Sunday, October 20, 2024

தொடுகை

 "தொடுகை" - ஐம்புலன்களில் ஒன்றான தொட்டு உணரும் புலனை நாம் பெரும்பாலான சமயங்களில் பார்வை அற்றவர்களுக்குக்கு மட்டுமே  பயன்படும் ஒன்றாகக் கருதி ஒதுக்கி விடுகிறோம் ஆனால் நம் உணர்ச்சிகளை  (Emotions) க்ஷண நேரத்தில் மற்றவர்களுக்கு அறிவிக்க இதை விட பெரிய உணர்வு ஊட்டி (Sense) வேறு  இருப்பதாகத் தெரியவில்லை.

"ஒருவர் மகிழ்ச்சியான விஷயத்தைக் கூறும் போது "வாழ்த்துக்கள்" என்று கைகுலுக்கும் போதும்  சோகத்தை ஒருவரின் கண்களில் காணும் போது "என்னாச்சு?"  என்று அவரின் தோளில் நம் கை படும் போதும் அழுது கொண்டிருப்பவரை கட்டி அணைத்து ஆறுதல் சொல்லும் போதும் கோபத்தில்/ஏமாற்றத்தில்  கொந்தளித்துக் கொண்டிருக்கும் ஒருவரை "சரி விடுங்க பாஸ்" என்று முதுகை தட்டும் போதும்" என்று ஆயிரம் வார்த்தைகளால் கடத்த முடியாத Emotions ஐ ஒரு தொடுகை உணர்த்தி விடுகிறது. பல வருடப் பகை கூட பறந்து விடுகிறது.

அப்படி எல்லாம் இல்லை நீங்கள் ஓவரா exaggerate செய்கிறீர்கள் என்று கூறுபவர்களுக்கு...

தாயின் வயிற்றில் இருக்கும் போது நம்மை சுற்றி இருக்கும் கருப்பை சுவரை தொட்டுத் தொட்டு பாதுகாப்பாக உணரும் நாம் இந்த பூமியில் பிரவேசம் செய்தவுடன் அந்த தொடுகை இல்லாதது கண்டு பீறிட்டு அழுகிறோம். தன்னோடு அணைத்துக் கொள்ளும் தாயையும் தூக்கத்தில் தூளியையும் தொட்டுக்கொண்டு ஆசுவாசம் அடைகிறோம்.

எழுந்து நடக்கும் வரை ஒவ்வொரு நிலையிலும் பெற்றோர்களின் தொடுகை வேண்டும். பின் பள்ளிக்கு செல்லும் போது அடுத்த அழுகை - "வரிசையில எல்லாரும் கையை பிடிச்சிட்டு நில்லுங்க" என்று ஆசிரியர் கூறும் போது அழுகை  நின்று தைரியம் பிறக்கிறது இருந்தும் குறைந்த பட்சம் பத்து வயது வரையாவது பெற்றோர்களின் அரவணைப்பில் இருக்க ஆசைப்படுகிறோம்.

டீன் ஏஜ் என்று சொல்லக்கூடிய பருவ வயதில் நண்பர்களின் கையைப் பிடித்துக் கொண்டும் வகுப்பறையில் தோளோடு தோள் உரசிக் கொண்டு நெருங்கி அமர்ந்து கொண்டும்  Safe ஆக உணர்கிறோம்.

"பின் திருமண வயது - நமக்கென்று பிரத்யேகமாக ஒருவர் வர ஏதோ Celebrity போல உணர்கிறோம்  பின் குழந்தை பிறக்கிறது அதை பிடித்துக் கொள்கிறோம்". வட்டமாக சுற்றி கொண்டிருக்கும் வாழ்க்கையின் இறுதிக்  கட்டமான வயோகதிகத்திற்கு வருகிறோம்.

ஒரு 40 வருடத்திற்கு முன் பெரும்பாலான குடும்பங்கள் கூட்டுக குடும்பமாகவே இருந்தது அதனால் தனது பேரன் பேத்திகளை மடியில் வைத்துக் கொண்டும், பிஞ்சு விரலைப் பிடித்துக் கொண்டு பள்ளிக்கு அழைத்துச சென்றும், இரவு நேரங்களில் வலியால் அவதியுறும் கால்களை பிடித்து விடும் மகன் மருமகளின் வாஞ்சை என்றும், தோளுக்கு மேல் வளர்ந்து வீட்டை வளைய வரும் பேரப்பிள்ளைகளை தோளோடு அணைத்துக் கொள்வது சமயங்களில் அறிவுரை கூறி தேற்றுவது என்றும்  தொடுகையை  (மனித உணர்வுகளை) உணர்ந்து  கொண்டே இருந்தோம்.

இன்றைய நிலையோ வேறு !! பெரும்பாலான வீடுகளில் வயதானவர்கள் தனிமை வாசம் செய்கிறார்கள். தம்பதிகளாக இருக்கும் பட்சத்தில் சற்று பிழைத்தார்கள் இல்லையேல் ஒரு காய்ச்சல் அடித்தால் கூட தொட்டுப் பார்ப்பதற்கு யாரும் இல்லை அதே நேரத்தில் பெற்றோர்களை மட்டுமே அண்டி  தனியாக வளரும் குழந்தைகளுக்கு Good Touch, Bad Touch என்று பாடம் எடுக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.

காலம் மாறி விட்டது அதற்கேற்றாற் போல நாமும் மாறத் தான் வேண்டும். எங்களுக்கும் பிரைவசி தேவை  "Me Time" வேண்டும் என்று வயதானவர்களே கேட்க ஆரம்பித்துவிட்ட பிறகு கூட்டுக்  குடும்பமாகத்தான் வாழ வேண்டும் என்ற பேசிற்கெல்லாம் இடமில்லை ஆனால் பெற்றோர்களின் தேவையை (Materialistic Needs) உணர்ந்து செயல்படும் நாம் குழந்தைகள் போல் மாறி வரும் அவர்களின் Emotions-களையும் புரிந்து கொள்ள வேண்டும்.

நடக்க சிரமப்படும் இடங்களில் அவர்களின் கைகளை பிடித்து கொள்ளுங்கள் உங்களின் குழந்தைகளை அவர்களின் அருகில் அமரச் செய்யுங்கள், பிறந்தநாள் கொண்டாட்டங்களின் போது அவர்களுக்கும் கேக்கை ஊட்டி விடுங்கள். கோயிலுக்கு சென்று விட்டு வந்தால் விபூதியை கையில் தராமல் நெற்றிக்கு இட்டு விடுங்கள் குறைந்த பட்சம் அவர்களின் பாதங்களைத் தொட்டு ஆசி பெறுங்கள்.

மேற்கூறிய அனைத்தையும் நீங்கள் விடுமுறையில் செல்லும் அந்த ஓரிரு மாதங்களிலே கூடச் செய்யலாம். உங்கள் குழந்தைகளிடம் பேசி புரிய வையுங்கள். நமது வாழ்கை என்னும் வட்டப் பயணத்தின் தொடுகை அனுபவத்தை  அறுபடாமல் முடித்து வைப்போம் 

Tuesday, May 21, 2024

மாலை நேர மயக்கம்

நேத்து மத்தியானம் மணி 2:55 இருக்கும். உள் ரூமில வேலை பாத்துட்டு இருந்த என் வீட்டுக்காரர் எட்டிப் பாத்து "என்ன மணி மூனாகப்போகுது..டீ போட்றேன்..தலை வலி பின்னுது" என்றார். அப்பதான் சாப்புட்டு உக்காந்த எனக்கு செம்ம கடுப்பு 😠😠

(கொரோனாவிற்கு பிந்தைய காலகட்டத்திலும் சிலர்  வீட்ல இருந்து வேலை பாக்குறதால சமைக்குற வேலை ஜாதியாயிருச்சுன்னு பொலம்புறதை சமூக வலைத்தளங்களிலும், அக்கம் பக்கத்துக்கு வீட்டுக்காரங்க சொல்றதையும் கேக்குறேன், பாக்குறேன் ஆனா எனக்கு இந்த டீ போட்டு கொடுக்குறது தான் ஜாஸ்தியாயிடுச்சு!!! விட்டா மதியம் சாப்ட கையோட டீ கேப்பாரு போல 💭) 

"டீ"-ன்னு கேட்டதும் எனக்கும் குடிக்கனும் போல ஆயிருச்சு..சரின்னு டீ-க்கு பாலை வச்சுட்டு "ஆமா..நான் எப்பயிருந்து டீ குடிக்க ஆரம்பிச்சேன்னு" யோசிச்சு பாத்தா..ஞாபகம் ஒன்னும் வரல. ஆனா நான் நாலாவது படிக்கும் போது என் தங்கச்சியோட சேர்ந்து டெலிபோன் பூத் வச்சிருந்த என்னோட தாய்மாமாவுக்கு சாய்ங்காலமா  தூக்கு போனியில டீ  எடுத்துக்கிட்டு போவேன். அது ஞாபகம் வந்திச்சு.

எங்க பாட்டி வீட்ல இருந்து கொஞ்ச தூரமா தான் எங்க மாமா டெலிபோன் பூத் இருந்துச்சு..ரெண்டு மூனு குறுக்கு சந்துல புகுந்து போனா ஈஸியா வந்துரலாம். அப்பல்லாம் ஒரு ரூபா காயின் போன் எல்லாம் இல்லை. கண்ணை எரிக்கிற மஞ்ச கலர்ல பூத் இருக்கும் பெரும்பாலும் உடல் ஊனமுற்றவர்களால நடத்தப்படும். எங்க மாமா கூட போலியோ Attack ஆனவருதான்.

சுடச் சுட தூக்கு போனியில எங்க பாட்டி டீ ஊத்தி குடுப்பாங்க..நாங்க ரெண்டு பேரும் பராக்கு பாத்துகிட்டே, எந்த சந்து வழியா போகலாமுன்னு Argue பண்ணிக்கிட்டு போயி சேர்ரதுக்குள்ளே அது ஆறி போயிருக்கும். சில நேரம் நாங்க ஆட்டுற ஆட்டுல டீ சைடுல எல்லாம் வழிஞ்சிருக்கும். தூக்கு போனி மூடி எல்லாம் கழண்டு விழுந்திருக்கு!!!

ஆனா எங்க மாமா எங்கள கோவிச்சிகிட்டதெல்லாம் கெடையாது. அவரு டீ குடிச்சி முடிகிறவரைக்கும் ஏதாவது ராங் நம்பர் டயல் பண்ணி பேசி டைம் பாஸ் பண்ணுவோம் 😆😆ஒரு தடவை நம்ம காவல் துறை எப்பிடி கடமை தவறாம இருக்காங்கன்னு Check பண்றதுக்கு 100 டயல் பண்ணினோம். ஒருத்தர் எடுத்து D2-வோ, D3 போலீஸ் ஸ்டேஷன்னு சொன்னதும் அலறி அடிச்சிட்டு போனை வச்சுட்டோம். அதுக்கப்புறம் போலீசை பாத்தாலே கொஞ்ச நாள் பம்மி கிட்டு இருந்தோம்.. ம்ம்ம் அதெல்லாம் ஒரு காலம். இப்ப நெனச்சாலும் அதெல்லாம் திரும்ப கெடைக்காது..அந்த Yellow Telephone Booth, தூக்கு போனியில டீ, கவலையற்ற எங்கள் இளமைக்காலம் ..எங்க மாமாவும் தான் 😔 

இப்பிடியே Flashback-ல மூழ்கி இருந்தேனா.. ஏதோ தீஞ்ச வாசனை வந்து மூக்கை தொளைக்குதேன்னு பாத்தா டீ பொங்கி வழிஞ்சிட்டு இருக்கு 😟




Thursday, January 4, 2024

வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே...

அன்றைய நாள் வழக்கம்போலத் தான் ஆரம்பித்தது எனினும் முடிவு என்னவோ நேர்மாறாகத் தான் இருந்தது!!

சம்பவம் - 1

கல்லூரி துவங்கி முதல் சில மணி நேரத்திற்குள்ளேயே அங்கும் இங்கும் ஒரே சலசலப்பு. "நேத்து போர்ஷனை எடுத்து படிங்க" என்று எங்களுக்கு கட்டளை இட்டு விட்டு Staff Room-ல் பேராசிரியர்கள் ஏதோ தங்களுக்குள் விவாதித்த வண்ணம் இருந்தனர். சமூக வலைத்தளங்களோ, கைபேசிகளோ இல்லாத கற்காலம் அது ஆதலால் செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் இருந்தவர்களுக்கே ஓர் அளவு நாட்டு நடப்பு தெரிய வாய்ப்புண்டு.

நாங்களும் எங்களுக்கு கிடைத்த நேரத்தை பயனுள்ளதாக சீரியல் கதை, சினிமாக் கதை பேசியும் நோட்டு புத்தகத்தின் பின் பக்கத்தில் கோலம் வரைந்தும் செலவிட்டுக் கொண்டிருந்தோம்.

மதிய உணவு இடைவெளிக்கு சற்று முன்பே "அன்றைய முதல்வராக இருந்தவருக்கு எதிராகத் தொடரப்பட்ட ஊழல் வழக்கில் அவருக்கு பாதகமாக தீர்ப்பு வந்துவிட்டது" என்றும் "அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம்" என்ற அறிவிப்பு வந்து விட்டது. அவருடைய ஆதரவாளர்கள் கலவரத்தில் இறங்கி சட்ட ஒழுங்கை குலைக்கும் முன் வீடு சென்று சேருமாறு நாங்கள் அறிவுறுத்தப்பட்டோம்.

நானும் புத்தக மூட்டையை சுமந்து கொண்டு வழக்கமாக செல்லும் பேருந்து நிறுத்தத்திற்கு விரைந்தேன். நிறுத்தத்தை அடைய சில காலடிகளே எஞ்சிருக்கும் நிலையில்  அங்கு காத்துக் கொண்டிருந்த கூட்டம் தீடீரென்று கத்திக் கொண்டு நாலா பக்கமும்  சிதறி ஓடியது. எனக்கு நடப்பது என்னெவென்று புரிவதற்குள் யாரோ "கல்லெடுத்து வீசுறாங்க" என்று கூற யோசிக்காமல் வந்த வழியே திரும்பி கல்லூரியை நோக்கி ஓட்டம் பிடித்தேன்.

மக்கள் அங்கும் இங்கும் பதறி ஓட சாலையில் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. என் இதயம் வெளியே வந்து விழுந்து விடத் துடிப்பது போல் காதில் படபடத்தது. முதுகில் வேர்வை வழிய நா வறண்டு வாயோடு ஒட்டிக் கொண்டது. 

நான் திருப்பியே பார்க்காமல் சில கைலி கட்டிய ஆசாமிகளின் நடுவே புகுந்து  ஓட்ட நடையில் விரைந்தேன். கடைகளை எல்லாம் இழுத்து மூடிக் கொண்டிருந்தனர். அடுத்த 15-20 நிமிடத்தில் இரண்டு மூன்று பஸ் நிறுத்தங்களைத் தாண்டி வந்து விட்டிருந்தேன். இதற்கு மேல் நடக்க திரணியில்லாமல் பஸ் வரும் என்ற நம்பிக்கையில் காத்திருந்தேன்.

அப்பகுதி சற்று அமைதியாகவே காணப்பட்டது. கலவரம் எந்நேரமும் வெடிக்கும் என்று பேசிக்கொண்டிருந்தனர். 

அடுத்த ஒரு மணிநேரத்திற்கு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இரண்டு பேருந்து மாற்றி வீடு வந்து சேர்வதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது. இது என் வாழ்வில் நன் முதல்முதலாக களத்தில் நின்று எதிரே பார்த்த கலவரம்!!

சம்பவம் - 2

அன்று மதியம் ஒரு  மூன்று மணி இருக்கும். படர்ந்திருந்த அமைதியை  திடீரென்று கிழித்துக் கொண்டு  அலறல் ஓசை ஒன்று  சாலையிலிருந்து கேட்க என்னெவென்று எட்டிப் பார்க்கலாமா என்று கதவை நோக்கி செல்வதற்கு முன்னே பக்கத்து போர்ஷனில் இருந்து வெளியே வந்த சித்தப்பா "வெளிய யாரோ ரெண்டு ரவுடிப் பசங்க சண்ட போட்டுட்டு இருகாங்க..கதவ சாத்திட்டு இருங்க" என்று அறிவுறுத்தி விட்டு சென்றார்.

அவர் சென்ற சில நிமிடங்களில் எங்கள் கூரை மீது தட தட வென்று கற்கள் உருளும் சத்தம். ஆர்வம் மேலிட நாங்கள் ஜன்னல் வழியாக நெருக்கி அடித்துக் கொண்டு எட்டிப் பார்த்தோம். ரத்தம் சொட்டும் நெற்றியுடன்  ஒருவன் கையில் அரிவாளுடன் இன்னோருவனை துரத்திக் கொண்டிருக்க..அடுத்தவனின் சட்டையிலும் ரத்தக்கறை தெரிந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் கைகளாலேயே தாக்கிக் கொண்டு தெருவில் புரண்டனர். DTS effect இல்லாமல் ஒலித்த அந்த சத்தமே எங்களுக்கு பீதியைக் கொடுத்தது. கதவ தட்டாம இருந்தா சரி என்று கடவுளை வேண்டிக் கொண்டோம்.

என் வாழ்வில் நடந்த இவ்விரு வன்முறை சம்பவங்களையும் நான் எப்போது நினைத்தாலும் ஒரு வித பயம் என்னைத்  தொற்றிக் கொள்ளும்.

வன்முறையை திரையில் காணுகிறோம். நம்மில் சிலர் அதை ரசிக்கிறோம் சிலர் முகத்தை சுளித்துக் கொண்டே கடக்கிறோம் ஆனால் பெரும்பாலான நேரங்களில் அவை நம்மை நேரடியாக பாதிப்பதில்லை எனினும்  நடைமுறை வாழ்வில் நம்மால் சிறிய வன்முறையைக் கூட மன அதிர்வின்றி கடந்து செல்ல முடியாது!!!

வன்முறை - திரையில் காணும் போது ஒருவிதமாகவும், உண்மை சம்பவங்களை காதால் கேட்கும் போது ஒரு விதமாகவும், நம் கண் முன்னே நடக்கும் போது, நம் சொந்தங்கள் உறவுகளை பாதிக்கும் போது ஏன் நமக்கே ஏற்படும்  போது என்று வேறு வேறு பாதிப்புகளை நம் மனதில் உருவாக்கும்.



 

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இவுலகின்  ஏதோ ஓர் மூலையில் ஏதோ ஓர் யுத்தம் நடந்த வண்ணமே உள்ளது. அவை இரு தேசங்களுக்கிடையே ஆனதாகவோ, உள்நாட்டு போராகவோ, மாவட்டத்திற்கு இடையினிலோ, மதம் சாதி சார்ந்ததாகவோ இருக்கலாம்.

உலகத்தையே தன் உள்ளங்கையில் முடக்கிவிட்ட இந்த இன்டர்நெட் யுகம் நமக்கு அனைத்தையும் நேரடியாக திரையிட்டு காட்டுகிறது நாமும்  "ஐயோ அவங்களை எல்லாம் பார்க்க பாவமா இருக்கு" என்றும் "இவன் பண்ணது தப்பு..அவன் பண்ணது தப்பு" என்று கமெண்ட்  அடித்து விட்டு கனத்த இதயத்தை லேசாக்கிக் கொள்ள சேனலை மாற்றி விடுகிறோம். நம்மால் செய்ய இயல்வதும் அவை மட்டுமே!!!

யுத்தங்களை தவிர்க்க, ஆயுதங்களை கட்டுப்படுத்த, உள் நாட்டு வெளி நாட்டு  பிரச்சனைகளை சுமூகமாக்க என்று எண்ணற்ற சர்வதேச அமைப்புகள் இருந்தும் என்ன பயன்?!

இனி வரும் காலங்களிலாவது போர்க்களம் அற்ற வையம் அமைய வேண்டும். வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்!!!

புத்தாண்டு நல் வாழ்துக்கள் 🎕🎕🎕

பின் குறிப்பு - நம்மை பாதிக்காத எதுவும் நமக்கு செய்தியே!!!