்ந்து உதவுகிறார்கள். நாம தான் இதனை பேருக்கு தானம் பண்றோமே அப்புறம் என்ன சமூக வலைத்தளங்களில் முகம் தெரியாதவர்களுக்கு உதவுவது என்று விட்டு விடுகிறார்கள்.

ரொம்ப நாளா இந்த கேள்வி என் மனசுல ஓடிக்கிட்டே இருக்கு..நாம செய்றது எல்லாம் தானம் தானா? 

மாதத்திற்கு பல ஆயிரங்கள் சம்பாதிக்கும் நாம் அதில் சில ஆயிரங்கள் உதவியாகக் கொடுக்க இத்தனை Research செய்கிறோமே? ஆனால்  ஆட்டோ ஓட்டியோ, கட்டட வேலை பார்த்தோ பிழைப்பு நடத்தும் ஒருவர் ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் ஒருவரைப் பார்த்தாலோ, யாரேனும் உதவி கேட்டாலோ பத்து/ஐம்பதே னாலும் தயக்கமில்லாமல் கொடுப்பதைப் பார்த்திருக்கிறேன். இதில எது உண்மையான தர்மம்? 

எங்க அப்பாவே இப்படி கொடுப்பதைப் பார்த்திருக்கிறேன் கேட்டால் உதவணும்னு குடுக்குறோம்..அதுக்கு மேல யோசிக்க கூடாதுன்னு சொல்லிடுவார்.

பகவத் கீதையிலும் கிருஷ்ணர் தானம் என்பது என்ன என்ற அர்ஜுனனின் கேள்விக்கு பதிலளிக்கையில் "தெரிந்தவர்களுக்கும், உறவினர்களுக்கும் செய்யும் தானமும், இதனால் எனக்கு என்ன பலன் என்று ஆராய்ந்து செய்யும் தர்மமும் இவ்வுலகில் மட்டுமல்ல..மேலுலகிலும்  உதவாது" என்று விளக்கமளிக்கிறார். 

"காலத்தி னாற்செய்த நன்றி  சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது"

நேரத்தோடு உதவுவுவோம்.. மனித நேயத்தோடு உதவுவோம் 😊


Friday, October 1, 2021

ஸ்வீட் எடு கொண்டாடு !!

இன்று காலையில்  எழுந்தவுடன் வழக்கம் போல்  போனை இயக்கி வாட்ஸப் குறுந்தகவல்களை புரட்டிக்கொண்டிருந்தேன். ஒரு குழுமத்தில் இன்று உலக சாக்லேட் தினம் என்ற Forward வந்திருந்தது. இந்த இன்டர்நெட் யுகத்தில் தினமும் ஏதாவது சிறப்பு நாள் தானே!!! தினசரி காலண்டர் கூட இதற்கு விதிவிலக்கல்ல அவர்களும் ஏதாவது ஒரு நாளை அச்சடித்து தூள் கிளப்புகிறார்கள்.

இந்த தகவல்கள்  எல்லாம் சரியா? தவறா? என்ற விவாதத்திற்குள்  எல்லாம் நான் செல்ல விரும்பவில்லை. நான் சொல்ல வந்தது என்னனா எப்போ இருந்து நமக்கு Chocolates மீது  இந்த Craze? எனக்குத் தெரிந்து எண்பதுகளில் பிறந்த பலருக்கும் தேன் மிட்டாய், பாக்கு மிட்டாய் போன்ற உள்ளூர் தயாரிப்புகள்  மேல் தான் காதல்.

எப்போது தொலைக்காட்சி முக்கிய மீடியமாக வளர ஆரம்பித்ததோ அப்போது தான் சாக்லேட் மோகமும் எட்டிப்பார்க்கத் துவங்கியது எனலாம். நம் நாட்டின் தட்பவெட்பத்துக்கு ஏற்ற சாக்லேட்டுகள் அதாவது Hard Candies தான்  முதலில் கடைகளில் கிடைக்க ஆரம்பித்தது. சந்து முக்குக் கடைகளில் பாக்கெட்டுகளில் தொங்கிக் கொண்டிருந்த, சிறு தொழிளார்கள் உற்பத்தி செய்த மிட்டாய்களின் இடத்தை பள பள காகிதத்தில்  Wrap செய்யப்பட்ட இந்த சாக்கலேட்டுக்கள் லாவகமாக எடுத்துக் கொண்டன. இவர்களுக்கோ  கண்ணாடி ஜாரில் சிறப்பு இடம் அளிக்கப்பட்டு, கடையின் முன் வரிசையில் அமர்த்தி  வைக்கப்பட்டார்கள்.

அப்பொது கூட புளிப்பு மிட்டாய்களுக்கும் நூலில் கோர்த்து சாப்பிடக் கூடிய சூடம் மிட்டாய்களுக்கும் மதிப்பு குறைந்து விட வில்லை. தொன்னூறுகளில் மெது மெதுவாக வீடுகளில் Fridge வாங்க ஆரம்பித்தார்கள். 5 Star என்ற மில்க் சாக்லேட் அறிமுகம் ஆனது. அனைவரும் அடித்து பிடித்துக் கொண்டு வாங்கி ருசித்தர்கள். பேப்பரை கூட விட்டு வைக்கவில்லை வாயில் போட்டு மென்று துப்பினார்கள் என்றால் இந்த காலத்து குழந்தைகள் நம்ப மாட்டீர்கள். நெடு நாட்களுக்கு இதை அடித்துக் கொள்ள ஆளில்லை.

மிட்டாய்கள் சாக்லேட்களாக பெயர் மாற்றம் அடைய , ஐம்பது பைசாவாக இருந்த விலையும் 5 ரூபாயாக பதவி உயர்வு பெற்றது. மூன்று, நான்கு குழந்தைகளாக இருந்த வீடுகளும் ஒன்று, இரண்டு என குடும்பத்தை சுருக்கிக் கொள்ள, போனால் போகிறது என்று விலையைப் பற்றிக்  கவலைப் படாமல் வியாபாரம் நடந்தது. பிறந்தநாட்களுக்கும் சாக்லேட் குடுக்கலாம் என்ற யோசனையும் அறிமுகமானது. சமயங்களில் வேலை நடக்க குழந்தைகளுக்கு லஞ்சமாகவும் கொடுக்கப்பட்டது  

இதில் இருக்கும் பால் குழந்தைகளுக்கு ஊட்டத்தை அளிக்கிறது என்ற பரப்புரையுடன் அடுத்த சில வருடங்களில்  Dairy Milk சாக்லேட் அறிமுகமானது, இப்பொது விளம்பரங்கள் குழந்தைகளை மட்டுமல்லாது கல்லூரி செல்லும் இளம் பெண்களையும் டார்கெட் செய்யத் தொடங்கி இருந்தது. தொண்ணூறுகளின் இறுதியில் வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகமானதால் பெரும்பாலான சாக்லேட் விளம்பரங்களில் அவர்களே தோன்றினர்.

ஸ்னாக் ஆக இருந்த சாக்லேட் Comfort Food ஆக மாறியது. இக்காலகட்டத்தில் பல்வேறு பொருளாதாரப் படிகளில் இருக்கும் அனைவரையும் திருப்தி செய்யும் விதமாக பல்வேறு சாக்லேட்டுகள் சந்தையை மொய்க்க ஆரம்பித்திருந்தது. நன்றாக இருந்த நம் குழந்தைகளுக்கு பல் சொத்தையும் வர, டூத் பேஸ்ட். டூத் பிரஷ் என்று அந்த வணிகமும் கொடி கட்டிப் பறக்கத்துவங்கியது.

மில்லெனியும் வருடமும் வந்தது. இப்பொது சாக்லேட் என்பது குடும்பமாக ரசித்து ருசிக்கும் ஸ்னாக் ஆக மாறி இருந்தது. வீட்ல விசேஷமா ஸ்வீட் எடு கொண்டாடு என்று லட்டைத் திணித்துக் கொண்டிருந்த தொலைக்காட்சிக் குடும்பங்கள் Chocolate-ஐ பிரித்து வாயில் போட்டுக் கொண்டன. இப்பொது சாக்லேட் பல்வேறு விதங்களில் வெளிவர ஆரம்பித்திருந்தது. காதலர்களின் கண் கண்ட தெய்வம், கை கொடுக்கும் தெய்வம் எல்லாம் சாக்லேட் தான்.

 Stress, Tiredness, Sadness, Frustration எதுவாக இருந்தாலும் ஒரு  சாக்லேட் சாப்பிட்டால் Mood மாறும், Relieve கிடைக்கும்  என்று இளைஞர்கள் நம்ப வைக்கப்பட்டனர். தினமும் ஒரு சாக்லேட் சாப்பிடும் யுவதிகளை நான் கண்டிருக்கிறேன். இப்பழக்கம் ஒருவகையான Addiction ஆக மாறியது எனலாம். முதலில் வெளிநாடு சென்றவர்கள் சாக்லேட் வாங்கி வருவது பெருமையாக பார்க்கப்பட்டது பின்  இன்டர்நேஷனல் சாக்லேட் எல்லாம் எங்கும் கிடைக்கத் துவங்கியதிலிருந்து அவர்களுக்கும் மவுசு குறைய ஆரம்பித்தது.

மருத்துவ ரீதியாக பல்வேறு பயன்களை சாக்லேட் அதாவது அதிலிருக்கும்  கோகோ அளிக்கும் என்று ஆய்வறிக்கைகள் வெளிவரத் துவங்கியிருந்த போது அதிலிருக்கும் சர்க்கரை காரணமாக உடல் பருமனும் குழந்தைகளிடத்தில் அதிகரிக்கத் துவங்கியிருந்தது. 

தற்போதைய கால கட்டத்தில் "கடலை மிட்டாய், கமர் கட்டு சாப்பிடுங்கள்..நம்முடைய ஊர்களில் தயாரிக்கப்படும் வெல்லம் கலந்த இனிப்புகளை சாப்பிடுங்கள் அது தான் உடல் நலத்திற்கு உகந்தது"  என்று விளம்பரப்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

எது எப்பிடியோ "அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தானே!!!"

Thursday, September 9, 2021

ஆனந்த தாண்டவம்

முதன் முதலாக பரதநாட்டிய அரங்கேற்றத்தை நேரில் காணும் வாய்ப்பு!!!நிகழ்ச்சியைக் குறித்து அமைப்பினர் (Host) கூறிய விளக்கங்கள், அரங்கேற்ற ஏற்பாடுகள்  மற்றும் கண்ணைக் கவரும் அழைப்பிதழ்கள் போன்றவை எங்கள் எதிர்பார்ப்பை உச்சத்திற்கு இட்டுச் சென்றன என்றாலும் மூன்று மணிநேரம் அமர்ந்து பார்க்கும் வகையில் "Engaging" மற்றும் "Entertaining" ஆக இருக்குமா? என்ற சந்தேகமும் இல்லாமல் இல்லை.

என்னுடைய நம்பிக்கையின்மைக்குக் காரணம் பரதத்தைக் குறித்து எனக்கு இருந்த குறுகிய அறிதல் தான். நான் என்றில்லை நம்மில் பலருக்கும்  "Classical Dance" என்றாலே புரியாத பாஷையில் ஒலிக்கும் பக்திப்  பாடல்களுக்கு நடனமாடும் தூர்தர்ஷன் "நாட்டியாஞ்சலி" நிகழ்ச்சிகளும் பள்ளி ஆண்டு விழாவில் ஆடப்படும் பரத நாட்டிய திரைப்படப் பாடல்களும் தான் நினைவுக்கு வரும். திரைப்படங்களில் காட்டியதால் தான் ஓரளவிற்காவது பரதத்தைப் பற்றிய அறிமுகம் நமக்குக் கிடைத்தது என்று கூறினாலும் மிகையாகாது!!!

இவ்வாறான எண்ணத்துடன் அரங்கிற்குள் நுழைந்த எனக்கு வரவேற்புரை, ஆசிரியர் அறிமுகம் என்று  நிகழ்ச்சிகள் துவங்கி சில மணித்துளிகள் சாதாரணமாகத் தான் இருந்தது. முழு முதற் கடவுள் விநாயகருக்கான நடனம் என்று முன்னுரை வழங்கிய பின் மேடையில் ஒளி மாற்றங்களுடன் சகோதரிகளான சரயுவும் சிந்துவும் தோன்ற ஒரு வித உணர்வு மாற்றம் அரக்கெங்கும் பரவியது எனலாம்.

பரதத்தைப் பற்றிய Technical விஷயங்களெல்லாம் நம் பாமர அறிவிற்கு அப்பாற்பட்டது எனினும் அவ்விருவரின் பாவம் (Bhavam) அங்கிருந்த அனைவரிலும் ஒருவித கிளர்ச்சியை உண்டாக்கியது என்பது மறுக்க முடியாத உண்மை.

ஐயப்பனைப் பற்றிய கதையை ஆசிரியை விளக்க இவ்விருவரும் நிமிடத்திற்கு நிமிடம் என முகத்தில் உணர்ச்சிகளை மாற்றி   நவரசத்தையும்  ஆடலுடன் கலந்து  Enact செய்த விதம் புல்லரிக்கச் செய்தது.

ஒருவர் சிவனாக மாற மற்றொருவர் சக்தியாக மாறுகிறார், குறும்பு செய்யும் கண்ணன் அடுத்த பாடலில் "மாலை மணிவண்ணா" என்று ஆண்டாளாக அவதரிக்க, யசோதை திருமாலாகி தெய்வீக சிரிப்பில் காண்போரை கவர்ந்திழுக்கிறார்.

இவ்விருவரிடம் தோன்றிய முக பாவனைகள் இவர்களின் ஆசிரியை முகத்திலும் மின்னல் வேகத்தில்  தோன்றித் தோன்றி மாறியதையும் நான் கவனிக்கத் தவறவில்லை.

இவ்வாறு மெய் மறந்த நிலையில் இருந்த  நம்மை ஒரு சிறு இடைவேளை என்று தட்டி எழுப்பினர்.

இப்பொது மனதில் இருந்த சந்தேகம் முற்றிலும் அகன்றிருக்க Second Half-யை பார்க்க மனம் பரபரத்தது. குடுத்த சிற்றுண்டியை  அரக்க பரக்க முடித்துவிட்டு அரங்கிற்குள் முழு ஆர்வத்துடன் நுழைந்தோம்.

ஜதிஸ்வரம், சப்தம், வர்ணம், தாண்டவம்  என்று அனைத்தையும் ஆடலில் கொண்டுவந்து திரிபுர சுந்தரியாகவும், ஆடல் கடவுள் நடராஜராகவும் மேடையெங்கும் பரவி, நாங்கள் இருவர்..இல்லை..இல்லை  இருவரும்  ஒருவர் என்று மாயம் காட்டிப் பின்னிப் பிணைந்து   இரட்டைச் சகோதரிகள்  ஆடிய நடனத்தைக் காண இரண்டு ஜோடிக்  கண்கள் இருந்திருக்க வேண்டும்!!! 

அவ்வப்போது  நண்பர்கள் கூட்டம் கைதட்டி ஆர்பரித்தும் ஆரவார சப்தங்கள் எழுப்பியும் நடனக் கலைஞர்களின் உற்சாகம் குறையாத வகையில் ஊக்கம் கொடுத்தனர். 

பார்வையாளர்கள் பலரின் மனதில் அவர்களின் இளமைக்கால நடன அனுபவங்கள் நிழலாடிக் கொண்டிருக்கையில், நம் குழந்தையும் இவ்வாறு நடனமாடினால் எவ்வாறு இருந்திருக்கும் என்ற கற்பனையும் கண்டிப்பாக இணைந்திருக்கும். என் கண்களுக்கோ சிந்துவும் சரயுவும் பத்மினி, ஷோபனா, பானுப்பிரியாவாக உருமாறி இருந்தனர். 

பல இளம் உள்ளங்களில் தானும் இந்த  ஆடல் கலையை கற்க வேண்டும் என்ற உந்துதலையும் (Inspiration) இவ்விருவர் விதைத்து இருப்பார்கள்  என்பதையும் இங்கு குறிப்பிட்டாக  வேண்டும்.  

இவர்களின் இக்கலைத்திறனை வளர்த்தெடுத்தது மட்டுமல்லாமல் பலரின் முன்னிலையில் அரங்கேற்றியது வரை அவர்களுக்கு உறுதுணையாக திகழ்ந்த பெற்றோரின் உரையுடன், நண்பர்கள், உற்றார்கள், உறவினர்கள் என்று பலரின் வாழ்த்துச் செய்திகளும் காணொளி வடிவில் திரையிட்டுக் காட்டப்பட்டது நம்மை நிகழ்காலத்திற்கு அழைத்து வர உதவியது. 

தங்கள்  குருவின் திருக்கரங்களால் நிறைவுப்  பட்டத்தை வாங்கிய சகோதரிகள் தங்களின் இப்பயணத்தில் உடன் வந்த நபர்களுக்கு நன்றி சொல்ல மைக்கை கையிலெடுக்க  குறும்பும், குதூகலமும், இளமைத் துள்ளலும்  கலந்த செயற்கை அற்ற அவர்களின்  பேச்சு அரங்கத்தினரை சிரிப்பில் ஆழ்த்தியது. இதுவரை மேடையில் ஆடியவர்களுக்கும் இவர்களுக்கும் தொடர்பே இல்லையோ என்று எண்ணம் எழுந்த  அதே வேளையில் பரதத்தில் எந்த அளவிற்கு ஈடுபாடும், கடின உழைப்பும், கவனமும் இருந்திருந்தால் இது சாத்தியமாகியிருக்கும் என்றும் வியக்கத் தோன்றியது!!!  

இறுதியாக மங்கள நடனத்திற்கு முன் மேள வாத்தியங்களை மைய இசையாகக்  கொண்டு வெளிவந்த சினிமாப்  பாடல்கள் மற்றும் தங்கள்  தாய்மொழிப் பாடலுக்கு அவர்கள் ஆடிய நடனம் பார்வையாளர்களை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்து சீர்படுத்தியது.

மூன்றரை மணி நேரம் சென்றதே தெரியவில்லை என பார்வையாளர்கள் பேசிக் கொள்வதை அரங்கத்தின் வெளியே கேட்க முடிந்தது இது இரட்டைச் சகோதரிகளுக்கு கிடைத்த வெற்றி அன்றி வேறல்ல.

இவ்வேளையில் இவர்களுக்கு சிந்து, சரயு என்று பெயர்  சூட்டிய இவர்களின் பெற்றோரை பாராட்டியே தீர வேண்டும். நதி போல் நளினமாக மேடை எங்கும் பரவி  நாட்டியமாடிய சகோதரிகளின் நடனச் சுழலில் சிக்காதவர்கள் அரங்கத்தில் இருந்தாரா என்பது சந்தேகமே!!!

இவர்களின் (நதிகளின்) இப்பயணம் மேலும் தொடர்ந்து கலைக்  கடலில் சங்கமிக்க  வாழ்த்துக்கள்!!!

"ஆடல் கலையே தெய்வம் தந்தது" என்பதுதான் எத்தனை உண்மை.