Tuesday, February 14, 2023

காதலில் விழுந்தேன்...

காலையில் இருந்து சாவகாசமாக இருந்த நிரஞ்சனா கடைசி பத்து நிமிடத்தில்  அரக்க பறக்க ஓட வேண்டி இருக்கும் என்று நினைக்கவில்லை. எதிர்பாரா விதமாக ஏற்பட்ட சாலை நெரிசலும் அவர்களின் பயணத்தை தாமதப் படுத்த காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த மகளின் முகத்தில் பதட்டமும் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த கணவர் கதிரின்  கண்களில் கோபமும் ததும்பி நின்றதை நிரஞ்சனா கவனிக்காமலில்லை.

ஒரு வழியாக மகளை வாத்திய வகுப்பிற்கு அனுப்பி விட்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. 

"ஒரு நாள் கரெக்ட் Time-க்கு கிளம்ப முடியாதா?" என்று ஆரம்பித்த கதிரின்  கேள்வி அடுத்த பதினைந்து நிமிட வாக்கு வாதத்திற்கு வித்திட கடைசியாக  "நீ வீட்ல சும்மா தான இருக்கே" என்ற பிரம்மாஸ்திரத்தை ஏவி விட்டு விட்டு அமைதியான கணவனை  அனல் பறக்கும் பார்வையால் எரித்த நிரஞ்சனாவின் கண்கள் குளமாயின.

"இனிமே இந்த மனுஷனை ஒரு உதவியும் கேக்கக் கூடாது..எல்லா வேலையும் நாமளாவே பாத்துக்கனும்" என்று நினைத்த  நிரஞ்சனாவின் மனது "ஒரு நாள் ஒரு வேலையும் பார்க்காம உக்காந்தா தான் தெரியும்" என்றும் கொந்தளித்தது.

வழக்கம் போல் அடுத்த ஒரு மணி நேரத்தில் கணவனும் மனைவியும் ராசியாகி நடந்ததை மறந்தனர் ஆனால் கோபத்தின் உச்சத்தில் நிரஞ்சனாவின் மனதில் கண நேரத்தில் தோன்றி மறைந்த நேரெதிரான எண்ணங்களில் ஒன்று விரைவில்  நிறைவேறப் போவதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு நண்பர்கள் வட்டம் Hiking Trip ஒன்றை திட்டமிட்டனர். கடந்த ஒன்றரை வருடமாக வீட்டிலேயே இருந்ததால் இயற்கை காற்று உடலுக்கும் மனதிற்கும் இதமாக இருக்கும் என்ற எண்ணம் மேலோங்க அரை மனதுடன் செல்ல சம்மதித்தாள் நிரஞ்சனா. குடும்பத்துடன் அனைவரும் சேர்ந்து கலகலப்பாக மலை ஏறினர். பல மாதங்களுக்குப் பிறகு சந்தித்துக் கொண்டதால் நண்பர்களின் கலகல பேச்சும் சிரிப்பும்  வானை முட்டியது.

அந்தி வேளையில் சூரியனின் அஸ்தமனத்தை ரசித்த நிரஞ்சனா மலையை விட்டு இறங்கத் தொடங்கினாள். உடன் வந்த மழலைப் பட்டாளங்களை மேய்த்துக் கொண்டு முன் இறங்கிய கதிரை திடீரென்று  நிரஞ்சனாவைச்  சுற்றி சலசலத்த குரல்கள் பின்னுக்கு இழுத்தது.

"என்னாச்சு என்னாச்சு" என்று பதட்டத்தோடு அங்கு வந்த கணவனிடம் "காலு பிசகிருச்சு..வலி தாங்க முடியல ..தலை வேற  சுத்தற மாதிரி இருக்கு" என்று ஓரமாக இருந்த பாறையில் அமர்ந்து கொண்டாள் நிரஞ்சனா. "சுளுக்குத்தான் கொஞ்ச நேரம் உக்காந்துட்டு வாங்க..தண்ணி குடிங்க..பழம் சாப்பிடுங்க" என்று உபசரித்த நண்பர்கள் குழாமை "நீங்க போயிகிட்டே இருங்க" என்று கீழே அனுப்பிவிட்டு கைத்தாங்கலாக அழைத்துச் சென்ற கதிரின் தோள்களை ஸ்திரமாகப் பிடித்துக் கொண்டாள் நிரஞ்சனா.

"வேணுமின்னா ஆம்புலன்ஸை கூப்பிடலாம்..கஷ்டப் படாதே" என்று கூறிய கணவனைப் பார்த்து "இல்ல..குழந்தைங்க கீழ போயி வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க..போயிரலாம்" என்று வலியைப் பொறுத்துக் கொண்டு கீழே இறங்கி விட்டாள் நிரஞ்சனா.

அடுத்த ஒரு மணி நேரத்தில்  அவசரப் பிரிவு மருத்துவர் நிரஞ்சனாவின் X-Ray -யை  ஆராய்ந்து எலும்பு முறிவை உறுதிப்படுத்த கலங்கிப் போயினர் கணவனும் மனைவியும். சிகிச்சைக்கு வேறு மருத்துவரை அணுக வேண்டும் என்றும் அதுவரை காலை கீழே வைக்க வேண்டாம் என்று கட்டுப்  போட்டு கைத்தடியையும் கொடுத்தனுப்பினர்.

சோகமும் களைப்பும் கலந்த முகங்களோடு நண்பர்களும் விடை பெற்றுக் கொள்ள வலி நிவாரணிகளை சாப்பிட்டு விட்டு படுத்த நிரஞ்சனாவிற்கு அன்றைய இரவு மிக மிக நீளமான இரவாக அமைந்தது. கடும் வலியோடு புரண்டு படுக்க முடியாமல் எழுந்து.. எழுந்து அமர்ந்த அவளை கதிர் கை தாங்கலாக கழிப்பறைக்கு அழைத்துச் செல்வது, சிறிது நேரம் நடக்க வைப்பது என்று சிறிதும் கண் அயராமல் கவனித்துக் கொண்டான்.

மறு நாள் தொலை பேசி மூலம் சிறப்பு மருத்துவரிடம் Appointment வாங்கிய அவர்களை அறுவை சிகிச்சை கூட செய்ய நேரிடலாம் என்று பயமுறுத்தினர். அன்று இரவும்  வலி நிவாரணியால் பலனேதும் இருக்கவில்லை. அரைமணி நேரத்திற்கொருதரம் எழுந்தமர்ந்த நிரஞ்சனாவை உடைந்த குரலில் சமாதானப்படுத்திய கதிர் அவளின் கண்களில் வழிந்தோடிய கண்ணீரை கனிவுடன் துடைத்தான்.

அடுத்து வந்த நாட்களில் அவளின் சிகிச்சை தொடங்கியது. அறுவை சிகிச்சை தேவை இல்லை, மாவு கட்டு போடவில்லை. Stabilizers என்று சொல்லக் கூடிய தடித்த ஷுக்களை நடக்கும் போது அணிந்து கொண்டு ஊன்று கோளின் (Crutches) உதவியோடு அடுத்த ஆறு வாரங்கள் இருக்குமாறு அறிவுறுத்தப் பட்டாள்.

அவள் செய்ய வேண்டியதெல்லாம் எதுவும் செய்யாமல் அமர்ந்திருக்க வேண்டியது. நண்பர்கள் சில நாட்களுக்கு உணவை சமைத்து அனுப்பினாலும் கதிரின் வேலை ஆயிரம் மடங்கு கூடியது. கொரோனவால் சொந்தங்கள் யாரும் வர இயலாத நிலை.

நிரஞ்சனாவின் வலி கட்டுக்குள் வந்தது. வீட்டிலிருந்தபடியே வேலை பார்த்த கதிருக்கு அவளை பார்த்துக் கொள்வதே முழு நேரப் பணியாக இருந்தது. சாப்பாட்டை கையில் கொடுப்பது, முடித்தவுடன் கை கழுவ தண்ணீர் கொடுப்பது, படுக்கையில் படுக்க வைப்பது, குளிப்பாட்ட உதவுவது என்று களைத்துப் போனாலும் மருத்துவமனை வாசம் இல்லாமல் போனதால் கவலை இன்றியே தென்பட்டான். குழந்தை பேற்றின் போது கதிர்  அவளை கவனித்துக் கொண்டது  நினைவுகளில் வந்து செல்ல கணவனை வாஞ்சையுடன் அணைத்துக் கொண்டாள் நிரஞ்சனா.

நிரஞ்சனாவை பார்க்க வரும் நண்பர்கள் அவளுக்கு கிடைக்கும் ராஜ மரியாதையை கேலி செய்தனர் ஆனால் அவர்களிடம்  "வீட்டு வேலை பார்த்து முடியல..நிரஞ்சனா எவ்வளவு வேலை பாத்திருக்கா?!" என்று அங்கலாய்த்த கணவனை காதல் பொங்க  ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தாள் நிரஞ்சனா. 

கடந்த  2021-ம் ஆண்டில் கொரானாவை கட்டுப் படுத்த தடுப்பு ஊசி கண்டறிய பட்டதோடு வைரஸிற்கு  எதிராக நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வளர 2nd Dose, 3rd Dose  என்று பூஸ்டர்கள் வந்த வண்ணம் இருக்கிறது. தடுப்பு மருந்து வேலை செய்ததோ இல்லையோ எதிர் பாராமல் ஏற்பட்ட இந்த  விபத்து  நிரஞ்சனாவிற்கும் கதிருக்கும் இடையே இருந்த காதலை பன்  மடங்கு Boost செய்து விட்டது என்பதை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டுமா என்ன?!




Friday, December 2, 2022

வரும் ஆனா வராது ..இருக்கும் ஆனா இருக்காது !!!

பல மாதங்களுக்குப் பின் அவர்கள் அன்று வெளியில் சென்று உணவருத்தினார்கள். கொரோனா கால கடத்தில் ரெஸ்டாரண்டில் அமர்ந்து உண்ணும் வாய்ப்பு இல்லாது இருந்ததால் இன்று ஒரு பிடி பிடிக்க வேண்டும் என்று "Buffet System" உள்ள இடத்தை தெரிவு செய்திருந்தார்கள்.

அவரவர் தங்களுக்கு விருப்பமான பதார்த்தங்களை தட்டு நிறைய நிரப்பிக் கொண்டு தங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த மேஜைக்கு வந்து ரசித்து ருசித்து சாப்பிட்டார்கள். "இதற்கு மேல் முடியாது டா சாமி" என்ற நிலை வந்த பின் கடைசியாக ஒரு டீ குடித்து விருந்தை நிறைவு செய்து விட்டு கிளம்பினார்கள்.

வீட்டிற்கு வந்து "Freshen Up" செய்து கொள்வதற்காக குளியலறைக்குச்  சென்ற கயல் அங்கு குப்பைத்தொட்டியில் போடப்பட்டிருந்த எதையோ கையில் எடுத்தவாறு "எத்தனை தடவை சொன்னாலும் கேக்க மாட்டேங்குறா" என்று தனது மகளை கடிந்து கொண்டவாறு சத்தமாக அவளை அழைத்தாள்.

அவளின் அலறல் பேச்சைக் கேட்ட குடும்பத்தினர் "என்ன..என்ன? "  என்று பதறி  அடித்துக் கொண்டெல்லாம் வரவில்லை. மிக மெதுவாக வந்த மகளிடம் "இந்த Tube-ல இருக்குற பேஸ்டை வைத்து ஒரு வாரம் பல் தேய்க்கலாம். இத நீ தூக்கிப் போட்டுட்டே" என்று ஆரம்பித்து எவ்வாறு சிக்கனமாக இருப்பது முக்கியமாக பொருட்களை வீணடிப்பது எவ்வளவு தவறு என்று அரைத்த மாவையே திரும்ப  அரைத்தாள் கயல்.

கயல் போலத்தான் நம்மில் பலரும்..

தேய்ந்து தேய்த்து துரும்பாக இளைத்த பின்னரும் அந்த சோப்பை தூக்கிப் போட மாட்டோம். புது சோப்பில் ஒட்டி வைக்கலாமே! 

எண்ணை வரும் டப்பாவையோ ..பாலிதீன் கவரையோ தீர்ந்து விட்டது என்று குப்பையில் வீசுவதற்கு முன் அதை குறைந்த பட்சம் அரை மணி நேரமாவது எண்ணை டப்பாவிற்கு மேல் தலை கீழாக கவிழ்த்து வைக்க வேண்டும்.

பாத்திரம் துலக்கும் liquid detergent டப்பாவில் தண்ணி ஊற்றி நாளு நாள் பாத்திரம் கழுவி விடலாம்.

"என்ன விட்ருங்க Please " என்று கெஞ்சும் Tomato Ketchup தலையில் அடி அடி என்று அடித்து அந்த இரண்டு ஸ்பூன் சாஸை வெளியே எடுக்காவிட்டால் நமக்கு தூக்கம் வராது.

இதே போல் ஜாம், ஷாம்பூ டப்பா என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம். நம் கண்ணுக்கு தெரியாமல் அடைந்து கிடைக்கும் அனைத்தும் நமக்கு பொக்கிஷம் தான். 

இதுல என்ன தப்பு ? வேஸ்ட் செய்யக் கூடாது இல்ல? " என்று நீங்கள் கேட்பது புரிகிறது. 

பற்பசை விளம்பரங்களில் காண்பிக்கப்படுவது போல டூத் பிரஷ் நிறைய டூத் பேஸ்ட் வைத்துக் வீணடிக்கும் நம் குழந்தைகளை நாம் கண்டிப்பதில்லை. 

சுகாதாரம் என்ற பெயரில் (முக்கியமாக கொரோனாவிற்குப் பிறகு) மணிக்கொருதரம் சோப்பை உபயோகித்து கைகளை சுத்தம் செய்யும் குழந்தைகள் Sink-ல் கொட்டி வைக்கும் சோப்பை நாம்  கண்டு கொள்வதில்லை 

ஆனால் அதே பொருள் தீரும் சமயத்தில் நமக்கு எங்கிருந்து தான் வருகிறதோ "Selective Amnesia" போல  இந்த சிக்கனத்தின் மீதான அக்கறை?! டூத் பேஸ்ட்டை எப்பிடி அழுத்தி, சுருட்டி வெளியில் எடுப்பது என்று குழந்தைகளுக்கு  கிளாஸ் எடுத்தால் எப்படி?

மேற் சொன்ன அனைத்தும் "Middle Class Mind Set" என்று கூறி ஒதுக்கி விடலாம்  எனினும் நம்மில் பலர் அங்கிருந்து வந்தவர்கள் தானே!!! அந்நியன் விக்ரம் போல பெரும்பாலான சமயங்களில் "ரெமோவாக" குழந்தைகளை வளர்த்து விட்டு ஒரு சில விஷயங்களில் மட்டும் அம்பியாக மாறி அவர்களை குழப்பி நாமும் குழம்புகிறோம்.

மாதக்கடைசியிலும்  மனதைக்  கரைக்கும் வீடியோக்களை பார்த்து மட்டும் வருவதல்ல சிக்கனம் அது மனதில் இருக்க வேண்டும் அப்போது தான் யார் மேற்பார்வையும் இன்றி நம்மால் அதை செயல் படுத்த முடியும்.

ஆப்பிரிக்காவில் பசியால் வாடும் குழந்தைகளுக்காக கவலைப்படும் நீங்கள் ஆத்மார்த்தமாக சிக்கனத்தை கடைபிடியுங்கள் அது போதும்!!!

பின் குறிப்பு : கயல் குடும்பத்தினர் சாப்பிட்ட மேசையை சுத்தம் செய்த நபர் அவர்கள் தட்டில் மீதமிருந்த பதார்த்தங்களை வேறு வழியின்றி குப்பையில் கொட்டிக் கொண்டிருந்தார்!!!


Friday, April 22, 2022

ஆற..அமர -

கடந்த வாரத்தில் எங்கள் வீட்டிற்கு விருந்தாளிகள் வந்து ஒரு நாலு நாள் தங்கிவிட்டுச் சென்றனர். விருந்தோம்பல் நம் கலாசாரம் அல்லவா? அதனால் நன்றாகவே கவனித்துக் கொண்டதில் உடல் அசதி உச்சத்தைத் தொட்டது. நான் ஒன்றும் நளபாக சமையல் எல்லாம் செய்து அசத்தவில்லை. நான் வழக்கமாக சமைக்கும் பதார்த்தங்களோடு ஒன்றிரண்டு Extra Items அவ்வளவு தான். Guest-ம் சமையலில் உதவினார்கள் அதிலும் இரண்டு மூன்று முறை ஆர்டர் செய்து வேறு சாப்பிடோம் இருந்தும் நான் அதிகம் வேலை செய்தது  போன்ற உடல் குடைச்சல்.

காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்ததில் பாத்திரம் தேய்ப்பது பெரும் சுமையாக இருப்பதாகப் பட்டது ஆனால் வேறு வழியில்லை. இங்கு வேலைக்கு ஆள் எல்லாம் கிடைப்பதில்லை. அளவுக்கு மீறிய பாத்திரங்களை புழங்க வேண்டி வருவதால்  Dishwasher எனக்கு பிடிப்பதில்லை. யோசித்து பார்த்ததில் பத்து வருடங்களுக்கு முன் என் உறவுக்கார மாமா ஒருவர் கூறிய அறிவுரை நினைவுக்கு வந்தது. "இப்பிடி மணிக்கணக்கா நின்னுக்கிட்டே வேலை பார்த்தா உடம்பு எனத்துக்காக்கும்"?

நவீன சமையலறையில் நாம் நூறு சதவீதம் அனைத்து வேலைகளையும் அவசர கதியில் நின்று கொண்டே தான் செய்கிறோம். சமையல் கட்டிற்கு நுழைவது வரை என்ன சைமைக்கப் போகிறோம் என்பதை யோசிப்பதே கிடையாது பிறகு எங்கே அதற்கான "Pre-Preparation"ஐ செய்வது. போனை நோண்டிக் கொண்டோ கணினியை பார்த்துக் கொண்டே மணிக்கணக்காக அமர்ந்து விட்டு பிறகு Kitchen-ல் இரண்டு மணி நேரத்திற்கு மேல்  தொடர்ந்து நிற்கிறோம்.

என் அம்மா எல்லாம் என்ன சமைக்கப் போகிறோமோ அதை உரிப்பது, ஆய்வது, கிள்ளுவது என்று  முன் கூட்டியே தயார் செய்து கொள்வார். அருவாமனையில் காய் நறுக்குவதால் ஒரு பாத்திரத்தில் அரிசி களைந்த நீரை வைத்துக் கொண்டு அதில் தான் வெட்டிய காய்கறிகளைப் போடுவார். பிறகு அடுப்பை பற்ற வைத்து வேகமாக சமைத்து விடுவார்.

நாம் என்ன செய்கிறோம்? chopper, cutting board என்று மணிக்கணக்கில் நிற்பதோடு மட்டுமல்லாமல் அடுப்பிற்கும் Sink-கிற்கும் அலை பாய்கிறோம்.Atleast dinning table-ல் அமர்ந்து காய்கறி வெட்டலாமே? நேரத்தோடு நீரையும் வீணாக்குகிறோம்.

நேரம் கிடைக்கும் மாலை வேளைகளில் என் அம்மா கடுகு, பருப்பு என்று தீர்ந்து போன ஐட்டங்களை எல்லாம் Refill செய்து கொள்வார். எப்பப்பாத்தாலும் கிச்சன்ல என்னதான் பன்றியோ? என்று நாங்கள் கடிந்து கொள்வதுண்டு ஆனால் அது எவ்வளவு நல்ல பழக்கம் என்று இப்போதுதான் புரிகிறது.

அடுத்த பெரிய தவறு நாம் நம் குழந்தைகளை வேலை வாங்கி பழக்கப்படுத்துவதில்லை. கணவரிடம் உதவச் சொல்லி சண்டைக்கு நிற்கிறோமே தவிர பிள்ளைகளை சொல்வதில்லை. இம்மாதிரியான இக்கட்டான  சமயங்களில் அது  கை கொடுக்கும் என்பதை உணர்வதில்லை. நின்று கொண்டே இருப்பதால் வயது ஐம்பதை நெருங்கும் முன்னரே ஆர்த்ரிடிஸ் ஆல் அவதிப்படுகிறோம். நமக்கு கோபம், எரிச்சல் என்று சமையல் மீதே ஒரு வெறுப்பு வந்து விடுகிறது. அதை குழந்தைகள் மற்றும் கணவரிடமே காட்டுகிறோம் ஆக உடலுக்கு தேவையான Movements-ஐ கொடுக்கத் தவறினால் உடல் மட்டுமல்ல மன நலமும் பாதிக்கப்படுகிறது.

ஆய கலைகள் அறுபத்தி நாளில் சமையல் கலையும் ஒன்று அதை நடனம் போல் முழு உடலையும் இயக்கிச் செய்யலாமே? Gym-க்கு செல்ல வேண்டிய அவசியமே இராது!!!

எள்ளும் கொள்ளும் வெடிக்க வேண்டியது பாத்திரத்தில் உங்கள் முகத்தில் அல்ல!!! 

Friday, March 4, 2022

திருமணம் என்னும் திருவிழா

"சமீப காலமாக பல ஆண்கள் தங்களுக்கு பெண் கிடைப்பதில்லை என்றும் பெண் வீட்டாரின் கட்டுக்கடங்காத டிமாண்டுகளே இதற்கு காரணம்" என்றும்  சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஆண் பெண் எண்ணிக்கை விகிதாச்சாரம் சமமாக இல்லாததும் இதற்குக் காரணம் என்று ஆய்வறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன.

எனது சொந்தங்களின் வட்டத்திலும் 35, 40 வயதை நெருங்கியும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் சில ஆண்கள் திருமணமாகாமல் இருப்பதைப் பார்க்கிறேன். 

எண்பதுகளில் எல்லாம் குடும்ப பாரத்தை சுமக்கும் தமையன்களும் தமக்கைகளும் தான் தங்களுக்கென்று ஒரு திருமண வாழ்க்கையை தகுந்த காலத்தில் அமைத்துக் கொள்ள முடியாமல் தனியாகவே வாழ்ந்து முடித்தனர் ஆனால் இப்பொது அப்படிப் பட்ட பொறுப்புகள் ஏதும் இல்லாத இளைஞர்கள் சிலருக்கும்  திருமணம் எட்டா கனியாக எட்டி எட்டிப்  போகிறது.

உரிய நேரத்தில் வந்த வரன்களை எல்லாம் தட்டிக் கழித்ததால், Single Parent ஆக இருப்பவர்கள் சரியாக கவனிக்காததால் என்றெல்லாம் காரணம் கூறுகிறார்கள் ஆனால் அனைத்தும் சரியாக இருப்பவர்களுக்கும் எந்த Demand-ம் செய்யாதவர்களுக்கும் கூட  ஏனோ திருமணம் தடை படுகிறது?!

இருபது வருடங்களுக்கு முன் கூட அவரவர் தகுதிக்கேற்ப பெண் கிடைத்துக் கொண்டுதான் இருந்தது ஏன் ஊதாரித்தனமாக சுற்றிக் கொண்டிருந்தவர்களுக்குக் கூட திருமணம் ஆனது ஆனால் இப்பொது என்னவென்றால் மெடிக்கல் Rep ஆக இருந்தால் பெண் கொடுக்க மாட்டார்களாம், ஜவுளிக்கடையில் வேலை பார்த்தால் பிடிக்காதாம். என்ன Logic என்று புரியவில்லை அதனால் இந்த துறையில் இருக்கும் யாருக்குமே திருமணம் ஆகவில்லையா என்ன? அப்படியும் சொல்ல முடியாது.

பெரு நகரங்களில் வசிப்பவர்களில் சிலரும்  மேல் தட்டு வர்கத்தில் சிலரும் திருமணம் என்ற உறவில் எல்லாம் நம்பிக்கை இல்லை என்று Single ஆக இருக்கிறார்கள் அவர்களின் கதையே வேறு. "Living together" என்ற பெயரில் நேரத்திற்கேற்ற துணையை தேடிக் கொள்கின்றனர் ஆனால் திருமணம் என்னும் பந்தத்தில் மதிப்பும் மரியாதையும் வைத்து தனக்கென ஒரு வாழ்க்கைத்துணையைத் தேடிக்  காத்துக் கொண்டிருப்பவர்களின் பரிதாப நிலையை எண்ணித் தான் என் மனம் கவலை கொள்கிறது.

இவர்களில் சிலர் கைம்பெண்களுக்கு வாழ்வளிக்கின்றனர் சிலரோ "அதெல்லாம் சரிப்பட்டு வராது" என்று காத்துக் கிடக்கின்றனர். பல வருடங்களாகத் தேடித் தேடி சலித்த பின் திருமணமே வேண்டாம் என்ற நிலைக்குத் தள்ளப்படும் இவர்கள் பின் திருமணம் நடந்தாலும் சிறு சிறு காரணங்களுக்காக சகிப்புத்தன்மையை இழந்து விவகாரத்தை நாடுகின்றனர். "எட்டாக்கனியாக இருந்த திருமணம் ஏனோ கைகளுக்கு எட்டும் வேளையில் புளிக்கிறது?!"

"திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்" - சிலர் தகுந்த நேரத்தில் தங்களுக்கு கிடைத்த நிலத்தில்  நடவு செய்து, தேவையான அளவு மழை, வெயில் போன்ற சொந்தங்களும் பந்தங்களும் அமையப் பெற்று நல்ல உறவுகளை அதாவது  மகசூலை அறுவடை செய்து மகிழ்வுடன் வாழ்கின்றனர். அவர்கள் வாழ்விலும் எதிர் பாரா வெள்ளங்களும், வறட்சியும் வரத்தான் செய்கின்றன ஆனால் அவற்றை பொறுமையுடன் சாமர்த்தியதையும் கலந்து கையாண்டு இறைவனின் துணையுடன் வாழ்வில் நிம்மதி அடைகின்றனர்.

வேறு சிலரோ தாமதமாக விதைகளை விதைத்தாலும் கால நிலைக் கேற்றபடி சில பல மாற்றங்களை செய்து சுகித்து வாழ்கின்றனர்.

சிலரோ உரிய நேரத்தில் விதைத்தும் நல்ல பலனை அடையாமல் தங்கள் நிலம் தரிசு நிலமாகிப் போனதை எண்ணி கண்ணீர் வடிக்கின்றனர். 

ஆனால் விதைப்பதற்கே நிலம் கிடைக்காமல் கையில் விதையுடன்  காத்துக் கொண்டிருக்கும் இந்த ஆடவர்களின் வினாக்களுக்கு விடைதான் என்ன? 


Thursday, January 13, 2022

பழையன நிலைத்தலும் புதியன குறைத்தலும்

கடந்த வருடம் அமெரிக்காவின் வட கிழக்கு மாகாணங்களை "Ida" புயல் தாக்கியது. மழையுடன் பேய்க் காற்றும் இணைந்து கொள்ள மக்கள் போக்கிடம் இன்றி அவதியுற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். எங்கெல்லாம் வெள்ளம் வருவதற்கு வாய்ப்பேயில்லை என்று அறியப்பட்டு வந்ததோ அங்கெல்லாம் வெள்ளம் புகுந்தது. புயல் காற்றின் தாக்கத்திலிருந்து தப்பிக்க மக்கள் வீட்டின்  அடித்தளத்திற்கு அதாவது Basement-ற்கு  செல்லுமாறு பணிக்கப்பட்டனர் ஆனால் அங்கு வந்த மழை வெள்ளத்தில் நீந்தத் தெரிந்தவர்களும் வெளியே வர வழியின்றி இறந்தனர் என்ற செய்தியை தொலைக்காட்சியில் காணும் போது மனம் மிகவும் கலக்கமடைந்தது.

அமெரிக்காவில் என்று மட்டும் அல்ல உலகெங்கும் மக்கள் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டு உயிரையும் உடமைகளையும் உற்றார் உறவினர்களையும் இழந்த வண்ணம் உள்ளனர். இவிடர்களுக்கெல்லாம் காரணம் காலநிலை மாற்றம் என்று அறிவியலாளர்கள் கூறி வருவது மட்டுமல்லாமல் அதைத் தடுக்க நம் வாழ்வியல் முறைகளில் கொண்டு வரவேண்டிய மாற்றங்களையும் வலியுறுத்தி  வருகின்றனர்.

தொன்னூறுகளிலேயே பூமி வெப்பமடைதல், காற்று மாசுபடுதல் மற்றும் ஓசோனில் ஓட்டை என்றெல்லாம் பாட புத்தகத்திலும் செய்தித்தாள்களிலும் படித்திருக்கிறோம் ஆனால் அதைப்பற்றி அதற்குமேல் யோசித்ததில்லை விளைவு - இன்று கண் முன்னே தெரிகிறது.

ஒரு காலத்தில் வீட்டிற்கு ஒரு மரம் வளர்த்தால் போதும் என்று சொல்லிக்கொண்டிருந்தவர்கள் தற்போது இம்மாற்றங்களை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு வழிமுறைகளை கூறுகின்றனர்.  பின்பற்றவும்  துவங்கி விட்டனர். மேற்கத்திய நாடுகளில் மாமிசதிற்காக வளர்க்கப்படும் உயிரினங்களால் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது என்று ஆய்வறிக்கைகள் சமர்பிக்கப்படுகின்றன ஆதலால் புலால் மறுப்பு மட்டுமல்ல பால் மற்றும் பால் பொருட்களையும் அறவே தவிர்ப்பது  (Veganism) காலநிலை மாற்றத்தை சீராக்கும் என்கின்றனர்.

பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை குறைத்தல், தேவையற்ற வேளைகளில் மின் உபகரணங்களை சார்ஜில் இருந்து விடுவித்தல்,  பொருட்களை உரிய முறையில் மறு சுழற்சி செய்தல் என்று பல்வேறு உபாயங்கள் கூறப்பட்டாலும் யார் காதில் வாங்கிக் கொள்கிறார்கள்?

தினக்கூலியாக வேலை செய்யும் பாமரனுக்கும்  பெப்சி, கோக் குடித்துக் கொண்டு காரில் செல்லும் செல்வந்தர்களுக்கும் இதில் சம அளவு பங்குண்டு. வாகனங்களின் புகையால் எந்த அளவிற்கு சுற்றுச் சூழல் மாசடைகிறதோ அதே அளவிற்கு விறகடுப்பாலும், வீதியில் எரிக்கப்படும் டயராலும் காற்று மாசடைகிறது.

அனைவரும் மிக சுலபமாக பின்பற்ற கூடிய வழிமுறையாக என் கண்களுக்குப்  படுவது/தெரிவது  என்னவென்றால் கூடுமானவரை  நம் தேவைகளை நாமே குறைத்துக் கொள்வது மற்றும் பழைய வாழ்க்கை முறைக்கு திரும்புவது தான். விலை மலிவாகக் கிடைத்தாலும்  முடிந்தவரை online ஆர்டர் செய்வதைத் தவிர்த்து அருகாமையில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்கலாம். இது Carbon Prints-ஐ குறைக்க உதவுமாம். பழைய துணிகளை டேபிள் துடைக்கவும் அழுக்கு துடைக்கவும் உபயோகிக்கலாம் ஒரு முறை துடைத்து எரியும் Tissue பேப்பர்கள் எதற்கு? 

ஸ்விக்கி, Zomoto-வில் வரும் ஆர்டர்கள் பிளாஷ்டிக் பைகளில் தானே வருகின்றன? அது உடல் நலத்திற்கும் கேடு அல்லவா? தூக்கு போனியில் சாம்பார் வாங்கி வந்தவர்கள் தானே நாம்?

கடைகளுக்குச்  செல்லும் போது கையில் ஒரு துணிப்பையை எடுத்துச் செல்வது எந்த விதத்திலும் நமது கௌரவத்தை குறைத்து விடாது.

"பழையன கழிதலும் புதியன புகுதலும்" நன்றே ஆனால் வாரத்திற்கு ஒரு டிரஸ் வாங்கும் கலாச்சாரம் நம்முடையதல்லவே. ஒரு குழந்தைக்கு வாங்கிய பொருட்களை அடுத்த குழந்தைக்கும் உபயோகப்படுத்துவதில் எந்தக் குற்றமும் கிடையாது நீங்கள் Bad Parent ஆக மாட்டீர்கள்.

செருப்பு அறுத்து போனால் தைத்துப் போடலாம் தப்பில்லை. 

"நான் ஒன்னும் குப்பையிலே போடல..மறு சுழற்சி தான் செய்கிறேன்" என்று மார்தட்டிக் கொள்பவர்களே..பெருபாலான பொருட்கள் Recycle செய்யப்படாமல் மலைகளாக குவிந்து கிடக்கின்றன. வல்லரசு நாடுகள் குப்பைகளை கப்பலில் கொண்டு சென்று மூன்றாம் உலக நாடுகளில் குமிக்கின்றன என்று கூறுகிறார்கள் அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. Shakespeare இன்று இருந்திருந்தால் "உலகம் ஒரு நாடக மேடை என்பதற்கு பதிலாக..உலகம் ஒரு குப்பைக் கூடை" என்று எழுதியிருப்பாரோ என்னவோ?

நம் உடல் நலத்தை பேண Organic உணவுகளை நாடும் நாம் வரும் சந்ததியினர் நலனுக்காக சற்றேனும் பொறுப்புடன் சூழலைக் காக்க வேண்டாமா? 

அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் சுயநலமே..யோசிப்போமா??? 


Monday, December 6, 2021

காட்டுக்குள் மழை

"Amazon"-ன்னு சொன்னா உங்களுக்கு என்ன ஞாபகம் வருதுன்னு ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி கேட்ருந்தா என்ன பதில் சொல்லியிருப்பீங்க?

நீங்க Geography-ல் ஆர்வம் உள்ளவராகவோ அல்லது ஆங்கிலப்  படங்களை விரும்பி பார்ப்பவராகவோ  இருந்தால்   சட்டுன்னு அது ஒரு "Rain Forest" தென் அமெரிக்காவிலே இருக்குன்னு சொல்லுவீங்க இல்லையா நீங்க ஒரு விஜய் டிவி Viewer-ஆ இருந்தாலும் இதை தெரிஞ்சி வச்சுருப்பீங்க  பின்ன வழுக்கை தலையிலும் முடி வளர வைக்கனுமான  அங்க இருக்குற மூலிகையாலதான முடியும்.

ஆனா இப்ப இந்த 2021-ல முளைச்சு மூணு இலை விடாத சுண்டைக்கா பசங்கள்ல இருந்து அனுபவசாலி தாத்தா வரைக்கும் அமேசான் என்ற பேரைக் கேட்டாலே என்ன ஆர்டர் செய்யப் போறீங்கன்னு கேக்குறாங்க!!!

அமெரிக்காவின் முதல் ஐந்து தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின்  பட்டியலில் இடம் பெற்றிருக்கும் அமேசான் தொன்னூறுகளின் தொடக்கத்தில் துவங்கப் பெற்றிருந்தாலும், Amazon Prime Day என்ற Super Sale மூலம் அவர்கள் பிரபலமாயிருந்தாலும்  கடந்த பத்து வருடங்களாக அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறார்கள். அமேசானில் எதுவும் கிடைக்கும், எங்கும் கிடைக்கும்  என்ற நிலை இன்று உலகம் முழுதும் பரவி வருவது உண்மை. நமது பொருட்களை டெலிவரி செய்து விட்டு வாசலோடு சென்று கொண்டிருந்த அமேசான் - "Streaming Service"-ஐ ஆரம்பித்து  நமது வரவேற்பறையிலும்  வந்து அமர்ந்து விட்டது. 

இதுவரை அமேசான் சங்கத்தில் இணையாதவர்கள் கூட 2018-ல் "உங்கள் பொருட்கள் இரண்டே நாட்களில் வீடு வந்து சேரும் அதோடு எங்கள் தளத்தில் இருக்கும் திரைப்படங்களையும் நீங்கள்  இலவசமாக பார்த்துக் கொள்ளலாம்" என்ற சலுகையைக் கண்டு மெம்பெர் ஆனார்கள் முக்கியமாக இந்தியப் படங்கள் வருவதால் நம்மைப் போன்றவர்களுக்கும் இந்த dealing பிடித்திருந்தது. இப்பொது Amazon Prime என்று பெயர் பொறித்த வேன்களைப் பார்க்காமல் பொழுது கழிவதில்லை.

இதெல்லாம் வேண்டாம்  என்று உறுதியாக  இருந்த எங்களைப் போன்றவர்களையும் கொரோனா அமேசானில் கொண்டு கோர்த்து விட்டு குத்தாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வருடம் மட்டும் கிட்டத்தட்ட 25 ஆர்டர்களை அமேசானில் செய்திருக்கிறோம்..பெரிய பெரிய பொருட்கள் எல்லாம் கிடையாது Mask, Sanitizers-ல் இருந்து ஆரம்பித்து  உடைகள், பள்ளி கல்லூரிகளுக்குத்  தேவையான பொருட்கள், பார்ட்டி Decorations, புத்தகங்கள் Kindle வடிவில் என்று - அனாவசியமாக எதையும் வாங்கியதாகத் தெரியவில்லை.

டிவி, லேப்டாப் போன்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கடைகளில் வாங்குகிறோம் ஆனால் அதற்குத் தேவையான ஒயர், சார்ஜர் என்று இதர பொருட்களை அமேசானில் தேடுகிறோம். கொடுக்கும் விலைக்கேற்ற தரத்தில் பொருட்கள் இருப்பதால் பெரிதாக ஏமாற்றம் ஒன்றும் இருப்பதில்லை. 

குழந்தை பிறந்ததிலிருந்து குடு குடு தாத்தா/பாட்டி ஆகும் வரை வாழ்கைக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் ஒரே சொடுக்கில் அமேசானில் கிடைப்பதால் வெளிநாடுகளில் வசிப்பவர்களில் பெரும்பாலோனோர் இந்நிறுவனத்தின் Gift கார்டுகளையே விழாக்களுக்கும் சுப நிகழ்ச்சிகளுக்கும் பரிசாகக் கொடுக்கின்றனர் அதனால் மெம்பெர் அல்லாதவர்களும் அங்கே ஷாப்பிங் செய்கின்றனர்.

சமீப காலமாக சுற்றுச் சூழல் பாதிப்பில் அமேசான் நிறுவனத்திற்கு அதிக பங்கு இருப்பதாக பலர் சுட்டிக் காட்டுவதால் அவற்றை குறைக்கும் முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டிருப்பதாகக் கூறுகின்றனர். இது ஒருபுறமிருக்க அமேசான் போன்ற நிறுவனங்களால் சிறு/குறு தொழில்கள் நசுக்கப்பட்டு இருந்த இடம் தெரியாமல் போய் விடுகின்றன என்ற பொருமலும் சமுதாயத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளது. அது சரி வீட்டிலிருந்த படியே பொருட்களை கையில் பெற்றுக் கொண்டிருக்கும்  நமக்கு "கார்பன் ப்ரிண்ட்ஸ்" பற்றியும் கார்ப்பரேட் கொள்கைகள் பற்றி  எல்லாம்  என்ன அக்கறை?!

அமேசான் காடுகளில் மழை குறைந்து விட்டது ஆனால் அமேசான் நிறுவனத்திலோ பண  மழை கனமாகக் கொட்டிக் கொண்டிருக்கிறது. பேசப்படும் அமைப்பாக வளர்ந்து விட்ட எந்த நிறுவனமும் "Giving Back to the Society" என்ற பெயரில் ஏதேனும் நல்ல காரியங்களை செய்தாக வேண்டுமே? அமேசான் அதற்கு விதி விலக்கா என்ன? தங்களிடம்  வேலை பார்க்கும் பணியாளர்களை படிக்க வைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் மனித நேய செயல்களிலும் அமேசான் ஈடுபட்டு வருவதாக விளப்பரப் படங்கள் காட்டுகின்றன. 

அதோடு அமேசான் Originals என்ற பெயரில் திரைப்படங்களையும் தொலைக்காட்சித் தொடர்களையும் தயாரிப்பதால் புது முகங்கள் பலருக்கும் வாய்ப்பு கிடைப்பதாகக் கூறுகிறார்கள்.

எது எப்படியோ காற்று புக முடியாத இடத்தில் கூட அமேசான் நிறுவனம் நுழைந்து  விட்டது. அப்பிடியே உங்க Order History-யையும் ஒரு தரம் பாத்துருங்க அப்புறம் Shock ஆகப் போறீங்க 😇


Friday, November 19, 2021

தானமும்..தர்மமும்

ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பது போல எந்த ஒரு விஷயத்தையோ, மனிதர்களையோ  எடுத்துக் கொண்டு ஆராய்ந்தால்  அதற்கும்/அவர்களுக்கும் இரண்டு பக்கங்கள் இருக்கவே செய்கின்றன. அவை சிலருக்கு நல்லவையாகவும்/நல்லவர்களாகவும் சிலருக்கு கெட்டவையாகவும்/கெட்டவர்களாகவும் தெரிகின்றன உதாரணமாக சமூக வலைத்தளங்களையே எடுத்துக் கொள்வோமே? அங்க நல்லதும் நடக்குது..மத்ததும் இருக்குது. 

சமீப காலங்களில் சமூக வலைத்தளங்கள் மூலமாக பலருக்கும் மருத்துவ/கல்வி உதவிகள் கோரி Go Fund Me போன்ற பக்கங்கள் வந்த வண்ணம் உள்ளன. நாங்களும் முடிந்த அளவு கல்லூரியில் படித்த நண்பர்களுக்கு, அவர்களின் உறவினர்களுக்கு என்று அதன் மூலம்  உதவிக் கொண்டுதான் இருக்கிறோம்.

நம்மில் பலருக்கும் இந்த மாதிரி பக்கங்களைப் பார்த்ததும் உதவ வேண்டும் என்று தான் தோன்றுகிறது ஆனால் நாம் எல்லோருக்குமா உதவுகிறோம்? நாம் தான் படித்தவர்கள் ஆயிற்றே இப்பிடியெல்லாம் தெரியாதவர்களுக்கு உதவி ஏமாந்துட்டோம்னா? என்ற கவலை/பயம் எப்பயுமே நமக்குள்ளே ஓடிகிட்டே இருக்கு அதனால என்ன பண்றோம் தெரிஞ்சவங்களா? உண்மையிலே உதவி தேவைப்படுதா? என்று பார்த்து பணம் அனுப்புகிறோம்.

இன்னும் சில பேர் நெருங்கிய உறவுகளுக்கு கல்வி/மருத்துவம்/திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு தொடர்ந்து உதவுகிறார்கள். நாம தான் இதனை பேருக்கு தானம் பண்றோமே அப்புறம் என்ன சமூக வலைத்தளங்களில் முகம் தெரியாதவர்களுக்கு உதவுவது என்று விட்டு விடுகிறார்கள்.

ரொம்ப நாளா இந்த கேள்வி என் மனசுல ஓடிக்கிட்டே இருக்கு..நாம செய்றது எல்லாம் தானம் தானா? 

மாதத்திற்கு பல ஆயிரங்கள் சம்பாதிக்கும் நாம் அதில் சில ஆயிரங்கள் உதவியாகக் கொடுக்க இத்தனை Research செய்கிறோமே? ஆனால்  ஆட்டோ ஓட்டியோ, கட்டட வேலை பார்த்தோ பிழைப்பு நடத்தும் ஒருவர் ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் ஒருவரைப் பார்த்தாலோ, யாரேனும் உதவி கேட்டாலோ பத்து/ஐம்பதே னாலும் தயக்கமில்லாமல் கொடுப்பதைப் பார்த்திருக்கிறேன். இதில எது உண்மையான தர்மம்? 

எங்க அப்பாவே இப்படி கொடுப்பதைப் பார்த்திருக்கிறேன் கேட்டால் உதவணும்னு குடுக்குறோம்..அதுக்கு மேல யோசிக்க கூடாதுன்னு சொல்லிடுவார்.

பகவத் கீதையிலும் கிருஷ்ணர் தானம் என்பது என்ன என்ற அர்ஜுனனின் கேள்விக்கு பதிலளிக்கையில் "தெரிந்தவர்களுக்கும், உறவினர்களுக்கும் செய்யும் தானமும், இதனால் எனக்கு என்ன பலன் என்று ஆராய்ந்து செய்யும் தர்மமும் இவ்வுலகில் மட்டுமல்ல..மேலுலகிலும்  உதவாது" என்று விளக்கமளிக்கிறார். 

"காலத்தி னாற்செய்த நன்றி  சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது"

நேரத்தோடு உதவுவுவோம்.. மனித நேயத்தோடு உதவுவோம் 😊