Sunday, October 20, 2024

தொடுகை

 "தொடுகை" - ஐம்புலன்களில் ஒன்றான தொட்டு உணரும் புலனை நாம் பெரும்பாலான சமயங்களில் பார்வை அற்றவர்களுக்குக்கு மட்டுமே  பயன்படும் ஒன்றாகக் கருதி ஒதுக்கி விடுகிறோம் ஆனால் நம் உணர்ச்சிகளை  (Emotions) க்ஷண நேரத்தில் மற்றவர்களுக்கு அறிவிக்க இதை விட பெரிய உணர்வு ஊட்டி (Sense) வேறு  இருப்பதாகத் தெரியவில்லை.

"ஒருவர் மகிழ்ச்சியான விஷயத்தைக் கூறும் போது "வாழ்த்துக்கள்" என்று கைகுலுக்கும் போதும்  சோகத்தை ஒருவரின் கண்களில் காணும் போது "என்னாச்சு?"  என்று அவரின் தோளில் நம் கை படும் போதும் அழுது கொண்டிருப்பவரை கட்டி அணைத்து ஆறுதல் சொல்லும் போதும் கோபத்தில்/ஏமாற்றத்தில்  கொந்தளித்துக் கொண்டிருக்கும் ஒருவரை "சரி விடுங்க பாஸ்" என்று முதுகை தட்டும் போதும்" என்று ஆயிரம் வார்த்தைகளால் கடத்த முடியாத Emotions ஐ ஒரு தொடுகை உணர்த்தி விடுகிறது. பல வருடப் பகை கூட பறந்து விடுகிறது.

அப்படி எல்லாம் இல்லை நீங்கள் ஓவரா exaggerate செய்கிறீர்கள் என்று கூறுபவர்களுக்கு...

தாயின் வயிற்றில் இருக்கும் போது நம்மை சுற்றி இருக்கும் கருப்பை சுவரை தொட்டுத் தொட்டு பாதுகாப்பாக உணரும் நாம் இந்த பூமியில் பிரவேசம் செய்தவுடன் அந்த தொடுகை இல்லாதது கண்டு பீறிட்டு அழுகிறோம். தன்னோடு அணைத்துக் கொள்ளும் தாயையும் தூக்கத்தில் தூளியையும் தொட்டுக்கொண்டு ஆசுவாசம் அடைகிறோம்.

எழுந்து நடக்கும் வரை ஒவ்வொரு நிலையிலும் பெற்றோர்களின் தொடுகை வேண்டும். பின் பள்ளிக்கு செல்லும் போது அடுத்த அழுகை - "வரிசையில எல்லாரும் கையை பிடிச்சிட்டு நில்லுங்க" என்று ஆசிரியர் கூறும் போது அழுகை  நின்று தைரியம் பிறக்கிறது இருந்தும் குறைந்த பட்சம் பத்து வயது வரையாவது பெற்றோர்களின் அரவணைப்பில் இருக்க ஆசைப்படுகிறோம்.

டீன் ஏஜ் என்று சொல்லக்கூடிய பருவ வயதில் நண்பர்களின் கையைப் பிடித்துக் கொண்டும் வகுப்பறையில் தோளோடு தோள் உரசிக் கொண்டு நெருங்கி அமர்ந்து கொண்டும்  Safe ஆக உணர்கிறோம்.

"பின் திருமண வயது - நமக்கென்று பிரத்யேகமாக ஒருவர் வர ஏதோ Celebrity போல உணர்கிறோம்  பின் குழந்தை பிறக்கிறது அதை பிடித்துக் கொள்கிறோம்". வட்டமாக சுற்றி கொண்டிருக்கும் வாழ்க்கையின் இறுதிக்  கட்டமான வயோகதிகத்திற்கு வருகிறோம்.

ஒரு 40 வருடத்திற்கு முன் பெரும்பாலான குடும்பங்கள் கூட்டுக குடும்பமாகவே இருந்தது அதனால் தனது பேரன் பேத்திகளை மடியில் வைத்துக் கொண்டும், பிஞ்சு விரலைப் பிடித்துக் கொண்டு பள்ளிக்கு அழைத்துச சென்றும், இரவு நேரங்களில் வலியால் அவதியுறும் கால்களை பிடித்து விடும் மகன் மருமகளின் வாஞ்சை என்றும், தோளுக்கு மேல் வளர்ந்து வீட்டை வளைய வரும் பேரப்பிள்ளைகளை தோளோடு அணைத்துக் கொள்வது சமயங்களில் அறிவுரை கூறி தேற்றுவது என்றும்  தொடுகையை  (மனித உணர்வுகளை) உணர்ந்து  கொண்டே இருந்தோம்.

இன்றைய நிலையோ வேறு !! பெரும்பாலான வீடுகளில் வயதானவர்கள் தனிமை வாசம் செய்கிறார்கள். தம்பதிகளாக இருக்கும் பட்சத்தில் சற்று பிழைத்தார்கள் இல்லையேல் ஒரு காய்ச்சல் அடித்தால் கூட தொட்டுப் பார்ப்பதற்கு யாரும் இல்லை அதே நேரத்தில் பெற்றோர்களை மட்டுமே அண்டி  தனியாக வளரும் குழந்தைகளுக்கு Good Touch, Bad Touch என்று பாடம் எடுக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.

காலம் மாறி விட்டது அதற்கேற்றாற் போல நாமும் மாறத் தான் வேண்டும். எங்களுக்கும் பிரைவசி தேவை  "Me Time" வேண்டும் என்று வயதானவர்களே கேட்க ஆரம்பித்துவிட்ட பிறகு கூட்டுக்  குடும்பமாகத்தான் வாழ வேண்டும் என்ற பேசிற்கெல்லாம் இடமில்லை ஆனால் பெற்றோர்களின் தேவையை (Materialistic Needs) உணர்ந்து செயல்படும் நாம் குழந்தைகள் போல் மாறி வரும் அவர்களின் Emotions-களையும் புரிந்து கொள்ள வேண்டும்.

நடக்க சிரமப்படும் இடங்களில் அவர்களின் கைகளை பிடித்து கொள்ளுங்கள் உங்களின் குழந்தைகளை அவர்களின் அருகில் அமரச் செய்யுங்கள், பிறந்தநாள் கொண்டாட்டங்களின் போது அவர்களுக்கும் கேக்கை ஊட்டி விடுங்கள். கோயிலுக்கு சென்று விட்டு வந்தால் விபூதியை கையில் தராமல் நெற்றிக்கு இட்டு விடுங்கள் குறைந்த பட்சம் அவர்களின் பாதங்களைத் தொட்டு ஆசி பெறுங்கள்.

மேற்கூறிய அனைத்தையும் நீங்கள் விடுமுறையில் செல்லும் அந்த ஓரிரு மாதங்களிலே கூடச் செய்யலாம். உங்கள் குழந்தைகளிடம் பேசி புரிய வையுங்கள். நமது வாழ்கை என்னும் வட்டப் பயணத்தின் தொடுகை அனுபவத்தை  அறுபடாமல் முடித்து வைப்போம் 

Tuesday, May 21, 2024

மாலை நேர மயக்கம்

நேத்து மத்தியானம் மணி 2:55 இருக்கும். உள் ரூமில வேலை பாத்துட்டு இருந்த என் வீட்டுக்காரர் எட்டிப் பாத்து "என்ன மணி மூனாகப்போகுது..டீ போட்றேன்..தலை வலி பின்னுது" என்றார். அப்பதான் சாப்புட்டு உக்காந்த எனக்கு செம்ம கடுப்பு 😠😠

(கொரோனாவிற்கு பிந்தைய காலகட்டத்திலும் சிலர்  வீட்ல இருந்து வேலை பாக்குறதால சமைக்குற வேலை ஜாதியாயிருச்சுன்னு பொலம்புறதை சமூக வலைத்தளங்களிலும், அக்கம் பக்கத்துக்கு வீட்டுக்காரங்க சொல்றதையும் கேக்குறேன், பாக்குறேன் ஆனா எனக்கு இந்த டீ போட்டு கொடுக்குறது தான் ஜாஸ்தியாயிடுச்சு!!! விட்டா மதியம் சாப்ட கையோட டீ கேப்பாரு போல 💭) 

"டீ"-ன்னு கேட்டதும் எனக்கும் குடிக்கனும் போல ஆயிருச்சு..சரின்னு டீ-க்கு பாலை வச்சுட்டு "ஆமா..நான் எப்பயிருந்து டீ குடிக்க ஆரம்பிச்சேன்னு" யோசிச்சு பாத்தா..ஞாபகம் ஒன்னும் வரல. ஆனா நான் நாலாவது படிக்கும் போது என் தங்கச்சியோட சேர்ந்து டெலிபோன் பூத் வச்சிருந்த என்னோட தாய்மாமாவுக்கு சாய்ங்காலமா  தூக்கு போனியில டீ  எடுத்துக்கிட்டு போவேன். அது ஞாபகம் வந்திச்சு.

எங்க பாட்டி வீட்ல இருந்து கொஞ்ச தூரமா தான் எங்க மாமா டெலிபோன் பூத் இருந்துச்சு..ரெண்டு மூனு குறுக்கு சந்துல புகுந்து போனா ஈஸியா வந்துரலாம். அப்பல்லாம் ஒரு ரூபா காயின் போன் எல்லாம் இல்லை. கண்ணை எரிக்கிற மஞ்ச கலர்ல பூத் இருக்கும் பெரும்பாலும் உடல் ஊனமுற்றவர்களால நடத்தப்படும். எங்க மாமா கூட போலியோ Attack ஆனவருதான்.

சுடச் சுட தூக்கு போனியில எங்க பாட்டி டீ ஊத்தி குடுப்பாங்க..நாங்க ரெண்டு பேரும் பராக்கு பாத்துகிட்டே, எந்த சந்து வழியா போகலாமுன்னு Argue பண்ணிக்கிட்டு போயி சேர்ரதுக்குள்ளே அது ஆறி போயிருக்கும். சில நேரம் நாங்க ஆட்டுற ஆட்டுல டீ சைடுல எல்லாம் வழிஞ்சிருக்கும். தூக்கு போனி மூடி எல்லாம் கழண்டு விழுந்திருக்கு!!!

ஆனா எங்க மாமா எங்கள கோவிச்சிகிட்டதெல்லாம் கெடையாது. அவரு டீ குடிச்சி முடிகிறவரைக்கும் ஏதாவது ராங் நம்பர் டயல் பண்ணி பேசி டைம் பாஸ் பண்ணுவோம் 😆😆ஒரு தடவை நம்ம காவல் துறை எப்பிடி கடமை தவறாம இருக்காங்கன்னு Check பண்றதுக்கு 100 டயல் பண்ணினோம். ஒருத்தர் எடுத்து D2-வோ, D3 போலீஸ் ஸ்டேஷன்னு சொன்னதும் அலறி அடிச்சிட்டு போனை வச்சுட்டோம். அதுக்கப்புறம் போலீசை பாத்தாலே கொஞ்ச நாள் பம்மி கிட்டு இருந்தோம்.. ம்ம்ம் அதெல்லாம் ஒரு காலம். இப்ப நெனச்சாலும் அதெல்லாம் திரும்ப கெடைக்காது..அந்த Yellow Telephone Booth, தூக்கு போனியில டீ, கவலையற்ற எங்கள் இளமைக்காலம் ..எங்க மாமாவும் தான் 😔 

இப்பிடியே Flashback-ல மூழ்கி இருந்தேனா.. ஏதோ தீஞ்ச வாசனை வந்து மூக்கை தொளைக்குதேன்னு பாத்தா டீ பொங்கி வழிஞ்சிட்டு இருக்கு 😟




Thursday, January 4, 2024

வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே...

அன்றைய நாள் வழக்கம்போலத் தான் ஆரம்பித்தது எனினும் முடிவு என்னவோ நேர்மாறாகத் தான் இருந்தது!!

சம்பவம் - 1

கல்லூரி துவங்கி முதல் சில மணி நேரத்திற்குள்ளேயே அங்கும் இங்கும் ஒரே சலசலப்பு. "நேத்து போர்ஷனை எடுத்து படிங்க" என்று எங்களுக்கு கட்டளை இட்டு விட்டு Staff Room-ல் பேராசிரியர்கள் ஏதோ தங்களுக்குள் விவாதித்த வண்ணம் இருந்தனர். சமூக வலைத்தளங்களோ, கைபேசிகளோ இல்லாத கற்காலம் அது ஆதலால் செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் இருந்தவர்களுக்கே ஓர் அளவு நாட்டு நடப்பு தெரிய வாய்ப்புண்டு.

நாங்களும் எங்களுக்கு கிடைத்த நேரத்தை பயனுள்ளதாக சீரியல் கதை, சினிமாக் கதை பேசியும் நோட்டு புத்தகத்தின் பின் பக்கத்தில் கோலம் வரைந்தும் செலவிட்டுக் கொண்டிருந்தோம்.

மதிய உணவு இடைவெளிக்கு சற்று முன்பே "அன்றைய முதல்வராக இருந்தவருக்கு எதிராகத் தொடரப்பட்ட ஊழல் வழக்கில் அவருக்கு பாதகமாக தீர்ப்பு வந்துவிட்டது" என்றும் "அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம்" என்ற அறிவிப்பு வந்து விட்டது. அவருடைய ஆதரவாளர்கள் கலவரத்தில் இறங்கி சட்ட ஒழுங்கை குலைக்கும் முன் வீடு சென்று சேருமாறு நாங்கள் அறிவுறுத்தப்பட்டோம்.

நானும் புத்தக மூட்டையை சுமந்து கொண்டு வழக்கமாக செல்லும் பேருந்து நிறுத்தத்திற்கு விரைந்தேன். நிறுத்தத்தை அடைய சில காலடிகளே எஞ்சிருக்கும் நிலையில்  அங்கு காத்துக் கொண்டிருந்த கூட்டம் தீடீரென்று கத்திக் கொண்டு நாலா பக்கமும்  சிதறி ஓடியது. எனக்கு நடப்பது என்னெவென்று புரிவதற்குள் யாரோ "கல்லெடுத்து வீசுறாங்க" என்று கூற யோசிக்காமல் வந்த வழியே திரும்பி கல்லூரியை நோக்கி ஓட்டம் பிடித்தேன்.

மக்கள் அங்கும் இங்கும் பதறி ஓட சாலையில் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. என் இதயம் வெளியே வந்து விழுந்து விடத் துடிப்பது போல் காதில் படபடத்தது. முதுகில் வேர்வை வழிய நா வறண்டு வாயோடு ஒட்டிக் கொண்டது. 

நான் திருப்பியே பார்க்காமல் சில கைலி கட்டிய ஆசாமிகளின் நடுவே புகுந்து  ஓட்ட நடையில் விரைந்தேன். கடைகளை எல்லாம் இழுத்து மூடிக் கொண்டிருந்தனர். அடுத்த 15-20 நிமிடத்தில் இரண்டு மூன்று பஸ் நிறுத்தங்களைத் தாண்டி வந்து விட்டிருந்தேன். இதற்கு மேல் நடக்க திரணியில்லாமல் பஸ் வரும் என்ற நம்பிக்கையில் காத்திருந்தேன்.

அப்பகுதி சற்று அமைதியாகவே காணப்பட்டது. கலவரம் எந்நேரமும் வெடிக்கும் என்று பேசிக்கொண்டிருந்தனர். 

அடுத்த ஒரு மணிநேரத்திற்கு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இரண்டு பேருந்து மாற்றி வீடு வந்து சேர்வதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது. இது என் வாழ்வில் நன் முதல்முதலாக களத்தில் நின்று எதிரே பார்த்த கலவரம்!!

சம்பவம் - 2

அன்று மதியம் ஒரு  மூன்று மணி இருக்கும். படர்ந்திருந்த அமைதியை  திடீரென்று கிழித்துக் கொண்டு  அலறல் ஓசை ஒன்று  சாலையிலிருந்து கேட்க என்னெவென்று எட்டிப் பார்க்கலாமா என்று கதவை நோக்கி செல்வதற்கு முன்னே பக்கத்து போர்ஷனில் இருந்து வெளியே வந்த சித்தப்பா "வெளிய யாரோ ரெண்டு ரவுடிப் பசங்க சண்ட போட்டுட்டு இருகாங்க..கதவ சாத்திட்டு இருங்க" என்று அறிவுறுத்தி விட்டு சென்றார்.

அவர் சென்ற சில நிமிடங்களில் எங்கள் கூரை மீது தட தட வென்று கற்கள் உருளும் சத்தம். ஆர்வம் மேலிட நாங்கள் ஜன்னல் வழியாக நெருக்கி அடித்துக் கொண்டு எட்டிப் பார்த்தோம். ரத்தம் சொட்டும் நெற்றியுடன்  ஒருவன் கையில் அரிவாளுடன் இன்னோருவனை துரத்திக் கொண்டிருக்க..அடுத்தவனின் சட்டையிலும் ரத்தக்கறை தெரிந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் கைகளாலேயே தாக்கிக் கொண்டு தெருவில் புரண்டனர். DTS effect இல்லாமல் ஒலித்த அந்த சத்தமே எங்களுக்கு பீதியைக் கொடுத்தது. கதவ தட்டாம இருந்தா சரி என்று கடவுளை வேண்டிக் கொண்டோம்.

என் வாழ்வில் நடந்த இவ்விரு வன்முறை சம்பவங்களையும் நான் எப்போது நினைத்தாலும் ஒரு வித பயம் என்னைத்  தொற்றிக் கொள்ளும்.

வன்முறையை திரையில் காணுகிறோம். நம்மில் சிலர் அதை ரசிக்கிறோம் சிலர் முகத்தை சுளித்துக் கொண்டே கடக்கிறோம் ஆனால் பெரும்பாலான நேரங்களில் அவை நம்மை நேரடியாக பாதிப்பதில்லை எனினும்  நடைமுறை வாழ்வில் நம்மால் சிறிய வன்முறையைக் கூட மன அதிர்வின்றி கடந்து செல்ல முடியாது!!!

வன்முறை - திரையில் காணும் போது ஒருவிதமாகவும், உண்மை சம்பவங்களை காதால் கேட்கும் போது ஒரு விதமாகவும், நம் கண் முன்னே நடக்கும் போது, நம் சொந்தங்கள் உறவுகளை பாதிக்கும் போது ஏன் நமக்கே ஏற்படும்  போது என்று வேறு வேறு பாதிப்புகளை நம் மனதில் உருவாக்கும்.



 

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இவுலகின்  ஏதோ ஓர் மூலையில் ஏதோ ஓர் யுத்தம் நடந்த வண்ணமே உள்ளது. அவை இரு தேசங்களுக்கிடையே ஆனதாகவோ, உள்நாட்டு போராகவோ, மாவட்டத்திற்கு இடையினிலோ, மதம் சாதி சார்ந்ததாகவோ இருக்கலாம்.

உலகத்தையே தன் உள்ளங்கையில் முடக்கிவிட்ட இந்த இன்டர்நெட் யுகம் நமக்கு அனைத்தையும் நேரடியாக திரையிட்டு காட்டுகிறது நாமும்  "ஐயோ அவங்களை எல்லாம் பார்க்க பாவமா இருக்கு" என்றும் "இவன் பண்ணது தப்பு..அவன் பண்ணது தப்பு" என்று கமெண்ட்  அடித்து விட்டு கனத்த இதயத்தை லேசாக்கிக் கொள்ள சேனலை மாற்றி விடுகிறோம். நம்மால் செய்ய இயல்வதும் அவை மட்டுமே!!!

யுத்தங்களை தவிர்க்க, ஆயுதங்களை கட்டுப்படுத்த, உள் நாட்டு வெளி நாட்டு  பிரச்சனைகளை சுமூகமாக்க என்று எண்ணற்ற சர்வதேச அமைப்புகள் இருந்தும் என்ன பயன்?!

இனி வரும் காலங்களிலாவது போர்க்களம் அற்ற வையம் அமைய வேண்டும். வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்!!!

புத்தாண்டு நல் வாழ்துக்கள் 🎕🎕🎕

பின் குறிப்பு - நம்மை பாதிக்காத எதுவும் நமக்கு செய்தியே!!!


Friday, October 13, 2023

பாசமுள்ள "Panda"

2021 கோடை விடுமுறையில் கொரோனா பயம் சற்று குறையத் துவங்கி இருந்தது. எங்கள் ஊரில் இருந்து 600 மைல் தொலைவில் வசித்த நண்பர் ஒருவர் எங்கள் வீட்டிற்கு வருவதாக முடிவானது. எனது கணவரின் பள்ளித் தோழராக இருந்தவர், பாசத்துடன் பழகும் குணத்தால் எங்கள் சகோதரராக மாறியவர் என்பதாலும் பல மாதங்களாக பெரும் தொற்று காரணமாக எங்கள் வீட்டிற்கு யாரும் வரவில்லை என்பதாலும்  அவர்களின் குடும்பத்தை வரவேற்க நாங்கள் ஆர்வத்துடன் தயாராகிக் கொண்டிருந்தோம்.

அவர்களின் வருகை மனதிற்கு  மகிழ்வைக் கொடுத்தாலும் ஏதோ ஒரு நெருடல் அந்த உவகையை அனுபவிக்க விடாமல் தடுத்தது.

என்ன ஒரே சஸ்பென்ஸ்-ஆ இருக்கேன்னு நினைக்கிறீங்களா?

அது ஒண்ணுமில்லங்க..இந்த கொரோனா கால கட்டத்தில் அத்தியாவசியப் பொருட்களின் "Demand" அதிகமானது போல வெளிநாடுகளில்  வேறொன்றின்  மவுசும் அதிகரித்து இருந்தது  அது என்னவென்றால்  "வளர்ப்பு நாய்கள்". தங்களுக்கு நாய் (அதுவும் ஆண் நாய்) வேண்டுமென்று   Breeder-களிடம் இரண்டு மடங்கு  பணத்தைக் முன் பணமாகக்  கொடுத்து விட்டு அவரவர் காத்திருப்பு பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டு காத்திருந்தனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். 

எங்கள் குடும்ப நண்பரும் அவர் பங்கிற்கு ஒரு நாயை வாங்கி இருந்தார். எட்டு மாதமான அந்த குட்டி நாயும் எங்கள் வீட்டிற்கு வர இருந்தது.

இங்க ஒரு விஷயத்தை உங்களுக்கு சொல்லியே ஆக வேண்டும். எங்கள் குடும்பத்திற்கே நாய், பூனை போன்ற வளர்ப்பு பிராணிகள் மீது ஒரு பயம். சிறு வயதிலிருந்தே "புஸு புஸு பொமேரியன் நாயிலிருந்து வாயில் எச்சில் வடிய, நுரை பொங்க குலைத்துத் தள்ளும் டாபர் மேன், நமது கால்களை விடாமல் தனது நாக்கால் துடைத்து நனைக்கும்  Hutch Dog " வரை எதைப் பார்த்தாலும் காத தூரம் பாய்ந்து ஓடுவேன்.

பள்ளியில் படிக்கும் பொழுது நாங்கள் புறநகர் பகுதியில் வசித்து வந்தோம். எங்கள் வீட்டிற்கு அருகே ஒரு பிள்ளையார் கோவில் இருந்தது. மூன்று மாதத்திற்கு ஒருமுறை யாராவது நாய்க்குட்டியை அங்கு விட்டு விட்டு சென்று விட அது எங்கள் வீட்டில் தஞ்சம் புகுந்து விடும் அதை விரட்டுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.

என் சரித்திரமோ இப்படி இருக்க.. ஒரு வளர்ப்பு நாய் திடீரென்று தனது Leash-ல் இருந்து விடு பட்டு ஓடி வந்து என் மகனை கீழே தள்ளி தலையை நனைத்து விட அவனும் நாய் என்றாலே வெலவெலத்து போகிறான். எனது கணவரும் மகளும் ஓரளவு சமாளிப்பார்கள் என்றாலும் வீட்டிற்கு வரப் போகும் விருந்தாளியை நினைத்து அனைவரும் சற்று கலங்கித்தான் போயிருந்தோம்.

ஒரு வழியாக அந்த நாளும் வந்தது. நாங்கள் அனைவரும் வெளியில் சொல்லமுடியாத பதட்டமான மன நிலையுடன் காத்துக் கொண்டிருந்தோம். நாலு கால் பாய்ச்சலில் மூன்றாவது மாடிக்கு வந்த நாய் நல்ல உயரமாக இருந்தது. வந்ததும் வராததுமாக அனைவரையும் நன்றாக நுகர்ந்து தள்ளியது. நான் ரோபோ போல் அசையாமல் நிற்க எனது தோளில் இரு கால்களையும் வைத்து உச்சி முதல் பாதம் வரை Full Body  Scan செய்தது. பயந்து ஓடிய எனது மகனை துரத்தி விளையாடியது. புஸு புஸு வென்ற வெள்ளை ரோமங்களை உடலில் போர்த்தி Teddy Bear போல் தோற்றமளித்த  அதற்கு "Panda" என்று பொருத்தமாக பெயரிட்டிருந்தார்கள்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் அதனுடைய இருப்பு எங்களுக்கு மெதுவாக பழக ஆரம்பித்தது. அடுத்த அரை நாளில் அதனுடைய நடவடிக்கைகள் ஒரு வித பிணைப்பையும், ஒரு குழந்தையைப் போல அவர்கள் அவனை  நடத்திய விதம் ஒரு அன்யோன்யத்தை அவனிடம் ஏற்படுத்தியது. அவனும் செல்லக்   குழந்தையைப்  போன்றே நடந்து கொண்டான். என் மகன் என் மடியில் அமர்ந்தது கண்டு அவனும் என் மடியில் அமர அடம் பிடித்தான். தன்னைக் கொஞ்சுமாறு கெஞ்சினான். நாங்கள் Pet செய்ய  அத்தனை விரும்பவில்லை என்பதை புரிந்து கொண்டவன்  அதன் பிறகு  எங்களை தொல்லை செய்யவே இல்லை. எத்தனை புத்திசாலி தனம் பாருங்கள்!!!

இதற்கு முன் பலரும் வளர்ப்பு நாயை குழந்தைக்கு பதிலாக பாசம் காட்டி வளர்ப்பதாக சொல்லக் கேட்டிருக்கிறேன் அப்போதெல்லாம் அவர்கள் மேல் எனக்கு ஒரு வித எரிச்சல் தான் வரும். "குழந்தையும் பிராணியும் ஒன்றா?" என்று கோபம் வரும் ஆனால் இந்த  இரண்டு மூன்று நாட்கள் அவனுடன் பழகியதில் "மன அழுத்தம் குறைய நாயை வளர்ப்பதில் தப்பில்லை" என்று தோன்றியதோடு "தனிமையைப் போக்க தக்க துணை நாய்களைத் தவிர வேறில்லை" என்றும்  பட்டது.

ஒரு மனிதனைப் போலவே அனைத்து உணர்ச்சிகளையும் "பாண்டா" காட்டியதும்  நமது உணர்வுகளை உள்வாங்கி அதைப்  பிரதிபலித்ததும் வியப்பாகவே இருந்தது. அதனை வெளியே விட்டு அறையின் கதவை உள் பக்கமாக மூடிக் கொண்டால் சத்தமில்லாமல் வெளியில் அமர்ந்து  அழுதது. நாங்கள் சாப்பிட அமர்ந்தால் அதற்கும் வேண்டும் என்று செல்லமாக அடம் செய்தது. பந்தைப் பார்த்தால் துள்ளிக் குதித்தது. அனைவரும் தொலைக்காட்சியில் படம் பார்த்தால் ஒரு ஓரமாக படுத்து உறங்கியது. எங்களை அறியாமலேயே நாங்களும் அவனை விரும்பத் துவங்கினோம்.

"Panda" சென்ற பின் இரண்டு நாட்களுக்கு அவன் நினைப்பாகவே இருந்தது. யாரோ நான்கு காலில் நடந்து வருவது போன்ற பிரம்மை ஏற்பட்டது. "எங்க..போற போக்கை பார்த்தா நீயும் நாய் வளர்க்க ஆரம்பிச்சிருவ போல?!" என்று என் கணவர் கேலி செய்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். ஆனால் என்னைப் பொறுத்தவரை இவ்வளவு பாசத்தை கொட்டிக்  குடும்பத்தில் ஒருவராக வளர்க்கப்படும் செல்ல நாய்கள் அதிக பட்சம் பத்து வருடங்கள் தான் நம்முடன் இருக்கும் என்றால் அதன் பிரிவை என்னால் சமாளிக்க முடியும் என்று தோன்றவில்லை!!!

பிராணிகளின் வதைகளை கண்டிக்கும் சமூக  ஆர்வலர்கள் கூட வளர்ப்பு நாய்களின் தேவைகளுக்காகவும், குறிப்பிட்ட  இன நாய்கள் அதிகமாக விரும்பப்படுவதாலும்  நாய்கள் கட்டாய இனப்பெருக்கத்திற்கு உந்தப் படுவதை அத்தனை வலுவாக கண்டிப்பதாக தெரியவில்லை. எது எப்படியோ கொரோனாவின் தயவால் செல்லப் பிராணிகளை பெருக்கும் (Breeding) தொழிலில் கல்லா கட்டுகிறார்கள் என்பது மட்டும் உண்மை.

  

 

Wednesday, March 8, 2023

இரட்டை குதிரை சவாரி

என்னை பெண் பார்க்க வரும் போது "நீங்க வேலைக்கு போகனும்னு நான் சொல்ல மாட்டேன் ஆனா அது தான் உங்க விருப்பம்னா Work Permit வாங்கிட்டு போகலாம்" என்று அவர்  கூறிய போது "அப்பிடியெல்லாம் ஒன்னும் இல்லை" என்று வெளியே கூறினாலும் "நாம என்ன உடனே வேலை உலகமெல்லாம் கிடைக்கும் வேலையான கம்ப்யூட்டரா படிச்சிருக்கோம் வெளிநாட்டில் வேலை கிடைக்க" என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.

திருமணமாகி இந்த பதினைந்து வருடங்கள் குழந்தைகளை பராமரிப்பதில் பொழுது கழிந்துவிட்டது இப்பொது அவர்களுக்கு என்னுடைய உதவி அவ்வளவாக தேவைப் படுவதில்லை. அதனால் எனக்கு பொழுது போகவில்லை என்றெல்லாம் இல்லை ஆனால் நண்பர்கள் "என்ன வேலைக்கு Try பண்றீங்களா? ஒர்க் பெர்மிட் வந்துருச்சா? கோர்ஸ் படிக்கிறீங்களா?", "பசங்க High School-க்கு போயிட்டா நம்மளை எதிர் பார்க்க மாட்டாங்க..அப்புறம் உங்களுக்கு தான் Bore அடிக்கும்"  என்றெல்லாம் கேட்க/ சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.  

"வேலைக்குப்போவதற்கும் தயக்கம்..உருப்பிடியாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வேறு" நான் என்று இல்லை நிகழ்காலத்தில் பலரின் நிலைமையும் இது தான். 

நமது பாட்டி காலத்தில் அவர்கள் எந்த வித மறு யோசனையும் இன்றி குடும்பப் பணியை செவ்வனே செய்தார்கள். நமது அம்மா காலத்தில் சிலர் படித்து பட்டம் வாங்கியும் அரசுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றும் அரை மனதோடு வேலைக்குச் சென்றார்கள். அரக்க பறக்க ஓடி வீட்டு வேலையும் செய்தார்கள். பலர் தையல் தொழிலில் வீட்டிலிருந்தபடியே சம்பாதித்தார்கள்.

இன்றைய யுவதிகளின் நிலையோ வேறு. இவர்களில் கிட்டத்தட்ட பெரும்பாலோனோர் பட்டதாரிகள் அதுவும் பொறியியல் துறையில். பலர் படித்து முடித்து வேலைக்குச் செல்கிறார்கள். திருமணம் ஆனாலும் சிலர் வேலையைத் தொடர்கிறார்கள். சிலர் விட்டு விடுகிறார்கள். வேலைக்குச் செல்பவர்கள் "குழந்தைகளையும் குடும்பத்தையும் சரியாக கவனிக்க முடியவில்லையே" என கவலை கொள்கிறார்கள். குடும்பத்திற்காக வேலையை துறந்தவர்கள் "படிச்ச படிப்பு வீணாகுதே..நம்ம அம்மா, பாட்டி மாதிரி படிக்காம இருந்திருந்தா நிம்மதியா வீட்டு வேலையை பாத்துட்டு இருந்திருக்கலாம்" என்று புலம்புகிறார்கள்.  

இந்த மன உளைச்சலில் இருந்து வெளி வரவே இன்று பலரும் வீட்டில் இருந்தபடியே ஏதாவது வேலை செய்கிறார்கள் உதாரணமாக  "online" வியாபாரம். பெரிதாக லாபம் கிடைக்க சில காலம் பிடிக்கும் என்றாலும் நஷ்டம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை அதோடு  "நாமளும் வேலை பார்க்கிறோம்" என்ற திருப்தியும் "கையில் கிடைக்கும் நேரத்தை உபயோகமான முறையில் செலவிடுகிறோம்" என்ற எண்ணமும் ஒரு விதமான மன நிம்மதியை அவர்களுக்குக் கொடுக்கிறது என்பதை மறுக்க இயலாது. 

சிலர் டியூஷன் எடுக்கிறார்கள். Knitting, Crocheting செய்கிறார்கள். பலர் YouTube சேனல் ஆரம்பிக்கிறார்கள். Designer Blouse தைத்து Boutique-ல் கொடுத்து  விற்கிறார்கள்.சிறிய அளவில் கேட்டரிங் செய்து கொடுக்கிறார்கள். Beautician வேலை கற்றுக் கொண்டு வீட்டிலிருந்தபடியே பலருக்கும் Eye Brow Threading மட்டுமே செய்து சம்பாதிக்கிறார்கள் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்  இதோ நான் கூட இப்பொது எழுதிக் கொண்டிருப்பதற்கு மறைமுகக் காரணமும் அது தான்!!!

பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்து லட்சங்களில் சம்பாதிப்பவர்களுக்கு மேல் கூறிய  வேலைகளைக் கண்டால் " அதிக வருமானம் இல்லாத இத்தொழில்களில் நேரத்தை ஏன் விரயம் செய்ய வேண்டும்" என்று தான் தோன்றும் ஆனால் இவை தரும் மன நிம்மதியை அவர்கள் உணர வாய்ப்பில்லை.  

இந்தக் கட்டுரையை படிக்கும் உங்களுக்கு "அக்கரைக்கு இக்கரை பச்சை" "ஆத்துல ஒரு கால்..சேத்துல ஒரு கால்" "கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை" போன்ற பல பொன் மொழிகள் நினைவிற்கு வரலாம் ஆனால்  அதை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு கடிவாளம் இல்லாத இரட்டைக் குதிரையில் பயணம் செய்யும் இந்த  நவ யுவதிகள் தங்கள் இலக்கை தங்கு  தடையின்றி சென்றடைய வாழ்த்துவோமே!!! 

பின் குறிப்பு : பொருளாதார தேவைகளை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள பெண்கள் எந்த காலத்திலும் வேலைக்குச் சென்று கொண்டு தான் இருக்கிறார்கள். படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற வித்தியாசம் எல்லாம் அங்கே இல்லை. 

Tuesday, February 14, 2023

காதலில் விழுந்தேன்...

காலையில் இருந்து சாவகாசமாக இருந்த நிரஞ்சனா கடைசி பத்து நிமிடத்தில்  அரக்க பறக்க ஓட வேண்டி இருக்கும் என்று நினைக்கவில்லை. எதிர்பாரா விதமாக ஏற்பட்ட சாலை நெரிசலும் அவர்களின் பயணத்தை தாமதப் படுத்த காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த மகளின் முகத்தில் பதட்டமும் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த கணவர் கதிரின்  கண்களில் கோபமும் ததும்பி நின்றதை நிரஞ்சனா கவனிக்காமலில்லை.

ஒரு வழியாக மகளை வாத்திய வகுப்பிற்கு அனுப்பி விட்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. 

"ஒரு நாள் கரெக்ட் Time-க்கு கிளம்ப முடியாதா?" என்று ஆரம்பித்த கதிரின்  கேள்வி அடுத்த பதினைந்து நிமிட வாக்கு வாதத்திற்கு வித்திட கடைசியாக  "நீ வீட்ல சும்மா தான இருக்கே" என்ற பிரம்மாஸ்திரத்தை ஏவி விட்டு விட்டு அமைதியான கணவனை  அனல் பறக்கும் பார்வையால் எரித்த நிரஞ்சனாவின் கண்கள் குளமாயின.

"இனிமே இந்த மனுஷனை ஒரு உதவியும் கேக்கக் கூடாது..எல்லா வேலையும் நாமளாவே பாத்துக்கனும்" என்று நினைத்த  நிரஞ்சனாவின் மனது "ஒரு நாள் ஒரு வேலையும் பார்க்காம உக்காந்தா தான் தெரியும்" என்றும் கொந்தளித்தது.

வழக்கம் போல் அடுத்த ஒரு மணி நேரத்தில் கணவனும் மனைவியும் ராசியாகி நடந்ததை மறந்தனர் ஆனால் கோபத்தின் உச்சத்தில் நிரஞ்சனாவின் மனதில் கண நேரத்தில் தோன்றி மறைந்த நேரெதிரான எண்ணங்களில் ஒன்று விரைவில்  நிறைவேறப் போவதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு நண்பர்கள் வட்டம் Hiking Trip ஒன்றை திட்டமிட்டனர். கடந்த ஒன்றரை வருடமாக வீட்டிலேயே இருந்ததால் இயற்கை காற்று உடலுக்கும் மனதிற்கும் இதமாக இருக்கும் என்ற எண்ணம் மேலோங்க அரை மனதுடன் செல்ல சம்மதித்தாள் நிரஞ்சனா. குடும்பத்துடன் அனைவரும் சேர்ந்து கலகலப்பாக மலை ஏறினர். பல மாதங்களுக்குப் பிறகு சந்தித்துக் கொண்டதால் நண்பர்களின் கலகல பேச்சும் சிரிப்பும்  வானை முட்டியது.

அந்தி வேளையில் சூரியனின் அஸ்தமனத்தை ரசித்த நிரஞ்சனா மலையை விட்டு இறங்கத் தொடங்கினாள். உடன் வந்த மழலைப் பட்டாளங்களை மேய்த்துக் கொண்டு முன் இறங்கிய கதிரை திடீரென்று  நிரஞ்சனாவைச்  சுற்றி சலசலத்த குரல்கள் பின்னுக்கு இழுத்தது.

"என்னாச்சு என்னாச்சு" என்று பதட்டத்தோடு அங்கு வந்த கணவனிடம் "காலு பிசகிருச்சு..வலி தாங்க முடியல ..தலை வேற  சுத்தற மாதிரி இருக்கு" என்று ஓரமாக இருந்த பாறையில் அமர்ந்து கொண்டாள் நிரஞ்சனா. "சுளுக்குத்தான் கொஞ்ச நேரம் உக்காந்துட்டு வாங்க..தண்ணி குடிங்க..பழம் சாப்பிடுங்க" என்று உபசரித்த நண்பர்கள் குழாமை "நீங்க போயிகிட்டே இருங்க" என்று கீழே அனுப்பிவிட்டு கைத்தாங்கலாக அழைத்துச் சென்ற கதிரின் தோள்களை ஸ்திரமாகப் பிடித்துக் கொண்டாள் நிரஞ்சனா.

"வேணுமின்னா ஆம்புலன்ஸை கூப்பிடலாம்..கஷ்டப் படாதே" என்று கூறிய கணவனைப் பார்த்து "இல்ல..குழந்தைங்க கீழ போயி வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க..போயிரலாம்" என்று வலியைப் பொறுத்துக் கொண்டு கீழே இறங்கி விட்டாள் நிரஞ்சனா.

அடுத்த ஒரு மணி நேரத்தில்  அவசரப் பிரிவு மருத்துவர் நிரஞ்சனாவின் X-Ray -யை  ஆராய்ந்து எலும்பு முறிவை உறுதிப்படுத்த கலங்கிப் போயினர் கணவனும் மனைவியும். சிகிச்சைக்கு வேறு மருத்துவரை அணுக வேண்டும் என்றும் அதுவரை காலை கீழே வைக்க வேண்டாம் என்று கட்டுப்  போட்டு கைத்தடியையும் கொடுத்தனுப்பினர்.

சோகமும் களைப்பும் கலந்த முகங்களோடு நண்பர்களும் விடை பெற்றுக் கொள்ள வலி நிவாரணிகளை சாப்பிட்டு விட்டு படுத்த நிரஞ்சனாவிற்கு அன்றைய இரவு மிக மிக நீளமான இரவாக அமைந்தது. கடும் வலியோடு புரண்டு படுக்க முடியாமல் எழுந்து.. எழுந்து அமர்ந்த அவளை கதிர் கை தாங்கலாக கழிப்பறைக்கு அழைத்துச் செல்வது, சிறிது நேரம் நடக்க வைப்பது என்று சிறிதும் கண் அயராமல் கவனித்துக் கொண்டான்.

மறு நாள் தொலை பேசி மூலம் சிறப்பு மருத்துவரிடம் Appointment வாங்கிய அவர்களை அறுவை சிகிச்சை கூட செய்ய நேரிடலாம் என்று பயமுறுத்தினர். அன்று இரவும்  வலி நிவாரணியால் பலனேதும் இருக்கவில்லை. அரைமணி நேரத்திற்கொருதரம் எழுந்தமர்ந்த நிரஞ்சனாவை உடைந்த குரலில் சமாதானப்படுத்திய கதிர் அவளின் கண்களில் வழிந்தோடிய கண்ணீரை கனிவுடன் துடைத்தான்.

அடுத்து வந்த நாட்களில் அவளின் சிகிச்சை தொடங்கியது. அறுவை சிகிச்சை தேவை இல்லை, மாவு கட்டு போடவில்லை. Stabilizers என்று சொல்லக் கூடிய தடித்த ஷுக்களை நடக்கும் போது அணிந்து கொண்டு ஊன்று கோளின் (Crutches) உதவியோடு அடுத்த ஆறு வாரங்கள் இருக்குமாறு அறிவுறுத்தப் பட்டாள்.

அவள் செய்ய வேண்டியதெல்லாம் எதுவும் செய்யாமல் அமர்ந்திருக்க வேண்டியது. நண்பர்கள் சில நாட்களுக்கு உணவை சமைத்து அனுப்பினாலும் கதிரின் வேலை ஆயிரம் மடங்கு கூடியது. கொரோனவால் சொந்தங்கள் யாரும் வர இயலாத நிலை.

நிரஞ்சனாவின் வலி கட்டுக்குள் வந்தது. வீட்டிலிருந்தபடியே வேலை பார்த்த கதிருக்கு அவளை பார்த்துக் கொள்வதே முழு நேரப் பணியாக இருந்தது. சாப்பாட்டை கையில் கொடுப்பது, முடித்தவுடன் கை கழுவ தண்ணீர் கொடுப்பது, படுக்கையில் படுக்க வைப்பது, குளிப்பாட்ட உதவுவது என்று களைத்துப் போனாலும் மருத்துவமனை வாசம் இல்லாமல் போனதால் கவலை இன்றியே தென்பட்டான். குழந்தை பேற்றின் போது கதிர்  அவளை கவனித்துக் கொண்டது  நினைவுகளில் வந்து செல்ல கணவனை வாஞ்சையுடன் அணைத்துக் கொண்டாள் நிரஞ்சனா.

நிரஞ்சனாவை பார்க்க வரும் நண்பர்கள் அவளுக்கு கிடைக்கும் ராஜ மரியாதையை கேலி செய்தனர் ஆனால் அவர்களிடம்  "வீட்டு வேலை பார்த்து முடியல..நிரஞ்சனா எவ்வளவு வேலை பாத்திருக்கா?!" என்று அங்கலாய்த்த கணவனை காதல் பொங்க  ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தாள் நிரஞ்சனா. 

கடந்த  2021-ம் ஆண்டில் கொரானாவை கட்டுப் படுத்த தடுப்பு ஊசி கண்டறிய பட்டதோடு வைரஸிற்கு  எதிராக நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வளர 2nd Dose, 3rd Dose  என்று பூஸ்டர்கள் வந்த வண்ணம் இருக்கிறது. தடுப்பு மருந்து வேலை செய்ததோ இல்லையோ எதிர் பாராமல் ஏற்பட்ட இந்த  விபத்து  நிரஞ்சனாவிற்கும் கதிருக்கும் இடையே இருந்த காதலை பன்  மடங்கு Boost செய்து விட்டது என்பதை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டுமா என்ன?!




Friday, December 2, 2022

வரும் ஆனா வராது ..இருக்கும் ஆனா இருக்காது !!!

பல மாதங்களுக்குப் பின் அவர்கள் அன்று வெளியில் சென்று உணவருத்தினார்கள். கொரோனா கால கடத்தில் ரெஸ்டாரண்டில் அமர்ந்து உண்ணும் வாய்ப்பு இல்லாது இருந்ததால் இன்று ஒரு பிடி பிடிக்க வேண்டும் என்று "Buffet System" உள்ள இடத்தை தெரிவு செய்திருந்தார்கள்.

அவரவர் தங்களுக்கு விருப்பமான பதார்த்தங்களை தட்டு நிறைய நிரப்பிக் கொண்டு தங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த மேஜைக்கு வந்து ரசித்து ருசித்து சாப்பிட்டார்கள். "இதற்கு மேல் முடியாது டா சாமி" என்ற நிலை வந்த பின் கடைசியாக ஒரு டீ குடித்து விருந்தை நிறைவு செய்து விட்டு கிளம்பினார்கள்.

வீட்டிற்கு வந்து "Freshen Up" செய்து கொள்வதற்காக குளியலறைக்குச்  சென்ற கயல் அங்கு குப்பைத்தொட்டியில் போடப்பட்டிருந்த எதையோ கையில் எடுத்தவாறு "எத்தனை தடவை சொன்னாலும் கேக்க மாட்டேங்குறா" என்று தனது மகளை கடிந்து கொண்டவாறு சத்தமாக அவளை அழைத்தாள்.

அவளின் அலறல் பேச்சைக் கேட்ட குடும்பத்தினர் "என்ன..என்ன? "  என்று பதறி  அடித்துக் கொண்டெல்லாம் வரவில்லை. மிக மெதுவாக வந்த மகளிடம் "இந்த Tube-ல இருக்குற பேஸ்டை வைத்து ஒரு வாரம் பல் தேய்க்கலாம். இத நீ தூக்கிப் போட்டுட்டே" என்று ஆரம்பித்து எவ்வாறு சிக்கனமாக இருப்பது முக்கியமாக பொருட்களை வீணடிப்பது எவ்வளவு தவறு என்று அரைத்த மாவையே திரும்ப  அரைத்தாள் கயல்.

கயல் போலத்தான் நம்மில் பலரும்..

தேய்ந்து தேய்த்து துரும்பாக இளைத்த பின்னரும் அந்த சோப்பை தூக்கிப் போட மாட்டோம். புது சோப்பில் ஒட்டி வைக்கலாமே! 

எண்ணை வரும் டப்பாவையோ ..பாலிதீன் கவரையோ தீர்ந்து விட்டது என்று குப்பையில் வீசுவதற்கு முன் அதை குறைந்த பட்சம் அரை மணி நேரமாவது எண்ணை டப்பாவிற்கு மேல் தலை கீழாக கவிழ்த்து வைக்க வேண்டும்.

பாத்திரம் துலக்கும் liquid detergent டப்பாவில் தண்ணி ஊற்றி நாளு நாள் பாத்திரம் கழுவி விடலாம்.

"என்ன விட்ருங்க Please " என்று கெஞ்சும் Tomato Ketchup தலையில் அடி அடி என்று அடித்து அந்த இரண்டு ஸ்பூன் சாஸை வெளியே எடுக்காவிட்டால் நமக்கு தூக்கம் வராது.

இதே போல் ஜாம், ஷாம்பூ டப்பா என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம். நம் கண்ணுக்கு தெரியாமல் அடைந்து கிடைக்கும் அனைத்தும் நமக்கு பொக்கிஷம் தான். 

இதுல என்ன தப்பு ? வேஸ்ட் செய்யக் கூடாது இல்ல? " என்று நீங்கள் கேட்பது புரிகிறது. 

பற்பசை விளம்பரங்களில் காண்பிக்கப்படுவது போல டூத் பிரஷ் நிறைய டூத் பேஸ்ட் வைத்துக் வீணடிக்கும் நம் குழந்தைகளை நாம் கண்டிப்பதில்லை. 

சுகாதாரம் என்ற பெயரில் (முக்கியமாக கொரோனாவிற்குப் பிறகு) மணிக்கொருதரம் சோப்பை உபயோகித்து கைகளை சுத்தம் செய்யும் குழந்தைகள் Sink-ல் கொட்டி வைக்கும் சோப்பை நாம்  கண்டு கொள்வதில்லை 

ஆனால் அதே பொருள் தீரும் சமயத்தில் நமக்கு எங்கிருந்து தான் வருகிறதோ "Selective Amnesia" போல  இந்த சிக்கனத்தின் மீதான அக்கறை?! டூத் பேஸ்ட்டை எப்பிடி அழுத்தி, சுருட்டி வெளியில் எடுப்பது என்று குழந்தைகளுக்கு  கிளாஸ் எடுத்தால் எப்படி?

மேற் சொன்ன அனைத்தும் "Middle Class Mind Set" என்று கூறி ஒதுக்கி விடலாம்  எனினும் நம்மில் பலர் அங்கிருந்து வந்தவர்கள் தானே!!! அந்நியன் விக்ரம் போல பெரும்பாலான சமயங்களில் "ரெமோவாக" குழந்தைகளை வளர்த்து விட்டு ஒரு சில விஷயங்களில் மட்டும் அம்பியாக மாறி அவர்களை குழப்பி நாமும் குழம்புகிறோம்.

மாதக்கடைசியிலும்  மனதைக்  கரைக்கும் வீடியோக்களை பார்த்து மட்டும் வருவதல்ல சிக்கனம் அது மனதில் இருக்க வேண்டும் அப்போது தான் யார் மேற்பார்வையும் இன்றி நம்மால் அதை செயல் படுத்த முடியும்.

ஆப்பிரிக்காவில் பசியால் வாடும் குழந்தைகளுக்காக கவலைப்படும் நீங்கள் ஆத்மார்த்தமாக சிக்கனத்தை கடைபிடியுங்கள் அது போதும்!!!

பின் குறிப்பு : கயல் குடும்பத்தினர் சாப்பிட்ட மேசையை சுத்தம் செய்த நபர் அவர்கள் தட்டில் மீதமிருந்த பதார்த்தங்களை வேறு வழியின்றி குப்பையில் கொட்டிக் கொண்டிருந்தார்!!!