Tuesday, August 26, 2025

Playdate WITH பிள்ளையார்!

தமிழகத்தில் முக்கியமாக மதுரை மாநகர தெருக்களில் இரண்டைக் கூட சாலையோர கோவிலில் சஞ்சாரம்  செய்யும் கணேசனின்  கண்காணிப்பின்றி உங்களால் முழுமையாகக் கடக்க முடியாது.

அரசமரம் இருக்கும் இடத்தில் எல்லாம் அவனை அமரச் செய்தார்கள் நம் முன்னோர்கள் ஆனால் நாமோ மரத்தை வெட்டிச் சாய்த்து, கணநாதனை மொட்டை வெயிலில் விட்டுவிட்டு அவனை குளிர்விக்க அருகம்புல்லை தலையில் வைத்துவிடுவதோடு மட்டுமல்லமல்  அப்பாதையை கடக்கும் போதெல்லாம் (அவசர அவசரமாக) தலையில் கொட்டிக் கொண்டு நாம் செய்த, செய்யும் பாவங்களுக்கெல்லாம் பிராயச்சித்தம் தேடுகிறோம்! 

1970-களின் தொடக்கத்தில் ஊருக்கு ஒதுக்குபுறமாக இருக்கும் தென்னந்தோப்பை தன் மகளுக்காக வாங்கினர் என் தந்தை வழி பாட்டியின் பெற்றோர்.

அரை டஜன் குழந்தைகளுடன் நெசவுத் தொழில் செய்து அவதிப்படும் மகளுக்கு அவ்விடத்தில் ஓர் ஒட்டு வீடு ஒன்றை விஸ்தாரமாகக் கட்டிக் கொடுத்தால் அனைவரும் தங்குவதற்கும் கைத்தறி அமைப்பதற்கும் வசதியாக இருக்கும் என்று நினைத்தார் பெரியவர்.

அவ்வாறே வீடும் கட்டப்பட்டது ஆனால் அத்தோப்பிற்கு நடுவே ஓர் சிறிய திட்டில் தன் தந்தையுடன் அமர்ந்திருந்தார் பிள்ளையார். அவரை அப்படியே விட்டுவிட்டு தென்னைமரங்கள் சூழ அமைந்திருக்கும் ஒற்றை வீட்டில் வாழ  ஆரம்பித்தனர் அக்குடும்பத்தினர்.

என்னுடைய பாட்டிக்கு கடவுள் பக்தியெல்லாம் கிடையாது. செய்யும் தொழிலே தெய்வம் என்ற கொள்கையை கடை பிடித்தவர் அவர்! தினமும் ஒரு குடம் நீரை கணபதி  மேல் ஊற்றி நீராட்டும் என் தாத்தாவிடம் " சேலை நெய்தால் தான் வயிற்றுக்கு கஞ்சி..நேரைத்தை வீணடிக்க வேண்டாம்" என்று கடிந்து கொள்வார் என்று என் பெற்றோர் கூற கேட்டிருக்கிறேன்.

அரசாங்கப் பணியில் இருந்த என் தந்தை அங்கே இங்கே என மாற்றலாகி கடைசியாக எனக்கு 4-5 வயது இருக்கும் போது எங்களின் சொந்த ஊரான மதுரைக்கே வந்து சேர்ந்தார் நாங்களும் அந்த பூர்வீக வீட்டிலேயே வாழத் தொடங்கினோம்.

80-களின் கால கட்டமான இவ்வேளையில் வீட்டைச் சுற்றி இருந்த  தென்னை மரங்களின் எண்ணிக்கை சற்று  குறைய ஆரம்பித்து 4 அறைகள் கொண்ட Line வீடு முளைத்திருந்தது. அங்கு சில குடும்பங்களை வாடகைக்கு அமர்த்தி இருந்தார் என் பாட்டி. அவர்களில் சிலர் பக்திமான்களாக இருக்கப்போய் பிள்ளையார் பிழைத்துக் கொண்டார்.

எங்கள் வீட்டிற்கு எதிர் புறம் காலனி உருவாகி மக்கள் கூட்டம் கணிசமாக உயர்ந்திருந்தாலும் எங்கள் வீடு அன்றும் ரோட்டிற்கு மேல் "ஒற்றை வீடு" என்ற அடையாளத்துடனே விளங்கியது.

திருமணமான புதிதில் எல்லாம் குதிரை வண்டியில் தான் தன் தாய் வீட்டிலிருந்து அங்கு வந்து போய்க் கொண்டிருந்ததாகவும் ஓரிரண்டு பேருந்துகள் மட்டுமே அந்த ரூட் (Route)-ல் இருந்ததாகவும் என் அம்மா நினைவு கூறுவார்.

ஆனால் இப்போது (90 காலகட்டம்) குறைந்தது 30 நிமிடத்திற்கு ஒரு முறையாவது அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. எங்கள் வீட்டு வாசல் தான் Bus Stop அதனால் பிள்ளையாருக்கு மவுசு சற்று கூடி விட்டிருந்தது. பேருந்து வரும் வரை காத்திருப்பவர்கள், பேருந்தில் இருந்து இறங்கியவர்கள் பய பக்தியுடன்(?!) கன்னத்தில் போட்டுக் கொண்டனர்.

தென்னை மற்றும் வேப்ப மர நிழலில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் கஜமுகனுக்கு ஊதுபத்தி சூடம் ஆரத்தி எல்லாம் கிடையாது. காலை 7 மணிக்கு பால்காரர் கால் டம்ளர் பாலை அபிசேகம் என்ற பேரில் தலையில் கவிழ்த்து விட்டு சென்று விடுவார். ரோட்டில் திரியும் பிராணிகளுக்கெல்லாம் Breakfast கிடைத்த மகிழ்ச்சி. 8 மணி வாக்கில் ஈ எறும்பு மொய்க்கும் பிள்ளையாரை  குளிப்பாட்டுவார் காம்பவுண்டு வீட்டில் இருக்கும் ஓர் நபர். 

ஓர் அகல் விளக்கும் இருக்கும். அவ்வழியே செல்லும் பூக்காரி சிறிது கதம்பத்தை தலையின் மேல் வைக்க என்று எடுப்பார் கைப்பிள்ளை போல் இருந்த அவருக்கு விநாயகர் சதுர்த்தி நாளில் மட்டுமே கொழுக்கட்டை பிரசாதம் படைத்து வழிபடப்படுவார். பின்னாளில் சிவன் ராத்திரி அன்று பொங்கல் வைக்கும் வைபவம் தொடங்கி தொடர்ந்தது.

வெயில் மண்டையை பிளக்கும் மதிய வேளையில் கல் பிள்ளையாரின் குளுமையை நாடி அதன் அருகில் நாய் குடும்பம் குழந்தை குட்டியுடன் தஞ்சமடையும்.  இது போதாதென்று தங்கள் வீட்டு நாய்க்கு பிறந்த குட்டியை எல்லாம் மஞ்சள் பையில் வைத்து பிள்ளையார் அருகில் வைத்து விட்டு சென்று விடுவார்கள்!

எங்களுக்கு 7-8 வயதிருக்கும். கோடை விடுமுறை நாட்களில் மிகவும் போரடித்தால் வாளி நிறைய Water தேங்காய் நார் என்று ஐந்து கரத்தானுக்கு "Spa Day" தான். "போதும் போதும் வாங்க..பிள்ளையார் பளிங்கு சிலையா மாறப்போறாரு" என்று எங்கள் பாட்டி கூப்பிடும் வரை விடமாட்டோம்.

ஊரிலிருந்து வரும் எங்கள் அத்தை குழந்தைகளுடன் கோவிலைச் சுற்றி ஓடிப் பிடித்து விளையாடுவது, கண்ணாமூச்சி விளையாட்டு, சாமிக்கு முன் சத்தியம் வாங்குவது, நாங்கள் சமைத்த களி மண் சாப்பாட்டை படைப்பது, சுற்றி இருக்கும் இலை தழை பூக்களை மாலையாகக்  கட்டிப் போடுவது    என்று எங்களின் சேட்டைகளுக்கெல்லாம் ஒரே சாட்சியாக இருந்தவர் இன்றுவரை நாங்கள் அவரிடம் பகிர்ந்து கொண்ட ரகசியங்களை பத்திரமாக கட்டிக் காத்துக் கொண்டிருக்கிறார்.

தொன்னூறுகளில் மரத்தடி பிள்ளையார் எல்லாம் பால் குடிக்க எங்கள் பிள்ளையாரிடமும் மக்கள் தூக்குபோனியில் பாலுடன் நின்றனர்.

2000-த்தின் துவக்கத்தில் தெருவை ஆக்கிரமிக்கும் சிறு கோவில்கள் பல இடிக்கப்பட்டன ஆனால் எங்கள் பிள்ளையார் தப்பினார் அதன் பின் எங்கள் வீட்டிற்கு வெளியே இருக்கும் சாலை தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட ஆபத்து வந்தது எங்கள் வீட்டிற்கும் பிள்ளையாருக்கும் ஆனால் Just Miss-ல் இரண்டும் எஸ்கேப் ஆனது.

நாங்கள் கல்லூரி படிப்பை முடிக்கும் வரையில் அதே வீட்டில் தான் இருந்தோம். வாடகைக்காரர்கள் எல்லாம் அப்போது இல்லை. மினி பஸ் அராஜகம் அதிகரிக்க பிள்ளையார் தூசியில் மூழ்கி இருந்தார். சிறிது தொலைவில் இருந்து ஒரு அக்கா காலையில்  வந்து கோவிலை சுத்தம் செய்து விளக்கேற்றி வைத்து விட்டு செல்வார்.

நாங்கள் எப்போதாவது தான் கும்பிடுவோம் எங்கள் தோழனாகவே இருந்தவனை தெய்வமாக பார்க்கத் தோன்றவில்லையா என்னவோ?!

எங்கள் குடும்பத்தில் யாருக்கும் இப்போது அது வசிப்பிடமாக இல்லை. எங்கள் சித்தப்பா மட்டுமே தொழில் நிமித்தம் அவ்வீட்டை பாதுகாத்து வருகிறார். கடந்த 5-6 வருடங்களாக  மாத சதுர்த்தி மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறதாம்.

ஷேர் ஆட்டோ, டவுன் பஸ், டாக்ஸி, டெம்போ வேன் என்று மக்கள் பயணிக்கும் வாகனங்கள் மாறி இருக்கிறதே ஒழிய அந்த ஸ்டாப்பில் இறங்கும் மக்கள் அவருக்கு Attendance போடுவது மாறவில்லை.

கிட்டத்தட்ட 50 வருடங்களுக்குப் பின் இந்த 2025-ம் ஆண்டில் அப்பகுதி மக்கள் எல்லாம் ஒன்றிணைந்து கோவிலை புனர் அமைத்திருக்கின்றனர். 

"Make Over" செய்யப்பட்டு ஜம்மென்றிருக்கும்  ஆனைமுகத்தினன் எங்களுள் புதைந்து கிடந்த பற்பல நினைவுகளை பசுமையாக்கிவிட்டு அதே இடத்தில்  அமர்ந்திருக்கிறார்!






Thursday, April 3, 2025

Cruise என்னும் கூத்து

கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன் முதல் முறையாக  "Cruise Trip" குறித்து நண்பர்கள் பேசிக் கேட்டேன். அது ஏதோ அமெரிக்க குடியுரிமை உள்ளவர்கள் செல்லும் பயணம் நமக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்று பெரிதாக விவரம் ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை பின் கொரோனா காலகட்டத்தில் பல சொகுசுக் கப்பல்கள் கரை ஏற முடியாமல் "Port"-ல் தனிமைப்படுத்தப்பட்டு இருந்ததையும் அதில் பயணம் செய்தவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அவதியுற்றதையும் தொலைக்காட்சியில் பார்த்தேன் அவ்வளவே எனக்கும் Cruise க்கும்  உண்டான உறவு!!!

ஆனால் சமீப காலங்களில் நவம்பர், டிசம்பர் என்று குளிர் மாதங்கள்  வந்தாலே "நாங்க Cruise" போறோம் "நீங்க போகலையா?" வாங்களேன் என்று பரவலான அழைப்பு. சிலர் வருடாவருடம் சென்று வருவதாகவும் 'The Best Vacation Ever" என்றும்  கூறுகிறார்கள் சரி அப்படி என்ன தான் இருக்கு இந்த  Cruise-ல்?! ஒரு கை பார்த்துவிட வேண்டியதுதான் என்று முடிவெடுத்து இவ்வருட Winter Break-ல்  நண்பர்களுடன் இணைத்து கொண்டோம்.

கப்பல் பயணம் என்பது தொன்று தொட்டு இருந்துவரும் பழமையான பயண முறைகளில் ஒன்று. முற்காலங்களில் புதிய நிலப்பரப்புகளையும் வளங்களையும் கண்டறிவதற்கு அரசரின் ஆணைப்படி  பல்வேரு மாலுமிகளின் தலைமைகளின் மேற்கொள்ளப்பட்ட கடற் பயணங்களைக் குறித்து பாடப்புத்தகங்களில் படித்திருக்கிறோம்.

கடல் பயணம் எத்துனை கடினமானது கடற் கொள்ளையர்களின் அட்டூழியம் மற்றும் கடல் உயிரினங்களை அதன் கொழுப்பின் (Whale Oil) பொருட்டு வேட்டையாடுவதற்கு சென்று உயிரிழப்பதையும் நாடுகளுக்கு இடையே நடக்கும் கடல் சண்டைகளைக் குறித்தும் ஆங்கிலப் படங்களில் கண்டிருக்கிறோம். புதிய பறவை படத்தில் செல்வந்தர்களாக சிவாஜி சரோஜா தேவி போன்றவர்கள் மலேசியா, சிங்கப்பூர் சுற்றுப்பயணம் சொகுசுக் கப்பலில் சென்று வருவதாகக் காட்டப்பட்டிருக்கும்  😀😀

19-ம் நூற்றாண்டு மற்றும் 20-ம் நூற்றாண்டின் துவக்க காலங்களிலும் கூட பலர் படிப்பு மற்றும் தொழில் தொடர்பான  வெளிநாட்டு பயணங்களை கடல் வழியே செய்து வந்தனர். 

Cruise என்று சொல்லக்கூடிய இந்த சொகுசுக் கப்பல் பயணங்கள் அமெரிக்காவில் 1970-களில் தொடங்கப்பட்டதாகக் கூகுள் தெரிவிக்கிறது. உயர்வர்க்க மக்கள் மட்டுமே செய்துவந்த இவ்வகை பயணங்கள் தற்போது உலகம் முழுவதும் உள்ள  நடுத்தர வர்கங்களுக்கும் சாத்தியப்பட்டிருப்பது மகிழ்ச்சியே!!!

சரி..நாங்கள் Cruise-க்கு  சென்ற கதைக்கு வருவோம். டிக்கெட் போட்டாச்சு என்றதும் அனுபவசாலிகளிடமிருந்து பல்வேறு அறிவுரைகளும் ஆலோசனைகளும் வந்த வண்ணம் இருந்தது. நாங்கள் இதுவரை வேறு எந்த Vacation-க்கும் இவ்வளவு ஷாப்பிங் செய்ததில்லை இத்துனை Luggage-களையும்  சுமந்ததில்லை!! நாம Over ஆ தான் போறோமே?! என்று தோன்றினாலும் "வேணுங்க போட்டோ Shoot இருக்கு Formal Dining இருக்கு, Swimming Pool இருக்கு, Island-ல இறங்கும் போது சுத்திபாக்கணும்" என்று அறிந்தவர்கள் எங்களை ஆசுவாசப்படுத்தினர்.

நாங்களும் ஒருவழியாக மூட்டை முடிச்சைக் கட்டிக் கொண்டு 7 நாள் பயணத்தை தொடங்கினோம்.




நாங்கள் எதிர்பார்த்ததை விட Cruise அனுபவம் அருமையாகவே இருந்தது முக்கியமாக குழந்தைகள் நன்கு அனுபவித்து மகிந்தனர் ஆனால் ஒரு இடத்திற்கு போவது அதன் வரலாற்றை தெரிந்து கொள்வது ம்யூசியங்களைப் பார்வை இடுவது என்று சாவகாசமாக எதையும் செய்ய முடியவில்லை சக பயணிகளும் Beach-க்கு செல்வதையே பிரதான நோக்கமாக கொண்டிருந்தனர்.

Cruse ஐ விரும்பும் பலரும் அதற்கு சொல்லும் விளக்கம் "சமையலில் இருந்து சுதந்திரம்  கிடைக்கிறது, எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமாலும் (Restrictions Apply) சாப்பிடலாம், தங்களை அழகாக தயார்படுத்திக் கொண்டு நிகழ்வுகளுக்குச் செல்லலாம், குளிர் காலத்திலும் சூரியனை அனுபவிக்கலாம்  மொத்தத்தில் அழுத்தம் நிறைந்த  Routine Life-ல் இருந்து விடுதலை!!



நிஜமாகவா?! மனிதனால் Routine இல்லாமல் ஒவ்வொரு நாளை ஒவ்வொரு விதமாக செலவழிக்க முடியுமா? Cruise Trip-களில்  வழக்கமான வாழ்க்கையிலிருந்து விடுதலை அடைகிறோமே தவிர அங்கு தங்கிய 7 நாட்களும் ஒரே Routine ஐ தான் பின்பற்றினோம்.

அனைவரும் சகட்டு மேனிக்கு உணவை வீண் செய்வதைக் காண நேர்ந்தாலும் ஒரு நல்ல விஷயம் குழந்தைகளுக்கு Soda எங்கும் கிடைக்கவில்லை, இன்டர்நெட் இல்லை அதனால் நொடிக்கொரு தரம் போனை நோக்கும் நோயிலிருந்து தற்காலிக நிவாரணம் முக்கியமாக ரீலிஸ்-ல் இருந்து!!



அனைத்து Cruise Ship-களும் Private Island ஒன்றை வாங்கி வைத்துள்ளனர் அதன் முக்கிய நோக்கமே கப்பலில் சேர்ந்த குப்பையையை அங்கு கொட்டுவதற்குத்தான் என்று சொல்கிறார்கள் அதன் அரசியல் என்ன என்று தெரியவில்லை ஆனால் நீலமயமான அதன் அழகை நாங்கள் நன்கு ரசித்தோம்.

24/7 என்று உழைத்து சோர்வடைந்த மனிதர்களுக்கு Cruise Trip ஓகே வீட்லேயே ரிலாக்ஸாய் பொழுது போக்கும்  நமக்கு எதற்கு என்று தோன்றிக்கொண்டே இருந்தாலும் "களவும் கற்று மற"!!!

முடிந்தால் நீங்களும் போயிட்டு வாங்க இப்ப இதுதான் Trending 😂

பின் குறிப்பு - 7 நாளைக்கு தங்க இடமும் குடுத்து, சாப்பாடும் போட்டு அங்கங்க சுத்தி பாக்க இறக்கியும் விடுறானே இவ்வளவு Cheap ஆ எங்கயாச்சும் Vacation போக முடியுமா சொல்லுங்க?! என்று கேட்பவரகளைப் பார்த்தால் அதுவும் சரிதான் என்று தோன்றுகிறது.


Wednesday, February 5, 2025

மழையே.. மழையே

 ஹாஸ்டல் வார்டனைப் போல கறாறுடன் தட்டி எழுப்பிய கைப்பேசி அலாரத்தை snooze செய்யலாமா? Off செய்யலாமா என்று துழவிக் கொண்டிருந்த விரல்களை வெளியில் பெய்து கொண்டிருந்த மழையின் சத்தம் நிறுத்தச் செய்தது.

தூக்கம் அழுத்தும் கண்களுடன் எழுந்த என்னை    மழை மேலும் எரிச்சல் படுத்தியது.

இந்த அமெரிக்காவில் மழைக்கு விவஸ்தையே இல்லை. நேரம் காலம் இல்லாமல் வருடம் முழுதும் நினைத்த நேரத்தில் பெய்கிறது.

குழந்தைகளை குடையுடன் பேருந்து நிறுத்தத்திற்கு கூட்டிச்செல்ல வேண்டும், குளிர் அதிகமாக இருந்தால் காரிலும் அழைத்துச் செல்லலாம். வசதிக்கு ஒன்றும் குறைவில்லை இருந்தும் மழை என்றால் ஒரு ஒவ்வாமை.

இந்த நேரத்தில் மழையில் குத்தாட்டம் போட்டு ice cream ஐ சுவைத்து சாப்பிடும் திரைப்பட கதா நாயகிகள் வேறு தேவை இல்லாமல் நினைவிற்கு வந்து எரியும் கொள்ளியில் எண்ணை வார்க்கிறார்கள்.

என் வாழ்வில் நான் மழையை பெரிதாக ரசித்ததில்லை. ஆரம்ப பள்ளியில் படிக்கும் பொழுது மழை வந்தால் ஜாலியாக இருக்கும் ஏனென்றால் புத்தகப்பையை அங்கேயே வைத்து விட்டு போகச்சொல்லி விடுவார்கள். மழையில் புத்தகங்கள் நனையாமல் இருப்பதற்காக. எங்கள் வீடு பள்ளியில் இருந்து ஐந்து நிமிட நடை தூரத்திலேயே இருந்தாலும் நானும் பையை வைத்துவிட்டு கையை வீசிக்கொண்டு வந்து  வீட்டுப்பாடம் எழுதாமல் ஆட்டம் போடுவேன் அதிலும் சில ஆசிரியைகள் பேப்பரில் வாய்ப்பாடு எழுதிக் கொண்டு வரச் சொல்லி வெறுப்பேத்துவார்கள்.

ஒரு சில முறை நானும் என் தங்கையும் மழையில் நன்கு நனைந்து அனுபவித்திருக்கிறோம். மழை நீரை வாளியில் பிடித்து வைப்பது போன்ற வேலைகளை ரசித்து செய்திருக்கிறோம்.

நடுநிலைப் பள்ளி காலத்திலிருந்து மழை என்றாலே "அய்யோ பஸ் லேட்டா வருமே, குண்டும் குழியுமான ரோட்டில் சேறு சகதி என்று வழுக்குமே, சில இடங்களில் முட்டி அளவு நீரில் நடந்து செல்ல வேண்டி இருக்கும் முக்கியமாக கரண்ட் கட் செய்து படுத்தி எடுப்பார்கள் அப்படியே மின்சாரம் இருந்தாலும் குளுருது என்று Fan ஐ Off செய்து வீட்டில் உள்ளவர்கள் கடுப்பேத்துவார்கள்  இந்த கொசுக்களோடு மல்லு கட்டமுடியாது" இவ்வாறு மழை என்றதும் மனம் பலவாறாக கவலை கொள்ளத் துவங்கும். புலம்பித தவிக்கும்.

என்னைப் போன்ற சிலருக்கு மழை வேண்டும் ஆனால் யாருடைய பிழைப்பையும் பாதிக்காத விதத்தில் இரவில் மட்டும் அளவோடு பெய்து விட்டு நின்று விட வேண்டும் ஏன் நம்மில் பலரும் வெயில் காலத்தில் மழைக்கு ஏங்குவோம் இரண்டு நாட்களுக்கு தொடர் மழை பெய்து துணி காயவில்லை என்றால் டென்சன் ஆகி அதே மழையை கரித்துக் கொட்டுவோம்.

அமெரிக்காவில் குடித்தனம் பெயர்ந்து வருடங்கள் பல கடந்தோடி விட்டது இங்கு மின்சாரத் தடை எல்லாம் இல்லை, டவுன் பஸ்ஸிற்கு காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை எனினும் திரைப்படங்களில் காண்பிப்பது போல புத்தகத்தை வாசித்துக் கொண்டும் சூடான காபியை சுவைத்துக் கொண்டும் ஒரு பொழுதும் மழையை ரசித்தது கிடையாது மாறாக எனது கணவர்  "சுடச் சுட பஜ்ஜி சாப்பிட்டா இந்த மழைக்கு நல்லா இருக்கும்" என்று சொல்லி என்னை மேலும் சூடேற்றுவார்.

மழைப் பாடல்களை பிடித்த அளவிற்கு மழை ஏனோ எனக்கு பிடிபடாமலேயே சென்று விட்டது.

"வான்நின்று உலகம் வழங்கி வருதலால் 

நான்அமிழ்தம் என்றுணரற்  பாற்று"