Friday, October 13, 2023

பாசமுள்ள "Panda"

2021 கோடை விடுமுறையில் கொரோனா பயம் சற்று குறையத் துவங்கி இருந்தது. எங்கள் ஊரில் இருந்து 600 மைல் தொலைவில் வசித்த நண்பர் ஒருவர் எங்கள் வீட்டிற்கு வருவதாக முடிவானது. எனது கணவரின் பள்ளித் தோழராக இருந்தவர், பாசத்துடன் பழகும் குணத்தால் எங்கள் சகோதரராக மாறியவர் என்பதாலும் பல மாதங்களாக பெரும் தொற்று காரணமாக எங்கள் வீட்டிற்கு யாரும் வரவில்லை என்பதாலும்  அவர்களின் குடும்பத்தை வரவேற்க நாங்கள் ஆர்வத்துடன் தயாராகிக் கொண்டிருந்தோம்.

அவர்களின் வருகை மனதிற்கு  மகிழ்வைக் கொடுத்தாலும் ஏதோ ஒரு நெருடல் அந்த உவகையை அனுபவிக்க விடாமல் தடுத்தது.

என்ன ஒரே சஸ்பென்ஸ்-ஆ இருக்கேன்னு நினைக்கிறீங்களா?

அது ஒண்ணுமில்லங்க..இந்த கொரோனா கால கட்டத்தில் அத்தியாவசியப் பொருட்களின் "Demand" அதிகமானது போல வெளிநாடுகளில்  வேறொன்றின்  மவுசும் அதிகரித்து இருந்தது  அது என்னவென்றால்  "வளர்ப்பு நாய்கள்". தங்களுக்கு நாய் (அதுவும் ஆண் நாய்) வேண்டுமென்று   Breeder-களிடம் இரண்டு மடங்கு  பணத்தைக் முன் பணமாகக்  கொடுத்து விட்டு அவரவர் காத்திருப்பு பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டு காத்திருந்தனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். 

எங்கள் குடும்ப நண்பரும் அவர் பங்கிற்கு ஒரு நாயை வாங்கி இருந்தார். எட்டு மாதமான அந்த குட்டி நாயும் எங்கள் வீட்டிற்கு வர இருந்தது.

இங்க ஒரு விஷயத்தை உங்களுக்கு சொல்லியே ஆக வேண்டும். எங்கள் குடும்பத்திற்கே நாய், பூனை போன்ற வளர்ப்பு பிராணிகள் மீது ஒரு பயம். சிறு வயதிலிருந்தே "புஸு புஸு பொமேரியன் நாயிலிருந்து வாயில் எச்சில் வடிய, நுரை பொங்க குலைத்துத் தள்ளும் டாபர் மேன், நமது கால்களை விடாமல் தனது நாக்கால் துடைத்து நனைக்கும்  Hutch Dog " வரை எதைப் பார்த்தாலும் காத தூரம் பாய்ந்து ஓடுவேன்.

பள்ளியில் படிக்கும் பொழுது நாங்கள் புறநகர் பகுதியில் வசித்து வந்தோம். எங்கள் வீட்டிற்கு அருகே ஒரு பிள்ளையார் கோவில் இருந்தது. மூன்று மாதத்திற்கு ஒருமுறை யாராவது நாய்க்குட்டியை அங்கு விட்டு விட்டு சென்று விட அது எங்கள் வீட்டில் தஞ்சம் புகுந்து விடும் அதை விரட்டுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.

என் சரித்திரமோ இப்படி இருக்க.. ஒரு வளர்ப்பு நாய் திடீரென்று தனது Leash-ல் இருந்து விடு பட்டு ஓடி வந்து என் மகனை கீழே தள்ளி தலையை நனைத்து விட அவனும் நாய் என்றாலே வெலவெலத்து போகிறான். எனது கணவரும் மகளும் ஓரளவு சமாளிப்பார்கள் என்றாலும் வீட்டிற்கு வரப் போகும் விருந்தாளியை நினைத்து அனைவரும் சற்று கலங்கித்தான் போயிருந்தோம்.

ஒரு வழியாக அந்த நாளும் வந்தது. நாங்கள் அனைவரும் வெளியில் சொல்லமுடியாத பதட்டமான மன நிலையுடன் காத்துக் கொண்டிருந்தோம். நாலு கால் பாய்ச்சலில் மூன்றாவது மாடிக்கு வந்த நாய் நல்ல உயரமாக இருந்தது. வந்ததும் வராததுமாக அனைவரையும் நன்றாக நுகர்ந்து தள்ளியது. நான் ரோபோ போல் அசையாமல் நிற்க எனது தோளில் இரு கால்களையும் வைத்து உச்சி முதல் பாதம் வரை Full Body  Scan செய்தது. பயந்து ஓடிய எனது மகனை துரத்தி விளையாடியது. புஸு புஸு வென்ற வெள்ளை ரோமங்களை உடலில் போர்த்தி Teddy Bear போல் தோற்றமளித்த  அதற்கு "Panda" என்று பொருத்தமாக பெயரிட்டிருந்தார்கள்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் அதனுடைய இருப்பு எங்களுக்கு மெதுவாக பழக ஆரம்பித்தது. அடுத்த அரை நாளில் அதனுடைய நடவடிக்கைகள் ஒரு வித பிணைப்பையும், ஒரு குழந்தையைப் போல அவர்கள் அவனை  நடத்திய விதம் ஒரு அன்யோன்யத்தை அவனிடம் ஏற்படுத்தியது. அவனும் செல்லக்   குழந்தையைப்  போன்றே நடந்து கொண்டான். என் மகன் என் மடியில் அமர்ந்தது கண்டு அவனும் என் மடியில் அமர அடம் பிடித்தான். தன்னைக் கொஞ்சுமாறு கெஞ்சினான். நாங்கள் Pet செய்ய  அத்தனை விரும்பவில்லை என்பதை புரிந்து கொண்டவன்  அதன் பிறகு  எங்களை தொல்லை செய்யவே இல்லை. எத்தனை புத்திசாலி தனம் பாருங்கள்!!!

இதற்கு முன் பலரும் வளர்ப்பு நாயை குழந்தைக்கு பதிலாக பாசம் காட்டி வளர்ப்பதாக சொல்லக் கேட்டிருக்கிறேன் அப்போதெல்லாம் அவர்கள் மேல் எனக்கு ஒரு வித எரிச்சல் தான் வரும். "குழந்தையும் பிராணியும் ஒன்றா?" என்று கோபம் வரும் ஆனால் இந்த  இரண்டு மூன்று நாட்கள் அவனுடன் பழகியதில் "மன அழுத்தம் குறைய நாயை வளர்ப்பதில் தப்பில்லை" என்று தோன்றியதோடு "தனிமையைப் போக்க தக்க துணை நாய்களைத் தவிர வேறில்லை" என்றும்  பட்டது.

ஒரு மனிதனைப் போலவே அனைத்து உணர்ச்சிகளையும் "பாண்டா" காட்டியதும்  நமது உணர்வுகளை உள்வாங்கி அதைப்  பிரதிபலித்ததும் வியப்பாகவே இருந்தது. அதனை வெளியே விட்டு அறையின் கதவை உள் பக்கமாக மூடிக் கொண்டால் சத்தமில்லாமல் வெளியில் அமர்ந்து  அழுதது. நாங்கள் சாப்பிட அமர்ந்தால் அதற்கும் வேண்டும் என்று செல்லமாக அடம் செய்தது. பந்தைப் பார்த்தால் துள்ளிக் குதித்தது. அனைவரும் தொலைக்காட்சியில் படம் பார்த்தால் ஒரு ஓரமாக படுத்து உறங்கியது. எங்களை அறியாமலேயே நாங்களும் அவனை விரும்பத் துவங்கினோம்.

"Panda" சென்ற பின் இரண்டு நாட்களுக்கு அவன் நினைப்பாகவே இருந்தது. யாரோ நான்கு காலில் நடந்து வருவது போன்ற பிரம்மை ஏற்பட்டது. "எங்க..போற போக்கை பார்த்தா நீயும் நாய் வளர்க்க ஆரம்பிச்சிருவ போல?!" என்று என் கணவர் கேலி செய்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். ஆனால் என்னைப் பொறுத்தவரை இவ்வளவு பாசத்தை கொட்டிக்  குடும்பத்தில் ஒருவராக வளர்க்கப்படும் செல்ல நாய்கள் அதிக பட்சம் பத்து வருடங்கள் தான் நம்முடன் இருக்கும் என்றால் அதன் பிரிவை என்னால் சமாளிக்க முடியும் என்று தோன்றவில்லை!!!

பிராணிகளின் வதைகளை கண்டிக்கும் சமூக  ஆர்வலர்கள் கூட வளர்ப்பு நாய்களின் தேவைகளுக்காகவும், குறிப்பிட்ட  இன நாய்கள் அதிகமாக விரும்பப்படுவதாலும்  நாய்கள் கட்டாய இனப்பெருக்கத்திற்கு உந்தப் படுவதை அத்தனை வலுவாக கண்டிப்பதாக தெரியவில்லை. எது எப்படியோ கொரோனாவின் தயவால் செல்லப் பிராணிகளை பெருக்கும் (Breeding) தொழிலில் கல்லா கட்டுகிறார்கள் என்பது மட்டும் உண்மை.

  

 

No comments:

Post a Comment