Wednesday, February 5, 2025

மழையே.. மழையே

 ஹாஸ்டல் வார்டனைப் போல கறாறுடன் தட்டி எழுப்பிய கைப்பேசி அலாரத்தை snooze செய்யலாமா? Off செய்யலாமா என்று துழவிக் கொண்டிருந்த விரல்களை வெளியில் பெய்து கொண்டிருந்த மழையின் சத்தம் நிறுத்தச் செய்தது.

தூக்கம் அழுத்தும் கண்களுடன் எழுந்த என்னை    மழை மேலும் எரிச்சல் படுத்தியது.

இந்த அமெரிக்காவில் மழைக்கு விவஸ்தையே இல்லை. நேரம் காலம் இல்லாமல் வருடம் முழுதும் நினைத்த நேரத்தில் பெய்கிறது.

குழந்தைகளை குடையுடன் பேருந்து நிறுத்தத்திற்கு கூட்டிச்செல்ல வேண்டும், குளிர் அதிகமாக இருந்தால் காரிலும் அழைத்துச் செல்லலாம். வசதிக்கு ஒன்றும் குறைவில்லை இருந்தும் மழை என்றால் ஒரு ஒவ்வாமை.

இந்த நேரத்தில் மழையில் குத்தாட்டம் போட்டு ice cream ஐ சுவைத்து சாப்பிடும் திரைப்பட கதா நாயகிகள் வேறு தேவை இல்லாமல் நினைவிற்கு வந்து எரியும் கொள்ளியில் எண்ணை வார்க்கிறார்கள்.

என் வாழ்வில் நான் மழையை பெரிதாக ரசித்ததில்லை. ஆரம்ப பள்ளியில் படிக்கும் பொழுது மழை வந்தால் ஜாலியாக இருக்கும் ஏனென்றால் புத்தகப்பையை அங்கேயே வைத்து விட்டு போகச்சொல்லி விடுவார்கள். மழையில் புத்தகங்கள் நனையாமல் இருப்பதற்காக. எங்கள் வீடு பள்ளியில் இருந்து ஐந்து நிமிட நடை தூரத்திலேயே இருந்தாலும் நானும் பையை வைத்துவிட்டு கையை வீசிக்கொண்டு வந்து  வீட்டுப்பாடம் எழுதாமல் ஆட்டம் போடுவேன் அதிலும் சில ஆசிரியைகள் பேப்பரில் வாய்ப்பாடு எழுதிக் கொண்டு வரச் சொல்லி வெறுப்பேத்துவார்கள்.

ஒரு சில முறை நானும் என் தங்கையும் மழையில் நன்கு நனைந்து அனுபவித்திருக்கிறோம். மழை நீரை வாளியில் பிடித்து வைப்பது போன்ற வேலைகளை ரசித்து செய்திருக்கிறோம்.

நடுநிலைப் பள்ளி காலத்திலிருந்து மழை என்றாலே "அய்யோ பஸ் லேட்டா வருமே, குண்டும் குழியுமான ரோட்டில் சேறு சகதி என்று வழுக்குமே, சில இடங்களில் முட்டி அளவு நீரில் நடந்து செல்ல வேண்டி இருக்கும் முக்கியமாக கரண்ட் கட் செய்து படுத்தி எடுப்பார்கள் அப்படியே மின்சாரம் இருந்தாலும் குளுருது என்று Fan ஐ Off செய்து வீட்டில் உள்ளவர்கள் கடுப்பேத்துவார்கள்  இந்த கொசுக்களோடு மல்லு கட்டமுடியாது" இவ்வாறு மழை என்றதும் மனம் பலவாறாக கவலை கொள்ளத் துவங்கும். புலம்பித தவிக்கும்.

என்னைப் போன்ற சிலருக்கு மழை வேண்டும் ஆனால் யாருடைய பிழைப்பையும் பாதிக்காத விதத்தில் இரவில் மட்டும் அளவோடு பெய்து விட்டு நின்று விட வேண்டும் ஏன் நம்மில் பலரும் வெயில் காலத்தில் மழைக்கு ஏங்குவோம் இரண்டு நாட்களுக்கு தொடர் மழை பெய்து துணி காயவில்லை என்றால் டென்சன் ஆகி அதே மழையை கரித்துக் கொட்டுவோம்.

அமெரிக்காவில் குடித்தனம் பெயர்ந்து வருடங்கள் பல கடந்தோடி விட்டது இங்கு மின்சாரத் தடை எல்லாம் இல்லை, டவுன் பஸ்ஸிற்கு காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை எனினும் திரைப்படங்களில் காண்பிப்பது போல புத்தகத்தை வாசித்துக் கொண்டும் சூடான காபியை சுவைத்துக் கொண்டும் ஒரு பொழுதும் மழையை ரசித்தது கிடையாது மாறாக எனது கணவர்  "சுடச் சுட பஜ்ஜி சாப்பிட்டா இந்த மழைக்கு நல்லா இருக்கும்" என்று சொல்லி என்னை மேலும் சூடேற்றுவார்.

மழைப் பாடல்களை பிடித்த அளவிற்கு மழை ஏனோ எனக்கு பிடிபடாமலேயே சென்று விட்டது.

"வான்நின்று உலகம் வழங்கி வருதலால் 

நான்அமிழ்தம் என்றுணரற்  பாற்று" 




No comments:

Post a Comment