Sunday, October 20, 2024

தொடுகை

 "தொடுகை" - ஐம்புலன்களில் ஒன்றான தொட்டு உணரும் புலனை நாம் பெரும்பாலான சமயங்களில் பார்வை அற்றவர்களுக்குக்கு மட்டுமே  பயன்படும் ஒன்றாகக் கருதி ஒதுக்கி விடுகிறோம் ஆனால் நம் உணர்ச்சிகளை  (Emotions) க்ஷண நேரத்தில் மற்றவர்களுக்கு அறிவிக்க இதை விட பெரிய உணர்வு ஊட்டி (Sense) வேறு  இருப்பதாகத் தெரியவில்லை.

"ஒருவர் மகிழ்ச்சியான விஷயத்தைக் கூறும் போது "வாழ்த்துக்கள்" என்று கைகுலுக்கும் போதும்  சோகத்தை ஒருவரின் கண்களில் காணும் போது "என்னாச்சு?"  என்று அவரின் தோளில் நம் கை படும் போதும் அழுது கொண்டிருப்பவரை கட்டி அணைத்து ஆறுதல் சொல்லும் போதும் கோபத்தில்/ஏமாற்றத்தில்  கொந்தளித்துக் கொண்டிருக்கும் ஒருவரை "சரி விடுங்க பாஸ்" என்று முதுகை தட்டும் போதும்" என்று ஆயிரம் வார்த்தைகளால் கடத்த முடியாத Emotions ஐ ஒரு தொடுகை உணர்த்தி விடுகிறது. பல வருடப் பகை கூட பறந்து விடுகிறது.

அப்படி எல்லாம் இல்லை நீங்கள் ஓவரா exaggerate செய்கிறீர்கள் என்று கூறுபவர்களுக்கு...

தாயின் வயிற்றில் இருக்கும் போது நம்மை சுற்றி இருக்கும் கருப்பை சுவரை தொட்டுத் தொட்டு பாதுகாப்பாக உணரும் நாம் இந்த பூமியில் பிரவேசம் செய்தவுடன் அந்த தொடுகை இல்லாதது கண்டு பீறிட்டு அழுகிறோம். தன்னோடு அணைத்துக் கொள்ளும் தாயையும் தூக்கத்தில் தூளியையும் தொட்டுக்கொண்டு ஆசுவாசம் அடைகிறோம்.

எழுந்து நடக்கும் வரை ஒவ்வொரு நிலையிலும் பெற்றோர்களின் தொடுகை வேண்டும். பின் பள்ளிக்கு செல்லும் போது அடுத்த அழுகை - "வரிசையில எல்லாரும் கையை பிடிச்சிட்டு நில்லுங்க" என்று ஆசிரியர் கூறும் போது அழுகை  நின்று தைரியம் பிறக்கிறது இருந்தும் குறைந்த பட்சம் பத்து வயது வரையாவது பெற்றோர்களின் அரவணைப்பில் இருக்க ஆசைப்படுகிறோம்.

டீன் ஏஜ் என்று சொல்லக்கூடிய பருவ வயதில் நண்பர்களின் கையைப் பிடித்துக் கொண்டும் வகுப்பறையில் தோளோடு தோள் உரசிக் கொண்டு நெருங்கி அமர்ந்து கொண்டும்  Safe ஆக உணர்கிறோம்.

"பின் திருமண வயது - நமக்கென்று பிரத்யேகமாக ஒருவர் வர ஏதோ Celebrity போல உணர்கிறோம்  பின் குழந்தை பிறக்கிறது அதை பிடித்துக் கொள்கிறோம்". வட்டமாக சுற்றி கொண்டிருக்கும் வாழ்க்கையின் இறுதிக்  கட்டமான வயோகதிகத்திற்கு வருகிறோம்.

ஒரு 40 வருடத்திற்கு முன் பெரும்பாலான குடும்பங்கள் கூட்டுக குடும்பமாகவே இருந்தது அதனால் தனது பேரன் பேத்திகளை மடியில் வைத்துக் கொண்டும், பிஞ்சு விரலைப் பிடித்துக் கொண்டு பள்ளிக்கு அழைத்துச சென்றும், இரவு நேரங்களில் வலியால் அவதியுறும் கால்களை பிடித்து விடும் மகன் மருமகளின் வாஞ்சை என்றும், தோளுக்கு மேல் வளர்ந்து வீட்டை வளைய வரும் பேரப்பிள்ளைகளை தோளோடு அணைத்துக் கொள்வது சமயங்களில் அறிவுரை கூறி தேற்றுவது என்றும்  தொடுகையை  (மனித உணர்வுகளை) உணர்ந்து  கொண்டே இருந்தோம்.

இன்றைய நிலையோ வேறு !! பெரும்பாலான வீடுகளில் வயதானவர்கள் தனிமை வாசம் செய்கிறார்கள். தம்பதிகளாக இருக்கும் பட்சத்தில் சற்று பிழைத்தார்கள் இல்லையேல் ஒரு காய்ச்சல் அடித்தால் கூட தொட்டுப் பார்ப்பதற்கு யாரும் இல்லை அதே நேரத்தில் பெற்றோர்களை மட்டுமே அண்டி  தனியாக வளரும் குழந்தைகளுக்கு Good Touch, Bad Touch என்று பாடம் எடுக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.

காலம் மாறி விட்டது அதற்கேற்றாற் போல நாமும் மாறத் தான் வேண்டும். எங்களுக்கும் பிரைவசி தேவை  "Me Time" வேண்டும் என்று வயதானவர்களே கேட்க ஆரம்பித்துவிட்ட பிறகு கூட்டுக்  குடும்பமாகத்தான் வாழ வேண்டும் என்ற பேசிற்கெல்லாம் இடமில்லை ஆனால் பெற்றோர்களின் தேவையை (Materialistic Needs) உணர்ந்து செயல்படும் நாம் குழந்தைகள் போல் மாறி வரும் அவர்களின் Emotions-களையும் புரிந்து கொள்ள வேண்டும்.

நடக்க சிரமப்படும் இடங்களில் அவர்களின் கைகளை பிடித்து கொள்ளுங்கள் உங்களின் குழந்தைகளை அவர்களின் அருகில் அமரச் செய்யுங்கள், பிறந்தநாள் கொண்டாட்டங்களின் போது அவர்களுக்கும் கேக்கை ஊட்டி விடுங்கள். கோயிலுக்கு சென்று விட்டு வந்தால் விபூதியை கையில் தராமல் நெற்றிக்கு இட்டு விடுங்கள் குறைந்த பட்சம் அவர்களின் பாதங்களைத் தொட்டு ஆசி பெறுங்கள்.

மேற்கூறிய அனைத்தையும் நீங்கள் விடுமுறையில் செல்லும் அந்த ஓரிரு மாதங்களிலே கூடச் செய்யலாம். உங்கள் குழந்தைகளிடம் பேசி புரிய வையுங்கள். நமது வாழ்கை என்னும் வட்டப் பயணத்தின் தொடுகை அனுபவத்தை  அறுபடாமல் முடித்து வைப்போம் 

No comments:

Post a Comment