Friday, October 13, 2023

பாசமுள்ள "Panda"

2021 கோடை விடுமுறையில் கொரோனா பயம் சற்று குறையத் துவங்கி இருந்தது. எங்கள் ஊரில் இருந்து 600 மைல் தொலைவில் வசித்த நண்பர் ஒருவர் எங்கள் வீட்டிற்கு வருவதாக முடிவானது. எனது கணவரின் பள்ளித் தோழராக இருந்தவர், பாசத்துடன் பழகும் குணத்தால் எங்கள் சகோதரராக மாறியவர் என்பதாலும் பல மாதங்களாக பெரும் தொற்று காரணமாக எங்கள் வீட்டிற்கு யாரும் வரவில்லை என்பதாலும்  அவர்களின் குடும்பத்தை வரவேற்க நாங்கள் ஆர்வத்துடன் தயாராகிக் கொண்டிருந்தோம்.

அவர்களின் வருகை மனதிற்கு  மகிழ்வைக் கொடுத்தாலும் ஏதோ ஒரு நெருடல் அந்த உவகையை அனுபவிக்க விடாமல் தடுத்தது.

என்ன ஒரே சஸ்பென்ஸ்-ஆ இருக்கேன்னு நினைக்கிறீங்களா?

அது ஒண்ணுமில்லங்க..இந்த கொரோனா கால கட்டத்தில் அத்தியாவசியப் பொருட்களின் "Demand" அதிகமானது போல வெளிநாடுகளில்  வேறொன்றின்  மவுசும் அதிகரித்து இருந்தது  அது என்னவென்றால்  "வளர்ப்பு நாய்கள்". தங்களுக்கு நாய் (அதுவும் ஆண் நாய்) வேண்டுமென்று   Breeder-களிடம் இரண்டு மடங்கு  பணத்தைக் முன் பணமாகக்  கொடுத்து விட்டு அவரவர் காத்திருப்பு பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டு காத்திருந்தனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். 

எங்கள் குடும்ப நண்பரும் அவர் பங்கிற்கு ஒரு நாயை வாங்கி இருந்தார். எட்டு மாதமான அந்த குட்டி நாயும் எங்கள் வீட்டிற்கு வர இருந்தது.

இங்க ஒரு விஷயத்தை உங்களுக்கு சொல்லியே ஆக வேண்டும். எங்கள் குடும்பத்திற்கே நாய், பூனை போன்ற வளர்ப்பு பிராணிகள் மீது ஒரு பயம். சிறு வயதிலிருந்தே "புஸு புஸு பொமேரியன் நாயிலிருந்து வாயில் எச்சில் வடிய, நுரை பொங்க குலைத்துத் தள்ளும் டாபர் மேன், நமது கால்களை விடாமல் தனது நாக்கால் துடைத்து நனைக்கும்  Hutch Dog " வரை எதைப் பார்த்தாலும் காத தூரம் பாய்ந்து ஓடுவேன்.

பள்ளியில் படிக்கும் பொழுது நாங்கள் புறநகர் பகுதியில் வசித்து வந்தோம். எங்கள் வீட்டிற்கு அருகே ஒரு பிள்ளையார் கோவில் இருந்தது. மூன்று மாதத்திற்கு ஒருமுறை யாராவது நாய்க்குட்டியை அங்கு விட்டு விட்டு சென்று விட அது எங்கள் வீட்டில் தஞ்சம் புகுந்து விடும் அதை விரட்டுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.

என் சரித்திரமோ இப்படி இருக்க.. ஒரு வளர்ப்பு நாய் திடீரென்று தனது Leash-ல் இருந்து விடு பட்டு ஓடி வந்து என் மகனை கீழே தள்ளி தலையை நனைத்து விட அவனும் நாய் என்றாலே வெலவெலத்து போகிறான். எனது கணவரும் மகளும் ஓரளவு சமாளிப்பார்கள் என்றாலும் வீட்டிற்கு வரப் போகும் விருந்தாளியை நினைத்து அனைவரும் சற்று கலங்கித்தான் போயிருந்தோம்.

ஒரு வழியாக அந்த நாளும் வந்தது. நாங்கள் அனைவரும் வெளியில் சொல்லமுடியாத பதட்டமான மன நிலையுடன் காத்துக் கொண்டிருந்தோம். நாலு கால் பாய்ச்சலில் மூன்றாவது மாடிக்கு வந்த நாய் நல்ல உயரமாக இருந்தது. வந்ததும் வராததுமாக அனைவரையும் நன்றாக நுகர்ந்து தள்ளியது. நான் ரோபோ போல் அசையாமல் நிற்க எனது தோளில் இரு கால்களையும் வைத்து உச்சி முதல் பாதம் வரை Full Body  Scan செய்தது. பயந்து ஓடிய எனது மகனை துரத்தி விளையாடியது. புஸு புஸு வென்ற வெள்ளை ரோமங்களை உடலில் போர்த்தி Teddy Bear போல் தோற்றமளித்த  அதற்கு "Panda" என்று பொருத்தமாக பெயரிட்டிருந்தார்கள்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் அதனுடைய இருப்பு எங்களுக்கு மெதுவாக பழக ஆரம்பித்தது. அடுத்த அரை நாளில் அதனுடைய நடவடிக்கைகள் ஒரு வித பிணைப்பையும், ஒரு குழந்தையைப் போல அவர்கள் அவனை  நடத்திய விதம் ஒரு அன்யோன்யத்தை அவனிடம் ஏற்படுத்தியது. அவனும் செல்லக்   குழந்தையைப்  போன்றே நடந்து கொண்டான். என் மகன் என் மடியில் அமர்ந்தது கண்டு அவனும் என் மடியில் அமர அடம் பிடித்தான். தன்னைக் கொஞ்சுமாறு கெஞ்சினான். நாங்கள் Pet செய்ய  அத்தனை விரும்பவில்லை என்பதை புரிந்து கொண்டவன்  அதன் பிறகு  எங்களை தொல்லை செய்யவே இல்லை. எத்தனை புத்திசாலி தனம் பாருங்கள்!!!

இதற்கு முன் பலரும் வளர்ப்பு நாயை குழந்தைக்கு பதிலாக பாசம் காட்டி வளர்ப்பதாக சொல்லக் கேட்டிருக்கிறேன் அப்போதெல்லாம் அவர்கள் மேல் எனக்கு ஒரு வித எரிச்சல் தான் வரும். "குழந்தையும் பிராணியும் ஒன்றா?" என்று கோபம் வரும் ஆனால் இந்த  இரண்டு மூன்று நாட்கள் அவனுடன் பழகியதில் "மன அழுத்தம் குறைய நாயை வளர்ப்பதில் தப்பில்லை" என்று தோன்றியதோடு "தனிமையைப் போக்க தக்க துணை நாய்களைத் தவிர வேறில்லை" என்றும்  பட்டது.

ஒரு மனிதனைப் போலவே அனைத்து உணர்ச்சிகளையும் "பாண்டா" காட்டியதும்  நமது உணர்வுகளை உள்வாங்கி அதைப்  பிரதிபலித்ததும் வியப்பாகவே இருந்தது. அதனை வெளியே விட்டு அறையின் கதவை உள் பக்கமாக மூடிக் கொண்டால் சத்தமில்லாமல் வெளியில் அமர்ந்து  அழுதது. நாங்கள் சாப்பிட அமர்ந்தால் அதற்கும் வேண்டும் என்று செல்லமாக அடம் செய்தது. பந்தைப் பார்த்தால் துள்ளிக் குதித்தது. அனைவரும் தொலைக்காட்சியில் படம் பார்த்தால் ஒரு ஓரமாக படுத்து உறங்கியது. எங்களை அறியாமலேயே நாங்களும் அவனை விரும்பத் துவங்கினோம்.

"Panda" சென்ற பின் இரண்டு நாட்களுக்கு அவன் நினைப்பாகவே இருந்தது. யாரோ நான்கு காலில் நடந்து வருவது போன்ற பிரம்மை ஏற்பட்டது. "எங்க..போற போக்கை பார்த்தா நீயும் நாய் வளர்க்க ஆரம்பிச்சிருவ போல?!" என்று என் கணவர் கேலி செய்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். ஆனால் என்னைப் பொறுத்தவரை இவ்வளவு பாசத்தை கொட்டிக்  குடும்பத்தில் ஒருவராக வளர்க்கப்படும் செல்ல நாய்கள் அதிக பட்சம் பத்து வருடங்கள் தான் நம்முடன் இருக்கும் என்றால் அதன் பிரிவை என்னால் சமாளிக்க முடியும் என்று தோன்றவில்லை!!!

பிராணிகளின் வதைகளை கண்டிக்கும் சமூக  ஆர்வலர்கள் கூட வளர்ப்பு நாய்களின் தேவைகளுக்காகவும், குறிப்பிட்ட  இன நாய்கள் அதிகமாக விரும்பப்படுவதாலும்  நாய்கள் கட்டாய இனப்பெருக்கத்திற்கு உந்தப் படுவதை அத்தனை வலுவாக கண்டிப்பதாக தெரியவில்லை. எது எப்படியோ கொரோனாவின் தயவால் செல்லப் பிராணிகளை பெருக்கும் (Breeding) தொழிலில் கல்லா கட்டுகிறார்கள் என்பது மட்டும் உண்மை.

  

 

Wednesday, March 8, 2023

இரட்டை குதிரை சவாரி

என்னை பெண் பார்க்க வரும் போது "நீங்க வேலைக்கு போகனும்னு நான் சொல்ல மாட்டேன் ஆனா அது தான் உங்க விருப்பம்னா Work Permit வாங்கிட்டு போகலாம்" என்று அவர்  கூறிய போது "அப்பிடியெல்லாம் ஒன்னும் இல்லை" என்று வெளியே கூறினாலும் "நாம என்ன உடனே வேலை உலகமெல்லாம் கிடைக்கும் வேலையான கம்ப்யூட்டரா படிச்சிருக்கோம் வெளிநாட்டில் வேலை கிடைக்க" என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.

திருமணமாகி இந்த பதினைந்து வருடங்கள் குழந்தைகளை பராமரிப்பதில் பொழுது கழிந்துவிட்டது இப்பொது அவர்களுக்கு என்னுடைய உதவி அவ்வளவாக தேவைப் படுவதில்லை. அதனால் எனக்கு பொழுது போகவில்லை என்றெல்லாம் இல்லை ஆனால் நண்பர்கள் "என்ன வேலைக்கு Try பண்றீங்களா? ஒர்க் பெர்மிட் வந்துருச்சா? கோர்ஸ் படிக்கிறீங்களா?", "பசங்க High School-க்கு போயிட்டா நம்மளை எதிர் பார்க்க மாட்டாங்க..அப்புறம் உங்களுக்கு தான் Bore அடிக்கும்"  என்றெல்லாம் கேட்க/ சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.  

"வேலைக்குப்போவதற்கும் தயக்கம்..உருப்பிடியாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வேறு" நான் என்று இல்லை நிகழ்காலத்தில் பலரின் நிலைமையும் இது தான். 

நமது பாட்டி காலத்தில் அவர்கள் எந்த வித மறு யோசனையும் இன்றி குடும்பப் பணியை செவ்வனே செய்தார்கள். நமது அம்மா காலத்தில் சிலர் படித்து பட்டம் வாங்கியும் அரசுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றும் அரை மனதோடு வேலைக்குச் சென்றார்கள். அரக்க பறக்க ஓடி வீட்டு வேலையும் செய்தார்கள். பலர் தையல் தொழிலில் வீட்டிலிருந்தபடியே சம்பாதித்தார்கள்.

இன்றைய யுவதிகளின் நிலையோ வேறு. இவர்களில் கிட்டத்தட்ட பெரும்பாலோனோர் பட்டதாரிகள் அதுவும் பொறியியல் துறையில். பலர் படித்து முடித்து வேலைக்குச் செல்கிறார்கள். திருமணம் ஆனாலும் சிலர் வேலையைத் தொடர்கிறார்கள். சிலர் விட்டு விடுகிறார்கள். வேலைக்குச் செல்பவர்கள் "குழந்தைகளையும் குடும்பத்தையும் சரியாக கவனிக்க முடியவில்லையே" என கவலை கொள்கிறார்கள். குடும்பத்திற்காக வேலையை துறந்தவர்கள் "படிச்ச படிப்பு வீணாகுதே..நம்ம அம்மா, பாட்டி மாதிரி படிக்காம இருந்திருந்தா நிம்மதியா வீட்டு வேலையை பாத்துட்டு இருந்திருக்கலாம்" என்று புலம்புகிறார்கள்.  

இந்த மன உளைச்சலில் இருந்து வெளி வரவே இன்று பலரும் வீட்டில் இருந்தபடியே ஏதாவது வேலை செய்கிறார்கள் உதாரணமாக  "online" வியாபாரம். பெரிதாக லாபம் கிடைக்க சில காலம் பிடிக்கும் என்றாலும் நஷ்டம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை அதோடு  "நாமளும் வேலை பார்க்கிறோம்" என்ற திருப்தியும் "கையில் கிடைக்கும் நேரத்தை உபயோகமான முறையில் செலவிடுகிறோம்" என்ற எண்ணமும் ஒரு விதமான மன நிம்மதியை அவர்களுக்குக் கொடுக்கிறது என்பதை மறுக்க இயலாது. 

சிலர் டியூஷன் எடுக்கிறார்கள். Knitting, Crocheting செய்கிறார்கள். பலர் YouTube சேனல் ஆரம்பிக்கிறார்கள். Designer Blouse தைத்து Boutique-ல் கொடுத்து  விற்கிறார்கள்.சிறிய அளவில் கேட்டரிங் செய்து கொடுக்கிறார்கள். Beautician வேலை கற்றுக் கொண்டு வீட்டிலிருந்தபடியே பலருக்கும் Eye Brow Threading மட்டுமே செய்து சம்பாதிக்கிறார்கள் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்  இதோ நான் கூட இப்பொது எழுதிக் கொண்டிருப்பதற்கு மறைமுகக் காரணமும் அது தான்!!!

பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்து லட்சங்களில் சம்பாதிப்பவர்களுக்கு மேல் கூறிய  வேலைகளைக் கண்டால் " அதிக வருமானம் இல்லாத இத்தொழில்களில் நேரத்தை ஏன் விரயம் செய்ய வேண்டும்" என்று தான் தோன்றும் ஆனால் இவை தரும் மன நிம்மதியை அவர்கள் உணர வாய்ப்பில்லை.  

இந்தக் கட்டுரையை படிக்கும் உங்களுக்கு "அக்கரைக்கு இக்கரை பச்சை" "ஆத்துல ஒரு கால்..சேத்துல ஒரு கால்" "கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை" போன்ற பல பொன் மொழிகள் நினைவிற்கு வரலாம் ஆனால்  அதை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு கடிவாளம் இல்லாத இரட்டைக் குதிரையில் பயணம் செய்யும் இந்த  நவ யுவதிகள் தங்கள் இலக்கை தங்கு  தடையின்றி சென்றடைய வாழ்த்துவோமே!!! 

பின் குறிப்பு : பொருளாதார தேவைகளை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள பெண்கள் எந்த காலத்திலும் வேலைக்குச் சென்று கொண்டு தான் இருக்கிறார்கள். படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற வித்தியாசம் எல்லாம் அங்கே இல்லை. 

Tuesday, February 14, 2023

காதலில் விழுந்தேன்...

காலையில் இருந்து சாவகாசமாக இருந்த நிரஞ்சனா கடைசி பத்து நிமிடத்தில்  அரக்க பறக்க ஓட வேண்டி இருக்கும் என்று நினைக்கவில்லை. எதிர்பாரா விதமாக ஏற்பட்ட சாலை நெரிசலும் அவர்களின் பயணத்தை தாமதப் படுத்த காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த மகளின் முகத்தில் பதட்டமும் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த கணவர் கதிரின்  கண்களில் கோபமும் ததும்பி நின்றதை நிரஞ்சனா கவனிக்காமலில்லை.

ஒரு வழியாக மகளை வாத்திய வகுப்பிற்கு அனுப்பி விட்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. 

"ஒரு நாள் கரெக்ட் Time-க்கு கிளம்ப முடியாதா?" என்று ஆரம்பித்த கதிரின்  கேள்வி அடுத்த பதினைந்து நிமிட வாக்கு வாதத்திற்கு வித்திட கடைசியாக  "நீ வீட்ல சும்மா தான இருக்கே" என்ற பிரம்மாஸ்திரத்தை ஏவி விட்டு விட்டு அமைதியான கணவனை  அனல் பறக்கும் பார்வையால் எரித்த நிரஞ்சனாவின் கண்கள் குளமாயின.

"இனிமே இந்த மனுஷனை ஒரு உதவியும் கேக்கக் கூடாது..எல்லா வேலையும் நாமளாவே பாத்துக்கனும்" என்று நினைத்த  நிரஞ்சனாவின் மனது "ஒரு நாள் ஒரு வேலையும் பார்க்காம உக்காந்தா தான் தெரியும்" என்றும் கொந்தளித்தது.

வழக்கம் போல் அடுத்த ஒரு மணி நேரத்தில் கணவனும் மனைவியும் ராசியாகி நடந்ததை மறந்தனர் ஆனால் கோபத்தின் உச்சத்தில் நிரஞ்சனாவின் மனதில் கண நேரத்தில் தோன்றி மறைந்த நேரெதிரான எண்ணங்களில் ஒன்று விரைவில்  நிறைவேறப் போவதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு நண்பர்கள் வட்டம் Hiking Trip ஒன்றை திட்டமிட்டனர். கடந்த ஒன்றரை வருடமாக வீட்டிலேயே இருந்ததால் இயற்கை காற்று உடலுக்கும் மனதிற்கும் இதமாக இருக்கும் என்ற எண்ணம் மேலோங்க அரை மனதுடன் செல்ல சம்மதித்தாள் நிரஞ்சனா. குடும்பத்துடன் அனைவரும் சேர்ந்து கலகலப்பாக மலை ஏறினர். பல மாதங்களுக்குப் பிறகு சந்தித்துக் கொண்டதால் நண்பர்களின் கலகல பேச்சும் சிரிப்பும்  வானை முட்டியது.

அந்தி வேளையில் சூரியனின் அஸ்தமனத்தை ரசித்த நிரஞ்சனா மலையை விட்டு இறங்கத் தொடங்கினாள். உடன் வந்த மழலைப் பட்டாளங்களை மேய்த்துக் கொண்டு முன் இறங்கிய கதிரை திடீரென்று  நிரஞ்சனாவைச்  சுற்றி சலசலத்த குரல்கள் பின்னுக்கு இழுத்தது.

"என்னாச்சு என்னாச்சு" என்று பதட்டத்தோடு அங்கு வந்த கணவனிடம் "காலு பிசகிருச்சு..வலி தாங்க முடியல ..தலை வேற  சுத்தற மாதிரி இருக்கு" என்று ஓரமாக இருந்த பாறையில் அமர்ந்து கொண்டாள் நிரஞ்சனா. "சுளுக்குத்தான் கொஞ்ச நேரம் உக்காந்துட்டு வாங்க..தண்ணி குடிங்க..பழம் சாப்பிடுங்க" என்று உபசரித்த நண்பர்கள் குழாமை "நீங்க போயிகிட்டே இருங்க" என்று கீழே அனுப்பிவிட்டு கைத்தாங்கலாக அழைத்துச் சென்ற கதிரின் தோள்களை ஸ்திரமாகப் பிடித்துக் கொண்டாள் நிரஞ்சனா.

"வேணுமின்னா ஆம்புலன்ஸை கூப்பிடலாம்..கஷ்டப் படாதே" என்று கூறிய கணவனைப் பார்த்து "இல்ல..குழந்தைங்க கீழ போயி வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க..போயிரலாம்" என்று வலியைப் பொறுத்துக் கொண்டு கீழே இறங்கி விட்டாள் நிரஞ்சனா.

அடுத்த ஒரு மணி நேரத்தில்  அவசரப் பிரிவு மருத்துவர் நிரஞ்சனாவின் X-Ray -யை  ஆராய்ந்து எலும்பு முறிவை உறுதிப்படுத்த கலங்கிப் போயினர் கணவனும் மனைவியும். சிகிச்சைக்கு வேறு மருத்துவரை அணுக வேண்டும் என்றும் அதுவரை காலை கீழே வைக்க வேண்டாம் என்று கட்டுப்  போட்டு கைத்தடியையும் கொடுத்தனுப்பினர்.

சோகமும் களைப்பும் கலந்த முகங்களோடு நண்பர்களும் விடை பெற்றுக் கொள்ள வலி நிவாரணிகளை சாப்பிட்டு விட்டு படுத்த நிரஞ்சனாவிற்கு அன்றைய இரவு மிக மிக நீளமான இரவாக அமைந்தது. கடும் வலியோடு புரண்டு படுக்க முடியாமல் எழுந்து.. எழுந்து அமர்ந்த அவளை கதிர் கை தாங்கலாக கழிப்பறைக்கு அழைத்துச் செல்வது, சிறிது நேரம் நடக்க வைப்பது என்று சிறிதும் கண் அயராமல் கவனித்துக் கொண்டான்.

மறு நாள் தொலை பேசி மூலம் சிறப்பு மருத்துவரிடம் Appointment வாங்கிய அவர்களை அறுவை சிகிச்சை கூட செய்ய நேரிடலாம் என்று பயமுறுத்தினர். அன்று இரவும்  வலி நிவாரணியால் பலனேதும் இருக்கவில்லை. அரைமணி நேரத்திற்கொருதரம் எழுந்தமர்ந்த நிரஞ்சனாவை உடைந்த குரலில் சமாதானப்படுத்திய கதிர் அவளின் கண்களில் வழிந்தோடிய கண்ணீரை கனிவுடன் துடைத்தான்.

அடுத்து வந்த நாட்களில் அவளின் சிகிச்சை தொடங்கியது. அறுவை சிகிச்சை தேவை இல்லை, மாவு கட்டு போடவில்லை. Stabilizers என்று சொல்லக் கூடிய தடித்த ஷுக்களை நடக்கும் போது அணிந்து கொண்டு ஊன்று கோளின் (Crutches) உதவியோடு அடுத்த ஆறு வாரங்கள் இருக்குமாறு அறிவுறுத்தப் பட்டாள்.

அவள் செய்ய வேண்டியதெல்லாம் எதுவும் செய்யாமல் அமர்ந்திருக்க வேண்டியது. நண்பர்கள் சில நாட்களுக்கு உணவை சமைத்து அனுப்பினாலும் கதிரின் வேலை ஆயிரம் மடங்கு கூடியது. கொரோனவால் சொந்தங்கள் யாரும் வர இயலாத நிலை.

நிரஞ்சனாவின் வலி கட்டுக்குள் வந்தது. வீட்டிலிருந்தபடியே வேலை பார்த்த கதிருக்கு அவளை பார்த்துக் கொள்வதே முழு நேரப் பணியாக இருந்தது. சாப்பாட்டை கையில் கொடுப்பது, முடித்தவுடன் கை கழுவ தண்ணீர் கொடுப்பது, படுக்கையில் படுக்க வைப்பது, குளிப்பாட்ட உதவுவது என்று களைத்துப் போனாலும் மருத்துவமனை வாசம் இல்லாமல் போனதால் கவலை இன்றியே தென்பட்டான். குழந்தை பேற்றின் போது கதிர்  அவளை கவனித்துக் கொண்டது  நினைவுகளில் வந்து செல்ல கணவனை வாஞ்சையுடன் அணைத்துக் கொண்டாள் நிரஞ்சனா.

நிரஞ்சனாவை பார்க்க வரும் நண்பர்கள் அவளுக்கு கிடைக்கும் ராஜ மரியாதையை கேலி செய்தனர் ஆனால் அவர்களிடம்  "வீட்டு வேலை பார்த்து முடியல..நிரஞ்சனா எவ்வளவு வேலை பாத்திருக்கா?!" என்று அங்கலாய்த்த கணவனை காதல் பொங்க  ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தாள் நிரஞ்சனா. 

கடந்த  2021-ம் ஆண்டில் கொரானாவை கட்டுப் படுத்த தடுப்பு ஊசி கண்டறிய பட்டதோடு வைரஸிற்கு  எதிராக நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வளர 2nd Dose, 3rd Dose  என்று பூஸ்டர்கள் வந்த வண்ணம் இருக்கிறது. தடுப்பு மருந்து வேலை செய்ததோ இல்லையோ எதிர் பாராமல் ஏற்பட்ட இந்த  விபத்து  நிரஞ்சனாவிற்கும் கதிருக்கும் இடையே இருந்த காதலை பன்  மடங்கு Boost செய்து விட்டது என்பதை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டுமா என்ன?!