Thursday, January 4, 2024

வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே...

அன்றைய நாள் வழக்கம்போலத் தான் ஆரம்பித்தது எனினும் முடிவு என்னவோ நேர்மாறாகத் தான் இருந்தது!!

சம்பவம் - 1

கல்லூரி துவங்கி முதல் சில மணி நேரத்திற்குள்ளேயே அங்கும் இங்கும் ஒரே சலசலப்பு. "நேத்து போர்ஷனை எடுத்து படிங்க" என்று எங்களுக்கு கட்டளை இட்டு விட்டு Staff Room-ல் பேராசிரியர்கள் ஏதோ தங்களுக்குள் விவாதித்த வண்ணம் இருந்தனர். சமூக வலைத்தளங்களோ, கைபேசிகளோ இல்லாத கற்காலம் அது ஆதலால் செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் இருந்தவர்களுக்கே ஓர் அளவு நாட்டு நடப்பு தெரிய வாய்ப்புண்டு.

நாங்களும் எங்களுக்கு கிடைத்த நேரத்தை பயனுள்ளதாக சீரியல் கதை, சினிமாக் கதை பேசியும் நோட்டு புத்தகத்தின் பின் பக்கத்தில் கோலம் வரைந்தும் செலவிட்டுக் கொண்டிருந்தோம்.

மதிய உணவு இடைவெளிக்கு சற்று முன்பே "அன்றைய முதல்வராக இருந்தவருக்கு எதிராகத் தொடரப்பட்ட ஊழல் வழக்கில் அவருக்கு பாதகமாக தீர்ப்பு வந்துவிட்டது" என்றும் "அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம்" என்ற அறிவிப்பு வந்து விட்டது. அவருடைய ஆதரவாளர்கள் கலவரத்தில் இறங்கி சட்ட ஒழுங்கை குலைக்கும் முன் வீடு சென்று சேருமாறு நாங்கள் அறிவுறுத்தப்பட்டோம்.

நானும் புத்தக மூட்டையை சுமந்து கொண்டு வழக்கமாக செல்லும் பேருந்து நிறுத்தத்திற்கு விரைந்தேன். நிறுத்தத்தை அடைய சில காலடிகளே எஞ்சிருக்கும் நிலையில்  அங்கு காத்துக் கொண்டிருந்த கூட்டம் தீடீரென்று கத்திக் கொண்டு நாலா பக்கமும்  சிதறி ஓடியது. எனக்கு நடப்பது என்னெவென்று புரிவதற்குள் யாரோ "கல்லெடுத்து வீசுறாங்க" என்று கூற யோசிக்காமல் வந்த வழியே திரும்பி கல்லூரியை நோக்கி ஓட்டம் பிடித்தேன்.

மக்கள் அங்கும் இங்கும் பதறி ஓட சாலையில் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. என் இதயம் வெளியே வந்து விழுந்து விடத் துடிப்பது போல் காதில் படபடத்தது. முதுகில் வேர்வை வழிய நா வறண்டு வாயோடு ஒட்டிக் கொண்டது. 

நான் திருப்பியே பார்க்காமல் சில கைலி கட்டிய ஆசாமிகளின் நடுவே புகுந்து  ஓட்ட நடையில் விரைந்தேன். கடைகளை எல்லாம் இழுத்து மூடிக் கொண்டிருந்தனர். அடுத்த 15-20 நிமிடத்தில் இரண்டு மூன்று பஸ் நிறுத்தங்களைத் தாண்டி வந்து விட்டிருந்தேன். இதற்கு மேல் நடக்க திரணியில்லாமல் பஸ் வரும் என்ற நம்பிக்கையில் காத்திருந்தேன்.

அப்பகுதி சற்று அமைதியாகவே காணப்பட்டது. கலவரம் எந்நேரமும் வெடிக்கும் என்று பேசிக்கொண்டிருந்தனர். 

அடுத்த ஒரு மணிநேரத்திற்கு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இரண்டு பேருந்து மாற்றி வீடு வந்து சேர்வதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது. இது என் வாழ்வில் நன் முதல்முதலாக களத்தில் நின்று எதிரே பார்த்த கலவரம்!!

சம்பவம் - 2

அன்று மதியம் ஒரு  மூன்று மணி இருக்கும். படர்ந்திருந்த அமைதியை  திடீரென்று கிழித்துக் கொண்டு  அலறல் ஓசை ஒன்று  சாலையிலிருந்து கேட்க என்னெவென்று எட்டிப் பார்க்கலாமா என்று கதவை நோக்கி செல்வதற்கு முன்னே பக்கத்து போர்ஷனில் இருந்து வெளியே வந்த சித்தப்பா "வெளிய யாரோ ரெண்டு ரவுடிப் பசங்க சண்ட போட்டுட்டு இருகாங்க..கதவ சாத்திட்டு இருங்க" என்று அறிவுறுத்தி விட்டு சென்றார்.

அவர் சென்ற சில நிமிடங்களில் எங்கள் கூரை மீது தட தட வென்று கற்கள் உருளும் சத்தம். ஆர்வம் மேலிட நாங்கள் ஜன்னல் வழியாக நெருக்கி அடித்துக் கொண்டு எட்டிப் பார்த்தோம். ரத்தம் சொட்டும் நெற்றியுடன்  ஒருவன் கையில் அரிவாளுடன் இன்னோருவனை துரத்திக் கொண்டிருக்க..அடுத்தவனின் சட்டையிலும் ரத்தக்கறை தெரிந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் கைகளாலேயே தாக்கிக் கொண்டு தெருவில் புரண்டனர். DTS effect இல்லாமல் ஒலித்த அந்த சத்தமே எங்களுக்கு பீதியைக் கொடுத்தது. கதவ தட்டாம இருந்தா சரி என்று கடவுளை வேண்டிக் கொண்டோம்.

என் வாழ்வில் நடந்த இவ்விரு வன்முறை சம்பவங்களையும் நான் எப்போது நினைத்தாலும் ஒரு வித பயம் என்னைத்  தொற்றிக் கொள்ளும்.

வன்முறையை திரையில் காணுகிறோம். நம்மில் சிலர் அதை ரசிக்கிறோம் சிலர் முகத்தை சுளித்துக் கொண்டே கடக்கிறோம் ஆனால் பெரும்பாலான நேரங்களில் அவை நம்மை நேரடியாக பாதிப்பதில்லை எனினும்  நடைமுறை வாழ்வில் நம்மால் சிறிய வன்முறையைக் கூட மன அதிர்வின்றி கடந்து செல்ல முடியாது!!!

வன்முறை - திரையில் காணும் போது ஒருவிதமாகவும், உண்மை சம்பவங்களை காதால் கேட்கும் போது ஒரு விதமாகவும், நம் கண் முன்னே நடக்கும் போது, நம் சொந்தங்கள் உறவுகளை பாதிக்கும் போது ஏன் நமக்கே ஏற்படும்  போது என்று வேறு வேறு பாதிப்புகளை நம் மனதில் உருவாக்கும்.



 

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இவுலகின்  ஏதோ ஓர் மூலையில் ஏதோ ஓர் யுத்தம் நடந்த வண்ணமே உள்ளது. அவை இரு தேசங்களுக்கிடையே ஆனதாகவோ, உள்நாட்டு போராகவோ, மாவட்டத்திற்கு இடையினிலோ, மதம் சாதி சார்ந்ததாகவோ இருக்கலாம்.

உலகத்தையே தன் உள்ளங்கையில் முடக்கிவிட்ட இந்த இன்டர்நெட் யுகம் நமக்கு அனைத்தையும் நேரடியாக திரையிட்டு காட்டுகிறது நாமும்  "ஐயோ அவங்களை எல்லாம் பார்க்க பாவமா இருக்கு" என்றும் "இவன் பண்ணது தப்பு..அவன் பண்ணது தப்பு" என்று கமெண்ட்  அடித்து விட்டு கனத்த இதயத்தை லேசாக்கிக் கொள்ள சேனலை மாற்றி விடுகிறோம். நம்மால் செய்ய இயல்வதும் அவை மட்டுமே!!!

யுத்தங்களை தவிர்க்க, ஆயுதங்களை கட்டுப்படுத்த, உள் நாட்டு வெளி நாட்டு  பிரச்சனைகளை சுமூகமாக்க என்று எண்ணற்ற சர்வதேச அமைப்புகள் இருந்தும் என்ன பயன்?!

இனி வரும் காலங்களிலாவது போர்க்களம் அற்ற வையம் அமைய வேண்டும். வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்!!!

புத்தாண்டு நல் வாழ்துக்கள் 🎕🎕🎕

பின் குறிப்பு - நம்மை பாதிக்காத எதுவும் நமக்கு செய்தியே!!!


No comments:

Post a Comment