Thursday, February 11, 2016

சமாரித்தன் ஆன சாமானியன்

   காலம் மாறிப்போச்சுங்க....நல்லவங்களையும், நம்பிக்கையானவர்களையும்  பார்ப்பதே அதிசயமா இருக்கு...பின்ன எப்பிடி மழை பெய்யும்?! அதான் வெயில் காச்சு எடுக்குது என்று நாலு பேர் சொல்லக் கேட்டு இருப்பீர்கள். ஏன் நாமே கூட சில சமயங்களில் கூறியிருப்போம். நம் கூற்றுக்களை எல்லாம் பொய்யாக்கும் விதத்தில் மழை கொட்டித் தீர்த்து விட்டது. பல சமாரித்தர்களையும் நமக்கு அடையாளம் காட்டிக் கொடுத்து விட்டது. நான் சொல்வது அண்மையில் சென்னையில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பைப் பற்றி என்று உங்களுக்கே புரிந்திருக்கும். 

இந்த நாலு பேர் கூறுவது போல நல்ல உள்ளங்களுக்கு நம் நாட்டில் பஞ்சமா? "ரோட்ல வழுக்கி விழுந்தா தூக்கி விடுகிறவனை  விட அத வீடியோ எடுத்து "Face Book ", " Whats App "- ன்னு Upload செஞ்சு " Like " வாங்க நினைக்கிறவன் தான் அதிகம்" இது  உண்மையா? என் அனுபவங்களைச்   சொல்றேன்... கொஞ்சம் கேட்டுத்தான் பாருங்களேன்!!!

அனுபவம் - 1

என்  பள்ளிக்  காலத்தில் சில வருடங்கள் தங்கை மற்றும் தம்பிகளுடன்  " ரிக்க்ஷா"-வில் பயணம் செய்ய நேர்ந்தது. ஒரு நாள் எங்கள் ரிக்க்ஷாவை பின்னால் வந்த கார் லேசாக உரச, சக்கரம் நெளிந்து நின்று விட்டது. வீட்டிலிருந்து சிறிது தூரமே கடந்திருந்த படியால்  , நடந்தும்  பள்ளிக்குச்  செல்ல முடியாத நிலை. என்ன செய்வது என்று எங்களுக்கோ கலவரம். இன்னைக்கு லீவு தான் என்று நினைத்திருந்த வேளையில்  எங்கள் ரிக்க்ஷாக்கார அண்ணன் வண்டியின்  பழுதிற்கு பணம் வாங்கியதோடு நில்லாமல்  எங்களை பள்ளியில் " Drop " செய்ய வேண்டும் என்றும்  வாதாடி வென்றார். எங்களுக்கோ காரில் செல்லப்போகிறோம் என்று ஒரே ஜாலி. கடைசி தம்பியைத் தவிர மற்ற மூவரின் பள்ளிகளும் அருகருகே இருந்ததால் பள்ளியின் வாசலிலே பந்தாவாக இறங்கிக் கொண்டோம். அன்று ஏதோ பெரிய அதிசயம் நடந்து விட்டதைப் போல் பீற்றிக் கொண்டோம்.

அன்று மாலை வீட்டிற்கு வந்தும் நாங்கள்  அதே புராணம் பாட, ஒன்றாம் வகுப்பில் இருந்த  என் கடைசித் தம்பி, " நீங்களெல்லாம் இறங்கிட்டீங்க ஆனா அந்த கார்காரன் வேற பக்கம் திரும்பனும்... என் ஸ்கூல் வரைக்கும் வர முடியாதுன்னு சொல்லிட்டு இறக்கி விட்டுட்டான்" என்றதும் எங்களுக்கு பகீரென்றது. பின்ன எப்பிடிடா அவ்வளவுதூரம் போன?! ரோடெல்லாம் எப்பிடி "Cross" செஞ்ச?! என்றோம். அதற்கு அவன், ரிக்க்ஷாக்கார அண்ணன் தான் கூட்டிட்டு போய் விட்டார். வேனான்னு சொல்ல சொல்ல  கேக்காம," சும்மா இரு தம்பி அவ்வளவு தொல நடக்க முடியாது அதனாலதான அப்பா வண்டியில அனுப்பரார்-ன்னு  என்ன இடுப்புல தூக்கிகிட்டார்" என்றதும் தம்பியை கிண்டலடிக்கத் தொடங்கினோம்.             

அவர் நினைத்திருந்தால் எங்களை வீட்டிற்கு அனுப்பிவிட்டு சக்கர பழுது வேலைகளை கவனிக்கச் சென்றிருக்கலாம் ஆனால் ரிக்க்ஷாவை ரோட்டோர கடையில் நிறுத்திவிட்டு எங்களுடன் பயணித்தார். மாலையில் ரிக்க்ஷாவோடு பள்ளி வாசலில் நின்றிருந்தார். அன்று அவரின் இந்த தன்னலமற்ற செயலை புரிந்து கொள்ள வயதோ, அனுபவமோ  எங்களுக்கு போதவில்லை.
...

அனுபவம் - 2

நிறுத்துங்க...பஸ்ஸ நிப்பாட்டுங்க... என்று பஸ்சிற்கு பின்னால் கதாநாயகி ஓடி வருவதை சில பல திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். நானும் ஒருமுறை அவ்வாறு கூற நேர்ந்தது?! ஆனால்  பஸ்ஸின்  உள்ளே நின்றுகொண்டே...என் அலுவலகம் சற்று "Remote" ஏரியாவில் இருந்ததால் பஸ் ஸ்டாண்டிற்கு வர வேண்டுமானால் அலுவலக வேனிற்கு காத்திருக்க வேண்டும் இல்லையெனில் "Load " ஏற்றிக்கொண்டு வரும் டெம்போ வேனில் " லிப்ட் " கேட்கலாம். அவ்வாறு தான் அன்று பேருந்து நிலையத்தை அடைந்திருந்தேன்.

பஸ்ஸில் ஏறி அமர்ந்து ஐந்து நிமிடத்திருக்கு பிறகுதான் தெரிந்தது பர்சை எங்கோ தவற விட்டுவிட்டேன் என்று அப்போது கூறியதுதான் " பஸ்ஸை நிப்பாட்டுங்க" என்ற டயலாக். கண்டக்டர், " ஏம்மா?! என்றார். விவரத்தைக் கூற " காசே இல்லையா", என்றார். கைப்பையின் அனைத்து ஜிப்பிலும் துலாவி ஐந்து ரூபாயை கண்டெடுத்தேன். அருகில் அமர்திருந்த பெண்மணி ஐந்து ரூபாய் கொடுத்தார். நல்லா திட்டப் போறார் என்று நினைக்கையில் அவர் பதிமூன்று ரூபாய்க்கான டிக்கெட்டுடன் ஐந்து ரூபாயையும்  என் கையில் கொடுத்து, "டவுன் பஸ்ஸுக்கு வச்சுகோங்க" என்றார். தேங்க்ஸ் என்ற ஒற்றை வார்த்தையோடு அமர்ந்து கொண்டேன்.

வீட்டிற்கு வந்து நடந்தவற்றை கூற, " எங்க பர்ஸ தொலைச்ச" என்றாள் அம்மா. "அந்த டெம்போ வேன்லதான் மடியில வச்சிருந்தேன் அப்பிடியே கீழ விழுந்திருக்கும் போல" என்றேன். எதிர்பாராத விதமாக ஒரு மாதம் கழித்து அந்த வேன் மறுபடியும் எங்கள் அலுவலகத்திற்கு வர அதன் டிரைவர் என் பர்சை செக்யூரிட்டியிடம் கொடுத்து விட்டுச்  சென்றிருந்தார். அனைத்தும் அப்படியே இருந்தது ஒரு பைசா குறையவில்லை. ஒரு கல்லில் ரெண்டு மாங்கா என்பது போல ஒரே சம்பவத்தில் இரண்டு " சமாரித்தர்களை" காண நேர்ந்ததைக் கண்டு வியப்படைந்தேன்!!!
...

அனுபவம் - 3

   அன்று காலை முதலே தூவானம் தூறிக்கொண்டே இருந்தது. நான் பள்ளியை அடைந்ததும் ஜோராக மழை பெய்யத் தொடங்கிவிட்டது. மாலையில் பள்ளியை விட்டு வெளியில் வந்ததும் தான் தெரிந்தது அந்த சாலை முழுவதும் தண்ணீர் முட்டி அளவு தேங்கி நின்று கொண்டிருந்தது. நானும் என் தங்கையும் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு, " இதுல எப்பிடி நடந்து வருவான் கழுத்து வரைக்கும் தண்ணி வருமே" என்று கவலையோடு எங்கள் குட்டித் தம்பியின் வருகையை எதிர்பார்த்து காத்துக்  கொண்டிருந்தோம்.

அப்போது தொலைவில் ஒருவர் அவருடைய பையனை தோள் மேல் தூக்கிக் கொண்டு வருவதைப்  பார்த்தோம். அவனும் சிம்மாசனத்தில் அமர்ந்து வலம்  வரும் ராஜகுமாரனைப் போல ஒய்யாரமாக  வந்து கொண்டிருந்தான். அருகில் வர வரத்தான் தெரிந்தது அவன் எங்கள் வீட்டு இளவரசன் தான் என்று... எங்களுக்கோ சிரிப்பு முட்டிக் கொண்டு நின்றது ஆனால்  அவரோ  இறக்கிவிட்டு விட்டு  நன்றியைக்கூட எதிர்பாராமல் போய்க்கொண்டே இருந்தார். "என்னடா இப்பிடி?!" என்று ஆரம்பிக்க, "தண்ணியில  எப்பிடி வர்றதுன்னு தெரியாம முழிச்சுட்டு முக்குல நின்னப்போ, இவர் தான் வா தம்பி தூக்கிட்டு போறேன்னு கூட்டிட்டு வந்தார்" என்றான். "ராஜ மரியாத தான்" என்று கலாய்த்தோம் அவனை.
...

அனுபவம் - 4

வழக்கம் போல் அன்றும் எட்டு மணிக்கெல்லாம் கல்லூரிக்குச் சென்று விட்டேன். அமைதியான வளாகத்தில் அமர்ந்து புத்தகத்தை புரட்ட ஆரம்பித்தேன். எங்கள் ஆங்கில பேராசிரியை என்னை நோக்கி வர எழுந்து நின்று," Good Morning Mam " என்றேன். பதட்டமாக காணப்பட்ட அவர் " உன் Blood Group என்னன்னு  தெரியுமா?" என்று கேட்டார். நானும் தெரியும் என்று கூற, இன்று அரசு பொது மருத்துவமனையில் ஒரு இருதய அறுவை சிகிச்சை நடக்கப் போவதாகவும் அதற்கு இரத்தம் கொடுப்பதற்காக பலரை ஏற்பாடு செய்திருந்ததாகவும் அதில் ஒரு மாணவி வர இயலாததால் என்னால் வர முடியுமா? என்று கேட்டார். எனக்கோ ஊசி என்றாலே பயம் ஆனால் வருகிறேன் என்றேன். நான் பேசுவதை என்னாலே நம்ப முடியவில்லை. மருத்துவமனை நடக்கும் தூரம் தான். அங்கு நோயாளியின் குடும்பமே எங்களை எதிர் நோக்கி  நின்றிருந்ததையும் அவர்களின் சோகம் நிறைந்த முகங்களையும் பார்க்கும் பொழுது என் பயம் மெல்லக் கரையத் தொடங்கியது.

மதியம் அவரே என்னை என் வகுப்பறைக்கு அழைத்து வந்து, என் பேராசிரியரிடம் நடந்தவற்றைக் கூறிவிட்டுச் சென்றார். "உங்க அம்மா அப்பாவுக்கு சொல்லாம இந்த வேலையெல்லாம் தேவையா?" என்ற எங்கள் பேராசிரியை,"மயக்கம் வந்தா பின்னாடி பெஞ்ச்ல படுத்துக்கோ" என்றார். இல்லை என்று  சொல்லிவிட்டு இருக்கையில் அமர்ந்த எனக்கு  " டெஸ்டுக்கு எல்லாரும் ரெடியா? என்று அவர் கூறியது கேட்டவுடன்  தலை மிக வேகமாக  சுற்றத் தொடங்கியது.
...

அனுபவம் - 5

அது ஒரு ஞாயிற்றுக் கிழமை. மார்கெட்டில் நல்ல கூட்டம். நானும் என் தம்பியும் அம்மாவோடு சென்றிருந்தோம். " ரொம்ப நெரிசலா இருக்கு அவன கெட்டியா பிடிச்சுக்கோ" என்று கையில் இரண்டு கூடையுடன் முன்னால்  சென்றவாறு என்  அம்மா கூற பிடியை இருக்கினேன் ஆனால் எப்பிடியோ தக்காளி வாங்கும் ஆர்வத்தில் தம்பியைத் தவறவிட்டு  விட்டேன். தம்பி எங்கடி? என்று அம்மா அலற மார்கெட் எங்கும் சுற்றினோம். பதற்றமாக அங்கும் இங்கும் போவதையும், ஒரு நாலு வயசுப் பையனப் பாத்தீங்களா? என்று நாங்கள் விசாரிப்பதையும் பார்த்த காய்கறி விற்கும் பெண்மணி," ரெண்டு கடை தள்ளி இருக்கிற கடையில ஒரு பையன் நிக்கிறான் பாருங்க' என்றதும் ஓட்டமும் நடையுமாக விரைந்தோம். அங்கு எங்களைப் பார்த்ததும் "அம்மா " என்று ஓடி வந்தான் தம்பி." உன் பையனா? நட்ட நடுவுல நின்னு அழுதுகிட்டிருந்தான். கூட்டத்துல யாருனா கூட்டிட்டு போனா என்ன ஆவுறது?! அதான் இங்க பிடுச்சு நிப்பாட்டினேன். எப்பிடியும் தேடிகிட்டு வருவீங்கன்னு தெரியும் என்று கூற நன்றி கலந்த பார்வையுடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம். வீட்டில் எனக்கு சிறப்புப் பூஜை நடந்தது என்பது வேறு கதை.
...

அனுபவம் - 6

மூன்று மாதத்திற்கு முன் ஊருக்குப் போன  சமயத்தில் " பேன்சிஸ்" ஸ்டோருக்கு பொட்டு, கிளிப் இத்யாதிகளை வாங்கச் சென்றிருந்தேன். கூட்டமே இல்லாத மதிய வேளை. என்னோடு சேர்ந்து நடுத்தர வயதை ஒட்டிய பெண்மணி ஒருவரும் இருந்தார். தனது பெண் பூப்படைந்து விட்டதாகவும் அவளுக்காத்தான் " மேக்கப்" பொருட்கள் வாங்க வந்ததாகவும்  கூறினார். சில, பல முறை தன் பெண்ணுடன் போனில் கலந்தது பேசி ஒரு வழியாக  "Shopping"-யை முடித்தார். பலத்த பேரத்திற்குப் பிறகும் அவருக்கு பணம் போதவில்லை. ஒரு சில பொருட்களை திருப்பி வைத்து விடுமாறு கடைக்காரர் கூற, எதை எடுத்து வைத்தால் தன் பெண்ணின் ஏமாற்றம் குறைவாக இருக்கும் என்று தத்தளித்துக்  கொண்டிருந்தார். அவரைத் தடுத்த நான், பணத்தைக் கொடுத்தேன்.  வாங்க மறுத்த  அவரிடம், என்னை அவருடைய தங்கையாக பாவித்து வாங்கிக் கொள்ளும் படியும், என்னுடைய வாழ்த்துக்களை அவரின் பெண்ணிற்குக் தெரிவிக்கும் படி   கூறியும் விடை பெற்று வந்தேன்.


பேரிடர் காலங்களில் மட்டும் தான் மக்கள் உதவ முன் வருகிறார்கள் என்பதில்லை. பெரும்பாலான நேரங்களில் அவர்கள் முடிந்ததை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் ஆனால் அதை பெரிதாக யாரும் விமர்சிப்பதில்லை. பல கைகள் சேர்ந்து  எழுப்பும் ஒலியே அனைவரின் காதுகளையும் சென்றடைகிறது ஆனால் ஒரு சிலர் செய்யும் உதவிகளோ   மனதில் ரீங்காரமாக ஒலித்துக் கொண்டுதான் இருக்கும் கடைசிவரை!!!  " காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மானப் பெரிது" எனும் வள்ளுவர் வாக்கு பொய்யாகுமா என்ன?!?!

என்ன உங்கள் வாழ்வில் சந்தித்த சமாரித்தர்களைப் பற்றி சிந்திக்கத் தொடங்கி விட்டீர்களோ?! எண்ணுங்கள் எண்ணுங்கள்...விரல்கள் போதாது!!! அதோடு நின்று விடாமல் நீங்களும் சமாரித்தர்களாக மாற முயலுங்கள்.
...      

   
 
         


No comments:

Post a Comment