Tuesday, August 26, 2025

Playdate WITH பிள்ளையார்!

தமிழகத்தில் முக்கியமாக மதுரை மாநகர தெருக்களில் இரண்டைக் கூட சாலையோர கோவிலில் சஞ்சாரம்  செய்யும் கணேசனின்  கண்காணிப்பின்றி உங்களால் முழுமையாகக் கடக்க முடியாது.

அரசமரம் இருக்கும் இடத்தில் எல்லாம் அவனை அமரச் செய்தார்கள் நம் முன்னோர்கள் ஆனால் நாமோ மரத்தை வெட்டிச் சாய்த்து, கணநாதனை மொட்டை வெயிலில் விட்டுவிட்டு அவனை குளிர்விக்க அருகம்புல்லை தலையில் வைத்துவிடுவதோடு மட்டுமல்லமல்  அப்பாதையை கடக்கும் போதெல்லாம் (அவசர அவசரமாக) தலையில் கொட்டிக் கொண்டு நாம் செய்த, செய்யும் பாவங்களுக்கெல்லாம் பிராயச்சித்தம் தேடுகிறோம்! 

1970-களின் தொடக்கத்தில் ஊருக்கு ஒதுக்குபுறமாக இருக்கும் தென்னந்தோப்பை தன் மகளுக்காக வாங்கினர் என் தந்தை வழி பாட்டியின் பெற்றோர்.

அரை டஜன் குழந்தைகளுடன் நெசவுத் தொழில் செய்து அவதிப்படும் மகளுக்கு அவ்விடத்தில் ஓர் ஒட்டு வீடு ஒன்றை விஸ்தாரமாகக் கட்டிக் கொடுத்தால் அனைவரும் தங்குவதற்கும் கைத்தறி அமைப்பதற்கும் வசதியாக இருக்கும் என்று நினைத்தார் பெரியவர்.

அவ்வாறே வீடும் கட்டப்பட்டது ஆனால் அத்தோப்பிற்கு நடுவே ஓர் சிறிய திட்டில் தன் தந்தையுடன் அமர்ந்திருந்தார் பிள்ளையார். அவரை அப்படியே விட்டுவிட்டு தென்னைமரங்கள் சூழ அமைந்திருக்கும் ஒற்றை வீட்டில் வாழ  ஆரம்பித்தனர் அக்குடும்பத்தினர்.

என்னுடைய பாட்டிக்கு கடவுள் பக்தியெல்லாம் கிடையாது. செய்யும் தொழிலே தெய்வம் என்ற கொள்கையை கடை பிடித்தவர் அவர்! தினமும் ஒரு குடம் நீரை கணபதி  மேல் ஊற்றி நீராட்டும் என் தாத்தாவிடம் " சேலை நெய்தால் தான் வயிற்றுக்கு கஞ்சி..நேரைத்தை வீணடிக்க வேண்டாம்" என்று கடிந்து கொள்வார் என்று என் பெற்றோர் கூற கேட்டிருக்கிறேன்.

அரசாங்கப் பணியில் இருந்த என் தந்தை அங்கே இங்கே என மாற்றலாகி கடைசியாக எனக்கு 4-5 வயது இருக்கும் போது எங்களின் சொந்த ஊரான மதுரைக்கே வந்து சேர்ந்தார் நாங்களும் அந்த பூர்வீக வீட்டிலேயே வாழத் தொடங்கினோம்.

80-களின் கால கட்டமான இவ்வேளையில் வீட்டைச் சுற்றி இருந்த  தென்னை மரங்களின் எண்ணிக்கை சற்று  குறைய ஆரம்பித்து 4 அறைகள் கொண்ட Line வீடு முளைத்திருந்தது. அங்கு சில குடும்பங்களை வாடகைக்கு அமர்த்தி இருந்தார் என் பாட்டி. அவர்களில் சிலர் பக்திமான்களாக இருக்கப்போய் பிள்ளையார் பிழைத்துக் கொண்டார்.

எங்கள் வீட்டிற்கு எதிர் புறம் காலனி உருவாகி மக்கள் கூட்டம் கணிசமாக உயர்ந்திருந்தாலும் எங்கள் வீடு அன்றும் ரோட்டிற்கு மேல் "ஒற்றை வீடு" என்ற அடையாளத்துடனே விளங்கியது.

திருமணமான புதிதில் எல்லாம் குதிரை வண்டியில் தான் தன் தாய் வீட்டிலிருந்து அங்கு வந்து போய்க் கொண்டிருந்ததாகவும் ஓரிரண்டு பேருந்துகள் மட்டுமே அந்த ரூட் (Route)-ல் இருந்ததாகவும் என் அம்மா நினைவு கூறுவார்.

ஆனால் இப்போது (90 காலகட்டம்) குறைந்தது 30 நிமிடத்திற்கு ஒரு முறையாவது அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. எங்கள் வீட்டு வாசல் தான் Bus Stop அதனால் பிள்ளையாருக்கு மவுசு சற்று கூடி விட்டிருந்தது. பேருந்து வரும் வரை காத்திருப்பவர்கள், பேருந்தில் இருந்து இறங்கியவர்கள் பய பக்தியுடன்(?!) கன்னத்தில் போட்டுக் கொண்டனர்.

தென்னை மற்றும் வேப்ப மர நிழலில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் கஜமுகனுக்கு ஊதுபத்தி சூடம் ஆரத்தி எல்லாம் கிடையாது. காலை 7 மணிக்கு பால்காரர் கால் டம்ளர் பாலை அபிசேகம் என்ற பேரில் தலையில் கவிழ்த்து விட்டு சென்று விடுவார். ரோட்டில் திரியும் பிராணிகளுக்கெல்லாம் Breakfast கிடைத்த மகிழ்ச்சி. 8 மணி வாக்கில் ஈ எறும்பு மொய்க்கும் பிள்ளையாரை  குளிப்பாட்டுவார் காம்பவுண்டு வீட்டில் இருக்கும் ஓர் நபர். 

ஓர் அகல் விளக்கும் இருக்கும். அவ்வழியே செல்லும் பூக்காரி சிறிது கதம்பத்தை தலையின் மேல் வைக்க என்று எடுப்பார் கைப்பிள்ளை போல் இருந்த அவருக்கு விநாயகர் சதுர்த்தி நாளில் மட்டுமே கொழுக்கட்டை பிரசாதம் படைத்து வழிபடப்படுவார். பின்னாளில் சிவன் ராத்திரி அன்று பொங்கல் வைக்கும் வைபவம் தொடங்கி தொடர்ந்தது.

வெயில் மண்டையை பிளக்கும் மதிய வேளையில் கல் பிள்ளையாரின் குளுமையை நாடி அதன் அருகில் நாய் குடும்பம் குழந்தை குட்டியுடன் தஞ்சமடையும்.  இது போதாதென்று தங்கள் வீட்டு நாய்க்கு பிறந்த குட்டியை எல்லாம் மஞ்சள் பையில் வைத்து பிள்ளையார் அருகில் வைத்து விட்டு சென்று விடுவார்கள்!

எங்களுக்கு 7-8 வயதிருக்கும். கோடை விடுமுறை நாட்களில் மிகவும் போரடித்தால் வாளி நிறைய Water தேங்காய் நார் என்று ஐந்து கரத்தானுக்கு "Spa Day" தான். "போதும் போதும் வாங்க..பிள்ளையார் பளிங்கு சிலையா மாறப்போறாரு" என்று எங்கள் பாட்டி கூப்பிடும் வரை விடமாட்டோம்.

ஊரிலிருந்து வரும் எங்கள் அத்தை குழந்தைகளுடன் கோவிலைச் சுற்றி ஓடிப் பிடித்து விளையாடுவது, கண்ணாமூச்சி விளையாட்டு, சாமிக்கு முன் சத்தியம் வாங்குவது, நாங்கள் சமைத்த களி மண் சாப்பாட்டை படைப்பது, சுற்றி இருக்கும் இலை தழை பூக்களை மாலையாகக்  கட்டிப் போடுவது    என்று எங்களின் சேட்டைகளுக்கெல்லாம் ஒரே சாட்சியாக இருந்தவர் இன்றுவரை நாங்கள் அவரிடம் பகிர்ந்து கொண்ட ரகசியங்களை பத்திரமாக கட்டிக் காத்துக் கொண்டிருக்கிறார்.

தொன்னூறுகளில் மரத்தடி பிள்ளையார் எல்லாம் பால் குடிக்க எங்கள் பிள்ளையாரிடமும் மக்கள் தூக்குபோனியில் பாலுடன் நின்றனர்.

2000-த்தின் துவக்கத்தில் தெருவை ஆக்கிரமிக்கும் சிறு கோவில்கள் பல இடிக்கப்பட்டன ஆனால் எங்கள் பிள்ளையார் தப்பினார் அதன் பின் எங்கள் வீட்டிற்கு வெளியே இருக்கும் சாலை தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட ஆபத்து வந்தது எங்கள் வீட்டிற்கும் பிள்ளையாருக்கும் ஆனால் Just Miss-ல் இரண்டும் எஸ்கேப் ஆனது.

நாங்கள் கல்லூரி படிப்பை முடிக்கும் வரையில் அதே வீட்டில் தான் இருந்தோம். வாடகைக்காரர்கள் எல்லாம் அப்போது இல்லை. மினி பஸ் அராஜகம் அதிகரிக்க பிள்ளையார் தூசியில் மூழ்கி இருந்தார். சிறிது தொலைவில் இருந்து ஒரு அக்கா காலையில்  வந்து கோவிலை சுத்தம் செய்து விளக்கேற்றி வைத்து விட்டு செல்வார்.

நாங்கள் எப்போதாவது தான் கும்பிடுவோம் எங்கள் தோழனாகவே இருந்தவனை தெய்வமாக பார்க்கத் தோன்றவில்லையா என்னவோ?!

எங்கள் குடும்பத்தில் யாருக்கும் இப்போது அது வசிப்பிடமாக இல்லை. எங்கள் சித்தப்பா மட்டுமே தொழில் நிமித்தம் அவ்வீட்டை பாதுகாத்து வருகிறார். கடந்த 5-6 வருடங்களாக  மாத சதுர்த்தி மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறதாம்.

ஷேர் ஆட்டோ, டவுன் பஸ், டாக்ஸி, டெம்போ வேன் என்று மக்கள் பயணிக்கும் வாகனங்கள் மாறி இருக்கிறதே ஒழிய அந்த ஸ்டாப்பில் இறங்கும் மக்கள் அவருக்கு Attendance போடுவது மாறவில்லை.

கிட்டத்தட்ட 50 வருடங்களுக்குப் பின் இந்த 2025-ம் ஆண்டில் அப்பகுதி மக்கள் எல்லாம் ஒன்றிணைந்து கோவிலை புனர் அமைத்திருக்கின்றனர். 

"Make Over" செய்யப்பட்டு ஜம்மென்றிருக்கும்  ஆனைமுகத்தினன் எங்களுள் புதைந்து கிடந்த பற்பல நினைவுகளை பசுமையாக்கிவிட்டு அதே இடத்தில்  அமர்ந்திருக்கிறார்!






Thursday, April 3, 2025

Cruise என்னும் கூத்து

கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன் முதல் முறையாக  "Cruise Trip" குறித்து நண்பர்கள் பேசிக் கேட்டேன். அது ஏதோ அமெரிக்க குடியுரிமை உள்ளவர்கள் செல்லும் பயணம் நமக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்று பெரிதாக விவரம் ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை பின் கொரோனா காலகட்டத்தில் பல சொகுசுக் கப்பல்கள் கரை ஏற முடியாமல் "Port"-ல் தனிமைப்படுத்தப்பட்டு இருந்ததையும் அதில் பயணம் செய்தவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அவதியுற்றதையும் தொலைக்காட்சியில் பார்த்தேன் அவ்வளவே எனக்கும் Cruise க்கும்  உண்டான உறவு!!!

ஆனால் சமீப காலங்களில் நவம்பர், டிசம்பர் என்று குளிர் மாதங்கள்  வந்தாலே "நாங்க Cruise" போறோம் "நீங்க போகலையா?" வாங்களேன் என்று பரவலான அழைப்பு. சிலர் வருடாவருடம் சென்று வருவதாகவும் 'The Best Vacation Ever" என்றும்  கூறுகிறார்கள் சரி அப்படி என்ன தான் இருக்கு இந்த  Cruise-ல்?! ஒரு கை பார்த்துவிட வேண்டியதுதான் என்று முடிவெடுத்து இவ்வருட Winter Break-ல்  நண்பர்களுடன் இணைத்து கொண்டோம்.

கப்பல் பயணம் என்பது தொன்று தொட்டு இருந்துவரும் பழமையான பயண முறைகளில் ஒன்று. முற்காலங்களில் புதிய நிலப்பரப்புகளையும் வளங்களையும் கண்டறிவதற்கு அரசரின் ஆணைப்படி  பல்வேரு மாலுமிகளின் தலைமைகளின் மேற்கொள்ளப்பட்ட கடற் பயணங்களைக் குறித்து பாடப்புத்தகங்களில் படித்திருக்கிறோம்.

கடல் பயணம் எத்துனை கடினமானது கடற் கொள்ளையர்களின் அட்டூழியம் மற்றும் கடல் உயிரினங்களை அதன் கொழுப்பின் (Whale Oil) பொருட்டு வேட்டையாடுவதற்கு சென்று உயிரிழப்பதையும் நாடுகளுக்கு இடையே நடக்கும் கடல் சண்டைகளைக் குறித்தும் ஆங்கிலப் படங்களில் கண்டிருக்கிறோம். புதிய பறவை படத்தில் செல்வந்தர்களாக சிவாஜி சரோஜா தேவி போன்றவர்கள் மலேசியா, சிங்கப்பூர் சுற்றுப்பயணம் சொகுசுக் கப்பலில் சென்று வருவதாகக் காட்டப்பட்டிருக்கும்  😀😀

19-ம் நூற்றாண்டு மற்றும் 20-ம் நூற்றாண்டின் துவக்க காலங்களிலும் கூட பலர் படிப்பு மற்றும் தொழில் தொடர்பான  வெளிநாட்டு பயணங்களை கடல் வழியே செய்து வந்தனர். 

Cruise என்று சொல்லக்கூடிய இந்த சொகுசுக் கப்பல் பயணங்கள் அமெரிக்காவில் 1970-களில் தொடங்கப்பட்டதாகக் கூகுள் தெரிவிக்கிறது. உயர்வர்க்க மக்கள் மட்டுமே செய்துவந்த இவ்வகை பயணங்கள் தற்போது உலகம் முழுவதும் உள்ள  நடுத்தர வர்கங்களுக்கும் சாத்தியப்பட்டிருப்பது மகிழ்ச்சியே!!!

சரி..நாங்கள் Cruise-க்கு  சென்ற கதைக்கு வருவோம். டிக்கெட் போட்டாச்சு என்றதும் அனுபவசாலிகளிடமிருந்து பல்வேறு அறிவுரைகளும் ஆலோசனைகளும் வந்த வண்ணம் இருந்தது. நாங்கள் இதுவரை வேறு எந்த Vacation-க்கும் இவ்வளவு ஷாப்பிங் செய்ததில்லை இத்துனை Luggage-களையும்  சுமந்ததில்லை!! நாம Over ஆ தான் போறோமே?! என்று தோன்றினாலும் "வேணுங்க போட்டோ Shoot இருக்கு Formal Dining இருக்கு, Swimming Pool இருக்கு, Island-ல இறங்கும் போது சுத்திபாக்கணும்" என்று அறிந்தவர்கள் எங்களை ஆசுவாசப்படுத்தினர்.

நாங்களும் ஒருவழியாக மூட்டை முடிச்சைக் கட்டிக் கொண்டு 7 நாள் பயணத்தை தொடங்கினோம்.




நாங்கள் எதிர்பார்த்ததை விட Cruise அனுபவம் அருமையாகவே இருந்தது முக்கியமாக குழந்தைகள் நன்கு அனுபவித்து மகிந்தனர் ஆனால் ஒரு இடத்திற்கு போவது அதன் வரலாற்றை தெரிந்து கொள்வது ம்யூசியங்களைப் பார்வை இடுவது என்று சாவகாசமாக எதையும் செய்ய முடியவில்லை சக பயணிகளும் Beach-க்கு செல்வதையே பிரதான நோக்கமாக கொண்டிருந்தனர்.

Cruse ஐ விரும்பும் பலரும் அதற்கு சொல்லும் விளக்கம் "சமையலில் இருந்து சுதந்திரம்  கிடைக்கிறது, எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமாலும் (Restrictions Apply) சாப்பிடலாம், தங்களை அழகாக தயார்படுத்திக் கொண்டு நிகழ்வுகளுக்குச் செல்லலாம், குளிர் காலத்திலும் சூரியனை அனுபவிக்கலாம்  மொத்தத்தில் அழுத்தம் நிறைந்த  Routine Life-ல் இருந்து விடுதலை!!



நிஜமாகவா?! மனிதனால் Routine இல்லாமல் ஒவ்வொரு நாளை ஒவ்வொரு விதமாக செலவழிக்க முடியுமா? Cruise Trip-களில்  வழக்கமான வாழ்க்கையிலிருந்து விடுதலை அடைகிறோமே தவிர அங்கு தங்கிய 7 நாட்களும் ஒரே Routine ஐ தான் பின்பற்றினோம்.

அனைவரும் சகட்டு மேனிக்கு உணவை வீண் செய்வதைக் காண நேர்ந்தாலும் ஒரு நல்ல விஷயம் குழந்தைகளுக்கு Soda எங்கும் கிடைக்கவில்லை, இன்டர்நெட் இல்லை அதனால் நொடிக்கொரு தரம் போனை நோக்கும் நோயிலிருந்து தற்காலிக நிவாரணம் முக்கியமாக ரீலிஸ்-ல் இருந்து!!



அனைத்து Cruise Ship-களும் Private Island ஒன்றை வாங்கி வைத்துள்ளனர் அதன் முக்கிய நோக்கமே கப்பலில் சேர்ந்த குப்பையையை அங்கு கொட்டுவதற்குத்தான் என்று சொல்கிறார்கள் அதன் அரசியல் என்ன என்று தெரியவில்லை ஆனால் நீலமயமான அதன் அழகை நாங்கள் நன்கு ரசித்தோம்.

24/7 என்று உழைத்து சோர்வடைந்த மனிதர்களுக்கு Cruise Trip ஓகே வீட்லேயே ரிலாக்ஸாய் பொழுது போக்கும்  நமக்கு எதற்கு என்று தோன்றிக்கொண்டே இருந்தாலும் "களவும் கற்று மற"!!!

முடிந்தால் நீங்களும் போயிட்டு வாங்க இப்ப இதுதான் Trending 😂

பின் குறிப்பு - 7 நாளைக்கு தங்க இடமும் குடுத்து, சாப்பாடும் போட்டு அங்கங்க சுத்தி பாக்க இறக்கியும் விடுறானே இவ்வளவு Cheap ஆ எங்கயாச்சும் Vacation போக முடியுமா சொல்லுங்க?! என்று கேட்பவரகளைப் பார்த்தால் அதுவும் சரிதான் என்று தோன்றுகிறது.


Wednesday, February 5, 2025

மழையே.. மழையே

 ஹாஸ்டல் வார்டனைப் போல கறாறுடன் தட்டி எழுப்பிய கைப்பேசி அலாரத்தை snooze செய்யலாமா? Off செய்யலாமா என்று துழவிக் கொண்டிருந்த விரல்களை வெளியில் பெய்து கொண்டிருந்த மழையின் சத்தம் நிறுத்தச் செய்தது.

தூக்கம் அழுத்தும் கண்களுடன் எழுந்த என்னை    மழை மேலும் எரிச்சல் படுத்தியது.

இந்த அமெரிக்காவில் மழைக்கு விவஸ்தையே இல்லை. நேரம் காலம் இல்லாமல் வருடம் முழுதும் நினைத்த நேரத்தில் பெய்கிறது.

குழந்தைகளை குடையுடன் பேருந்து நிறுத்தத்திற்கு கூட்டிச்செல்ல வேண்டும், குளிர் அதிகமாக இருந்தால் காரிலும் அழைத்துச் செல்லலாம். வசதிக்கு ஒன்றும் குறைவில்லை இருந்தும் மழை என்றால் ஒரு ஒவ்வாமை.

இந்த நேரத்தில் மழையில் குத்தாட்டம் போட்டு ice cream ஐ சுவைத்து சாப்பிடும் திரைப்பட கதா நாயகிகள் வேறு தேவை இல்லாமல் நினைவிற்கு வந்து எரியும் கொள்ளியில் எண்ணை வார்க்கிறார்கள்.

என் வாழ்வில் நான் மழையை பெரிதாக ரசித்ததில்லை. ஆரம்ப பள்ளியில் படிக்கும் பொழுது மழை வந்தால் ஜாலியாக இருக்கும் ஏனென்றால் புத்தகப்பையை அங்கேயே வைத்து விட்டு போகச்சொல்லி விடுவார்கள். மழையில் புத்தகங்கள் நனையாமல் இருப்பதற்காக. எங்கள் வீடு பள்ளியில் இருந்து ஐந்து நிமிட நடை தூரத்திலேயே இருந்தாலும் நானும் பையை வைத்துவிட்டு கையை வீசிக்கொண்டு வந்து  வீட்டுப்பாடம் எழுதாமல் ஆட்டம் போடுவேன் அதிலும் சில ஆசிரியைகள் பேப்பரில் வாய்ப்பாடு எழுதிக் கொண்டு வரச் சொல்லி வெறுப்பேத்துவார்கள்.

ஒரு சில முறை நானும் என் தங்கையும் மழையில் நன்கு நனைந்து அனுபவித்திருக்கிறோம். மழை நீரை வாளியில் பிடித்து வைப்பது போன்ற வேலைகளை ரசித்து செய்திருக்கிறோம்.

நடுநிலைப் பள்ளி காலத்திலிருந்து மழை என்றாலே "அய்யோ பஸ் லேட்டா வருமே, குண்டும் குழியுமான ரோட்டில் சேறு சகதி என்று வழுக்குமே, சில இடங்களில் முட்டி அளவு நீரில் நடந்து செல்ல வேண்டி இருக்கும் முக்கியமாக கரண்ட் கட் செய்து படுத்தி எடுப்பார்கள் அப்படியே மின்சாரம் இருந்தாலும் குளுருது என்று Fan ஐ Off செய்து வீட்டில் உள்ளவர்கள் கடுப்பேத்துவார்கள்  இந்த கொசுக்களோடு மல்லு கட்டமுடியாது" இவ்வாறு மழை என்றதும் மனம் பலவாறாக கவலை கொள்ளத் துவங்கும். புலம்பித தவிக்கும்.

என்னைப் போன்ற சிலருக்கு மழை வேண்டும் ஆனால் யாருடைய பிழைப்பையும் பாதிக்காத விதத்தில் இரவில் மட்டும் அளவோடு பெய்து விட்டு நின்று விட வேண்டும் ஏன் நம்மில் பலரும் வெயில் காலத்தில் மழைக்கு ஏங்குவோம் இரண்டு நாட்களுக்கு தொடர் மழை பெய்து துணி காயவில்லை என்றால் டென்சன் ஆகி அதே மழையை கரித்துக் கொட்டுவோம்.

அமெரிக்காவில் குடித்தனம் பெயர்ந்து வருடங்கள் பல கடந்தோடி விட்டது இங்கு மின்சாரத் தடை எல்லாம் இல்லை, டவுன் பஸ்ஸிற்கு காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை எனினும் திரைப்படங்களில் காண்பிப்பது போல புத்தகத்தை வாசித்துக் கொண்டும் சூடான காபியை சுவைத்துக் கொண்டும் ஒரு பொழுதும் மழையை ரசித்தது கிடையாது மாறாக எனது கணவர்  "சுடச் சுட பஜ்ஜி சாப்பிட்டா இந்த மழைக்கு நல்லா இருக்கும்" என்று சொல்லி என்னை மேலும் சூடேற்றுவார்.

மழைப் பாடல்களை பிடித்த அளவிற்கு மழை ஏனோ எனக்கு பிடிபடாமலேயே சென்று விட்டது.

"வான்நின்று உலகம் வழங்கி வருதலால் 

நான்அமிழ்தம் என்றுணரற்  பாற்று" 




Sunday, October 20, 2024

தொடுகை

 "தொடுகை" - ஐம்புலன்களில் ஒன்றான தொட்டு உணரும் புலனை நாம் பெரும்பாலான சமயங்களில் பார்வை அற்றவர்களுக்குக்கு மட்டுமே  பயன்படும் ஒன்றாகக் கருதி ஒதுக்கி விடுகிறோம் ஆனால் நம் உணர்ச்சிகளை  (Emotions) க்ஷண நேரத்தில் மற்றவர்களுக்கு அறிவிக்க இதை விட பெரிய உணர்வு ஊட்டி (Sense) வேறு  இருப்பதாகத் தெரியவில்லை.

"ஒருவர் மகிழ்ச்சியான விஷயத்தைக் கூறும் போது "வாழ்த்துக்கள்" என்று கைகுலுக்கும் போதும்  சோகத்தை ஒருவரின் கண்களில் காணும் போது "என்னாச்சு?"  என்று அவரின் தோளில் நம் கை படும் போதும் அழுது கொண்டிருப்பவரை கட்டி அணைத்து ஆறுதல் சொல்லும் போதும் கோபத்தில்/ஏமாற்றத்தில்  கொந்தளித்துக் கொண்டிருக்கும் ஒருவரை "சரி விடுங்க பாஸ்" என்று முதுகை தட்டும் போதும்" என்று ஆயிரம் வார்த்தைகளால் கடத்த முடியாத Emotions ஐ ஒரு தொடுகை உணர்த்தி விடுகிறது. பல வருடப் பகை கூட பறந்து விடுகிறது.

அப்படி எல்லாம் இல்லை நீங்கள் ஓவரா exaggerate செய்கிறீர்கள் என்று கூறுபவர்களுக்கு...

தாயின் வயிற்றில் இருக்கும் போது நம்மை சுற்றி இருக்கும் கருப்பை சுவரை தொட்டுத் தொட்டு பாதுகாப்பாக உணரும் நாம் இந்த பூமியில் பிரவேசம் செய்தவுடன் அந்த தொடுகை இல்லாதது கண்டு பீறிட்டு அழுகிறோம். தன்னோடு அணைத்துக் கொள்ளும் தாயையும் தூக்கத்தில் தூளியையும் தொட்டுக்கொண்டு ஆசுவாசம் அடைகிறோம்.

எழுந்து நடக்கும் வரை ஒவ்வொரு நிலையிலும் பெற்றோர்களின் தொடுகை வேண்டும். பின் பள்ளிக்கு செல்லும் போது அடுத்த அழுகை - "வரிசையில எல்லாரும் கையை பிடிச்சிட்டு நில்லுங்க" என்று ஆசிரியர் கூறும் போது அழுகை  நின்று தைரியம் பிறக்கிறது இருந்தும் குறைந்த பட்சம் பத்து வயது வரையாவது பெற்றோர்களின் அரவணைப்பில் இருக்க ஆசைப்படுகிறோம்.

டீன் ஏஜ் என்று சொல்லக்கூடிய பருவ வயதில் நண்பர்களின் கையைப் பிடித்துக் கொண்டும் வகுப்பறையில் தோளோடு தோள் உரசிக் கொண்டு நெருங்கி அமர்ந்து கொண்டும்  Safe ஆக உணர்கிறோம்.

"பின் திருமண வயது - நமக்கென்று பிரத்யேகமாக ஒருவர் வர ஏதோ Celebrity போல உணர்கிறோம்  பின் குழந்தை பிறக்கிறது அதை பிடித்துக் கொள்கிறோம்". வட்டமாக சுற்றி கொண்டிருக்கும் வாழ்க்கையின் இறுதிக்  கட்டமான வயோகதிகத்திற்கு வருகிறோம்.

ஒரு 40 வருடத்திற்கு முன் பெரும்பாலான குடும்பங்கள் கூட்டுக குடும்பமாகவே இருந்தது அதனால் தனது பேரன் பேத்திகளை மடியில் வைத்துக் கொண்டும், பிஞ்சு விரலைப் பிடித்துக் கொண்டு பள்ளிக்கு அழைத்துச சென்றும், இரவு நேரங்களில் வலியால் அவதியுறும் கால்களை பிடித்து விடும் மகன் மருமகளின் வாஞ்சை என்றும், தோளுக்கு மேல் வளர்ந்து வீட்டை வளைய வரும் பேரப்பிள்ளைகளை தோளோடு அணைத்துக் கொள்வது சமயங்களில் அறிவுரை கூறி தேற்றுவது என்றும்  தொடுகையை  (மனித உணர்வுகளை) உணர்ந்து  கொண்டே இருந்தோம்.

இன்றைய நிலையோ வேறு !! பெரும்பாலான வீடுகளில் வயதானவர்கள் தனிமை வாசம் செய்கிறார்கள். தம்பதிகளாக இருக்கும் பட்சத்தில் சற்று பிழைத்தார்கள் இல்லையேல் ஒரு காய்ச்சல் அடித்தால் கூட தொட்டுப் பார்ப்பதற்கு யாரும் இல்லை அதே நேரத்தில் பெற்றோர்களை மட்டுமே அண்டி  தனியாக வளரும் குழந்தைகளுக்கு Good Touch, Bad Touch என்று பாடம் எடுக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.

காலம் மாறி விட்டது அதற்கேற்றாற் போல நாமும் மாறத் தான் வேண்டும். எங்களுக்கும் பிரைவசி தேவை  "Me Time" வேண்டும் என்று வயதானவர்களே கேட்க ஆரம்பித்துவிட்ட பிறகு கூட்டுக்  குடும்பமாகத்தான் வாழ வேண்டும் என்ற பேசிற்கெல்லாம் இடமில்லை ஆனால் பெற்றோர்களின் தேவையை (Materialistic Needs) உணர்ந்து செயல்படும் நாம் குழந்தைகள் போல் மாறி வரும் அவர்களின் Emotions-களையும் புரிந்து கொள்ள வேண்டும்.

நடக்க சிரமப்படும் இடங்களில் அவர்களின் கைகளை பிடித்து கொள்ளுங்கள் உங்களின் குழந்தைகளை அவர்களின் அருகில் அமரச் செய்யுங்கள், பிறந்தநாள் கொண்டாட்டங்களின் போது அவர்களுக்கும் கேக்கை ஊட்டி விடுங்கள். கோயிலுக்கு சென்று விட்டு வந்தால் விபூதியை கையில் தராமல் நெற்றிக்கு இட்டு விடுங்கள் குறைந்த பட்சம் அவர்களின் பாதங்களைத் தொட்டு ஆசி பெறுங்கள்.

மேற்கூறிய அனைத்தையும் நீங்கள் விடுமுறையில் செல்லும் அந்த ஓரிரு மாதங்களிலே கூடச் செய்யலாம். உங்கள் குழந்தைகளிடம் பேசி புரிய வையுங்கள். நமது வாழ்கை என்னும் வட்டப் பயணத்தின் தொடுகை அனுபவத்தை  அறுபடாமல் முடித்து வைப்போம் 

Tuesday, May 21, 2024

மாலை நேர மயக்கம்

நேத்து மத்தியானம் மணி 2:55 இருக்கும். உள் ரூமில வேலை பாத்துட்டு இருந்த என் வீட்டுக்காரர் எட்டிப் பாத்து "என்ன மணி மூனாகப்போகுது..டீ போட்றேன்..தலை வலி பின்னுது" என்றார். அப்பதான் சாப்புட்டு உக்காந்த எனக்கு செம்ம கடுப்பு 😠😠

(கொரோனாவிற்கு பிந்தைய காலகட்டத்திலும் சிலர்  வீட்ல இருந்து வேலை பாக்குறதால சமைக்குற வேலை ஜாதியாயிருச்சுன்னு பொலம்புறதை சமூக வலைத்தளங்களிலும், அக்கம் பக்கத்துக்கு வீட்டுக்காரங்க சொல்றதையும் கேக்குறேன், பாக்குறேன் ஆனா எனக்கு இந்த டீ போட்டு கொடுக்குறது தான் ஜாஸ்தியாயிடுச்சு!!! விட்டா மதியம் சாப்ட கையோட டீ கேப்பாரு போல 💭) 

"டீ"-ன்னு கேட்டதும் எனக்கும் குடிக்கனும் போல ஆயிருச்சு..சரின்னு டீ-க்கு பாலை வச்சுட்டு "ஆமா..நான் எப்பயிருந்து டீ குடிக்க ஆரம்பிச்சேன்னு" யோசிச்சு பாத்தா..ஞாபகம் ஒன்னும் வரல. ஆனா நான் நாலாவது படிக்கும் போது என் தங்கச்சியோட சேர்ந்து டெலிபோன் பூத் வச்சிருந்த என்னோட தாய்மாமாவுக்கு சாய்ங்காலமா  தூக்கு போனியில டீ  எடுத்துக்கிட்டு போவேன். அது ஞாபகம் வந்திச்சு.

எங்க பாட்டி வீட்ல இருந்து கொஞ்ச தூரமா தான் எங்க மாமா டெலிபோன் பூத் இருந்துச்சு..ரெண்டு மூனு குறுக்கு சந்துல புகுந்து போனா ஈஸியா வந்துரலாம். அப்பல்லாம் ஒரு ரூபா காயின் போன் எல்லாம் இல்லை. கண்ணை எரிக்கிற மஞ்ச கலர்ல பூத் இருக்கும் பெரும்பாலும் உடல் ஊனமுற்றவர்களால நடத்தப்படும். எங்க மாமா கூட போலியோ Attack ஆனவருதான்.

சுடச் சுட தூக்கு போனியில எங்க பாட்டி டீ ஊத்தி குடுப்பாங்க..நாங்க ரெண்டு பேரும் பராக்கு பாத்துகிட்டே, எந்த சந்து வழியா போகலாமுன்னு Argue பண்ணிக்கிட்டு போயி சேர்ரதுக்குள்ளே அது ஆறி போயிருக்கும். சில நேரம் நாங்க ஆட்டுற ஆட்டுல டீ சைடுல எல்லாம் வழிஞ்சிருக்கும். தூக்கு போனி மூடி எல்லாம் கழண்டு விழுந்திருக்கு!!!

ஆனா எங்க மாமா எங்கள கோவிச்சிகிட்டதெல்லாம் கெடையாது. அவரு டீ குடிச்சி முடிகிறவரைக்கும் ஏதாவது ராங் நம்பர் டயல் பண்ணி பேசி டைம் பாஸ் பண்ணுவோம் 😆😆ஒரு தடவை நம்ம காவல் துறை எப்பிடி கடமை தவறாம இருக்காங்கன்னு Check பண்றதுக்கு 100 டயல் பண்ணினோம். ஒருத்தர் எடுத்து D2-வோ, D3 போலீஸ் ஸ்டேஷன்னு சொன்னதும் அலறி அடிச்சிட்டு போனை வச்சுட்டோம். அதுக்கப்புறம் போலீசை பாத்தாலே கொஞ்ச நாள் பம்மி கிட்டு இருந்தோம்.. ம்ம்ம் அதெல்லாம் ஒரு காலம். இப்ப நெனச்சாலும் அதெல்லாம் திரும்ப கெடைக்காது..அந்த Yellow Telephone Booth, தூக்கு போனியில டீ, கவலையற்ற எங்கள் இளமைக்காலம் ..எங்க மாமாவும் தான் 😔 

இப்பிடியே Flashback-ல மூழ்கி இருந்தேனா.. ஏதோ தீஞ்ச வாசனை வந்து மூக்கை தொளைக்குதேன்னு பாத்தா டீ பொங்கி வழிஞ்சிட்டு இருக்கு 😟




Thursday, January 4, 2024

வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே...

அன்றைய நாள் வழக்கம்போலத் தான் ஆரம்பித்தது எனினும் முடிவு என்னவோ நேர்மாறாகத் தான் இருந்தது!!

சம்பவம் - 1

கல்லூரி துவங்கி முதல் சில மணி நேரத்திற்குள்ளேயே அங்கும் இங்கும் ஒரே சலசலப்பு. "நேத்து போர்ஷனை எடுத்து படிங்க" என்று எங்களுக்கு கட்டளை இட்டு விட்டு Staff Room-ல் பேராசிரியர்கள் ஏதோ தங்களுக்குள் விவாதித்த வண்ணம் இருந்தனர். சமூக வலைத்தளங்களோ, கைபேசிகளோ இல்லாத கற்காலம் அது ஆதலால் செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் இருந்தவர்களுக்கே ஓர் அளவு நாட்டு நடப்பு தெரிய வாய்ப்புண்டு.

நாங்களும் எங்களுக்கு கிடைத்த நேரத்தை பயனுள்ளதாக சீரியல் கதை, சினிமாக் கதை பேசியும் நோட்டு புத்தகத்தின் பின் பக்கத்தில் கோலம் வரைந்தும் செலவிட்டுக் கொண்டிருந்தோம்.

மதிய உணவு இடைவெளிக்கு சற்று முன்பே "அன்றைய முதல்வராக இருந்தவருக்கு எதிராகத் தொடரப்பட்ட ஊழல் வழக்கில் அவருக்கு பாதகமாக தீர்ப்பு வந்துவிட்டது" என்றும் "அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம்" என்ற அறிவிப்பு வந்து விட்டது. அவருடைய ஆதரவாளர்கள் கலவரத்தில் இறங்கி சட்ட ஒழுங்கை குலைக்கும் முன் வீடு சென்று சேருமாறு நாங்கள் அறிவுறுத்தப்பட்டோம்.

நானும் புத்தக மூட்டையை சுமந்து கொண்டு வழக்கமாக செல்லும் பேருந்து நிறுத்தத்திற்கு விரைந்தேன். நிறுத்தத்தை அடைய சில காலடிகளே எஞ்சிருக்கும் நிலையில்  அங்கு காத்துக் கொண்டிருந்த கூட்டம் தீடீரென்று கத்திக் கொண்டு நாலா பக்கமும்  சிதறி ஓடியது. எனக்கு நடப்பது என்னெவென்று புரிவதற்குள் யாரோ "கல்லெடுத்து வீசுறாங்க" என்று கூற யோசிக்காமல் வந்த வழியே திரும்பி கல்லூரியை நோக்கி ஓட்டம் பிடித்தேன்.

மக்கள் அங்கும் இங்கும் பதறி ஓட சாலையில் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. என் இதயம் வெளியே வந்து விழுந்து விடத் துடிப்பது போல் காதில் படபடத்தது. முதுகில் வேர்வை வழிய நா வறண்டு வாயோடு ஒட்டிக் கொண்டது. 

நான் திருப்பியே பார்க்காமல் சில கைலி கட்டிய ஆசாமிகளின் நடுவே புகுந்து  ஓட்ட நடையில் விரைந்தேன். கடைகளை எல்லாம் இழுத்து மூடிக் கொண்டிருந்தனர். அடுத்த 15-20 நிமிடத்தில் இரண்டு மூன்று பஸ் நிறுத்தங்களைத் தாண்டி வந்து விட்டிருந்தேன். இதற்கு மேல் நடக்க திரணியில்லாமல் பஸ் வரும் என்ற நம்பிக்கையில் காத்திருந்தேன்.

அப்பகுதி சற்று அமைதியாகவே காணப்பட்டது. கலவரம் எந்நேரமும் வெடிக்கும் என்று பேசிக்கொண்டிருந்தனர். 

அடுத்த ஒரு மணிநேரத்திற்கு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இரண்டு பேருந்து மாற்றி வீடு வந்து சேர்வதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது. இது என் வாழ்வில் நன் முதல்முதலாக களத்தில் நின்று எதிரே பார்த்த கலவரம்!!

சம்பவம் - 2

அன்று மதியம் ஒரு  மூன்று மணி இருக்கும். படர்ந்திருந்த அமைதியை  திடீரென்று கிழித்துக் கொண்டு  அலறல் ஓசை ஒன்று  சாலையிலிருந்து கேட்க என்னெவென்று எட்டிப் பார்க்கலாமா என்று கதவை நோக்கி செல்வதற்கு முன்னே பக்கத்து போர்ஷனில் இருந்து வெளியே வந்த சித்தப்பா "வெளிய யாரோ ரெண்டு ரவுடிப் பசங்க சண்ட போட்டுட்டு இருகாங்க..கதவ சாத்திட்டு இருங்க" என்று அறிவுறுத்தி விட்டு சென்றார்.

அவர் சென்ற சில நிமிடங்களில் எங்கள் கூரை மீது தட தட வென்று கற்கள் உருளும் சத்தம். ஆர்வம் மேலிட நாங்கள் ஜன்னல் வழியாக நெருக்கி அடித்துக் கொண்டு எட்டிப் பார்த்தோம். ரத்தம் சொட்டும் நெற்றியுடன்  ஒருவன் கையில் அரிவாளுடன் இன்னோருவனை துரத்திக் கொண்டிருக்க..அடுத்தவனின் சட்டையிலும் ரத்தக்கறை தெரிந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் கைகளாலேயே தாக்கிக் கொண்டு தெருவில் புரண்டனர். DTS effect இல்லாமல் ஒலித்த அந்த சத்தமே எங்களுக்கு பீதியைக் கொடுத்தது. கதவ தட்டாம இருந்தா சரி என்று கடவுளை வேண்டிக் கொண்டோம்.

என் வாழ்வில் நடந்த இவ்விரு வன்முறை சம்பவங்களையும் நான் எப்போது நினைத்தாலும் ஒரு வித பயம் என்னைத்  தொற்றிக் கொள்ளும்.

வன்முறையை திரையில் காணுகிறோம். நம்மில் சிலர் அதை ரசிக்கிறோம் சிலர் முகத்தை சுளித்துக் கொண்டே கடக்கிறோம் ஆனால் பெரும்பாலான நேரங்களில் அவை நம்மை நேரடியாக பாதிப்பதில்லை எனினும்  நடைமுறை வாழ்வில் நம்மால் சிறிய வன்முறையைக் கூட மன அதிர்வின்றி கடந்து செல்ல முடியாது!!!

வன்முறை - திரையில் காணும் போது ஒருவிதமாகவும், உண்மை சம்பவங்களை காதால் கேட்கும் போது ஒரு விதமாகவும், நம் கண் முன்னே நடக்கும் போது, நம் சொந்தங்கள் உறவுகளை பாதிக்கும் போது ஏன் நமக்கே ஏற்படும்  போது என்று வேறு வேறு பாதிப்புகளை நம் மனதில் உருவாக்கும்.



 

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இவுலகின்  ஏதோ ஓர் மூலையில் ஏதோ ஓர் யுத்தம் நடந்த வண்ணமே உள்ளது. அவை இரு தேசங்களுக்கிடையே ஆனதாகவோ, உள்நாட்டு போராகவோ, மாவட்டத்திற்கு இடையினிலோ, மதம் சாதி சார்ந்ததாகவோ இருக்கலாம்.

உலகத்தையே தன் உள்ளங்கையில் முடக்கிவிட்ட இந்த இன்டர்நெட் யுகம் நமக்கு அனைத்தையும் நேரடியாக திரையிட்டு காட்டுகிறது நாமும்  "ஐயோ அவங்களை எல்லாம் பார்க்க பாவமா இருக்கு" என்றும் "இவன் பண்ணது தப்பு..அவன் பண்ணது தப்பு" என்று கமெண்ட்  அடித்து விட்டு கனத்த இதயத்தை லேசாக்கிக் கொள்ள சேனலை மாற்றி விடுகிறோம். நம்மால் செய்ய இயல்வதும் அவை மட்டுமே!!!

யுத்தங்களை தவிர்க்க, ஆயுதங்களை கட்டுப்படுத்த, உள் நாட்டு வெளி நாட்டு  பிரச்சனைகளை சுமூகமாக்க என்று எண்ணற்ற சர்வதேச அமைப்புகள் இருந்தும் என்ன பயன்?!

இனி வரும் காலங்களிலாவது போர்க்களம் அற்ற வையம் அமைய வேண்டும். வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்!!!

புத்தாண்டு நல் வாழ்துக்கள் 🎕🎕🎕

பின் குறிப்பு - நம்மை பாதிக்காத எதுவும் நமக்கு செய்தியே!!!


Friday, October 13, 2023

பாசமுள்ள "Panda"

2021 கோடை விடுமுறையில் கொரோனா பயம் சற்று குறையத் துவங்கி இருந்தது. எங்கள் ஊரில் இருந்து 600 மைல் தொலைவில் வசித்த நண்பர் ஒருவர் எங்கள் வீட்டிற்கு வருவதாக முடிவானது. எனது கணவரின் பள்ளித் தோழராக இருந்தவர், பாசத்துடன் பழகும் குணத்தால் எங்கள் சகோதரராக மாறியவர் என்பதாலும் பல மாதங்களாக பெரும் தொற்று காரணமாக எங்கள் வீட்டிற்கு யாரும் வரவில்லை என்பதாலும்  அவர்களின் குடும்பத்தை வரவேற்க நாங்கள் ஆர்வத்துடன் தயாராகிக் கொண்டிருந்தோம்.

அவர்களின் வருகை மனதிற்கு  மகிழ்வைக் கொடுத்தாலும் ஏதோ ஒரு நெருடல் அந்த உவகையை அனுபவிக்க விடாமல் தடுத்தது.

என்ன ஒரே சஸ்பென்ஸ்-ஆ இருக்கேன்னு நினைக்கிறீங்களா?

அது ஒண்ணுமில்லங்க..இந்த கொரோனா கால கட்டத்தில் அத்தியாவசியப் பொருட்களின் "Demand" அதிகமானது போல வெளிநாடுகளில்  வேறொன்றின்  மவுசும் அதிகரித்து இருந்தது  அது என்னவென்றால்  "வளர்ப்பு நாய்கள்". தங்களுக்கு நாய் (அதுவும் ஆண் நாய்) வேண்டுமென்று   Breeder-களிடம் இரண்டு மடங்கு  பணத்தைக் முன் பணமாகக்  கொடுத்து விட்டு அவரவர் காத்திருப்பு பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டு காத்திருந்தனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். 

எங்கள் குடும்ப நண்பரும் அவர் பங்கிற்கு ஒரு நாயை வாங்கி இருந்தார். எட்டு மாதமான அந்த குட்டி நாயும் எங்கள் வீட்டிற்கு வர இருந்தது.

இங்க ஒரு விஷயத்தை உங்களுக்கு சொல்லியே ஆக வேண்டும். எங்கள் குடும்பத்திற்கே நாய், பூனை போன்ற வளர்ப்பு பிராணிகள் மீது ஒரு பயம். சிறு வயதிலிருந்தே "புஸு புஸு பொமேரியன் நாயிலிருந்து வாயில் எச்சில் வடிய, நுரை பொங்க குலைத்துத் தள்ளும் டாபர் மேன், நமது கால்களை விடாமல் தனது நாக்கால் துடைத்து நனைக்கும்  Hutch Dog " வரை எதைப் பார்த்தாலும் காத தூரம் பாய்ந்து ஓடுவேன்.

பள்ளியில் படிக்கும் பொழுது நாங்கள் புறநகர் பகுதியில் வசித்து வந்தோம். எங்கள் வீட்டிற்கு அருகே ஒரு பிள்ளையார் கோவில் இருந்தது. மூன்று மாதத்திற்கு ஒருமுறை யாராவது நாய்க்குட்டியை அங்கு விட்டு விட்டு சென்று விட அது எங்கள் வீட்டில் தஞ்சம் புகுந்து விடும் அதை விரட்டுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.

என் சரித்திரமோ இப்படி இருக்க.. ஒரு வளர்ப்பு நாய் திடீரென்று தனது Leash-ல் இருந்து விடு பட்டு ஓடி வந்து என் மகனை கீழே தள்ளி தலையை நனைத்து விட அவனும் நாய் என்றாலே வெலவெலத்து போகிறான். எனது கணவரும் மகளும் ஓரளவு சமாளிப்பார்கள் என்றாலும் வீட்டிற்கு வரப் போகும் விருந்தாளியை நினைத்து அனைவரும் சற்று கலங்கித்தான் போயிருந்தோம்.

ஒரு வழியாக அந்த நாளும் வந்தது. நாங்கள் அனைவரும் வெளியில் சொல்லமுடியாத பதட்டமான மன நிலையுடன் காத்துக் கொண்டிருந்தோம். நாலு கால் பாய்ச்சலில் மூன்றாவது மாடிக்கு வந்த நாய் நல்ல உயரமாக இருந்தது. வந்ததும் வராததுமாக அனைவரையும் நன்றாக நுகர்ந்து தள்ளியது. நான் ரோபோ போல் அசையாமல் நிற்க எனது தோளில் இரு கால்களையும் வைத்து உச்சி முதல் பாதம் வரை Full Body  Scan செய்தது. பயந்து ஓடிய எனது மகனை துரத்தி விளையாடியது. புஸு புஸு வென்ற வெள்ளை ரோமங்களை உடலில் போர்த்தி Teddy Bear போல் தோற்றமளித்த  அதற்கு "Panda" என்று பொருத்தமாக பெயரிட்டிருந்தார்கள்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் அதனுடைய இருப்பு எங்களுக்கு மெதுவாக பழக ஆரம்பித்தது. அடுத்த அரை நாளில் அதனுடைய நடவடிக்கைகள் ஒரு வித பிணைப்பையும், ஒரு குழந்தையைப் போல அவர்கள் அவனை  நடத்திய விதம் ஒரு அன்யோன்யத்தை அவனிடம் ஏற்படுத்தியது. அவனும் செல்லக்   குழந்தையைப்  போன்றே நடந்து கொண்டான். என் மகன் என் மடியில் அமர்ந்தது கண்டு அவனும் என் மடியில் அமர அடம் பிடித்தான். தன்னைக் கொஞ்சுமாறு கெஞ்சினான். நாங்கள் Pet செய்ய  அத்தனை விரும்பவில்லை என்பதை புரிந்து கொண்டவன்  அதன் பிறகு  எங்களை தொல்லை செய்யவே இல்லை. எத்தனை புத்திசாலி தனம் பாருங்கள்!!!

இதற்கு முன் பலரும் வளர்ப்பு நாயை குழந்தைக்கு பதிலாக பாசம் காட்டி வளர்ப்பதாக சொல்லக் கேட்டிருக்கிறேன் அப்போதெல்லாம் அவர்கள் மேல் எனக்கு ஒரு வித எரிச்சல் தான் வரும். "குழந்தையும் பிராணியும் ஒன்றா?" என்று கோபம் வரும் ஆனால் இந்த  இரண்டு மூன்று நாட்கள் அவனுடன் பழகியதில் "மன அழுத்தம் குறைய நாயை வளர்ப்பதில் தப்பில்லை" என்று தோன்றியதோடு "தனிமையைப் போக்க தக்க துணை நாய்களைத் தவிர வேறில்லை" என்றும்  பட்டது.

ஒரு மனிதனைப் போலவே அனைத்து உணர்ச்சிகளையும் "பாண்டா" காட்டியதும்  நமது உணர்வுகளை உள்வாங்கி அதைப்  பிரதிபலித்ததும் வியப்பாகவே இருந்தது. அதனை வெளியே விட்டு அறையின் கதவை உள் பக்கமாக மூடிக் கொண்டால் சத்தமில்லாமல் வெளியில் அமர்ந்து  அழுதது. நாங்கள் சாப்பிட அமர்ந்தால் அதற்கும் வேண்டும் என்று செல்லமாக அடம் செய்தது. பந்தைப் பார்த்தால் துள்ளிக் குதித்தது. அனைவரும் தொலைக்காட்சியில் படம் பார்த்தால் ஒரு ஓரமாக படுத்து உறங்கியது. எங்களை அறியாமலேயே நாங்களும் அவனை விரும்பத் துவங்கினோம்.

"Panda" சென்ற பின் இரண்டு நாட்களுக்கு அவன் நினைப்பாகவே இருந்தது. யாரோ நான்கு காலில் நடந்து வருவது போன்ற பிரம்மை ஏற்பட்டது. "எங்க..போற போக்கை பார்த்தா நீயும் நாய் வளர்க்க ஆரம்பிச்சிருவ போல?!" என்று என் கணவர் கேலி செய்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். ஆனால் என்னைப் பொறுத்தவரை இவ்வளவு பாசத்தை கொட்டிக்  குடும்பத்தில் ஒருவராக வளர்க்கப்படும் செல்ல நாய்கள் அதிக பட்சம் பத்து வருடங்கள் தான் நம்முடன் இருக்கும் என்றால் அதன் பிரிவை என்னால் சமாளிக்க முடியும் என்று தோன்றவில்லை!!!

பிராணிகளின் வதைகளை கண்டிக்கும் சமூக  ஆர்வலர்கள் கூட வளர்ப்பு நாய்களின் தேவைகளுக்காகவும், குறிப்பிட்ட  இன நாய்கள் அதிகமாக விரும்பப்படுவதாலும்  நாய்கள் கட்டாய இனப்பெருக்கத்திற்கு உந்தப் படுவதை அத்தனை வலுவாக கண்டிப்பதாக தெரியவில்லை. எது எப்படியோ கொரோனாவின் தயவால் செல்லப் பிராணிகளை பெருக்கும் (Breeding) தொழிலில் கல்லா கட்டுகிறார்கள் என்பது மட்டும் உண்மை.

  

 

Wednesday, March 8, 2023

இரட்டை குதிரை சவாரி

என்னை பெண் பார்க்க வரும் போது "நீங்க வேலைக்கு போகனும்னு நான் சொல்ல மாட்டேன் ஆனா அது தான் உங்க விருப்பம்னா Work Permit வாங்கிட்டு போகலாம்" என்று அவர்  கூறிய போது "அப்பிடியெல்லாம் ஒன்னும் இல்லை" என்று வெளியே கூறினாலும் "நாம என்ன உடனே வேலை உலகமெல்லாம் கிடைக்கும் வேலையான கம்ப்யூட்டரா படிச்சிருக்கோம் வெளிநாட்டில் வேலை கிடைக்க" என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.

திருமணமாகி இந்த பதினைந்து வருடங்கள் குழந்தைகளை பராமரிப்பதில் பொழுது கழிந்துவிட்டது இப்பொது அவர்களுக்கு என்னுடைய உதவி அவ்வளவாக தேவைப் படுவதில்லை. அதனால் எனக்கு பொழுது போகவில்லை என்றெல்லாம் இல்லை ஆனால் நண்பர்கள் "என்ன வேலைக்கு Try பண்றீங்களா? ஒர்க் பெர்மிட் வந்துருச்சா? கோர்ஸ் படிக்கிறீங்களா?", "பசங்க High School-க்கு போயிட்டா நம்மளை எதிர் பார்க்க மாட்டாங்க..அப்புறம் உங்களுக்கு தான் Bore அடிக்கும்"  என்றெல்லாம் கேட்க/ சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.  

"வேலைக்குப்போவதற்கும் தயக்கம்..உருப்பிடியாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வேறு" நான் என்று இல்லை நிகழ்காலத்தில் பலரின் நிலைமையும் இது தான். 

நமது பாட்டி காலத்தில் அவர்கள் எந்த வித மறு யோசனையும் இன்றி குடும்பப் பணியை செவ்வனே செய்தார்கள். நமது அம்மா காலத்தில் சிலர் படித்து பட்டம் வாங்கியும் அரசுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றும் அரை மனதோடு வேலைக்குச் சென்றார்கள். அரக்க பறக்க ஓடி வீட்டு வேலையும் செய்தார்கள். பலர் தையல் தொழிலில் வீட்டிலிருந்தபடியே சம்பாதித்தார்கள்.

இன்றைய யுவதிகளின் நிலையோ வேறு. இவர்களில் கிட்டத்தட்ட பெரும்பாலோனோர் பட்டதாரிகள் அதுவும் பொறியியல் துறையில். பலர் படித்து முடித்து வேலைக்குச் செல்கிறார்கள். திருமணம் ஆனாலும் சிலர் வேலையைத் தொடர்கிறார்கள். சிலர் விட்டு விடுகிறார்கள். வேலைக்குச் செல்பவர்கள் "குழந்தைகளையும் குடும்பத்தையும் சரியாக கவனிக்க முடியவில்லையே" என கவலை கொள்கிறார்கள். குடும்பத்திற்காக வேலையை துறந்தவர்கள் "படிச்ச படிப்பு வீணாகுதே..நம்ம அம்மா, பாட்டி மாதிரி படிக்காம இருந்திருந்தா நிம்மதியா வீட்டு வேலையை பாத்துட்டு இருந்திருக்கலாம்" என்று புலம்புகிறார்கள்.  

இந்த மன உளைச்சலில் இருந்து வெளி வரவே இன்று பலரும் வீட்டில் இருந்தபடியே ஏதாவது வேலை செய்கிறார்கள் உதாரணமாக  "online" வியாபாரம். பெரிதாக லாபம் கிடைக்க சில காலம் பிடிக்கும் என்றாலும் நஷ்டம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை அதோடு  "நாமளும் வேலை பார்க்கிறோம்" என்ற திருப்தியும் "கையில் கிடைக்கும் நேரத்தை உபயோகமான முறையில் செலவிடுகிறோம்" என்ற எண்ணமும் ஒரு விதமான மன நிம்மதியை அவர்களுக்குக் கொடுக்கிறது என்பதை மறுக்க இயலாது. 

சிலர் டியூஷன் எடுக்கிறார்கள். Knitting, Crocheting செய்கிறார்கள். பலர் YouTube சேனல் ஆரம்பிக்கிறார்கள். Designer Blouse தைத்து Boutique-ல் கொடுத்து  விற்கிறார்கள்.சிறிய அளவில் கேட்டரிங் செய்து கொடுக்கிறார்கள். Beautician வேலை கற்றுக் கொண்டு வீட்டிலிருந்தபடியே பலருக்கும் Eye Brow Threading மட்டுமே செய்து சம்பாதிக்கிறார்கள் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்  இதோ நான் கூட இப்பொது எழுதிக் கொண்டிருப்பதற்கு மறைமுகக் காரணமும் அது தான்!!!

பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்து லட்சங்களில் சம்பாதிப்பவர்களுக்கு மேல் கூறிய  வேலைகளைக் கண்டால் " அதிக வருமானம் இல்லாத இத்தொழில்களில் நேரத்தை ஏன் விரயம் செய்ய வேண்டும்" என்று தான் தோன்றும் ஆனால் இவை தரும் மன நிம்மதியை அவர்கள் உணர வாய்ப்பில்லை.  

இந்தக் கட்டுரையை படிக்கும் உங்களுக்கு "அக்கரைக்கு இக்கரை பச்சை" "ஆத்துல ஒரு கால்..சேத்துல ஒரு கால்" "கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை" போன்ற பல பொன் மொழிகள் நினைவிற்கு வரலாம் ஆனால்  அதை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு கடிவாளம் இல்லாத இரட்டைக் குதிரையில் பயணம் செய்யும் இந்த  நவ யுவதிகள் தங்கள் இலக்கை தங்கு  தடையின்றி சென்றடைய வாழ்த்துவோமே!!! 

பின் குறிப்பு : பொருளாதார தேவைகளை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள பெண்கள் எந்த காலத்திலும் வேலைக்குச் சென்று கொண்டு தான் இருக்கிறார்கள். படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற வித்தியாசம் எல்லாம் அங்கே இல்லை. 

Tuesday, February 14, 2023

காதலில் விழுந்தேன்...

காலையில் இருந்து சாவகாசமாக இருந்த நிரஞ்சனா கடைசி பத்து நிமிடத்தில்  அரக்க பறக்க ஓட வேண்டி இருக்கும் என்று நினைக்கவில்லை. எதிர்பாரா விதமாக ஏற்பட்ட சாலை நெரிசலும் அவர்களின் பயணத்தை தாமதப் படுத்த காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த மகளின் முகத்தில் பதட்டமும் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த கணவர் கதிரின்  கண்களில் கோபமும் ததும்பி நின்றதை நிரஞ்சனா கவனிக்காமலில்லை.

ஒரு வழியாக மகளை வாத்திய வகுப்பிற்கு அனுப்பி விட்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. 

"ஒரு நாள் கரெக்ட் Time-க்கு கிளம்ப முடியாதா?" என்று ஆரம்பித்த கதிரின்  கேள்வி அடுத்த பதினைந்து நிமிட வாக்கு வாதத்திற்கு வித்திட கடைசியாக  "நீ வீட்ல சும்மா தான இருக்கே" என்ற பிரம்மாஸ்திரத்தை ஏவி விட்டு விட்டு அமைதியான கணவனை  அனல் பறக்கும் பார்வையால் எரித்த நிரஞ்சனாவின் கண்கள் குளமாயின.

"இனிமே இந்த மனுஷனை ஒரு உதவியும் கேக்கக் கூடாது..எல்லா வேலையும் நாமளாவே பாத்துக்கனும்" என்று நினைத்த  நிரஞ்சனாவின் மனது "ஒரு நாள் ஒரு வேலையும் பார்க்காம உக்காந்தா தான் தெரியும்" என்றும் கொந்தளித்தது.

வழக்கம் போல் அடுத்த ஒரு மணி நேரத்தில் கணவனும் மனைவியும் ராசியாகி நடந்ததை மறந்தனர் ஆனால் கோபத்தின் உச்சத்தில் நிரஞ்சனாவின் மனதில் கண நேரத்தில் தோன்றி மறைந்த நேரெதிரான எண்ணங்களில் ஒன்று விரைவில்  நிறைவேறப் போவதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு நண்பர்கள் வட்டம் Hiking Trip ஒன்றை திட்டமிட்டனர். கடந்த ஒன்றரை வருடமாக வீட்டிலேயே இருந்ததால் இயற்கை காற்று உடலுக்கும் மனதிற்கும் இதமாக இருக்கும் என்ற எண்ணம் மேலோங்க அரை மனதுடன் செல்ல சம்மதித்தாள் நிரஞ்சனா. குடும்பத்துடன் அனைவரும் சேர்ந்து கலகலப்பாக மலை ஏறினர். பல மாதங்களுக்குப் பிறகு சந்தித்துக் கொண்டதால் நண்பர்களின் கலகல பேச்சும் சிரிப்பும்  வானை முட்டியது.

அந்தி வேளையில் சூரியனின் அஸ்தமனத்தை ரசித்த நிரஞ்சனா மலையை விட்டு இறங்கத் தொடங்கினாள். உடன் வந்த மழலைப் பட்டாளங்களை மேய்த்துக் கொண்டு முன் இறங்கிய கதிரை திடீரென்று  நிரஞ்சனாவைச்  சுற்றி சலசலத்த குரல்கள் பின்னுக்கு இழுத்தது.

"என்னாச்சு என்னாச்சு" என்று பதட்டத்தோடு அங்கு வந்த கணவனிடம் "காலு பிசகிருச்சு..வலி தாங்க முடியல ..தலை வேற  சுத்தற மாதிரி இருக்கு" என்று ஓரமாக இருந்த பாறையில் அமர்ந்து கொண்டாள் நிரஞ்சனா. "சுளுக்குத்தான் கொஞ்ச நேரம் உக்காந்துட்டு வாங்க..தண்ணி குடிங்க..பழம் சாப்பிடுங்க" என்று உபசரித்த நண்பர்கள் குழாமை "நீங்க போயிகிட்டே இருங்க" என்று கீழே அனுப்பிவிட்டு கைத்தாங்கலாக அழைத்துச் சென்ற கதிரின் தோள்களை ஸ்திரமாகப் பிடித்துக் கொண்டாள் நிரஞ்சனா.

"வேணுமின்னா ஆம்புலன்ஸை கூப்பிடலாம்..கஷ்டப் படாதே" என்று கூறிய கணவனைப் பார்த்து "இல்ல..குழந்தைங்க கீழ போயி வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க..போயிரலாம்" என்று வலியைப் பொறுத்துக் கொண்டு கீழே இறங்கி விட்டாள் நிரஞ்சனா.

அடுத்த ஒரு மணி நேரத்தில்  அவசரப் பிரிவு மருத்துவர் நிரஞ்சனாவின் X-Ray -யை  ஆராய்ந்து எலும்பு முறிவை உறுதிப்படுத்த கலங்கிப் போயினர் கணவனும் மனைவியும். சிகிச்சைக்கு வேறு மருத்துவரை அணுக வேண்டும் என்றும் அதுவரை காலை கீழே வைக்க வேண்டாம் என்று கட்டுப்  போட்டு கைத்தடியையும் கொடுத்தனுப்பினர்.

சோகமும் களைப்பும் கலந்த முகங்களோடு நண்பர்களும் விடை பெற்றுக் கொள்ள வலி நிவாரணிகளை சாப்பிட்டு விட்டு படுத்த நிரஞ்சனாவிற்கு அன்றைய இரவு மிக மிக நீளமான இரவாக அமைந்தது. கடும் வலியோடு புரண்டு படுக்க முடியாமல் எழுந்து.. எழுந்து அமர்ந்த அவளை கதிர் கை தாங்கலாக கழிப்பறைக்கு அழைத்துச் செல்வது, சிறிது நேரம் நடக்க வைப்பது என்று சிறிதும் கண் அயராமல் கவனித்துக் கொண்டான்.

மறு நாள் தொலை பேசி மூலம் சிறப்பு மருத்துவரிடம் Appointment வாங்கிய அவர்களை அறுவை சிகிச்சை கூட செய்ய நேரிடலாம் என்று பயமுறுத்தினர். அன்று இரவும்  வலி நிவாரணியால் பலனேதும் இருக்கவில்லை. அரைமணி நேரத்திற்கொருதரம் எழுந்தமர்ந்த நிரஞ்சனாவை உடைந்த குரலில் சமாதானப்படுத்திய கதிர் அவளின் கண்களில் வழிந்தோடிய கண்ணீரை கனிவுடன் துடைத்தான்.

அடுத்து வந்த நாட்களில் அவளின் சிகிச்சை தொடங்கியது. அறுவை சிகிச்சை தேவை இல்லை, மாவு கட்டு போடவில்லை. Stabilizers என்று சொல்லக் கூடிய தடித்த ஷுக்களை நடக்கும் போது அணிந்து கொண்டு ஊன்று கோளின் (Crutches) உதவியோடு அடுத்த ஆறு வாரங்கள் இருக்குமாறு அறிவுறுத்தப் பட்டாள்.

அவள் செய்ய வேண்டியதெல்லாம் எதுவும் செய்யாமல் அமர்ந்திருக்க வேண்டியது. நண்பர்கள் சில நாட்களுக்கு உணவை சமைத்து அனுப்பினாலும் கதிரின் வேலை ஆயிரம் மடங்கு கூடியது. கொரோனவால் சொந்தங்கள் யாரும் வர இயலாத நிலை.

நிரஞ்சனாவின் வலி கட்டுக்குள் வந்தது. வீட்டிலிருந்தபடியே வேலை பார்த்த கதிருக்கு அவளை பார்த்துக் கொள்வதே முழு நேரப் பணியாக இருந்தது. சாப்பாட்டை கையில் கொடுப்பது, முடித்தவுடன் கை கழுவ தண்ணீர் கொடுப்பது, படுக்கையில் படுக்க வைப்பது, குளிப்பாட்ட உதவுவது என்று களைத்துப் போனாலும் மருத்துவமனை வாசம் இல்லாமல் போனதால் கவலை இன்றியே தென்பட்டான். குழந்தை பேற்றின் போது கதிர்  அவளை கவனித்துக் கொண்டது  நினைவுகளில் வந்து செல்ல கணவனை வாஞ்சையுடன் அணைத்துக் கொண்டாள் நிரஞ்சனா.

நிரஞ்சனாவை பார்க்க வரும் நண்பர்கள் அவளுக்கு கிடைக்கும் ராஜ மரியாதையை கேலி செய்தனர் ஆனால் அவர்களிடம்  "வீட்டு வேலை பார்த்து முடியல..நிரஞ்சனா எவ்வளவு வேலை பாத்திருக்கா?!" என்று அங்கலாய்த்த கணவனை காதல் பொங்க  ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தாள் நிரஞ்சனா. 

கடந்த  2021-ம் ஆண்டில் கொரானாவை கட்டுப் படுத்த தடுப்பு ஊசி கண்டறிய பட்டதோடு வைரஸிற்கு  எதிராக நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வளர 2nd Dose, 3rd Dose  என்று பூஸ்டர்கள் வந்த வண்ணம் இருக்கிறது. தடுப்பு மருந்து வேலை செய்ததோ இல்லையோ எதிர் பாராமல் ஏற்பட்ட இந்த  விபத்து  நிரஞ்சனாவிற்கும் கதிருக்கும் இடையே இருந்த காதலை பன்  மடங்கு Boost செய்து விட்டது என்பதை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டுமா என்ன?!




Friday, December 2, 2022

வரும் ஆனா வராது ..இருக்கும் ஆனா இருக்காது !!!

பல மாதங்களுக்குப் பின் அவர்கள் அன்று வெளியில் சென்று உணவருத்தினார்கள். கொரோனா கால கடத்தில் ரெஸ்டாரண்டில் அமர்ந்து உண்ணும் வாய்ப்பு இல்லாது இருந்ததால் இன்று ஒரு பிடி பிடிக்க வேண்டும் என்று "Buffet System" உள்ள இடத்தை தெரிவு செய்திருந்தார்கள்.

அவரவர் தங்களுக்கு விருப்பமான பதார்த்தங்களை தட்டு நிறைய நிரப்பிக் கொண்டு தங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த மேஜைக்கு வந்து ரசித்து ருசித்து சாப்பிட்டார்கள். "இதற்கு மேல் முடியாது டா சாமி" என்ற நிலை வந்த பின் கடைசியாக ஒரு டீ குடித்து விருந்தை நிறைவு செய்து விட்டு கிளம்பினார்கள்.

வீட்டிற்கு வந்து "Freshen Up" செய்து கொள்வதற்காக குளியலறைக்குச்  சென்ற கயல் அங்கு குப்பைத்தொட்டியில் போடப்பட்டிருந்த எதையோ கையில் எடுத்தவாறு "எத்தனை தடவை சொன்னாலும் கேக்க மாட்டேங்குறா" என்று தனது மகளை கடிந்து கொண்டவாறு சத்தமாக அவளை அழைத்தாள்.

அவளின் அலறல் பேச்சைக் கேட்ட குடும்பத்தினர் "என்ன..என்ன? "  என்று பதறி  அடித்துக் கொண்டெல்லாம் வரவில்லை. மிக மெதுவாக வந்த மகளிடம் "இந்த Tube-ல இருக்குற பேஸ்டை வைத்து ஒரு வாரம் பல் தேய்க்கலாம். இத நீ தூக்கிப் போட்டுட்டே" என்று ஆரம்பித்து எவ்வாறு சிக்கனமாக இருப்பது முக்கியமாக பொருட்களை வீணடிப்பது எவ்வளவு தவறு என்று அரைத்த மாவையே திரும்ப  அரைத்தாள் கயல்.

கயல் போலத்தான் நம்மில் பலரும்..

தேய்ந்து தேய்த்து துரும்பாக இளைத்த பின்னரும் அந்த சோப்பை தூக்கிப் போட மாட்டோம். புது சோப்பில் ஒட்டி வைக்கலாமே! 

எண்ணை வரும் டப்பாவையோ ..பாலிதீன் கவரையோ தீர்ந்து விட்டது என்று குப்பையில் வீசுவதற்கு முன் அதை குறைந்த பட்சம் அரை மணி நேரமாவது எண்ணை டப்பாவிற்கு மேல் தலை கீழாக கவிழ்த்து வைக்க வேண்டும்.

பாத்திரம் துலக்கும் liquid detergent டப்பாவில் தண்ணி ஊற்றி நாளு நாள் பாத்திரம் கழுவி விடலாம்.

"என்ன விட்ருங்க Please " என்று கெஞ்சும் Tomato Ketchup தலையில் அடி அடி என்று அடித்து அந்த இரண்டு ஸ்பூன் சாஸை வெளியே எடுக்காவிட்டால் நமக்கு தூக்கம் வராது.

இதே போல் ஜாம், ஷாம்பூ டப்பா என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம். நம் கண்ணுக்கு தெரியாமல் அடைந்து கிடைக்கும் அனைத்தும் நமக்கு பொக்கிஷம் தான். 

இதுல என்ன தப்பு ? வேஸ்ட் செய்யக் கூடாது இல்ல? " என்று நீங்கள் கேட்பது புரிகிறது. 

பற்பசை விளம்பரங்களில் காண்பிக்கப்படுவது போல டூத் பிரஷ் நிறைய டூத் பேஸ்ட் வைத்துக் வீணடிக்கும் நம் குழந்தைகளை நாம் கண்டிப்பதில்லை. 

சுகாதாரம் என்ற பெயரில் (முக்கியமாக கொரோனாவிற்குப் பிறகு) மணிக்கொருதரம் சோப்பை உபயோகித்து கைகளை சுத்தம் செய்யும் குழந்தைகள் Sink-ல் கொட்டி வைக்கும் சோப்பை நாம்  கண்டு கொள்வதில்லை 

ஆனால் அதே பொருள் தீரும் சமயத்தில் நமக்கு எங்கிருந்து தான் வருகிறதோ "Selective Amnesia" போல  இந்த சிக்கனத்தின் மீதான அக்கறை?! டூத் பேஸ்ட்டை எப்பிடி அழுத்தி, சுருட்டி வெளியில் எடுப்பது என்று குழந்தைகளுக்கு  கிளாஸ் எடுத்தால் எப்படி?

மேற் சொன்ன அனைத்தும் "Middle Class Mind Set" என்று கூறி ஒதுக்கி விடலாம்  எனினும் நம்மில் பலர் அங்கிருந்து வந்தவர்கள் தானே!!! அந்நியன் விக்ரம் போல பெரும்பாலான சமயங்களில் "ரெமோவாக" குழந்தைகளை வளர்த்து விட்டு ஒரு சில விஷயங்களில் மட்டும் அம்பியாக மாறி அவர்களை குழப்பி நாமும் குழம்புகிறோம்.

மாதக்கடைசியிலும்  மனதைக்  கரைக்கும் வீடியோக்களை பார்த்து மட்டும் வருவதல்ல சிக்கனம் அது மனதில் இருக்க வேண்டும் அப்போது தான் யார் மேற்பார்வையும் இன்றி நம்மால் அதை செயல் படுத்த முடியும்.

ஆப்பிரிக்காவில் பசியால் வாடும் குழந்தைகளுக்காக கவலைப்படும் நீங்கள் ஆத்மார்த்தமாக சிக்கனத்தை கடைபிடியுங்கள் அது போதும்!!!

பின் குறிப்பு : கயல் குடும்பத்தினர் சாப்பிட்ட மேசையை சுத்தம் செய்த நபர் அவர்கள் தட்டில் மீதமிருந்த பதார்த்தங்களை வேறு வழியின்றி குப்பையில் கொட்டிக் கொண்டிருந்தார்!!!


Friday, April 22, 2022

ஆற..அமர -

கடந்த வாரத்தில் எங்கள் வீட்டிற்கு விருந்தாளிகள் வந்து ஒரு நாலு நாள் தங்கிவிட்டுச் சென்றனர். விருந்தோம்பல் நம் கலாசாரம் அல்லவா? அதனால் நன்றாகவே கவனித்துக் கொண்டதில் உடல் அசதி உச்சத்தைத் தொட்டது. நான் ஒன்றும் நளபாக சமையல் எல்லாம் செய்து அசத்தவில்லை. நான் வழக்கமாக சமைக்கும் பதார்த்தங்களோடு ஒன்றிரண்டு Extra Items அவ்வளவு தான். Guest-ம் சமையலில் உதவினார்கள் அதிலும் இரண்டு மூன்று முறை ஆர்டர் செய்து வேறு சாப்பிடோம் இருந்தும் நான் அதிகம் வேலை செய்தது  போன்ற உடல் குடைச்சல்.

காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்ததில் பாத்திரம் தேய்ப்பது பெரும் சுமையாக இருப்பதாகப் பட்டது ஆனால் வேறு வழியில்லை. இங்கு வேலைக்கு ஆள் எல்லாம் கிடைப்பதில்லை. அளவுக்கு மீறிய பாத்திரங்களை புழங்க வேண்டி வருவதால்  Dishwasher எனக்கு பிடிப்பதில்லை. யோசித்து பார்த்ததில் பத்து வருடங்களுக்கு முன் என் உறவுக்கார மாமா ஒருவர் கூறிய அறிவுரை நினைவுக்கு வந்தது. "இப்பிடி மணிக்கணக்கா நின்னுக்கிட்டே வேலை பார்த்தா உடம்பு எனத்துக்காக்கும்"?

நவீன சமையலறையில் நாம் நூறு சதவீதம் அனைத்து வேலைகளையும் அவசர கதியில் நின்று கொண்டே தான் செய்கிறோம். சமையல் கட்டிற்கு நுழைவது வரை என்ன சைமைக்கப் போகிறோம் என்பதை யோசிப்பதே கிடையாது பிறகு எங்கே அதற்கான "Pre-Preparation"ஐ செய்வது. போனை நோண்டிக் கொண்டோ கணினியை பார்த்துக் கொண்டே மணிக்கணக்காக அமர்ந்து விட்டு பிறகு Kitchen-ல் இரண்டு மணி நேரத்திற்கு மேல்  தொடர்ந்து நிற்கிறோம்.

என் அம்மா எல்லாம் என்ன சமைக்கப் போகிறோமோ அதை உரிப்பது, ஆய்வது, கிள்ளுவது என்று  முன் கூட்டியே தயார் செய்து கொள்வார். அருவாமனையில் காய் நறுக்குவதால் ஒரு பாத்திரத்தில் அரிசி களைந்த நீரை வைத்துக் கொண்டு அதில் தான் வெட்டிய காய்கறிகளைப் போடுவார். பிறகு அடுப்பை பற்ற வைத்து வேகமாக சமைத்து விடுவார்.

நாம் என்ன செய்கிறோம்? chopper, cutting board என்று மணிக்கணக்கில் நிற்பதோடு மட்டுமல்லாமல் அடுப்பிற்கும் Sink-கிற்கும் அலை பாய்கிறோம்.Atleast dinning table-ல் அமர்ந்து காய்கறி வெட்டலாமே? நேரத்தோடு நீரையும் வீணாக்குகிறோம்.

நேரம் கிடைக்கும் மாலை வேளைகளில் என் அம்மா கடுகு, பருப்பு என்று தீர்ந்து போன ஐட்டங்களை எல்லாம் Refill செய்து கொள்வார். எப்பப்பாத்தாலும் கிச்சன்ல என்னதான் பன்றியோ? என்று நாங்கள் கடிந்து கொள்வதுண்டு ஆனால் அது எவ்வளவு நல்ல பழக்கம் என்று இப்போதுதான் புரிகிறது.

அடுத்த பெரிய தவறு நாம் நம் குழந்தைகளை வேலை வாங்கி பழக்கப்படுத்துவதில்லை. கணவரிடம் உதவச் சொல்லி சண்டைக்கு நிற்கிறோமே தவிர பிள்ளைகளை சொல்வதில்லை. இம்மாதிரியான இக்கட்டான  சமயங்களில் அது  கை கொடுக்கும் என்பதை உணர்வதில்லை. நின்று கொண்டே இருப்பதால் வயது ஐம்பதை நெருங்கும் முன்னரே ஆர்த்ரிடிஸ் ஆல் அவதிப்படுகிறோம். நமக்கு கோபம், எரிச்சல் என்று சமையல் மீதே ஒரு வெறுப்பு வந்து விடுகிறது. அதை குழந்தைகள் மற்றும் கணவரிடமே காட்டுகிறோம் ஆக உடலுக்கு தேவையான Movements-ஐ கொடுக்கத் தவறினால் உடல் மட்டுமல்ல மன நலமும் பாதிக்கப்படுகிறது.

ஆய கலைகள் அறுபத்தி நாளில் சமையல் கலையும் ஒன்று அதை நடனம் போல் முழு உடலையும் இயக்கிச் செய்யலாமே? Gym-க்கு செல்ல வேண்டிய அவசியமே இராது!!!

எள்ளும் கொள்ளும் வெடிக்க வேண்டியது பாத்திரத்தில் உங்கள் முகத்தில் அல்ல!!! 

Friday, March 4, 2022

திருமணம் என்னும் திருவிழா

"சமீப காலமாக பல ஆண்கள் தங்களுக்கு பெண் கிடைப்பதில்லை என்றும் பெண் வீட்டாரின் கட்டுக்கடங்காத டிமாண்டுகளே இதற்கு காரணம்" என்றும்  சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஆண் பெண் எண்ணிக்கை விகிதாச்சாரம் சமமாக இல்லாததும் இதற்குக் காரணம் என்று ஆய்வறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன.

எனது சொந்தங்களின் வட்டத்திலும் 35, 40 வயதை நெருங்கியும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் சில ஆண்கள் திருமணமாகாமல் இருப்பதைப் பார்க்கிறேன். 

எண்பதுகளில் எல்லாம் குடும்ப பாரத்தை சுமக்கும் தமையன்களும் தமக்கைகளும் தான் தங்களுக்கென்று ஒரு திருமண வாழ்க்கையை தகுந்த காலத்தில் அமைத்துக் கொள்ள முடியாமல் தனியாகவே வாழ்ந்து முடித்தனர் ஆனால் இப்பொது அப்படிப் பட்ட பொறுப்புகள் ஏதும் இல்லாத இளைஞர்கள் சிலருக்கும்  திருமணம் எட்டா கனியாக எட்டி எட்டிப்  போகிறது.

உரிய நேரத்தில் வந்த வரன்களை எல்லாம் தட்டிக் கழித்ததால், Single Parent ஆக இருப்பவர்கள் சரியாக கவனிக்காததால் என்றெல்லாம் காரணம் கூறுகிறார்கள் ஆனால் அனைத்தும் சரியாக இருப்பவர்களுக்கும் எந்த Demand-ம் செய்யாதவர்களுக்கும் கூட  ஏனோ திருமணம் தடை படுகிறது?!

இருபது வருடங்களுக்கு முன் கூட அவரவர் தகுதிக்கேற்ப பெண் கிடைத்துக் கொண்டுதான் இருந்தது ஏன் ஊதாரித்தனமாக சுற்றிக் கொண்டிருந்தவர்களுக்குக் கூட திருமணம் ஆனது ஆனால் இப்பொது என்னவென்றால் மெடிக்கல் Rep ஆக இருந்தால் பெண் கொடுக்க மாட்டார்களாம், ஜவுளிக்கடையில் வேலை பார்த்தால் பிடிக்காதாம். என்ன Logic என்று புரியவில்லை அதனால் இந்த துறையில் இருக்கும் யாருக்குமே திருமணம் ஆகவில்லையா என்ன? அப்படியும் சொல்ல முடியாது.

பெரு நகரங்களில் வசிப்பவர்களில் சிலரும்  மேல் தட்டு வர்கத்தில் சிலரும் திருமணம் என்ற உறவில் எல்லாம் நம்பிக்கை இல்லை என்று Single ஆக இருக்கிறார்கள் அவர்களின் கதையே வேறு. "Living together" என்ற பெயரில் நேரத்திற்கேற்ற துணையை தேடிக் கொள்கின்றனர் ஆனால் திருமணம் என்னும் பந்தத்தில் மதிப்பும் மரியாதையும் வைத்து தனக்கென ஒரு வாழ்க்கைத்துணையைத் தேடிக்  காத்துக் கொண்டிருப்பவர்களின் பரிதாப நிலையை எண்ணித் தான் என் மனம் கவலை கொள்கிறது.

இவர்களில் சிலர் கைம்பெண்களுக்கு வாழ்வளிக்கின்றனர் சிலரோ "அதெல்லாம் சரிப்பட்டு வராது" என்று காத்துக் கிடக்கின்றனர். பல வருடங்களாகத் தேடித் தேடி சலித்த பின் திருமணமே வேண்டாம் என்ற நிலைக்குத் தள்ளப்படும் இவர்கள் பின் திருமணம் நடந்தாலும் சிறு சிறு காரணங்களுக்காக சகிப்புத்தன்மையை இழந்து விவகாரத்தை நாடுகின்றனர். "எட்டாக்கனியாக இருந்த திருமணம் ஏனோ கைகளுக்கு எட்டும் வேளையில் புளிக்கிறது?!"

"திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்" - சிலர் தகுந்த நேரத்தில் தங்களுக்கு கிடைத்த நிலத்தில்  நடவு செய்து, தேவையான அளவு மழை, வெயில் போன்ற சொந்தங்களும் பந்தங்களும் அமையப் பெற்று நல்ல உறவுகளை அதாவது  மகசூலை அறுவடை செய்து மகிழ்வுடன் வாழ்கின்றனர். அவர்கள் வாழ்விலும் எதிர் பாரா வெள்ளங்களும், வறட்சியும் வரத்தான் செய்கின்றன ஆனால் அவற்றை பொறுமையுடன் சாமர்த்தியதையும் கலந்து கையாண்டு இறைவனின் துணையுடன் வாழ்வில் நிம்மதி அடைகின்றனர்.

வேறு சிலரோ தாமதமாக விதைகளை விதைத்தாலும் கால நிலைக் கேற்றபடி சில பல மாற்றங்களை செய்து சுகித்து வாழ்கின்றனர்.

சிலரோ உரிய நேரத்தில் விதைத்தும் நல்ல பலனை அடையாமல் தங்கள் நிலம் தரிசு நிலமாகிப் போனதை எண்ணி கண்ணீர் வடிக்கின்றனர். 

ஆனால் விதைப்பதற்கே நிலம் கிடைக்காமல் கையில் விதையுடன்  காத்துக் கொண்டிருக்கும் இந்த ஆடவர்களின் வினாக்களுக்கு விடைதான் என்ன? 


Thursday, January 13, 2022

பழையன நிலைத்தலும் புதியன குறைத்தலும்

கடந்த வருடம் அமெரிக்காவின் வட கிழக்கு மாகாணங்களை "Ida" புயல் தாக்கியது. மழையுடன் பேய்க் காற்றும் இணைந்து கொள்ள மக்கள் போக்கிடம் இன்றி அவதியுற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். எங்கெல்லாம் வெள்ளம் வருவதற்கு வாய்ப்பேயில்லை என்று அறியப்பட்டு வந்ததோ அங்கெல்லாம் வெள்ளம் புகுந்தது. புயல் காற்றின் தாக்கத்திலிருந்து தப்பிக்க மக்கள் வீட்டின்  அடித்தளத்திற்கு அதாவது Basement-ற்கு  செல்லுமாறு பணிக்கப்பட்டனர் ஆனால் அங்கு வந்த மழை வெள்ளத்தில் நீந்தத் தெரிந்தவர்களும் வெளியே வர வழியின்றி இறந்தனர் என்ற செய்தியை தொலைக்காட்சியில் காணும் போது மனம் மிகவும் கலக்கமடைந்தது.

அமெரிக்காவில் என்று மட்டும் அல்ல உலகெங்கும் மக்கள் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டு உயிரையும் உடமைகளையும் உற்றார் உறவினர்களையும் இழந்த வண்ணம் உள்ளனர். இவிடர்களுக்கெல்லாம் காரணம் காலநிலை மாற்றம் என்று அறிவியலாளர்கள் கூறி வருவது மட்டுமல்லாமல் அதைத் தடுக்க நம் வாழ்வியல் முறைகளில் கொண்டு வரவேண்டிய மாற்றங்களையும் வலியுறுத்தி  வருகின்றனர்.

தொன்னூறுகளிலேயே பூமி வெப்பமடைதல், காற்று மாசுபடுதல் மற்றும் ஓசோனில் ஓட்டை என்றெல்லாம் பாட புத்தகத்திலும் செய்தித்தாள்களிலும் படித்திருக்கிறோம் ஆனால் அதைப்பற்றி அதற்குமேல் யோசித்ததில்லை விளைவு - இன்று கண் முன்னே தெரிகிறது.

ஒரு காலத்தில் வீட்டிற்கு ஒரு மரம் வளர்த்தால் போதும் என்று சொல்லிக்கொண்டிருந்தவர்கள் தற்போது இம்மாற்றங்களை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு வழிமுறைகளை கூறுகின்றனர்.  பின்பற்றவும்  துவங்கி விட்டனர். மேற்கத்திய நாடுகளில் மாமிசதிற்காக வளர்க்கப்படும் உயிரினங்களால் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது என்று ஆய்வறிக்கைகள் சமர்பிக்கப்படுகின்றன ஆதலால் புலால் மறுப்பு மட்டுமல்ல பால் மற்றும் பால் பொருட்களையும் அறவே தவிர்ப்பது  (Veganism) காலநிலை மாற்றத்தை சீராக்கும் என்கின்றனர்.

பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை குறைத்தல், தேவையற்ற வேளைகளில் மின் உபகரணங்களை சார்ஜில் இருந்து விடுவித்தல்,  பொருட்களை உரிய முறையில் மறு சுழற்சி செய்தல் என்று பல்வேறு உபாயங்கள் கூறப்பட்டாலும் யார் காதில் வாங்கிக் கொள்கிறார்கள்?

தினக்கூலியாக வேலை செய்யும் பாமரனுக்கும்  பெப்சி, கோக் குடித்துக் கொண்டு காரில் செல்லும் செல்வந்தர்களுக்கும் இதில் சம அளவு பங்குண்டு. வாகனங்களின் புகையால் எந்த அளவிற்கு சுற்றுச் சூழல் மாசடைகிறதோ அதே அளவிற்கு விறகடுப்பாலும், வீதியில் எரிக்கப்படும் டயராலும் காற்று மாசடைகிறது.

அனைவரும் மிக சுலபமாக பின்பற்ற கூடிய வழிமுறையாக என் கண்களுக்குப்  படுவது/தெரிவது  என்னவென்றால் கூடுமானவரை  நம் தேவைகளை நாமே குறைத்துக் கொள்வது மற்றும் பழைய வாழ்க்கை முறைக்கு திரும்புவது தான். விலை மலிவாகக் கிடைத்தாலும்  முடிந்தவரை online ஆர்டர் செய்வதைத் தவிர்த்து அருகாமையில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்கலாம். இது Carbon Prints-ஐ குறைக்க உதவுமாம். பழைய துணிகளை டேபிள் துடைக்கவும் அழுக்கு துடைக்கவும் உபயோகிக்கலாம் ஒரு முறை துடைத்து எரியும் Tissue பேப்பர்கள் எதற்கு? 

ஸ்விக்கி, Zomoto-வில் வரும் ஆர்டர்கள் பிளாஷ்டிக் பைகளில் தானே வருகின்றன? அது உடல் நலத்திற்கும் கேடு அல்லவா? தூக்கு போனியில் சாம்பார் வாங்கி வந்தவர்கள் தானே நாம்?

கடைகளுக்குச்  செல்லும் போது கையில் ஒரு துணிப்பையை எடுத்துச் செல்வது எந்த விதத்திலும் நமது கௌரவத்தை குறைத்து விடாது.

"பழையன கழிதலும் புதியன புகுதலும்" நன்றே ஆனால் வாரத்திற்கு ஒரு டிரஸ் வாங்கும் கலாச்சாரம் நம்முடையதல்லவே. ஒரு குழந்தைக்கு வாங்கிய பொருட்களை அடுத்த குழந்தைக்கும் உபயோகப்படுத்துவதில் எந்தக் குற்றமும் கிடையாது நீங்கள் Bad Parent ஆக மாட்டீர்கள்.

செருப்பு அறுத்து போனால் தைத்துப் போடலாம் தப்பில்லை. 

"நான் ஒன்னும் குப்பையிலே போடல..மறு சுழற்சி தான் செய்கிறேன்" என்று மார்தட்டிக் கொள்பவர்களே..பெருபாலான பொருட்கள் Recycle செய்யப்படாமல் மலைகளாக குவிந்து கிடக்கின்றன. வல்லரசு நாடுகள் குப்பைகளை கப்பலில் கொண்டு சென்று மூன்றாம் உலக நாடுகளில் குமிக்கின்றன என்று கூறுகிறார்கள் அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. Shakespeare இன்று இருந்திருந்தால் "உலகம் ஒரு நாடக மேடை என்பதற்கு பதிலாக..உலகம் ஒரு குப்பைக் கூடை" என்று எழுதியிருப்பாரோ என்னவோ?

நம் உடல் நலத்தை பேண Organic உணவுகளை நாடும் நாம் வரும் சந்ததியினர் நலனுக்காக சற்றேனும் பொறுப்புடன் சூழலைக் காக்க வேண்டாமா? 

அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் சுயநலமே..யோசிப்போமா??? 


Monday, December 6, 2021

காட்டுக்குள் மழை

"Amazon"-ன்னு சொன்னா உங்களுக்கு என்ன ஞாபகம் வருதுன்னு ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி கேட்ருந்தா என்ன பதில் சொல்லியிருப்பீங்க?

நீங்க Geography-ல் ஆர்வம் உள்ளவராகவோ அல்லது ஆங்கிலப்  படங்களை விரும்பி பார்ப்பவராகவோ  இருந்தால்   சட்டுன்னு அது ஒரு "Rain Forest" தென் அமெரிக்காவிலே இருக்குன்னு சொல்லுவீங்க இல்லையா நீங்க ஒரு விஜய் டிவி Viewer-ஆ இருந்தாலும் இதை தெரிஞ்சி வச்சுருப்பீங்க  பின்ன வழுக்கை தலையிலும் முடி வளர வைக்கனுமான  அங்க இருக்குற மூலிகையாலதான முடியும்.

ஆனா இப்ப இந்த 2021-ல முளைச்சு மூணு இலை விடாத சுண்டைக்கா பசங்கள்ல இருந்து அனுபவசாலி தாத்தா வரைக்கும் அமேசான் என்ற பேரைக் கேட்டாலே என்ன ஆர்டர் செய்யப் போறீங்கன்னு கேக்குறாங்க!!!

அமெரிக்காவின் முதல் ஐந்து தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின்  பட்டியலில் இடம் பெற்றிருக்கும் அமேசான் தொன்னூறுகளின் தொடக்கத்தில் துவங்கப் பெற்றிருந்தாலும், Amazon Prime Day என்ற Super Sale மூலம் அவர்கள் பிரபலமாயிருந்தாலும்  கடந்த பத்து வருடங்களாக அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறார்கள். அமேசானில் எதுவும் கிடைக்கும், எங்கும் கிடைக்கும்  என்ற நிலை இன்று உலகம் முழுதும் பரவி வருவது உண்மை. நமது பொருட்களை டெலிவரி செய்து விட்டு வாசலோடு சென்று கொண்டிருந்த அமேசான் - "Streaming Service"-ஐ ஆரம்பித்து  நமது வரவேற்பறையிலும்  வந்து அமர்ந்து விட்டது. 

இதுவரை அமேசான் சங்கத்தில் இணையாதவர்கள் கூட 2018-ல் "உங்கள் பொருட்கள் இரண்டே நாட்களில் வீடு வந்து சேரும் அதோடு எங்கள் தளத்தில் இருக்கும் திரைப்படங்களையும் நீங்கள்  இலவசமாக பார்த்துக் கொள்ளலாம்" என்ற சலுகையைக் கண்டு மெம்பெர் ஆனார்கள் முக்கியமாக இந்தியப் படங்கள் வருவதால் நம்மைப் போன்றவர்களுக்கும் இந்த dealing பிடித்திருந்தது. இப்பொது Amazon Prime என்று பெயர் பொறித்த வேன்களைப் பார்க்காமல் பொழுது கழிவதில்லை.

இதெல்லாம் வேண்டாம்  என்று உறுதியாக  இருந்த எங்களைப் போன்றவர்களையும் கொரோனா அமேசானில் கொண்டு கோர்த்து விட்டு குத்தாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வருடம் மட்டும் கிட்டத்தட்ட 25 ஆர்டர்களை அமேசானில் செய்திருக்கிறோம்..பெரிய பெரிய பொருட்கள் எல்லாம் கிடையாது Mask, Sanitizers-ல் இருந்து ஆரம்பித்து  உடைகள், பள்ளி கல்லூரிகளுக்குத்  தேவையான பொருட்கள், பார்ட்டி Decorations, புத்தகங்கள் Kindle வடிவில் என்று - அனாவசியமாக எதையும் வாங்கியதாகத் தெரியவில்லை.

டிவி, லேப்டாப் போன்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கடைகளில் வாங்குகிறோம் ஆனால் அதற்குத் தேவையான ஒயர், சார்ஜர் என்று இதர பொருட்களை அமேசானில் தேடுகிறோம். கொடுக்கும் விலைக்கேற்ற தரத்தில் பொருட்கள் இருப்பதால் பெரிதாக ஏமாற்றம் ஒன்றும் இருப்பதில்லை. 

குழந்தை பிறந்ததிலிருந்து குடு குடு தாத்தா/பாட்டி ஆகும் வரை வாழ்கைக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் ஒரே சொடுக்கில் அமேசானில் கிடைப்பதால் வெளிநாடுகளில் வசிப்பவர்களில் பெரும்பாலோனோர் இந்நிறுவனத்தின் Gift கார்டுகளையே விழாக்களுக்கும் சுப நிகழ்ச்சிகளுக்கும் பரிசாகக் கொடுக்கின்றனர் அதனால் மெம்பெர் அல்லாதவர்களும் அங்கே ஷாப்பிங் செய்கின்றனர்.

சமீப காலமாக சுற்றுச் சூழல் பாதிப்பில் அமேசான் நிறுவனத்திற்கு அதிக பங்கு இருப்பதாக பலர் சுட்டிக் காட்டுவதால் அவற்றை குறைக்கும் முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டிருப்பதாகக் கூறுகின்றனர். இது ஒருபுறமிருக்க அமேசான் போன்ற நிறுவனங்களால் சிறு/குறு தொழில்கள் நசுக்கப்பட்டு இருந்த இடம் தெரியாமல் போய் விடுகின்றன என்ற பொருமலும் சமுதாயத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளது. அது சரி வீட்டிலிருந்த படியே பொருட்களை கையில் பெற்றுக் கொண்டிருக்கும்  நமக்கு "கார்பன் ப்ரிண்ட்ஸ்" பற்றியும் கார்ப்பரேட் கொள்கைகள் பற்றி  எல்லாம்  என்ன அக்கறை?!

அமேசான் காடுகளில் மழை குறைந்து விட்டது ஆனால் அமேசான் நிறுவனத்திலோ பண  மழை கனமாகக் கொட்டிக் கொண்டிருக்கிறது. பேசப்படும் அமைப்பாக வளர்ந்து விட்ட எந்த நிறுவனமும் "Giving Back to the Society" என்ற பெயரில் ஏதேனும் நல்ல காரியங்களை செய்தாக வேண்டுமே? அமேசான் அதற்கு விதி விலக்கா என்ன? தங்களிடம்  வேலை பார்க்கும் பணியாளர்களை படிக்க வைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் மனித நேய செயல்களிலும் அமேசான் ஈடுபட்டு வருவதாக விளப்பரப் படங்கள் காட்டுகின்றன. 

அதோடு அமேசான் Originals என்ற பெயரில் திரைப்படங்களையும் தொலைக்காட்சித் தொடர்களையும் தயாரிப்பதால் புது முகங்கள் பலருக்கும் வாய்ப்பு கிடைப்பதாகக் கூறுகிறார்கள்.

எது எப்படியோ காற்று புக முடியாத இடத்தில் கூட அமேசான் நிறுவனம் நுழைந்து  விட்டது. அப்பிடியே உங்க Order History-யையும் ஒரு தரம் பாத்துருங்க அப்புறம் Shock ஆகப் போறீங்க 😇


Friday, November 19, 2021

தானமும்..தர்மமும்

ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பது போல எந்த ஒரு விஷயத்தையோ, மனிதர்களையோ  எடுத்துக் கொண்டு ஆராய்ந்தால்  அதற்கும்/அவர்களுக்கும் இரண்டு பக்கங்கள் இருக்கவே செய்கின்றன. அவை சிலருக்கு நல்லவையாகவும்/நல்லவர்களாகவும் சிலருக்கு கெட்டவையாகவும்/கெட்டவர்களாகவும் தெரிகின்றன உதாரணமாக சமூக வலைத்தளங்களையே எடுத்துக் கொள்வோமே? அங்க நல்லதும் நடக்குது..மத்ததும் இருக்குது. 

சமீப காலங்களில் சமூக வலைத்தளங்கள் மூலமாக பலருக்கும் மருத்துவ/கல்வி உதவிகள் கோரி Go Fund Me போன்ற பக்கங்கள் வந்த வண்ணம் உள்ளன. நாங்களும் முடிந்த அளவு கல்லூரியில் படித்த நண்பர்களுக்கு, அவர்களின் உறவினர்களுக்கு என்று அதன் மூலம்  உதவிக் கொண்டுதான் இருக்கிறோம்.

நம்மில் பலருக்கும் இந்த மாதிரி பக்கங்களைப் பார்த்ததும் உதவ வேண்டும் என்று தான் தோன்றுகிறது ஆனால் நாம் எல்லோருக்குமா உதவுகிறோம்? நாம் தான் படித்தவர்கள் ஆயிற்றே இப்பிடியெல்லாம் தெரியாதவர்களுக்கு உதவி ஏமாந்துட்டோம்னா? என்ற கவலை/பயம் எப்பயுமே நமக்குள்ளே ஓடிகிட்டே இருக்கு அதனால என்ன பண்றோம் தெரிஞ்சவங்களா? உண்மையிலே உதவி தேவைப்படுதா? என்று பார்த்து பணம் அனுப்புகிறோம்.

இன்னும் சில பேர் நெருங்கிய உறவுகளுக்கு கல்வி/மருத்துவம்/திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு தொடர்ந்து உதவுகிறார்கள். நாம தான் இதனை பேருக்கு தானம் பண்றோமே அப்புறம் என்ன சமூக வலைத்தளங்களில் முகம் தெரியாதவர்களுக்கு உதவுவது என்று விட்டு விடுகிறார்கள்.

ரொம்ப நாளா இந்த கேள்வி என் மனசுல ஓடிக்கிட்டே இருக்கு..நாம செய்றது எல்லாம் தானம் தானா? 

மாதத்திற்கு பல ஆயிரங்கள் சம்பாதிக்கும் நாம் அதில் சில ஆயிரங்கள் உதவியாகக் கொடுக்க இத்தனை Research செய்கிறோமே? ஆனால்  ஆட்டோ ஓட்டியோ, கட்டட வேலை பார்த்தோ பிழைப்பு நடத்தும் ஒருவர் ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் ஒருவரைப் பார்த்தாலோ, யாரேனும் உதவி கேட்டாலோ பத்து/ஐம்பதே னாலும் தயக்கமில்லாமல் கொடுப்பதைப் பார்த்திருக்கிறேன். இதில எது உண்மையான தர்மம்? 

எங்க அப்பாவே இப்படி கொடுப்பதைப் பார்த்திருக்கிறேன் கேட்டால் உதவணும்னு குடுக்குறோம்..அதுக்கு மேல யோசிக்க கூடாதுன்னு சொல்லிடுவார்.

பகவத் கீதையிலும் கிருஷ்ணர் தானம் என்பது என்ன என்ற அர்ஜுனனின் கேள்விக்கு பதிலளிக்கையில் "தெரிந்தவர்களுக்கும், உறவினர்களுக்கும் செய்யும் தானமும், இதனால் எனக்கு என்ன பலன் என்று ஆராய்ந்து செய்யும் தர்மமும் இவ்வுலகில் மட்டுமல்ல..மேலுலகிலும்  உதவாது" என்று விளக்கமளிக்கிறார். 

"காலத்தி னாற்செய்த நன்றி  சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது"

நேரத்தோடு உதவுவுவோம்.. மனித நேயத்தோடு உதவுவோம் 😊


Friday, October 1, 2021

ஸ்வீட் எடு கொண்டாடு !!

இன்று காலையில்  எழுந்தவுடன் வழக்கம் போல்  போனை இயக்கி வாட்ஸப் குறுந்தகவல்களை புரட்டிக்கொண்டிருந்தேன். ஒரு குழுமத்தில் இன்று உலக சாக்லேட் தினம் என்ற Forward வந்திருந்தது. இந்த இன்டர்நெட் யுகத்தில் தினமும் ஏதாவது சிறப்பு நாள் தானே!!! தினசரி காலண்டர் கூட இதற்கு விதிவிலக்கல்ல அவர்களும் ஏதாவது ஒரு நாளை அச்சடித்து தூள் கிளப்புகிறார்கள்.

இந்த தகவல்கள்  எல்லாம் சரியா? தவறா? என்ற விவாதத்திற்குள்  எல்லாம் நான் செல்ல விரும்பவில்லை. நான் சொல்ல வந்தது என்னனா எப்போ இருந்து நமக்கு Chocolates மீது  இந்த Craze? எனக்குத் தெரிந்து எண்பதுகளில் பிறந்த பலருக்கும் தேன் மிட்டாய், பாக்கு மிட்டாய் போன்ற உள்ளூர் தயாரிப்புகள்  மேல் தான் காதல்.

எப்போது தொலைக்காட்சி முக்கிய மீடியமாக வளர ஆரம்பித்ததோ அப்போது தான் சாக்லேட் மோகமும் எட்டிப்பார்க்கத் துவங்கியது எனலாம். நம் நாட்டின் தட்பவெட்பத்துக்கு ஏற்ற சாக்லேட்டுகள் அதாவது Hard Candies தான்  முதலில் கடைகளில் கிடைக்க ஆரம்பித்தது. சந்து முக்குக் கடைகளில் பாக்கெட்டுகளில் தொங்கிக் கொண்டிருந்த, சிறு தொழிளார்கள் உற்பத்தி செய்த மிட்டாய்களின் இடத்தை பள பள காகிதத்தில்  Wrap செய்யப்பட்ட இந்த சாக்கலேட்டுக்கள் லாவகமாக எடுத்துக் கொண்டன. இவர்களுக்கோ  கண்ணாடி ஜாரில் சிறப்பு இடம் அளிக்கப்பட்டு, கடையின் முன் வரிசையில் அமர்த்தி  வைக்கப்பட்டார்கள்.

அப்பொது கூட புளிப்பு மிட்டாய்களுக்கும் நூலில் கோர்த்து சாப்பிடக் கூடிய சூடம் மிட்டாய்களுக்கும் மதிப்பு குறைந்து விட வில்லை. தொன்னூறுகளில் மெது மெதுவாக வீடுகளில் Fridge வாங்க ஆரம்பித்தார்கள். 5 Star என்ற மில்க் சாக்லேட் அறிமுகம் ஆனது. அனைவரும் அடித்து பிடித்துக் கொண்டு வாங்கி ருசித்தர்கள். பேப்பரை கூட விட்டு வைக்கவில்லை வாயில் போட்டு மென்று துப்பினார்கள் என்றால் இந்த காலத்து குழந்தைகள் நம்ப மாட்டீர்கள். நெடு நாட்களுக்கு இதை அடித்துக் கொள்ள ஆளில்லை.

மிட்டாய்கள் சாக்லேட்களாக பெயர் மாற்றம் அடைய , ஐம்பது பைசாவாக இருந்த விலையும் 5 ரூபாயாக பதவி உயர்வு பெற்றது. மூன்று, நான்கு குழந்தைகளாக இருந்த வீடுகளும் ஒன்று, இரண்டு என குடும்பத்தை சுருக்கிக் கொள்ள, போனால் போகிறது என்று விலையைப் பற்றிக்  கவலைப் படாமல் வியாபாரம் நடந்தது. பிறந்தநாட்களுக்கும் சாக்லேட் குடுக்கலாம் என்ற யோசனையும் அறிமுகமானது. சமயங்களில் வேலை நடக்க குழந்தைகளுக்கு லஞ்சமாகவும் கொடுக்கப்பட்டது  

இதில் இருக்கும் பால் குழந்தைகளுக்கு ஊட்டத்தை அளிக்கிறது என்ற பரப்புரையுடன் அடுத்த சில வருடங்களில்  Dairy Milk சாக்லேட் அறிமுகமானது, இப்பொது விளம்பரங்கள் குழந்தைகளை மட்டுமல்லாது கல்லூரி செல்லும் இளம் பெண்களையும் டார்கெட் செய்யத் தொடங்கி இருந்தது. தொண்ணூறுகளின் இறுதியில் வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகமானதால் பெரும்பாலான சாக்லேட் விளம்பரங்களில் அவர்களே தோன்றினர்.

ஸ்னாக் ஆக இருந்த சாக்லேட் Comfort Food ஆக மாறியது. இக்காலகட்டத்தில் பல்வேறு பொருளாதாரப் படிகளில் இருக்கும் அனைவரையும் திருப்தி செய்யும் விதமாக பல்வேறு சாக்லேட்டுகள் சந்தையை மொய்க்க ஆரம்பித்திருந்தது. நன்றாக இருந்த நம் குழந்தைகளுக்கு பல் சொத்தையும் வர, டூத் பேஸ்ட். டூத் பிரஷ் என்று அந்த வணிகமும் கொடி கட்டிப் பறக்கத்துவங்கியது.

மில்லெனியும் வருடமும் வந்தது. இப்பொது சாக்லேட் என்பது குடும்பமாக ரசித்து ருசிக்கும் ஸ்னாக் ஆக மாறி இருந்தது. வீட்ல விசேஷமா ஸ்வீட் எடு கொண்டாடு என்று லட்டைத் திணித்துக் கொண்டிருந்த தொலைக்காட்சிக் குடும்பங்கள் Chocolate-ஐ பிரித்து வாயில் போட்டுக் கொண்டன. இப்பொது சாக்லேட் பல்வேறு விதங்களில் வெளிவர ஆரம்பித்திருந்தது. காதலர்களின் கண் கண்ட தெய்வம், கை கொடுக்கும் தெய்வம் எல்லாம் சாக்லேட் தான்.

 Stress, Tiredness, Sadness, Frustration எதுவாக இருந்தாலும் ஒரு  சாக்லேட் சாப்பிட்டால் Mood மாறும், Relieve கிடைக்கும்  என்று இளைஞர்கள் நம்ப வைக்கப்பட்டனர். தினமும் ஒரு சாக்லேட் சாப்பிடும் யுவதிகளை நான் கண்டிருக்கிறேன். இப்பழக்கம் ஒருவகையான Addiction ஆக மாறியது எனலாம். முதலில் வெளிநாடு சென்றவர்கள் சாக்லேட் வாங்கி வருவது பெருமையாக பார்க்கப்பட்டது பின்  இன்டர்நேஷனல் சாக்லேட் எல்லாம் எங்கும் கிடைக்கத் துவங்கியதிலிருந்து அவர்களுக்கும் மவுசு குறைய ஆரம்பித்தது.

மருத்துவ ரீதியாக பல்வேறு பயன்களை சாக்லேட் அதாவது அதிலிருக்கும்  கோகோ அளிக்கும் என்று ஆய்வறிக்கைகள் வெளிவரத் துவங்கியிருந்த போது அதிலிருக்கும் சர்க்கரை காரணமாக உடல் பருமனும் குழந்தைகளிடத்தில் அதிகரிக்கத் துவங்கியிருந்தது. 

தற்போதைய கால கட்டத்தில் "கடலை மிட்டாய், கமர் கட்டு சாப்பிடுங்கள்..நம்முடைய ஊர்களில் தயாரிக்கப்படும் வெல்லம் கலந்த இனிப்புகளை சாப்பிடுங்கள் அது தான் உடல் நலத்திற்கு உகந்தது"  என்று விளம்பரப்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

எது எப்பிடியோ "அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தானே!!!"

Thursday, September 9, 2021

ஆனந்த தாண்டவம்

முதன் முதலாக பரதநாட்டிய அரங்கேற்றத்தை நேரில் காணும் வாய்ப்பு!!!நிகழ்ச்சியைக் குறித்து அமைப்பினர் (Host) கூறிய விளக்கங்கள், அரங்கேற்ற ஏற்பாடுகள்  மற்றும் கண்ணைக் கவரும் அழைப்பிதழ்கள் போன்றவை எங்கள் எதிர்பார்ப்பை உச்சத்திற்கு இட்டுச் சென்றன என்றாலும் மூன்று மணிநேரம் அமர்ந்து பார்க்கும் வகையில் "Engaging" மற்றும் "Entertaining" ஆக இருக்குமா? என்ற சந்தேகமும் இல்லாமல் இல்லை.

என்னுடைய நம்பிக்கையின்மைக்குக் காரணம் பரதத்தைக் குறித்து எனக்கு இருந்த குறுகிய அறிதல் தான். நான் என்றில்லை நம்மில் பலருக்கும்  "Classical Dance" என்றாலே புரியாத பாஷையில் ஒலிக்கும் பக்திப்  பாடல்களுக்கு நடனமாடும் தூர்தர்ஷன் "நாட்டியாஞ்சலி" நிகழ்ச்சிகளும் பள்ளி ஆண்டு விழாவில் ஆடப்படும் பரத நாட்டிய திரைப்படப் பாடல்களும் தான் நினைவுக்கு வரும். திரைப்படங்களில் காட்டியதால் தான் ஓரளவிற்காவது பரதத்தைப் பற்றிய அறிமுகம் நமக்குக் கிடைத்தது என்று கூறினாலும் மிகையாகாது!!!

இவ்வாறான எண்ணத்துடன் அரங்கிற்குள் நுழைந்த எனக்கு வரவேற்புரை, ஆசிரியர் அறிமுகம் என்று  நிகழ்ச்சிகள் துவங்கி சில மணித்துளிகள் சாதாரணமாகத் தான் இருந்தது. முழு முதற் கடவுள் விநாயகருக்கான நடனம் என்று முன்னுரை வழங்கிய பின் மேடையில் ஒளி மாற்றங்களுடன் சகோதரிகளான சரயுவும் சிந்துவும் தோன்ற ஒரு வித உணர்வு மாற்றம் அரக்கெங்கும் பரவியது எனலாம்.

பரதத்தைப் பற்றிய Technical விஷயங்களெல்லாம் நம் பாமர அறிவிற்கு அப்பாற்பட்டது எனினும் அவ்விருவரின் பாவம் (Bhavam) அங்கிருந்த அனைவரிலும் ஒருவித கிளர்ச்சியை உண்டாக்கியது என்பது மறுக்க முடியாத உண்மை.

ஐயப்பனைப் பற்றிய கதையை ஆசிரியை விளக்க இவ்விருவரும் நிமிடத்திற்கு நிமிடம் என முகத்தில் உணர்ச்சிகளை மாற்றி   நவரசத்தையும்  ஆடலுடன் கலந்து  Enact செய்த விதம் புல்லரிக்கச் செய்தது.

ஒருவர் சிவனாக மாற மற்றொருவர் சக்தியாக மாறுகிறார், குறும்பு செய்யும் கண்ணன் அடுத்த பாடலில் "மாலை மணிவண்ணா" என்று ஆண்டாளாக அவதரிக்க, யசோதை திருமாலாகி தெய்வீக சிரிப்பில் காண்போரை கவர்ந்திழுக்கிறார்.

இவ்விருவரிடம் தோன்றிய முக பாவனைகள் இவர்களின் ஆசிரியை முகத்திலும் மின்னல் வேகத்தில்  தோன்றித் தோன்றி மாறியதையும் நான் கவனிக்கத் தவறவில்லை.

இவ்வாறு மெய் மறந்த நிலையில் இருந்த  நம்மை ஒரு சிறு இடைவேளை என்று தட்டி எழுப்பினர்.

இப்பொது மனதில் இருந்த சந்தேகம் முற்றிலும் அகன்றிருக்க Second Half-யை பார்க்க மனம் பரபரத்தது. குடுத்த சிற்றுண்டியை  அரக்க பரக்க முடித்துவிட்டு அரங்கிற்குள் முழு ஆர்வத்துடன் நுழைந்தோம்.

ஜதிஸ்வரம், சப்தம், வர்ணம், தாண்டவம்  என்று அனைத்தையும் ஆடலில் கொண்டுவந்து திரிபுர சுந்தரியாகவும், ஆடல் கடவுள் நடராஜராகவும் மேடையெங்கும் பரவி, நாங்கள் இருவர்..இல்லை..இல்லை  இருவரும்  ஒருவர் என்று மாயம் காட்டிப் பின்னிப் பிணைந்து   இரட்டைச் சகோதரிகள்  ஆடிய நடனத்தைக் காண இரண்டு ஜோடிக்  கண்கள் இருந்திருக்க வேண்டும்!!! 

அவ்வப்போது  நண்பர்கள் கூட்டம் கைதட்டி ஆர்பரித்தும் ஆரவார சப்தங்கள் எழுப்பியும் நடனக் கலைஞர்களின் உற்சாகம் குறையாத வகையில் ஊக்கம் கொடுத்தனர். 

பார்வையாளர்கள் பலரின் மனதில் அவர்களின் இளமைக்கால நடன அனுபவங்கள் நிழலாடிக் கொண்டிருக்கையில், நம் குழந்தையும் இவ்வாறு நடனமாடினால் எவ்வாறு இருந்திருக்கும் என்ற கற்பனையும் கண்டிப்பாக இணைந்திருக்கும். என் கண்களுக்கோ சிந்துவும் சரயுவும் பத்மினி, ஷோபனா, பானுப்பிரியாவாக உருமாறி இருந்தனர். 

பல இளம் உள்ளங்களில் தானும் இந்த  ஆடல் கலையை கற்க வேண்டும் என்ற உந்துதலையும் (Inspiration) இவ்விருவர் விதைத்து இருப்பார்கள்  என்பதையும் இங்கு குறிப்பிட்டாக  வேண்டும்.  

இவர்களின் இக்கலைத்திறனை வளர்த்தெடுத்தது மட்டுமல்லாமல் பலரின் முன்னிலையில் அரங்கேற்றியது வரை அவர்களுக்கு உறுதுணையாக திகழ்ந்த பெற்றோரின் உரையுடன், நண்பர்கள், உற்றார்கள், உறவினர்கள் என்று பலரின் வாழ்த்துச் செய்திகளும் காணொளி வடிவில் திரையிட்டுக் காட்டப்பட்டது நம்மை நிகழ்காலத்திற்கு அழைத்து வர உதவியது. 

தங்கள்  குருவின் திருக்கரங்களால் நிறைவுப்  பட்டத்தை வாங்கிய சகோதரிகள் தங்களின் இப்பயணத்தில் உடன் வந்த நபர்களுக்கு நன்றி சொல்ல மைக்கை கையிலெடுக்க  குறும்பும், குதூகலமும், இளமைத் துள்ளலும்  கலந்த செயற்கை அற்ற அவர்களின்  பேச்சு அரங்கத்தினரை சிரிப்பில் ஆழ்த்தியது. இதுவரை மேடையில் ஆடியவர்களுக்கும் இவர்களுக்கும் தொடர்பே இல்லையோ என்று எண்ணம் எழுந்த  அதே வேளையில் பரதத்தில் எந்த அளவிற்கு ஈடுபாடும், கடின உழைப்பும், கவனமும் இருந்திருந்தால் இது சாத்தியமாகியிருக்கும் என்றும் வியக்கத் தோன்றியது!!!  

இறுதியாக மங்கள நடனத்திற்கு முன் மேள வாத்தியங்களை மைய இசையாகக்  கொண்டு வெளிவந்த சினிமாப்  பாடல்கள் மற்றும் தங்கள்  தாய்மொழிப் பாடலுக்கு அவர்கள் ஆடிய நடனம் பார்வையாளர்களை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்து சீர்படுத்தியது.

மூன்றரை மணி நேரம் சென்றதே தெரியவில்லை என பார்வையாளர்கள் பேசிக் கொள்வதை அரங்கத்தின் வெளியே கேட்க முடிந்தது இது இரட்டைச் சகோதரிகளுக்கு கிடைத்த வெற்றி அன்றி வேறல்ல.

இவ்வேளையில் இவர்களுக்கு சிந்து, சரயு என்று பெயர்  சூட்டிய இவர்களின் பெற்றோரை பாராட்டியே தீர வேண்டும். நதி போல் நளினமாக மேடை எங்கும் பரவி  நாட்டியமாடிய சகோதரிகளின் நடனச் சுழலில் சிக்காதவர்கள் அரங்கத்தில் இருந்தாரா என்பது சந்தேகமே!!!

இவர்களின் (நதிகளின்) இப்பயணம் மேலும் தொடர்ந்து கலைக்  கடலில் சங்கமிக்க  வாழ்த்துக்கள்!!!

"ஆடல் கலையே தெய்வம் தந்தது" என்பதுதான் எத்தனை உண்மை.


 

Monday, August 2, 2021

அலைகள்

"சீனா-ல கொரோனா என்ற பேர்ல வைரஸ் பரவுதாம்? மூச்சுக் காத்துலயே தொத்துற இந்த வைரஸ் வந்தா மூச்சு விட முடியாம கஷ்டப்படுவாங்களாம்..அப்புறம்  கொத்து கொத்தா மனுஷங்க  சாகுறாங்களாம்.. அதனால அங்கயெல்லாம் மக்கள வீட்டுக்குள்ளேயே அடைச்சு வச்சு சோறு தண்ணி குடுக்குறாங்களாம்..இங்கயும் எப்பிடியும் வந்துருமாம்" 

என்ன மேல இருக்குற விஷயங்களை படிச்சா எங்கயோ கேட்ட மாதிரி இருக்கா? ஆமாங்க..2020 பிப்ரவரி வாக்குல இந்த செய்திகளை எல்லாம் கேக்கும் போது, பார்க்கும் போது  ஏதோ சந்திரமுகி படத்துல பேய்க்கு பயந்து வடிவேலு பேசுற வசனங்களைப் போல நான்  லேசா எடுத்துகிட்டேன் ஆனா Constantine படத்தை போல  இந்த கொரோனா பயமுறுத்தும்ன்னு இந்த ஒன்னரை வருஷத்துல நல்லாவே புரிஞ்சிக்கிட்டேன்.

உலகமே நம் உள்ளங்கையில் என்று உவகையோடு  இருந்த நம்மை இந்த கொரோனா தனது கைக்குள் அடக்கி.. 5ஜி இன்டர்நெட்டை விட வேகமாக தேசமெங்கும்  பரவி, நம்மை House Arrest செய்தது. அகதிகளைப் போல நம்மை  ஒரே இடத்தில பூட்டி விட்டு, பாஸ்போர்ட், விசா இல்லாமல்  உலகம் முழுவதும் சுற்றி வருகிறது இந்த பாழாய் போன கொரோனா.  

இந்த கொரோனவால் பல்வேறு நல்ல விஷயங்களும், இதெல்லாம் சாத்தியமே இல்லை என்று நாம் நினைத்த நிகழ்வுகளும் அரங்கேறியது மறுக்க முடியாத உண்மை  உதாரணமாக நமது வரவேற்பறைக்கு வந்த வகுப்பறை!!! வேலை வேலை என்று Workaholics ஆக இருந்தவர்களுக்கு கூட கட்டாய விடுமுறை, குடும்பத்தாருடன் செலவழிக்க அதிக நேரம். மனதிற்கு பிடித்த பல விஷயங்களை செய்வதற்கும் நாமே அறியாமல் நம்மில் உறங்கிக் கொண்டிருக்கும் திறன்களை வெளிக்கொண்டு வருவதற்கும்  கிடைத்த கால அவகாசம். பல வருடங்களாக தொடர்பிலே இல்லாத பலருடன் இந்த கொரோனா கால கட்டத்தில் தொலைபேசி வழியாக பேசிய நண்பர்களை  நான் அறிவேன்.

நானும் என்னுடைய பங்கிற்கு 2020 ஏப்ரல், மே வாக்கில்  ஒன்று விட்ட சித்தப்பா, அத்தை என்று அனைவரிடமும் தொலை பேசினேன்  "அமெரிக்காவிலே தான் கொரோனா வேகமா பரவி நெறைய பேர் சாகுறாங்களாம்..பத்திரமா இருங்க..எப்பிடி இந்த அளவுக்கு விட்டாங்க" என்று கை கொட்டி சிரிக்காத குறையாக எனக்கு அவர்கள் Counter கொடுக்க, அவர்களையும்  பத்திரமாக இருக்கச் சொல்லி எச்சரித்தேன்.

கொரோனா வந்து அவரவர் வீட்டிலேயே முடங்க பலர் தங்கள் சொந்த ஊரைப் பார்த்து செல்ல ஆரம்பித்தனர் அதன் பலனாக 20 வருடங்களுக்கு மேல் தனியாக வாழ்ந்த பல பெற்றோர் தங்கள் குடும்பத்தோடு வாழும் வரத்தைப் பெற்றனர். Senior citizens-ம் இப்பொது கேபிளை துண்டித்து விட்டு Netflix, Prime-ல் படம் பார்க்கின்றனர். 

 பல வருடங்களாகப் பேசிக் கொள்ளாத உறவுகளும் பகையை மறந்து  ஒருவரை ஒருவர் குசலம் விசாரித்துக் கொண்டதை நான் கண்கூடாகக் காணப் பெற்றேன். பல குடும்பப் பிரச்சனைகளும் கடந்த ஒன்றரை வருடங்களாக Freeze ஆகி நிற்கின்றன. "திருமணம்" படத்தில் சேரன் கூறியதைப் போல ஆடம்பரம் இல்லாத திருமணங்கள் நடைபெற்றன. வீட்டிலேயே திருமணம் என்றால் கொ.முன்  யாராவது நம்பி இருப்பார்களா? "தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் கடவுள்" என்பதை உணர்த்தும் விதமாக கோவில்களும் மூடப்பட்டது வரலாற்று நிகழ்வு என்று தான் சொல்ல வேண்டும்!

நாமும் பல வருடங்களாக இன்டர்நெட், WhatsApp, Zoom எல்லாம் உபயோகித்து கொண்டுதான் இருக்கிறோம் ஆனால் அதில் பிறந்தநாள் கொண்டாடவில்லையே ஏன்? வீட்டு விசேஷங்களை வெளிநாடு வாழ் உறவுகளுக்காக  அதில் நேரலையாக ஒளிபரப்ப தோன்றவில்லையே? 

காவல் துறை, மருத்துவத் துறை - இவர்களின் மேல் மக்களுக்கு என்றுமே நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை ஆனால் இந்த கோவிட் கால கட்டத்தில் First Responders என்ற பெயரில் தங்கள் உயிரை பணயம் வைத்து மக்களுக்கு உதவிய இவர்கள் அல்லவா True Heroes (Avengers?)

இந்த கொரோனா காலத்தில் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்தவர்களுக்காக, மருத்துவ வசதிக்காக, எதிர்பாரா விபத்துகளில் சிக்கியவர்களுக்காக, கல்வி கட்டணம் செலுத்துவதற்காக  என்று நாம் மனிதாபிமான அடிப்படையில் ஒன்று சேர்ந்து உதவி "அன்பே சிவம்" என்று நிரூபித்ததும் நாம் என்று பெருமை பட்டுக் கொள்வோம் 

இவ்வாறு Pandemic Period-ல் தொலைந்த உறவுகள்  எல்லாம் அருகில் வர நம்மில் பலர் நெருங்கிய உறவுகளை இழக்க நேரிட்டது என்பதையும் கூறித்தான் ஆக வேண்டும். Lockdown, Quarantine, Social-Distancing..அப்பப்பா கொடுமை நம்மளால முடியாது என்று நாம் சகஜ நிலைக்கு திரும்ப நினைக்கும்  நேரத்தில் எல்லாம் நம் காதில் விழும் அவல செய்திகளைக் கேட்டு தன்னுடைய ஓட்டில் தலையை இழுத்துக் கொள்ளும் ஆமையைப் போலத் தான் ஒடுங்கி  வாழ வேண்டி இருக்கிறது.

ஒன்றாவது அலை, இரண்டாவது அலை, சிற்றலை, பேரலை என்றவர்கள் தடுப்பு ஊசி வந்தால் கொரோனோவை ஒழித்து விடலாம் என்று ஒன்றுக்கு இரண்டு ஊசியை குத்தினார்கள்.. இதோ  இப்போது மூன்றாவது அலைக்குத் தயாராகி விட்டார்கள். தன்னுடைய ஒற்றை சொடுக்கில் உலகத்தை அழிக்கும் Thanos ஐ  விட கொடூரமாக மக்களை துன்புறுத்தி மடிய வைக்கும்  இந்த கொரோனாவோ எனக்கு "End Card" ஏ இல்லை என்று சிரித்துக் கொண்டிருக்கிறதே!!!    

கொரோனா பரவலுக்கு நாம் "அரசு இயந்திரம், நிலையை உணர்ந்து செயல்படாத மக்கள், அவசர கதியில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி, வைரஸின் தீவிரம்" என்று பல காரணிகளை சுட்டிக் காட்டலாம் ஆனால் நாம் அனைவருமே பொறுமை காக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது. அதே நேரத்தில் இந்த Pandemic காலத்தில் நாம் கண்டு செய்த பல  நல் முயற்சிகளை தொடர்ந்து முன் எடுத்துச் செல்வதும் அவசியமாகிறது. மனிதர்களை அழித்த கொரோனா மனித நேயத்தை வளர்த்தெடுத்ததா?

கொரோனாவை முழுமையாக ஒழித்துக் கட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை. End Game is Approaching... 

Tuesday, May 18, 2021

The Night Owl

ஆங்கில வாசிப்பில் ஆர்வமுள்ளவர்களுக்காகவும் ஒரு மாற்று முயற்சியாகவும் ஓர் இரவல் பதிவு.

 நண்பர் விஜய் ஈஸ்வரியின் கவிதை போன்ற குறுங்கதையை உங்களுக்காக இங்கு பதிவிடுகிறேன். ரசிப்பீர்கள் என நம்புகிறேன்.

                                                                  The Night Owl

As their paths Continued to diverge he was left only with fading memories of their precious little time together as friends and occasional dreams.

She had moved on years ago.

The dreams were not regular but very vivid when they do come to him.

Most of the times she was as agonizing to him in the dreams as she was in reality.

But on very few occasions she was as beautiful and as loving a partner as he hoped that she would one day be. Albeit only in the dreams of his reality.

On such rare occasions, the dream would end too quickly just as their relationship did before flowering into love. He would wake up in the middle of the night wanting nothing more than to get back into the dream and be with her for a little longer. To only realize that he can't.

He would lay awake in the darkness listening to soft cooing and snoring of his beautiful children.

Written By - Vijay Er.


Thursday, February 25, 2021

பராக் ..பராக்

வருடாந்திர பரிசோதனைக்காக நேற்று மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். கொரோனா காலமாதலால் கூட்டமே இல்லை. வழக்கமான கேள்விகளுக்கு பிறகு நீங்கள் உங்கள் அழைப்பு வரும் வரை காத்திருக்கலாம் என்று கூறிவிட இடைவெளி விட்டு போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தேன். எனக்கு முன் ஒரே ஒரு பெண்மணி காத்துக் கொண்டிருந்தார். சுற்றும் முற்றும் பார்த்தேன். கையில் வைத்து புரட்ட வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களும் அகற்றப்பட்டிருந்தது. தொலைக்காட்சியில் பழைய வீட்டை புதுப்பித்து எவ்வாறு அதிக விலைக்கு விற்பது என்பதைப் பற்றிய நிகழ்ச்சி மௌன மொழியில் ஓடிக் கொண்டிருந்தது. புதுப்பித்த தங்கள் வீட்டைப் பார்த்து ஓர் தம்பதியினர் ஆனந்த கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தனர். வேறு வழியில்லாமல் எனக்கு பின் வந்த இருவரைப் போல கைபேசியை நோண்ட ஆரம்பித்தேன். அதில் ஒருவருக்கு அலுவலக மீட்டிங் போல மிக கவனமாகக் ஹெடிபோனில் கேட்டுக் கொண்டிருந்தார்.

பொதுவாகவே எனக்கு மருத்துவரைப் பார்ப்பது மருத்துவமனை விசிட் என்றாலே அலர்ஜி தான். என்னுடைய தந்தை மருத்துவமனை அலுவலக ஊழியராக இருந்ததால் காய்ச்சல், தலைவலி மாத்திரைகளும், தைலங்களும், களிம்புகளும் வீட்டிலேயே இருக்கும் சில சமயம் Antibiotics கூட நாங்களாகவே அப்பாவின் வழிகாட்டுதலின் பேரில் சாப்பிடுவதும் உண்டு. (பிற்காலத்தில் என் அண்ணன் கூட என் அப்பாவை போலி மருத்துவர் என்று கேலி செய்ததுண்டு)  ஆதலால் மழைக்கு கூட ஆஸ்பத்திரி பக்கம் ஒதுங்குவது இல்லை.

நான் தான் இப்பிடி என்றால் எனக்கு மணாளனாக வாய்த்தவர் எனக்கும் ஒரு படிக்கு மேலே!!! மாத்திரை கூட சாப்பிட மாட்டார். ரெண்டு நாள்ல தானா சரியாயிடும் என்று இருப்பவர் ஆகவே No Hospital. இருந்தும் ஒரு சில விஷயங்களுக்கு மருத்துவரைப் பார்த்துத்தானே ஆக வேண்டும். 

திருமணமான சில மாதங்களிலேயே..இத்தேசத்திற்கு வந்த புதிதில்  டாக்டரைப் பார்க்க வேண்டிய சூழல் உருவானது. ஊரில் என்றால் இந்த மாதிரியான விஷயங்களுக்கு அம்மாவை அழைத்துக் கொண்டுதான் போவோம் ஆனால் இந்த அமெரிக்க வாசத்தில் நமக்கு ஒரே சொந்தம் தானே!!!

Appointment எல்லாம் வாங்கிக் கொண்டு அங்கு சென்று அமர்ந்தால் அங்கு மையான அமைதி. கிணற்றுக்குள்ளிருந்து வருவது போல மெல்லிய பாடல் எதிலோ ஒலித்துக்  கொண்டிருந்தது . ஏற்கனவே குமட்டிக் கொண்டிருந்த எனக்கு மயக்கம் வருவது போல் இருந்தது. இதுல என்ன இருக்குன்னு நீங்க நினைக்கிறது புரியுது.. அமெரிக்க ஆஸ்பத்திரி எப்பிடி இருக்கும்னு எனக்கு தெரியாது இல்லையா ? நான் நம்ம ஊரு தெருமுனை லேடி டாக்டர் கிளினிக்கை மனதில் வடித்துக் கொண்டு வந்திருந்தேன்.

அம்மாவோடு வரும் இளம்பெண்கள், போர்வையால் முக்காடு போட்டுக் கொண்டு வரும் தாதாக்கள், அழகாக பொட்டு வைத்துக் கொண்டு தனக்கு தடுப்பு ஊசி குத்தப் போகிறார்கள் என்று தெரியாமல் எச்சில் வழியச் சிரித்துக் கொண்டிருக்கும் பாப்பாக்கள், எனக்கு ஊசி வேணாம் என்று அழுது ஆர்ப்பாட்டம் போட்டு அப்பாவிடம் கொட்டு வாங்க ரெடியாக இருக்கும் சிறுவர்கள், "எவ்வளவு நேரமா உக்காந்திருக்கீங்க? டாக்டர் வந்துட்டாரா?" என்று விசாரிக்கும் பெண்மணிகள், "அவசரப்படாதீங்க..பேரைக் கொடுத்துட்டு உக்காருங்க" என்று சிடு சிடுக்கும் மருத்துவ சிப்பந்திகள் என்று  பார்த்துப் பழகிய எனக்கு முற்றமைதியும் முண்டி அடிக்கும் மக்கள் கூட்டமும் இல்லாத அமெரிக்க மருத்துவமனைகள் ஏமாற்றமே.   

இங்க என்னைப் பத்தி உங்களுக்கு சொல்லியே ஆகணும் ..  எனக்கு வேடிக்கை பாக்குறதுன்னா ரொம்பப் பிடிக்கும். ரெண்டாவது மூனாவது படிக்கும் போது மரத்தடி கிளாசில் வேடிக்கைப் பார்த்து அடிக்கடி திட்டு வாங்கியதுண்டு. எப்ப பாத்தாலும் பராக்கு என்று டீச்சர் என் கொழு கொழு கன்னத்தைப் பிடித்து கிள்ளுவதும் காதைப் பிடித்து திருகுவதும் வழக்கம். சில சமயங்களில் ரோட்டில் சினிமா போஸ்டர் பார்த்துக் கொண்டே நடந்து முன் பின் தெரியாதவர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதும் உண்டு. பராக்கு பார்த்துக் கொண்டு சைக்கிள் சக்கரத்தில் கால் விட்ட Record எல்லாம் எனக்கு உண்டு. இவ்வளவு ஏங்க..ஹோட்டலுக்கு சாப்பிட போனாலே நாலு பேரு தட்டுல என்ன இருக்குன்னு பாத்துட்டு ஆர்டர் கொடுக்குற மக்கள் தானே நம்மளெல்லாம்.. வேடிக்கை பாக்குறது எனக்கு ரத்தத்திலே ஊறி போச்சு.. விமானதுல கூட முன்னாடி, எதுக்க இருக்குறவன்லாம் என்ன படம் பாக்குறாங்கன்னு பாத்துட்டு Movie choose பண்ற Category நானெல்லாம் !!!

அப்ப இங்க எப்பிடி தான் காலம் தள்றீங்கன்னு நீங்க கேக்குறது புரியுது? என்ன பண்றது வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். இங்கும்  கிடைக்கிற Magazine-யை புரட்டிகிட்டே வர்ற போறவங்க, Receptionist -ன்னு ஒன்பது மாசமும் பாத்துகிட்டும், ஆபீசுக்கு நேரமாகுது இன்னும் கூப்பிட மாட்டேங்குறாங்கன்னு பக்கத்தில் உட்கார்ந்து புலம்பும் கணவரிடம் உடனே பாக்காதீங்க.. Casual-ஆ பாருங்கன்னு  காட்டிக் கொண்டும்   தான் இருந்தேன். வயிற்றை தள்ளிக் கொண்டு வந்தவர்களெல்லாம் கார் சீட்டில் பச்சை குழந்தையோடு வருவதைப் பார்ப்பது பரவசமாகத் தான் இருக்கும். மற்றவர்களை உறுத்தாத வகையில் மேலோட்டமாக வேடிக்கை பார்ப்பது நமது பிரச்சனையை சில மணி  நேரமாவது  மறகடிக்கச் செய்து மனதை லேசாக்கும்  என்பது உண்மை தானே!!

தொழில் நுட்பம் வளர்ந்து விட்ட இந்த காலத்திலே ஆமை தன் ஓட்டில் ஒடுங்கிக் கொள்வது போல  வந்த உடனேயே அனைவரும்  மொபைலில் முழ்கி விடுகிறார்கள் குழந்தைகள் உட்பட. யாரும் யாரையும் முகத்தை தூக்கிக் கூட பார்ப்பது இல்லை அதனால் தான் என்னவோ கொரோனா வந்து மாஸ்க் உடன் வந்தாலும் யாருக்கும் எந்த வித்தியாசமும் தெரிவதில்லை. 

நேற்று கூட மொபைலை பார்த்தவாறே எனக்கு பிறகு வருபவர்கள் கூறும் பிறந்த வருடத்தைக் கேட்டு கொண்டே   "அடடே நம்மள விட சின்ன பொண்ணா இருக்காளே, நம்ம அம்மா வயசு இருக்கே இவங்களுக்கு" என்று டைம் பாஸ் செய்து கொண்டிருந்தேன். வழக்கத்திற்கு மாறாக வெகு சீக்கிரமே என் பெயர் அழைக்கப்பட்டு விட்டது (என் பெயர் தானா? ஏதோ அவர்களுக்கு தெரிந்த உச்சரிப்பில் கூப்பிடுகிறார்கள் என்ன செய்வது !!) 

டாக்டரை பார்த்துட்டு வந்து உங்ககிட்ட பேசறேன் அதுவரைக்கும் Observe Do Not Stare 😊